Sunday, May 13, 2001

கைவல்யோபநிஷத்து (பாகம் 4) - துறவு

To: meykandar@yahoogroups.com
From: "suba k."
Date: Sun, 13 May 2001 06:44:59 -0700 (PDT)
Reply-to: meykandar@yahoogroups.com
Subject: [meykandar] Upanishad: -துறவு

அன்புள்ள இணையத்தோருக்கு எனது வணக்கம்.
எனது கைவல்யோபநிஷத்துக்கான கடிதங்களுக்கு உடனே பதில் எழுத முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அலுவல் காரணமாக ஒரு வாரம் 'பெல்ஜியம்' செல்லும் படியாகிவிட்டது. இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்வதற்கு ஊக்கம் தரும் வகையில் கடிதம் எழுதியிருந்த சைவப் பெரியவர்கள் திரு கணேசலிங்கம்,திரு.கார்த்திகேயன், முனைவர் லோகா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

கைவல்யோபநிஷத்தின் முதல் காண்டத்திற்கு நான் எழுதிய மூன்றாவது கட்டுரையில் இந்து சமயத் துறவிகளைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருந்தேன். துறவிகளின் மேல் எனக்குள்ள முழுமையான அபிமானத்தை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தவில்லை என்பதே முற்றிலும் உண்மை. உபநிஷத்துக்கான செய்யுளை எனது சிந்தனையில் வெளிப்படும் கருத்துக்களோடு ஒப்பிட்டு எழுதும் போது ஒரு சில கருத்துக்களை மட்டுமே வைக்க முடிந்தது. அதனால் துறவு சிந்தனை, துறவு வாழ்க்கை போன்றவற்றைப் பற்றிய கருத்துக்களை தனியாக ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.

துறவு என்னும் சொல் 'துற' என்னும் வேர்ச் சொல்லிலிருந்து வருவது. இச்சொல் பதவி பாசம் முதலியவற்றை 'நீக்குதல்', 'கைவிடுதல்' எனும் அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றது. இதை ஆங்கிலத்தில் to renounce worldly possessions and attachements எனச் சொல்லலாம். துறவறம் எனும் சொல் உலகப் பற்றை விடுத்த தவ வாழ்வு , சன்னியாசம் என்பவற்றை விளக்குவதாக விளங்குகின்றது. ஆக துறவி என்பவர் பற்று பாசம் முதலியவற்றை விடுத்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர் எனப்படுகின்றார்.(க்ரியாவின் தமிழ் அகராதி கூறும் விளக்கம்)

துறவைப் பற்றி திருவள்ளுவரிலிருந்து, திருமூலர், ஒளவையார் என நமது திராவிட தத்துவ நூலாசிரியர்கள் முதற்கொண்டு முனைவர் லோகநாதன் வரை பலரும் பல விளக்கங்களை தங்கள் நூல்களில் எழுதி வைத்திருக்கின்றனர். 'துறவு' என்பது ஏன் அவ்வளவு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது? ஒரு தேவை இருக்கும் போதே அந்தத் தேவையைச் சுற்றி நமது எண்ணங்கள் தோன்றும். ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் ஒரு கால கட்டத்தில் துறவு வாழ்க்கையை அனுஷ்டிக்க நேரிடுகின்றது. துறவில், அறிந்தோ அறியாமலோ மாட்டிக் கொள்கின்ற நிலை தான் மனிதருடையது. இந்த நிலை இருப்பதால் தான் நாம் ஒவ்வொருவரும் துறவு வாழ்க்கையை விளக்க/ விளக்கம் பெற பல வகையில் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றோம்.

திராவிட பன்பாடு மிக உயர்ந்த ஒன்றாக தோன்றுவதற்கு துறவு சிந்தனையின் மேல் இப்பண்பாடு கொடுத்திருக்கின்ற மிக்கியத்துவமும் ஒரு காரணமாகின்றது. வாழ்க்கையை ஒரு ஆராய்ச்சிக்கூடமாக பாவித்து அதனுள் எழுகின்ற ஐயங்களுக்கு வழிகாணும் வழிகாட்டியாக தத்துவங்களை அமையப் பெற்று இந்தப் பண்பாடு அமைந்திருக்கின்றது என்பதை தமிழறிந்த சிந்தனைவாதிகள் எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிப் போன துறவை பிரதிபலித்துக் கொண்டிருப்பவர்கள் துறவிகள். இந்து சமய (திராவிட சமய) தத்துவங்களை பிரதிபலிப்பவர்களாக, இச்சமயத்தை பாதுகாப்பவர்களாக தேவைப்படுகின்ற மக்களுக்கு சமயக்கருத்துக்களை விளக்குபவர்களாக திகழ்கின்றவர்கள் இவர்கள் தான். ஆக இவர்களுடைய பொறுப்பக்களும் செயல்பாடுகளும் பயனளிக்கக்கூடிய வகையில் கேள்விக்குள்ளாக்கப் படவேண்டும்.

துறவிகள் தான் எல்லாபந்த பாசங்களையும் துறந்தவர்களாகி விட்டனரே. பிறகு அவர்களுக்கு எப்படி கடமைகள் வந்து சேர முடியும் என சிலர் நினைக்கலாம். பட்டினத்தாரை குருவாக ஏற்று துறவு பூண்ட பத்திரகிரியார், ஒரு முறை மனம் இறங்கி பசியால் வாடிய ஒரு நாய்க்கு உணவு போட அந்த நாய் அவருடனேயே தங்கி விட்டதாம். ஒரு நாள் பசியோடு வந்த ஒருவர் பட்டினத்தாரிடம் உணவு கேட்க, அதற்கு அவர், 'என்னிடம் ஏது உணவு. என்னுடைய சீடன் சம்சாரியாக வாழ்கின்றான். அவனிடமே உணவு கேளுங்கள்' என்று கூறியதாக சித்தர் கதை கூறுகின்றது.

அதைப் போல இன்றைய வாழ்க்கையில் ஒருவர் துறவியாகி குடும்ப பந்த பாசங்களை விடுத்து வாழ நினைக்கின்ற போது அவருக்கு சீடர்களும் பக்தர்களும் படிப்படியாக வளர்ந்து அவரையும் ஒரு வகையில் 'குடும்பஸ்தராகவே' ஆக்கிவிடுகின்ற நிலை தான் இருக்கின்றது. துறவிகள் மடங்களில் இருக்கின்றனர்; மடாதிபதிகளாக இருக்கின்றனர், ஆதீன ஊழியர்களாக, சேவகர்களாக, தலைவர்களாக என பல வகையில் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றனர். ஊர் ஊராகச் சென்று சமய விளக்கங்கள் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். அனாதை ஆசிரமங்கள் அமைத்து ஆதரவற்று இருக்கின்ற உயிர்களுக்கு உதவுபவர்களாக இருக்கின்றனர். மருத்துவமனைகளும் கல்விக் கூடங்களும் அமைத்து கல்வி புகட்டும் நிருவன அதிகாரிகளாகவும் செயல்படுகின்றனர். மேலும் சில துறவிகள் வேறு யாருடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் தனது வயிற்றுப் பசிக்கு மாத்திரம் வீடு வீடாக, கோயில் கோயிலாக ஏறி இறங்கி தனது வாழ்க்கையை தனிமைப் படுத்திக் கொண்டு விட்டு யாருக்கும் தெரியாமல் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் துறவியரும் உண்டு.

இப்படி பல தரப்பட்ட துறவிகள் நம்மில் உலவினாலும், பொது மக்களின் எதிர்பார்ப்பு என்பது, துறவிகள் தங்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டத்தை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே! தத்துவங்களை உணர்ந்தவர்கள் இறைவனுக்கும் தனது ஆன்மாவிற்கும் தூது போக ஒரு இடைப்பட்ட ஒருவரை தேட மாட்டர்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் சமய தத்துவங்களை உணராமல் இருப்பதாலேயே தனக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு உறவு பாலம் அமைக்க ஒருவரைத் தேடுகின்றனர். சமய வாதிகளும் ஞானிகளும், முனிவர்களும் உலக, ஆன்ம தத்துவத்தை விளக்கி இறைவனை உணரவும் அனுபவிக்கவும் வழிகாட்டுபவர்கள் என்பதை மறந்து, மக்கள் சுயலாபம் தேட இவர்களை அனுகலாம் எனும் சிந்தனைப் போக்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையிலேயே, கோயில் அர்ச்சகர்கள், குருமார்கள் துறவிகள் என கோயிலுக்கும், இறைவனுக்கும் தொடர்பு உள்ளவர்களாகத் திகழ்பவர்களை தங்களது துன்பங்களைப் போக்க உதவுபவர்கள் என நினைத்து தங்களுக்குள் எதிர்ப்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும் இந்த எதிர்பார்ப்பு ஒன்றாகச் சேரும் போது அது சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்களாக விரிவடைகின்றது. இந்த விளவே அவர்களையும் பொறுப்புதாரியாக்கி விடுகின்றது. எந்த மடங்களுக்குள்ளும் அல்லது கட்டமைப்புக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தனது சுய தேடலை மட்டும் பார்த்து கொள்கின்ற துறவிகளைப் பற்றி பேசுவதற்கு தனிப்பட்ட மனிதர்களான நமக்கு உரிமை கிடையாது. இறை தேடல் என்பது பிற மனித தொடர்பற்று தனிமைப்பட்டு போகும் போது அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு போகின்றது. ஆனால், துறவிகள் தங்களை ஒரு மடத்தோடு/இயக்கத்தோடு சேவை செய்கின்ற இயக்கத்தினோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு தனது சுய தேடலை தொடங்கும் போதே, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பெரும் பொறுப்பினை ஏற்கின்ற நிலையை அடைகின்றனர்.

அந்த வகையில் பல தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களினூடே உலக மெங்கிலும் இந்து சமய நெறிகளை பரப்புகின்ற சமய பீடங்களாக பல இயங்கிவருகின்ரன. உதாரணமாக ஹவாய் சைவ சித்தாந்த பீடம், சாய்பாபா நிறுவனம், பிரம்ம குமாரிகள் சங்கம், தெய்வீக வாழ்க்கை சங்கம், காஞ்சி காமகோடி பீடம், சைவ சித்தாந்தப் பெறு மடங்கள், பங்காரு செவ்வாடை சக்தி இயக்கம், வைணவ மடங்கள், இராமகிருஷ்ண மடங்கள், விஷ்வ ஹிந்து பரிஷத், என்பவை தனது சேவையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவை. இந்த மாதிரியான பீடங்களும், இயக்கங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட, பல்லாயிரம் மக்களுக்கு சேவை செய்ய தம்மை தயார் நிலையில் வைத்திருக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டியது கட்டாயமாகின்றது. அதோடு இந்த பீடங்கள் தனது சேவையை ஆற்றுவதற்கு பல தகுதியானவர்களை (துறவு சிந்தனையே உயர் தகுதியாக கருதப்படுகின்றது) பொறுப்புக்களில் அமர்த்தி காரியங்கள் முறையாக செயல்பட திட்டங்களை அமைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனால் அந்த பீடத்தை பிரதிநிதிப்பவர்களாக பீடாதிபதிகள் மட்டுமின்றி அதில் உள்ள அனைத்து செயலவையினரும், சேவகரும் ஆகிவிடுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தங்கள் பொறுப்புக்களை காலமும் தேவையும் அறிந்து செய்ல்படுபவர்களாக இருக்கும் போதே அவர்களது கடமையில் வெற்றி பெற்றவர்களாக ஆகின்றனர்.

பொதுவாக ஒரு இந்து சமய பீடம் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை?

1.தத்துவ வகுப்புக்களை நடத்தி மக்களுக்கு சமய ஞானம் வழங்குவது.
2.தியான பயிற்சி வகுப்புக்கள் நடத்தி மக்களுக்கு மனதை ஒரு நிலைப்படுத்த பயிற்சி வழங்குவது.
3.குழந்தைகளுக்கு சமய நெறிகளை போதிக்கும் மையங்களாக விளங்குவது
4.மனக்குழப்பம் / மனக்கிலேசம் கொண்டு தவிக்கின்றவர்களுக்கு உளவியல் ஆலோசகர்களாக விளங்குவது
5.ஆலயங்களை முறையாக நிர்வகிப்பதற்கான பாடங்களை போதிப்பது
6.சிதலப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்ற ஆலயங்களை புதுப்பித்து பாதுகாப்பது
7.கல்வி மையங்களை உருவாக்குவது, ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வியினை அமைத்துக் கொடுப்பது
8.இலவச மருத்துவ வசதிகளை தேவைப் படுவோருக்கு ஏற்படுத்திக் கொடுப்பது
சேவை திட்டங்களை வகுத்து முறையாக செய்ய முனையும் போது 2 வகையில் மடாதிபதிகள்/துறவிகள் தனது கடமையில் வெற்றி பெறுகின்றனர்.

1.மக்களுக்கு சேவை செய்த ஆத்ம திருப்தியை அடைவது
2.தேவையற்ற மூட நம்பிக்கைகளை போக்கி அறிவார்ந்த உயர்ந்த பன்பினை மக்களிடையே வளர்ப்பது.
இந்த வகையில் வெற்றிகரமாக செயலாற்றுகின்ற ஒரு மடத்தினில் தங்கி இருந்து அனுபவம் பெறும் வாய்ப்பு இறைவன் திருவருளால் எனக்கு சென்ற டிசம்பர் மாதம் கிட்டியது. ஒரு வார காலம் கோயம்பத்தூரிலுள்ள பேரூர் சாந்தலிங்கர் மடத்திற்கு சென்றிருந்தேன். மடத்தினுள் நுழையும் போதே முதலில் தென்படுவது, அதன் கல்லூரி வளாகம். மார்கழி காலை வேளையாதலால் காலை 4 மணியிலிருந்து திருப்பள்ளியெழுச்சியை மடத்தில் தங்கியிருக்கும் சிறார்களும் இளைஞர்களும் பாட ஆரம்பித்து விடுகின்றனர். காலை 8:00 மணிக்கெல்லாம் வளாகத்தைச் சுற்றிலும் இளம் மாணவர்கள். சுமார் 2000 மாணவர்கள் படிக்கின்ற கல்லூரி. அதனை 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் சாந்தலிங்க இராமசாமி அடிகள். இப்போது இளைய சுவாமிகள் மருதாசல அடிகள் அவர்கள் இக்கல்லூரியை நிர்வகித்து வருகின்றார்.

இந்த மடத்தையும் கல்லூரியையும் பாதுகாத்து வருகின்ற சாந்தலிங்க சுவாமிகள் துறவிகள் சங்கத் தலைவராகவும் இருந்து பல வகையில் தமிழ்/சைவ மடங்களுக்குள் ஒருங்கினைப்பினை ஏற்படுத்த பல முயற்சிகளும்செய்து வருகின்றார். இதுவரை ஏறக்குறைய 1000 பழம் கோயில்களை தேடிப்பிடித்து அவற்றை புணரமைப்பு செய்வதிலும் வெற்றி கண்டவர் இவர். மடத்திற்கு வருகின்ற அறிஞர்கள் பலரையும் அவரகளது திறமைக்கேற்ற பயன்படுத்திக் கொள்வதிலும் சிறந்தவர். நான் அங்கிருந்த சமயத்தில் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு கனினி சம்பந்தப்பட்ட சொற்பழிவுகளை செய்யுமாறு பணித்து என்னையும் அம்மாணவர்களுக்கு சேவையாற்ற வைத்தவர். குழந்தைகளோடு அன்போடு பழகுகின்றார். கல்லூரியின் முதல்வராக ஒரு பெண்மணி இருக்கின்றார். ஆண் பெண் எனும் பாகுபாடற்ற வகையில் அருகில் இருக்கின்ற ஆலயத்தில் இளைஞர்களே ஆலய வழிபாட்டினைக் கவனிக்கின்றனர். மடத்தின் சார்பாக ஒரு தேவார பயிற்சி நிலையமும் இருக்கின்றது.

இம்மடத்தின் இளைய சுவாமிகளாக இருக்கின்ற மருதாசல அடிகளார் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞர். மேலும் மேலும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் மிகுந்து காணப்படுகின்றார். கனினித் தொழிற் நுட்பத்தை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து கல்லூரி பாடத்திட்டத்திலும் இணைத்து மாணவர்கள் கனினித் துறையில் பட்டம் பெற ஏற்பாடு செய்திருக்கின்றார். சுறுசுறுப்பும் செயல்திறமும் மிக்க மனிதராக, ஆன்மீகத் தொண்டராக விளங்குகின்றார்.

இது போல எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போக முடியும். ஒரு இனிய குடும்பத்தில் தங்கியிருந்த அனுபவத்தைப் பெற்ற மகிழ்ச்சியோடும் உள திருப்தியோடும் எனக்கு அங்கிருந்த நாட்கள் கழிந்தன. லண்டனிலுள்ள நண்பர் சிவப்பிள்ளையும் இப்படிப் பட்ட நல்ல அனுபவத்தை அந்த மடத்தில் அனுபவித்ததாக என்னிடம் கூறுவார். ஏதோ ஒரு மடத்திற்கு சாமியாரைப் பார்க்கச் செல்கின்றோம் என்ற உணர்வை விட சொந்த வீட்டிற்கு செல்கின்ற மகிழ்ச்சியும் மன சாந்தியும் இங்கு சென்று வருபவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

காவி உடைக்கு உதாரணமாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் இயங்குகின்ற இந்த மடத்தின் செயல் பாடுகள் செல்பவர்களுக்கு மன சாந்தியை அளிக்கின்றது. இதே போல நல்ல வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பல மடங்கள் இருக்கின்றன. மறைந்த குன்றக் குடி அடிகளாரும் அவரது மடம் இருக்கின்ற சுற்று வட்டாரத்தில் ஒரு பெரும்

சமயப் புரட்சியை ஏற்படுத்தி, அடிநிலையில் இருக்கின்ற மக்களுக்கு சேவை செய்தவர் என்பதையும் அவரது சேவையையின் பலனை அனுபவித்தவர்கள் மறுக்க முடியாது. இராமேஸ்வரத்தில் இயங்குகின்ற ஒரு மடம். அதனை நிர்வகிக்கின்ற அடிகள் அவரது அனுபவங்களையும் சேவைகளையும் விளக்கிய போது எவ்வளவு இடர்பாடுகளுக்கிடையில் எதிர்ப்புக்களுக்கு இடையில் இவர்கள் தன்னலம் கருதாது உழைக்கின்றனர் என்பது பிரமிக்க வைத்தது.

திராவிட சமயத்தின் முக்கிய பிரதி நிதிகளாக விளங்குபவர்கள் துறவிகள். அவர்களை பல வகையில் தூற்றுவதோஇழிவு படுத்துவதோ, நாமே நமது முகத்தில் கரியை பூசிக் கொள்வதற்கு சமமாகும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு வர்ணம் படும் போது எப்படி நிறம் மாறி விடுகின்றதோ அது போல பல சமய நெறியாளர்கள் இருக்கின்ற இந்த அகன்ற பாரதத்தில் சில முறையற்ற போலி சாமியார்கள் உலவுவதால் பல கேடுகள் விளைகின்றன. அதனால், காவி உடைக்கு இருக்கும் புனிதம் கெடுகின்றது. இந்த புனிதம் கெடாமல் பாதுகாக்க வேண்டியது இந்த சமயத்தைச் சேர்ந்த நம் ஒவ்வொருவரது கடமையும் ஆகின்றது.

என்னுடைய அனுபவத்தில் இப்பொழுது இருக்கின்ற மடாதிபதிகளில் சிலர் திறந்த மனப்பான்மையோடு தங்கள் சேவையை புரிகின்றனர். அறிஞர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வரும் போது அதனை ஏற்று செயல்படுத்தும் உளப் போக்கும் உடையவர்களாகவே இருக்கின்றன்ர். அதனால் திராவிட சமய பற்றாளர்களாக நம்மைக் கூறிக் கொள்கின்ற நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து செயல்படுதல் முக்கியமாகின்றது. அன்பே சிவம் என்பது திராவிடக் கொள்கையின் அடிப்படை. அன்பினால், ஒற்றுமையால் அறிவுத் திறமையால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை. ஒட்டு மொத்தமாக காவி அணிந்தவர்கள் ஏமாற்று வாதிகள் என குற்றம் சுமத்துவது உண்மையை உள்ளவாறு காணத்தெரியாது நமது மணம் நினைப்பதை திணித்து திரித்துக் கூறுவதாகவே ஆகிவிடும். எது சரி, எது தேவை, எப்படி உயர்வடையலாம் என காரண காரியத்தோடு சொல்லும் வகையில் சொல்கின்ற போது மாற்றம் படிப்படியாக ஏற்பட வழி பிறக்கின்றது.

நமது சமயக் கொள்கைகள் அறிவை வளர்க்கின்ற தன்மை படைத்தவை; காலத்தின் தேவைக்கேற்ப மனித குல வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளைக் கொண்டவை. அக்கொள்கைகள் மனித குலத்திற்கு பயன் பெறுவதற்கு, நல்ல வகையில் இயங்குகின்ற சமய மடங்களை இணம்கண்டு ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு சேர்ந்து வளர்வது நிச்சயம் நன்மை பயக்கும்.


அன்புடன்
சுபா

Sunday, April 22, 2001

கைவல்யோபநிஷத்து (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயணம் (மாய உலகம்)

Date: Sun, 22 Apr 2001 12:23:17 -0700 (PDT)
From: "suba k."
Subject: Upanishad - Kaivalya Upanishad (Part 2.2)
To: meykandar@egroups.com

முதல் காண்டச் சுருக்கம்:(2)
-மாயையால் மதியிழந்த ஜீவனே சரீரத்திலிருந்து எல்லாவற்றையும் செய்கின்றான்.

-ஸ்திரீ, அன்னம், பானம் முதலிய பலவகைப்பட்ட போகங்களால் அவனே விழிப்பு நிலையில் திருப்தியை அடைகின்றான்.

-கனவு நிலையில் அந்த ஜீவன் தனது மாயையால் கல்பிக்கப்பட்ட ஜீவலோகத்தில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றான்.

-உறக்க நிலையில் அனைத்தும் ஒழிவடைந்த போது அறியாமையாகிற இருளில் ஆழ்ந்து இன்ப வடிவை எய்துகின்றான்.

-மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத் திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் முப்புரங்களிலும் விளையாடுகின்றான்.

தொடர் சிந்தனை:

கைவல்யோபநிஷத்தின் இப்பகுதி மாயையின் தன்மையையும் அதனால் ஜீவன் அடைகின்ற அனுபவத்தையும் விளக்குகின்றது. இந்தப் பகுதியில் கவனிக்கப்பட வேண்டிய கருத்துக்களாக இருப்பவை இரண்டாகும். முதலாவதாக, மாயையின் தாக்கத்தினால் ஆன்மா தன்னை மறந்து வேட்கையினால் ஈர்க்கப்படுவது; அடுத்தது, ஆன்மா விழிப்பு, கனவு உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் மாயையோடு கொண்டிருக்கின்ற தொடர்பு.

இந்த இரண்டு கருத்துக்களுமே மாயையினால் ஆன்மாவின் ஒவ்வொரு செயலும் பாதிக்கப்படுகின்ற தன்மையை விளக்குவதாக உள்ளது.

13ம் நூற்றாண்டில் ஆன்ம தத்துவங்களை மிக ஆழமான ஆராய்ச்சிக்குட்படுத்தி அதனை நூல் வடிவில் தந்தவர் அருள் நந்தி சிவாச்சாரியார். அவர் தனது 'இருபா இருபஃது' எனும் நூலில் மாயைக்கு விளக்கத்தினை இப்படி எழுதுகின்றார்;

அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்
பைசா சூனியம் மாச்சரியம்பய
மாயவேழ் குணனும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மெவலென் றெடுத்த


விளக்கம்:- மாயையானது அஞ்ஞானம் (பொருளல்லதனைப் பொருளென்று கொள்ளுதல்), பொய் (மன மொழி மெய்களில் செப்பமின்மை), அயர்வு (ஒன்றை மறந்தும் மயங்கியும் வருந்துதல்), மோகம் (புல்லிய பொருள்களை விரும்பி உழலுதல்), பைசாசூனியம் (ஒரு பொருளின் மேற்கொண்ட தீய வேட்கையை ஒளித்தல்), மாற்சரியம் (பிறர்பால் பகைமை பாராட்டுதல்), பயம் (அஞ்சத் தகாதனவற்றிற்கு அஞ்சுதல்)என்னும் ஏழு குணங்களையுடையது;

ஆன்மா தன்னை, தனது சுய இயல்பினை, மறந்து செயல்படுகின்ற நிலையே மாயையினால் ஏற்படுகின்ற நிலை என பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் செய்கின்ற அத்தனை செயல்களுக்கும், ஆன்ம போக்கிற்கும் மூல காரணமாக இருப்பது அந்த ஆன்மா கொண்டிருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை எனும் இம்முன்று பாசங்களுமாகும். அதில் மாயை எனும் இக்குணமானது உடலெடுத்து வாழ்கின்ற ஜீவனுக்கு, சிந்தனைப் போக்கில் தாக்கத்தினைக் கொடுத்து ஜீவனின் செயல்களுக்குக் காரணமாக அமைகின்றது.

மாயை என்பது இறைவனால் ஆன்மாவிற்குக் கொடுக்கப்படுவதல்ல. ஒரு ஆன்மா கொண்டிருக்கின்ற மாயை எனப்படுவது அவ்வான்மா ஈட்டி தன்னோடு சேர்த்து வைத்துள்ள ஆணவ மலத்தையும் கன்ம மலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஆணவமும் கன்மமுமே அந்த ஆன்மாவின் மாயையை தீர்மானிப்பதாக அமைகின்றன. சரி, மாயையினால் ஆன்மா எதை அனுபவிக்கின்றது என்பதைப் பார்ப்போம்;

மாயை என்பது மயக்கத்தைக் கொடுப்பது. சிந்தனைத் தெளிவைக் கெடுத்து, உடலுக்கு இன்பமளிக்கும் காரியங்களில் மனதின் நாட்டங்களை செலுத்தும் திறன் பெற்றது. சாதாரணமாக பேச்சு வழக்கில், மண் ஆசை, பெண் ஆசை, பொண் ஆசை இவை மூன்றுமே மனிதருக்கு நிம்மதியைக் கெடுத்து பேரிழப்பினைத் தரக்கூடியது எனும் கருத்து இருந்து வருகின்றது. பொருள், புகழ் காமம் போன்றவற்றில் எழுகின்ற பேராசையே கூடாத ஒன்றாகவும் அழிவினைத் தரக்கூடியதாகவும் அமைகின்றது.

மனிதர் செய்கின்ற அத்தனை செயல்களுக்கும் பின்னனியில் ஒரு வேட்கை கட்டாயமாக இருக்கும். ஒரு பொருளின் மேல் உள்ள பற்றே (ஆசை) அதனை தனதாக்கிக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனையைத் தூண்டுகின்றது. ஆசையே கூடாது என்று சொன்னால் அது அபத்தமாகிவிடும். ஆசைகளில் இரண்டு விதம். ஒரு வகை ஆசை, தனக்கு மட்டும் குறிப்பாக தனது உடலுக்கு இன்பமளிக்கக் கூடியது. மற்றொன்று தனது ஆன்மாவிற்கு உயர்வினை அளிக்கக் கூடியது. இதுவே பிறர் இன்பத்தையும் நிம்மதியையும் நினைத்து எழுகின்ற ஆசை. ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதலில் படித்து வாழ்வில் உயர வேண்டும் என நினைக்கும் ஒரு மாணவி பல புத்தகங்களின் மேல் ஆசை கொண்டிருப்பாள். இதுவும் ஒருவகை ஆசைதான். அதே வேளை இன்னொரு பெண், பொருளாசை கொண்டு, பார்க்கின்ற அத்தனை தங்க நகைகளும் தனக்கு வேண்டும் என நினைப்பவளாக இருப்பாள். இது முதல் வகையைச் சேர்ந்தது. இரண்டுமே ஆசையின் நிமித்தம் தோன்றுகின்ற எண்ணங்கள் தான். ஆனால் தன்மையில் வேறுபடுபவை!

மாயை ஒரு மனிதரை மதியிழக்கச் செய்யக் கூடியது. எந்த ஒரு காரியத்தை செய்கின்ற போதும் அதன் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தனை தெளிவாக இருக்கும் போது ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், மாயை அதிகமாக ஆன்மாவில் சேர்ந்திருக்கும் போது மனிதரை சிந்தனையிழக்கச் செய்து, மனம் போகின்ற போக்கில் தனது செயல்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு ஆசை இழுக்கின்ற வகையில் காரியங்களில் ஈடுபட வைக்கும்.

மாயையின் தன்மையையும் அதை நீக்கும் வகையினையும் முனைவர் கி.லோகநாதன் தனது அழிவில் உண்மை விளக்கத்தில் இப்படி குறிக்கின்றார்.

சூத்திரம் 11. மாயைக் கழற்சி

மூலக்கற்றளி முட்டிமுடித்து அறிவினா திட்டான
மடைந்துமணி பூரகமுற் றிடுமாண் புடையான்மா
கண்டிடு முலகிற் கருநிலை யாடல்கள்
வென்றிடு மாய்மை வீழுமிறை யருளின்.


....... பிழையறிவுகள் பற்பல எழுவதற்கு மூலமாய இந்த மாயாமலத்தை அதனின் எழு மாய்மையை, இறையருளை ஈட்டியே ஆன்மாக்கள் தம் அகத்திலிருந்து போக்கும் என்பதாயிற்று.

meykandar e-forum: Azhivil Unmai -11 12/apr/2001


........... இனி இவ்வாறு அருளது வீழ்ச்சியே மாய்மையையும் அதன் மூலமாகிய மாயாமலத்தையும் போக்கும் என்றிருக்க, ஆன்மா "வென்றிடும் மாய்மை" எனபது என்னையோவெனின், மயக்கத்தைக் கெடுத்தல் அருளது வீழ்ச்சியின் காரணமாக நடப்பதெனினும், அதற்குப் பாத்திரமாதல் எளிதான ஒன்றல்ல ஆன்மாக்களுக்கு என்பதை உணர்த்துதல் கருதிற்று என்பதாம். பல்வேறு மயக்கவறிவுகளைத் தரும் இழுப்புகட்கு ஆளாகிக் கொண்டே இருக்கும் ஆன்மாக்கள், அவ்வழி செல்லாது அவற்றோடு பெரும் போராட்டம் நடத்தியே அந்த இழுப்புக்களை வென்று அருளது வீழ்ச்சிக்கு பாத்திரமாக நிற்க முடியும். அருள்வீழ்ச்சி இதற்குத் துணையாக நிற்க, ஆன்மாக்கள் அகத்திலே மாபெரும் போராட்டம் நடத்தியே உறுதியான வைராக்கியத்தோடு பிழையறிவு மாயத்தை, மாயமலத்தை ஒதுக்கி இறையருட்பார்வையிலேயே நிற்கமுடியும். இத்தகு மாயத்தை வெல்லல் ஓர் மாபெரும் வீரப்போராட்டம் என்பதால், "வென்றிடும் மாய்மை" என்று பகரப்படுகின்றது. ...............

meykandar e-forum: Azhivil Unmai -11 14/apr/2001


மாயையின் தாக்கம் ஆன்மா விழித்திருக்கின்ற நிலையில், கனவில், ஆழ்ந்த உறக்கத்தில் என அனைத்து நிலைகளிலும் இருப்பதாக கைவல்யோபநிஷத்து விளக்குகின்றது. சாதாரண மனிதர்களாகிய நாம் சபலங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்லர். பல விதமான உணவுகளை விரும்புகின்றோம். சைவ உணவென்றால் நூறு வகை. அசைவ உணவென்றால் ஆயிரம் வகை என நாக்கின் சுவைக்கு ஏற்ப உணவை சுவைத்து மகிழ்கின்றோம். உணவு என்பது உயிர் வாழ்வதற்கு எனும் நிலை மாறி உணவு போகப் பொருளாக, உண்டு மகிழ்ந்து வாழ்வதே வாழ்வு எனும் நிலையில் இருக்கின்றோம். பசி என்னும் இந்த ஆசை படுத்துகின்ற பாட்டினை ஔவை மிக அழகாக இப்படிப் பாடுகின்றாள்;

ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளுங் கேல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிரே!
உன்னோடு வாழ்தல் அறிது.


பட்டினியால் உலகின் பல மூலைகளில் மக்கள் வாடுகின்ற சமயத்தில் நாம் இங்கு ஒரு நாளைக்கு ஆறு முறை சாப்பிடுகின்றோமே என எனது ஆசிரியர் ஒருவர் ஒரு முறை கூறி வருந்தினார். உணவில் மாத்திரமல்ல; நமது மனம் பார்க்கின்ற அனைத்தையும் அடைய ஏங்குகின்றது. பார்க்கின்ற எல்லா பொருளும் அது அழகாக, கவர்ச்சியாக, விலை மதிப்புடையதாக இருந்தால் உடனே அதன் பக்கம் மனம் தாவுகின்றது; அதனை சொந்தமாக்கிக் கொள்ள ஏங்கின்றது.

உடல் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது மனம் போகங்களை நாடியே செல்கின்றது. முறையற்ற காமம் முறையற்ற ஆசையைத் தூண்டுகின்றது. ஆசை மனதை முழுமையாகப் பிடித்துக் கொள்ளும் போது மனம் அந்த சிந்தனையின் முழு ஆக்கிரமிப்பினால் ஈர்க்கப்படுகின்றது.சதா காலமும் ஈர்க்கப்பட்ட பொருளின் சிந்தனையிலேயே ஆழ்ந்து பொன்னான காலத்தை செலவழிப்பதை உணராது அதனை அடைவதிலேயே காலத்தைக் கழிக்கின்றது. ஆசைப்படுகின்ற பொருள் ஆன்ம வளர்ச்சிக்குப் பொருந்திய ஒன்றாக இருந்தால் அதனை அடைய எடுக்கின்ற முயற்சியில் ஆன்மா பக்குவத்தில் உயர வாய்ப்பிருக்கின்றது. அதனை விடுத்து, நிலையற்ற, அழியக்கூடிய பொருள்களில் நாட்டம் செல்லும் போது ஆன்மா அமைதியிழந்து பற்பல தொல்லைகளில் சிக்கி நிம்மதியிழக்க நேரிடுகின்றது.

ஆசை தருகின்ற உந்துதல் இருக்கின்ற போது ஏதாவது ஒன்றினை செய்ய வேண்டும் எனும் சிந்தனை தோன்றி மனிதரை செயல் படுத்த வைக்கின்றது. அதனால் 'ஆசை' முற்றிலும் கூடாத ஒன்று என்று கூறி விட முடியாது. எந்த ஆசையும் முறையானதாக, அளவானதாக ஆன்ம உயர்வைத் தரக்கூடியதாக இருக்கின்ற வரையில் அது ஆன்ம பக்குவத்தை முன்னேற்றக் கூடிய ஒன்றே. ஆசை பேராசையாக மாறும் போதே அது மென்மேலும் கன்மத்தை சேர்த்து, ஆணவத்தைக் கூட்டி மனிதருக்கு துன்பத்தைக் கொடுப்பதாக அமைகின்றது.

விழிப்பில் மாயை மனிதருக்கு ஆசைகளை எழுப்பவதாகக் கூறுகின்ற கைவல்யோபநிஷத், கனவில் மாயையால் கல்பிக்கப்பட்ட ஜீவ லோகத்தில் ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிப்பதாகக் கூறுகின்றது. ஆக கனவு என்பதை மாயை ஏற்படுத்துகின்ற ஒரு வித்தை என்பதாக இது முடிகின்றது. இது முற்றாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை. கனவு என்பது பரம்பொருளால் மனிதருக்கு தெரிவிக்கப்படுகின்ற நிகழ்வு. கனவு பலவகைப் படும். நடந்து முடிந்த ஒன்றினை மீண்டும் ஞாபகப் படுத்துவதாக, நடக்க விருப்பதை ஏதாவது ஒரு வகையில் விளக்குவதாக, பிறரது அனுபவத்தை நாம் உணர வைப்பதாக, அல்லது எதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக என கனவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கனவு அதைக் காண்பவருக்கு இன்ப துன்ப உணர்வுகளைத் தரக்கூடியது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. ஆனால் அவை கற்பிக்கப்படுபவை அல்ல!.

கனவு என்பது internet செயல்பாட்டினைப் போன்றது. internet தொடர்பினை ஏற்படுத்துவதற்கு client, server என இரண்டு system தேவை. இவை செயல்படுவதற்கு நிரந்தரத் தொடர்பு என்பது இல்லை. எப்போது ஒரு client ஒரு server லிருந்து சில பக்கங்களை பார்க்க தொடர்பினை ஏற்படுத்துகின்றதோ அப்போது அந்த இனைப்பு ஏற்படுகின்றது. உதாரணமாக ஜெர்மனியில் இருக்கும் நான் எனது அலுவலகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு server ன் ஒரு வலைப்பக்கத்திலுள்ள செய்திகளை படிக்க விரும்பும் போது அந்த URL கொடுத்து இனைப்பினை ஏற்படுத்துகின்றேன். அந்த இனைப்பு எந்த backbone வழியாகச் சென்று நான் விரும்புகின்ற செய்தி இருக்கின்ற server ஐ அடைந்தது என்பது எனக்குத் தெரிய வழியில்லை. அதைப் போலத்தான் கனவுகளும். அவை இறையினால் ஆன்மாக்களுக்கு அனுப்பப் படுகின்ற செய்திகள். கனவு நிலையில் மனம் ஒடுங்குவதால் இறைவன் தெரிவிக்கின்ற செய்திகளை ஆன்மா முழுமையாகப் பற்றிக் கொண்டு அதனை அனுபவிக்கின்றது. மனம் செயல்பட ஆரம்பிக்கும் போது கனவிற்கான தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. இறைவன் தனது கருணையினால் ஆன்மாக்களுக்கு உதவும் வகையில் எப்போதும் ஆன்மாக்களோடு தொடர்பு கொண்டேயிருக்கின்றார். ஆனால், பல விஷயங்களில் மனதைச் செலுத்தி சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆன்மாக்களுக்கு விழிப்பு நிலையில் இறைவன் சொல்கின்ற உண்மைகளை (செய்திகளை) உணர முடியாமல் போய்விடுகின்றது. ஆன்மா உறக்கத்தில் இருக்கின்ற போது மனதின் செயல்பாட்டினை இழந்து அமைதி அடைகின்ற போது, இறை உனர்த்துகின்ற உண்மைகளைக் காணக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. தான் என்ற சுயம் மறையும் போது இந்த நிலை சித்திக்கின்றது. ஆனால் சில வேளைகளில் னமது மனம் விழித்துக் கொள்ளும் போது, கனவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை அப்போது நிஜம் என்று நினைத்து, திடுக்கிட்டு எழுவது, அழுவது அல்லது சிரிப்பது என்பது போன்ற அனுபவங்களும் நமக்குக் கிடைப்பதுண்டு.

விழிப்பிலும் கனவிலும் மாயையின் செயல்பாட்டினைப் பார்த்தோம். உறக்கத்தில் அதன் தாக்கம் என்ன? 'உறக்க நிலையில் அனைத்தும் ஒழிவடைந்த போது அறியாமையாகிற இருளில் ஆழ்ந்து இன்ப வடிவை எய்துகின்றான்' என கைவல்யோபநிஷத்து கூறுகின்றது. உறக்கத்தில் ஆன்மாவின் நிலை என்ன? உறக்கத்தில் இருக்கும் போது மனம் ஒடுங்கி அமைதி பெருகின்றது.ஆனால் உடல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. இரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், ஹிருதயத் துடிப்பு என்பவை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மூளையை இயக்குகின்ற மனம் ஒடுங்கி இருப்பதால் மூளை மிகக் குறைவான வேலைகளை மாத்திரம் கவனித்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும். கனினி செயல்பாட்டினை தற்காலிகமாக நிறுத்திவைக்க நினைக்கும் போது அதனை நாம் shutdown செய்வதற்கு பதிலாக standby நிலையில் வைக்கின்றோம் அல்லவா, அதைப்போலத்தான் உறக்கமும். உறக்கத்தின் போது ஆன்மா முழுதாக உடலிலிருந்து பிரிந்து விடுவதில்லை. ஆன்மா உடலுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை குறைத்துக் கொள்கின்றது.அது மட்டுமே!

ஆக உறக்கம் தருகின்ற இன்பம் இருளின் அனுபவத்தினால் வருவதல்ல. மாறாக அது உடல் ஓய்விற்குப் பிறகு புத்துணர்ச்சி பெறுவதால் ஏற்படுகின்ற அனுபவம்.

இந்தக் கருத்துக்களை மேலும் மேலும் சிந்திக்கும் போது நமது அத்தனை நன்மை தீமைகளுக்கும் முழுப் பொருப்பு நாமே எனும் செய்தியை நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது. மாயை தருகின்ற அல்லல்களிலிருந்து விடுபடுவதற்கு தெய்வீக நாட்டமும் மனக் கட்டுப்பாடுகளும் மிகவும் அவசியமாகின்றன. சிந்தனையில் தெளிவு தோன்றுகின்ற போது தானே நம்மை நாம் மென்மேலும் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்!!

தொடரும்.....


அன்புடன்
சுபா

Monday, April 9, 2001

கைவல்யோபநிஷத்து (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயணம் (சுய சிந்தனை)

Date: Mon, 9 Apr 2001 01:12:22 -0700 (PDT)
From: "suba k."
Subject: Upanishad - Kaivalya Upanishad (Part 2.1)
To: meykandar@egroups.com

முதல் காண்டச் சுருக்கம்:
- ஆச்வலாயனர் பிரம்மாவிடம், சிறந்ததும், எப்போதும் நல்லோர்களால் நாடப்பெற்றதும், மறையாயுள்ளதுமான பிரம்ம வித்தையை உபதேசிக்க வேண்டுகின்றார். ஆச்யவலாயனாருடைய பாட்டனாராகிய பிரம்மா (ஆச்யவ்லாயனர் பகவானே என்றே பிரம்மாவை அழைக்கின்றார்) பிரம்ம வித்தையை 'சிரத்தையாலும், பக்தியாலும் தியான யோகத்தினாலும் அடைவாயாக' என வாழ்த்துகின்றார்.

- சாகாநிலையை அடைவது என்பது கர்மத்தாலோ அல்லது ஈன்ற குழந்தைகளாலோ, செல்வத்தாலோ அன்றி செய்கின்ற தியாகத்தினாலேயே சிலர் எய்தினர்.

- யோக முயற்சி உடையோர் எய்தும் அப்பதவி ஸ்வர்க்கத்தினும் சிறந்தது. சந்தியாச யோகத்தால் பிரம்மத்தில் நிலைபெற்று அந்திய காலத்தில் பற்றனைத்தினின்றும் விடுபடுகின்றனர்.

- சந்தியாசியானவன் தனிமையான இடத்தில் சுகமான ஆசனத்தில் அமர்ந்து பரிசுத்தமானவனாய் கழுத்து, தலை, உடல் ஆகியவற்றைச் சமமாய் நிறுத்தி, எல்லா இந்திரியங்களையும் அடக்கி பக்தியுடன் தன் குருவை வணங்கி அறியாமையாகிற இருளைக்கடந்ததுமான நிலையை அடைகின்றான்.

- எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா உயிர்களையும் கண்டு கொண்டு ஒருவன் பரப்பிரம்மத்தை அடைகின்றான்.

- அறிவாளி தன்னை ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து தனது பாவங்களைச் சுட்டெரிக்கின்றான்.

- உமாதேவியுடன் கூடிய பரமேச்வரனாக உலகை ஆழ்கின்ற பரம்பொருளை நினைத்து, தியானித்து இருளைக் கடந்த நிலையை முனிவன் அடைகின்றான். அந்த பரப்பிரம்மமே சிவன், பிரம்மா, அவனே விஷ்ணு, அவனே பிராணன், காலன், அக்கினி அவனே சந்திரன். உண்டானதும், உண்டாகப்போவதும், என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே. அவனை அறிந்தே ஒருவன் சாவைக் கடக்க முடியும்; முக்திக்கு வேறு வழியில்லை.

தொடர் சிந்தனை:

உபநிஷத்துக்கள் பலரால் எழுதப் பட்டு தொகுக்கப்பட்டவை. அதனால் பல கருத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கும் சூழ்நிலை பல இடங்களில் தென்படுகின்றது. உபநிஷத்துகளுக்குப் பாஷ்யம் எழுதி அத்துவிதக் கொள்கையை உலகுக்கு தந்தவர் சங்கராச்சாரியார். அத்துவிதம், ஆன்மாவே இறைவன்; மாயையினால், உடலெடுத்த ஆன்மா தனது சுய ரூபத்தை உணராது, வாழ்க்கை எனும் சுழலில் சிக்கித் தவிப்பதாகவும், அது தனது சுயரூபத்தை உணருகின்ற தருவாயில் இறை ஜோதியில் சேர்ந்து தானே பரப்பிரம்மமாகின்றது என்று ஆன்ம விளக்கம் தருகின்றது. அந்த கருத்துக்களுக்கு மூலம் போன்று கைவல்யோபநிஷத்தின் சில செய்யுள்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் அவை இதன் இரண்டாம்காண்டத்தில் அமைந்திருக்கின்றன.இதனை படிக்கின்ற ஒருவர் வேதாந்த கருத்துக்கள் மட்டும் கொண்டவையோ என இந்த உபநிஷத்தை குறுகிய கண் கொண்டு பார்ப்பதை விட, அது சொல்கின்ற எல்லா கருத்துக்களயும் ஆழமான சிந்தனைகோடு ஒப்பிட்டு அலசுவதே சாலச் சிறந்தது.

பண்டைய இந்திய கல்வி முறையில் பொருளியல் ஆராய்ச்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட ஆன்மீகத் தேடலுக்கான தத்துவ விசாரனைகள் மிகத் தீவிரமாக அலசப்பட்டுள்ளன என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அதுவே இன்றைய நிலையில் மிகவும் உயர்ந்த பல பண்பாடுகளும் கலாச்சாரங்களும் சிந்தனை ஆழங்களும் நமது தமிழ் மரபிலே இன்றும் செழித்து வளர காரணமாக இருக்கின்றன. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே யோகம், மீமாம்சம், சாங்கியம் லோகாயுதம் சமணம் புத்தம் என பல சமயங்களாக விரிந்து பரந்து தத்துவங்கள் பிறந்து செழித்து வந்திருக்கின்றன. இவை சமயம் என்ற குறியீட்டுப் பெயரில் விளங்கினாலும், தத்துவங்களைத் தெளிவு படுத்தி மக்களை உயர்ந்த சிந்தனைக்குக் கொண்டு செல்லக் கருவிகளாக பயன்பட்டன என்று கொள்வதே மிகச்சிறந்தது.

இந்த சமயங்களுக்குப் பிறகு மிகவும் செழித்து வளர்ந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் போன்றவையும் இன்று சடங்குகளில் முழ்கித் தவித்தாலும் தத்துவங்களை அலசுவதில் சிறிதளவும் சளைத்தவை அல்ல. சைவத்தின் முக்கிய நூலான சிவஞான சித்தியார், உலவி வருகின்ற பல சமயங்களை ஆராய்ந்து அதன் குறை நிறைகளை கண்டு ஆராய்ந்து பின்னர் அவற்றை விளக்கும் வகையில் சைவத்தின் கருத்துக்களை வைத்து சைவத்தை வளர்த்தது. அது போலத்தான் பிற சமயங்களும் இருந்தன.

ஆனால் இன்றைய நிலையில் சைவம் என்றால் சைவ சாப்பாடா என்று கேட்கும் தாழ்ந்த நிலை கூட தோன்றிவிட்டது. தத்துவங்கள் தோன்றிச் செழித்த தமிழகத்தில் இறையனுபவத்தைப் பெற பொருளாதாரம் தான் தேவையாயிருக்கின்றது. இறைவனுக்கு அர்ச்சனை செய்யக் கூட குலமும் கோத்திரம் கேட்டுத்தான் கோயில் குருக்கள் பூஜை செய்கின்றார். மக்களும் இறை வழிபாடு என்பதை கடமைக்குச் செய்கின்ற ஒன்றாக நினைத்து பணமே அதற்கு மூலாதாரம் என நினைக்கும் வகையில் இயங்குகின்றனர். இது பரிதாபமான ஒரு நிலையே.

ஆன்மீக தத்துவங்கள், அவை எந்த மதமாக இருந்தாலும் சரி, பள்ளிகளில் ஒரு பாடமாக வைக்கப்படும் போது அது வளர்கின்றது. உதாரணமாக, மலேசிய நாட்டில் இஸ்லாமிய கல்வி எல்லா முஸ்லீம் மாணவர்களுக்கும் கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களும் மத பேதமின்றி இஸ்லாமிய பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாக முதலாண்டில் படிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.. அதுபோல ஜெர்மனியில் எல்லா பள்ளிகளிலும் குறிப்பாக ஆரம்பப்பள்ளியில் படிக்கும் கிறிஸ்துவ மாணவர்கள் கிறிஸ்துவ சமய பாட வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இங்கு பிற மதத்தவர் கிறிஸ்துவ மத பாடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. துருக்கிய நாட்டினர் அந்நேரங்களில் பொது அறிவு வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். ஆனால் 1980களின் ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வந்த பல இலங்கை சைவத்தமிழர்களின் குழந்தைகள் இந்த கிறிஸ்துவ மதப் பாடப் போதனைகளில் கலந்து 'சிறப்பிகின்றனர்'. இந்து/சைவ சமயம் சார்ந்த கல்விமுறை என் எடுத்துக் கொண்டால் அது யாழ்ப்பாணத்தைத் தவிர வேறு எங்கும் பாடமாக வைக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம். அதுவும் கூட பெரும்பாலும் கல்லூரிகளில் தேவார திருவாசாக ஆராய்ச்சிகளாக மட்டுமே இருப்பதாகவும் தத்துவங்கள் அதிகமாக அலசப்படுவய்தில்லை என இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவர் ஒரு முறை நொந்து கொண்டார்.

இந்திய தத்துவ ஆராய்ச்சிகள் தேவைக்கு அதிகமாகவே கிடப்பதால் தானோ இந்த நிலை?

இந்திய தத்துவ ஞானம் என்பது மறுமைக்கு புண்ணியம் தேட கண்டுபிடிக்கப்பட்ட அதிசயப் பொருளாக எனக்குத் தோன்றவில்லை. அன்றாட வாழ்க்கையை அலசி அதனுள்ளிருந்து ஒருவர் தன்னை உணர்ந்து கொள்ள, தனது செயல்களுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள வைக்கின்ற ஒரு வாழ்க்கை நெறி முறையாகவே அது விளங்குகின்றது. வாழ்க்கை என்பது பாவத்தினாலும் குற்றங்களினாலும் உருவாகிய ஒன்று என்பதை விட வாழ்கின்ற வாழ்வில் எப்படி நித்திய இன்பத்தைக் காண்பது என்பதே இந்திய தத்துவ ஞானத்தின் சாரமாக இருக்கின்றது.

சுதந்திரத்தைக் கொடுத்து ஒருவர் சுயமாக சிந்தித்து தனது செயல்களுக்குத் தானே பொருப்பு எனும் உண்மையை உணர வைத்து தனது வாழ்க்கையை மென்மேலும் செம்மைப் படுத்திக் கொள்ளும் வழியை காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. புறக் கட்டுப்பாடுகளை விட அகக் கட்டுப்பாடினை வளர்த்து மனிதரை செயல் வீரராக்கும் திறனும் கொண்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இந்த உபநிஷத்தும் அமைந்திருக்கின்றது.

இறைவன் ஒருவனே. அவன் வேண்டுவோருக்கு அருவமாக, அருவுருவமாக, உருவமாகத் தோன்றி தன்னை வெளிப்படுத்துபவன். 'வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ' இது சைவக் குறவரின் வாக்கு. அது போல வள்ளலாரும், 'எண்ணிய நான் எண்ணிய வாரு எனக்கருளும் தெய்வம்' என இறைவனை விளிக்கின்றார். இறைவனை குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கின்ற நீதிபதியாக பார்ப்பதை விட ஆன்மா நினைப்பதைத் தருகின்ற வள்ளலாக பார்க்கின்ற இந்த உயர்ந்த கருத்துக்கள் மனித ஆன்மாவிற்கு பலம் சேர்க்கும் தன்மை வாய்ந்தவை. ஆக வாழ்கின்ற வாழ்க்கையில் பல போராட்டங்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிட்டாலும் மனிதர்கள் சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கையோடு சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் தன்மையைக் கொண்ட வைட்டமின் மாத்திரைகளாக அமைந்திருப்பது நமது தத்துவம் சொல்லும் வாழ்க்கை முறை. இல்லறம், பிறகு துறவறம்; இரண்டையுமே அறத்தோடு ஒழுகுதல் வேண்டும்.

சட்டங்கள் நாட்டின் , மக்களின் அமைதியைப் பாதுகாப்பதைப் போல இல்லத்திலும், துறவு வாழ்விலும் அனுசரிக்கப்படுகின்ற ஒழுக்கங்கங்கள் அறம் சார்ந்திருக்க வேண்டும். அறத்தோடு இருக்கும் போது வாழ்க்கை சுவைக்கின்றது. அறம் பிழைக்கும் போது வாழ்க்கை பிரச்சனையாகின்றது; போராட்டம் பிறக்கின்றது.

ஒரு கனினி இயந்திரம் இயங்கும் போது அதன் அத்தனை செயல்பாடுகளுக்கும் மூல காரணியாக இருப்பது மென்பொருளில் அமைந்திருக்கின்ற கட்டளைகள். (Program codes / statements) கட்டளைகள் ஒழுங்காகச் செயல்படுகின்ற போது இயந்திரம் தனது வேலையை குறிப்பிட்டுள்ள வகையில்(documentation) சரியாக செய்யும். இதனால் தொழில் சீராக இயங்குவதோடு தொழிலுக்கு வருமானமும் பெருகும். மாறாக கனினி கட்டளைகள் பிசகி செயல்பட ஆரம்பித்தால் அதன் பின் விளைவுகள் சில வேளைகளில் உயிர் சேதத்தை உருவாக்கி விடும் அபாயமும் உண்டு. அது போலத்தான் மனிதரும். ஒவ்வொருவரும், அது இல்வாழ்வோ அல்லது துறவோ, வாழ்கின்ற வழ்க்கையை ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் பிறழாமல் வாழ்கின்ற வரையில் அறம் காத்து வாழ்கின்ற போது அது இனிதாகின்றது. மேலும் மேலும் வாழ்வில் வளம் பெருகுகின்றது. மாறாக ஒருவர் மயக்கத்தால் ஆசைகளுக்கு ஆட்பட்டு தனது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறத்தை மறக்கும் போது (இழக்கும் போது) அங்கே தென்றலுக்கு பதில் புயலே தோன்றும். பல வேளைகளில் சிந்திக்கும் போது எனக்கு மனிதருக்கும் இயந்திரங்களும் ஆன்மாவைத் தவிர வேறு பேரளவிலான வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றுவில்லை.

அது உயிர்பொருளோ அல்லது இயந்திரமோ, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பின்னனியில் ஒரு மூலகாரணி இருக்கின்றது. ஒருவர் தனது கடமையை உணர்ந்து அதற்கேற்றார்போல இயங்கும் போதே கடமையில் வென்று பிரம்மத்தில் நிலைபெற முடிகின்றது.

நாம் அனுதினம் காலையில் விரும்புகிறோமே இல்லையோ, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து பிடிக்கின்றதோ இல்லையோ, அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்கின்றோம்; விரும்பியோ விரும்பாமலோ திருமண பந்தத்தில் மனிதப் பிறப்பெடுத்த அனைவரும் செய்ய வேண்டிய ஒரு கட்டாயக் கடமையாக நினைத்து நுழைகின்றோம்; தனது சொந்தப் பிரச்சனைகள் போதாதென்று மேலும் மேலும் பிறரின் பிரச்சனைகளிலும் தலையிட்டு அவற்றிலும் உழல்கின்றோம். ஒவ்வொரு நாளும் பலப் பல பிரச்சனைகள். 24 மனி நேரத்தில் தூங்குகின்ற நேரம் தவிர்த்து இன்பத்தை உணர்வது, அனுபவிப்பது என்பதற்கான சதவிகிதம் நிச்சயம் குறைவே. அலுவலகமாக இருந்தாலும் சரி இல்லமாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளை சிந்திப்பதும், அதனிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதை சிந்திப்பதிலும், மேலும் மேலும் வளத்தை எப்படிச் சேர்ப்பது என்பதிலுமே காலத்தை செலவு செய்கின்ற மனித இயந்திரங்களாக இயங்குகின்றோம். சக்தி இருக்கும் வரை (electricity / battery) இயந்திரம் இயங்கும்.

மனிதனும் அப்படித்தான். உடம்பில் சக்தி இருக்கும் வரை தான் ஆன்மா தங்கும். சக்தி குறையும் போது பிரம்மத்தினோடு கூடிய தொடர்பு குறைந்து ஆன்மா சோர்ந்து விடும் ஆக, எவ்வாறு கைவல்யோபநிஷத்து கூறுவது போல தான் தானாகும் நிலையை அடைவது?

அன்பு, கட்டொழுங்கு எனும் பன்புகள் கூடும் போதே அது சாத்தியமாகின்றது. மனித வாழ்வில் அறம் இருக்கும் போதே அங்கு அன்பு தோன்றுகின்றது. அறம் இல்லா வாழ்வு வெறுப்பையும் கோபத்தையும் கொடுத்து ஆன்மாவை வலிவிழக்கச் செய்து விடும். அன்பு பெருகும் போது, அன்பினை அனுபவிக்கும் போது அந்த அன்பு பெருகி உடல் தொடர்புகளைத் தாண்டி ஆன்மத் தொடர்பினை ஊண்டாக்கி உலகமே ஒரு குடும்பம் எனும் பரந்த சிந்தனையை உருவாக்குகின்றது. ஆன்மா இங்கு பகிர்ந்து கொள்வது சுய தேவைகளை அல்ல; மாறாக பரிபூரண ஆனந்தமான அன்பையே. மனிதர் எங்கிருந்தாலும், அவர் என்ன இனமாக இருந்தாலும், ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தமக்கென அமைதியான நிறைவான ஒரு வாழ்க்கையயே தேடுகின்றனர். அது இல்லாது போகும் போதே விரக்தி, வேதனை, பிளவு துன்பம் எனத் தொடர் சோதனைகள்.

அன்பு பெருகும் போது எல்லா உயிர்களையும் தனதாக பார்க்கின்ற நிலை கூடுகின்றது. ' எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா உயிர்களையும் கண்டு கொண்டு ஒருவன் பரப்பிரம்மத்தை அடைகின்றான்.'என கைவல்யோபநிஷத்து கூறுகின்றது. இதனை அத்துவிதம் போல 'ஆன்மாவே பரப்பிரம்மம்' என்று நினைத்து தன்னிடம் இருப்பது போல பிற உயிர்களினுள் இருக்கும் ஆன்மா இறைவன் தான் என நினைத்து விளங்கிக் கொள்வது ஒரு விதம். ஆனால் இதனை நான் வேறு வகையிலேயே காண்கின்றேன். ஆன்மாக்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்டவையே. ஆனால் அன்பு பெருகி அன்பே சிவம் என, ஆன்மாவில் இறைத் தன்மை அதிகரிக்கின்ற போது இறைவனின் அருள் தன்மை அங்கு வெளிப்படுகின்றது.

அது மென்மையானது. இந்தக் குணம் தன்னிலிருந்து பிற ஆன்மாவை பிரித்து பார்க்க முடியாதது. இந்த தன்மையே பிற ஜீவன்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வைப்பது.

ஒரு பெண் ஒருவனை காதலிக்கும் போது தன் உயிரை எப்படி நேசிக்கின்றாளோ அதே போல தனது காதலனையும் நேசிக்கின்றாள். பிறகு திருமணமாகி குழந்தைகளை ஈன்று தாயாகும் போது தன் மேல் இருக்கும் நேசத்தை போலவே தனது குழந்தைகளின் மீதும் காட்டுகின்றாள். இதுவே ஒரு குடும்பத்தை இறுக்கி இணைத்து வைக்கின்ற பாசச் சங்கிலியாகின்றது. இந்த சங்கிலியின் இணைப்புக்குப் பின்னால் பல எழுதப்படாத கட்டளைகளும் சட்டங்களும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த குடும்பம் எனும் ஒரு கூட்டில் ஒவ்வொருவரும் தனது கடமைகளை உணர்ந்து அன்பின் வழி செயல்படுகின்ற போது ஆன்மா சுலபமாக தன்னை வளர்த்துக் கொள்ள முடிகின்றது. அறத்தை உணர ஆன்மாவிற்கு தெய்வீக நாட்டம் தேவை. அலைபாயும் மனத்தை நெறிப்படுத்தி அதனை அமைதிபடுத்தி, ஆசைகளை அலச வைத்து சரியான வாழ்வில் சென்று இறைவனை அனுபவித்து நிறைந்த வாழ்வைப் பெற தெய்வீக நாட்டம் உதவுகின்றது. ஆனால் நாம் நமது வாழ்க்கையைப் பார்க்கின்ற போது மனம் நிறைந்ததாக நமக்கு வாழ்க்கை அமையாமல் பல பிரச்சனைகளும் கருத்து வேற்றுமைகளும், சஞ்சலங்களும் நிறைந்தே நமது வாழ்க்கை இயங்குவதை நம்மால் மறைக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாம் செய்த கன்மத்தை அனுபவித்து போக்கத்தான் முடியுமே தவிர தப்பிக்க முடியாது.

இறை அனுக்கம் கன்மத்தின் தாக்கத்தின் அளவை குறைத்து வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்க வழிகாட்டுமே அன்றி மாறாக துன்பங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தப்பிக்க உதவாது. நாம் விரும்புகின்றோமோ இல்லையோ, மனிதர் ஒவ்வொருவரும் நமது செயல்களுக்கு நாமே பொருப்பாகின்றோம்; நன்மையோ தீமையோ அதன் பின்விளைவுகளை அனுபவித்தே ஆகின்றோம்.

இறைவன் வேண்டுவதைத் தருபவன் என்கின்றோம். ஆக எதை வேண்டினாலும் இறைவன் கொடுத்து விடுவார் எனபது இதற்கு பொருளல்ல. வேண்டுகின்ற ஒன்றினை கேட்கக்கூடிய ஆன்ம தகுதி முதலில் வேண்டும்; ஆன்ம பக்குவம் வேண்டும்; அதோடு வேண்டுவதை வேண்டி அனுபவிக்கும் தகுதியும் வேண்டும்.

மனிதர் தன்னை உணர வேண்டும். தனது செயல்களை கூர்ந்து கவனித்து, இன்னும் எந்த வகையில் தன்னைத் திருத்திக் கொள்ளலாம் என சித்திக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தனது செயல்களில் குற்றம் காணும் போது குற்றத்தையே வாழ்க்கையாக பழகி விட்டது போல மீண்டும் மீண்டும் தவறுகளிலேயே செல்வது போலில்லாமல் தனது வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ளும் தைரியத்தை உறுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு, தான் தவறு செய்து விட்டோ ம் என்று உணரும் போது தனது தவறான சிந்தனைகளை சுட்டெரித்து அவை மீண்டும் மனதில் முளைக்கா வகையில் போக்கி விட வேண்டும். கனினியில் virus புகுந்து மென்பொருள்களைச் செயலிழக்கச் செய்யும் போது அதனை 'போனால் போகட்டும், மற்ற மென்பொருள் போல நீயும் ஒரு மென்பொருள் தானே' என பச்சாதாபம் காட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கனினியை பிறகு நாம் பயன்படுத்த முடியுமா? அது போலத்தான். ஒரு குறையோ குற்றமோ தவறான சிந்தனையோ, அது தனது வாழ்க்கையின் மேம்பாட்டைப், ஆன்ம வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியது என ஒருவர் உணர்ந்தவுடன் அந்த கருத்தை/சிந்தனையை அறவே துடைத்து ஒழித்து சிந்தையைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இது ஒரு சாதாரண செயலன்று. சில வேளைகளில் சில virus கள் operating system வரை சென்று அந்த மென்பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கும். பல வேளைகளில் கனினியின் ஒட்டு மொத்த செயல்பாடுகளைத் திறனிழக்கச் செய்து வேலைகளில் தடைகளை உண்டாக்கி விடும். இந்த மாதிரியான virus களை அழிப்பதற்குச் சில வேளைகளில் கனினியை முழுவதுமாக reformat செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மனிதர்களும் இப்படித்தான். சில தவறுகளோ அல்லது பிரச்சனைகளோ மிகவும் ஆழமானவை எனத் தெரிந்து கொண்ட பின்னர் தன்னையே முழுவதாக மறு பிறவி எடுப்பது போல மாற்றிக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான சூழல் சுலபமாக சாத்தியப்படக் கூடியதல்ல.

ஆனால் இறை துனையோடு வாழ்க்கையை பயணிக்க முயற்சிக்கையில் இறை அருளும் கருணையும் என்றென்றும் முயற்சிப்பவரைக் கைவிடாது. கைவல்யோபனிஷத், உறுதியான கட்டுப்பாட்டினை ஒருவர் ஒழுகும் போதே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும் என்பதை வலியுறுத்துகின்றது. அது சந்நியாசமோ, ஒரு சிறு காரியமோ எதுவாக இருப்பினும் அதனை சிரத்தையாலும், பக்தியாலும், தியானத்தினாலுமே சாதிக்க முடியும்.

தொடரும்.....


அன்புடன்
சுபா

Friday, March 23, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 3) - மனித, இயந்திர - மந்திராயணம் (மந்திர உலகம்)


Date: Fri, 23 Mar 2001 06:00:32 -0800 (PST)
From: "suba k."
Subject: Upanishad - Brahmopanishad (Part 3)
To: meykandar@egroups.com

சுருக்கம்:
- ஆத்மாவைக் கீழ் அரணியாகவும் ப்ரணவ மந்திரமாகிய ஓம்காரத்தை மேல் அரணியாகவும் செய்து கொண்டு தியானமாகிய கடைதலை அப்பியாசம் செய்து மறைந்திருந்த அக்னியை வெளிக் காண்பது போல பரமாத்மாவைக் காண வேண்டும்.

- ஆத்மாவைக் காண்பதற்கு தொடர்ச்சியான சத்தியமும் தவ வாழ்வும் தேவை.

- சிலந்தி எவ்வாறு நூலை உண்டாக்கி மீண்டும் தனக்குள்஧ளை இழுத்துக் கொள்கின்றதோ அதே போல ஆத்மா விழிப்பிலும் உறக்கத்திலும் வெளி உலகத்திற்கு வருகின்றது, மறுபடி திரும்பி உள்ளே போகிறது.

- மனமும் வாக்கும் எட்டிப் பிடிக்க முடியாமல் திரும்பி விடுகின்ற ஒரு நிலையே ஜீவனுடைய பரிபூர்ண ஆனந்த நிலை. புத்திமான் இதனை உணர்ந்து முக்தனாகின்றான்.

- எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மாவை ஞானத்தாலும் தவத்தின் மூலமாகவும் அறிய வேண்டும். அதுவே பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதவி. அதுதான் பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதம் எனப்பூர்த்தி. 

தொடர் சிந்தனை

இந்த மூன்றாம் பாகத்தோடு பிரம்மோபநிஷம் முடிவடைகின்றது. இந்த இறுதிப் பாகத்தில் வருகின்ற விளக்கமானது மிகுந்த ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு சைவ சித்தாந்தத்திற்கும் பிற ஏனைய கிளை சமயங்களாகிய யோகம் போன்றவற்றிற்கும் உபநிஷத்துகளுக்கும் உள்ள கருத்துத் தொடர்பினையும் காட்டுவதாகவும் விளங்குகின்றது.

முழுமையாக பார்க்க முற்படுகையில் பிரம்மோபநிஷம், பரப்பிரம்மமாகிய இறையைக் கண்டு, அனுபவித்து, அடைவதையே ஆத்மாவின் குறிக்கோளாகக் காட்டுகின்றது. ஆத்மா ஒரு ஜடப்பொருளாக இல்லாமல், செயல்படுகின்ற, பிறவற்றை செயல்படுத்துகின்ற ஒன்றாகவே காட்டப்படுகின்றது. ஆத்மா உடலுக்குள் இருந்து அதனை தனது போக்கில் இயக்கும் வல்லமை கொண்டது. ஆத்மா நினைக்கும் வகையில் தான் உடலின் செயல்பாடுகள் அமைகின்றன. ஆத்மா நாட்டம் இழந்து சோர்வுற்று இருக்கையில் உடல் சோர்வடைவதும், ஆத்மா மிகுந்த பலத்தோடும் வேட்கையோடும் இருக்கையில் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நமது சொந்த அனுபவித்தில் நாம் உனர்ந்திருப்போம்.

ஆத்மா இறைவனை அடைவது என்பது சாதாரண காரியம் அன்று என்றும் அதனை அடையும் வழிமுறைகளை பற்றிய விளக்கத்தினையும் 2ம் பாகத்தில் பார்த்தோம். ஆக அதன் தொடர்ச்சியாகவே இந்த கட்டுரை அமைகின்றது.

ஜீவன் ஒரு உடம்பினை எடுக்கும் போது அது தன்னோடு சேர்த்து வைத்துள்ள பாவ புன்னியங்களின் அடிப்படையிலேயே தனக்கான ஒரு உடம்பினையும், வாழ்க்கையினையும், அது வாழ்கின்ற சூழலையும் பெருகின்றது. 'ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்' எனும் மூன்று கன்மங்களும் ஆன்மாவின் செயல்பாடுகளுக்கேற்ற வகையில் இதனை அமைத்துத் தருகின்றன. எந்த ஒரு மனிதனும் தனது இருப்பை (existance), அதன் காரணத்தை, இறைவனின் மேல் மட்டும் திணித்து விட முடியாது. உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களையும் பார்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் மாறுபட்ட குணாதிசியங்களோடு விளங்குகின்றார்கள். உருவத்திலும் குணத்திலும், திறமையிலும், வாழ்வின் போக்கினை அமைப்பதிலும் வித்தியாசமற்ற இருவரைக் காண்பது இயலாது.

ஆக, ஒவ்வொருவரையும் ஒரு தனிப்பட்ட ஜீவனாகக் காட்டுவது, மறையாக இருந்து கொண்டு அந்த ஜீவனை வடிவமைக்கின்ற, தொழிற்படுத்துகின்ற அந்த ஜீவனுக்குறிய கன்மமே! ஆத்மா தான் செய்த பாவ புன்னியங்களுக்கேற்ப ஒரு பிறவியினை, வாழ்கின்ற சூழலை பெற்று மேலும் தனது 'தேடலை', எடுத்திருக்கின்ற இந்தப் பிறவியிலும் தொடர்கின்ற வகையிலேயே இந்த பிறப்பு அமைகின்றது.

ஆத்மா பரப்பிரம்மத்தை தன்னுள்ளே ஐக்கியப்படுத்தி, அதனோடு தான் இரண்டறக் கலக்கின்ற போதே தொடர்ச்சியான வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி கிடைக்கின்றது. அந்த நிலையை அடைகின்ற வறையில் பல பல காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எதிலெல்லாம் மனம் செல்கின்றதோ அதனை எல்லாம் தேடி அனுபவித்து கற்றுக்கொண்டு பின்னர் அதனை விட மேலானவற்றைத் தேடும் பனியில் ஈடுபடும் சுபாவத்தோடு ஜீவன் விளங்குகின்றது. உடலுக்கு கருவிகளாக ஐம்புலன்கள் இருக்கின்றன. ஆன்மாவுக்கு கருவிகள் எவை?

ஒரு உடல் ஜீவன் இல்லாமல் இயங்க முடியாது. ஜீவன் உடலைவிட்டு வெளியேறிவிடுகின்ற நிலையில் அது தனக்குள்ளே இருக்கின்ற எந்த கருவிகளையும் செயல்படுத்தக்கூடிய திறனை முற்றாக இழந்து பிணமாகி விடுகின்றது. ஆக இரண்டு வகையில் ஜீவன் தனது செயல்களை நடைமுறைப்படுத்துகின்றது. தூலப்பொருளான உடம்பினையும் அதன் கருவிகளையும் செயல்படுத்துவது; சூக்குமப்பொருளான மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவற்றினைத் தொழிற்படுத்துவது. ஒன்று கண்ணுக்குத் தெரிகின்ற கை, கால், வாய், காது, இருதயம், நரம்புகள் போன்ற பாகங்கள்; மற்றொன்று கண் பார்வைக்குப் புலப்படாத எண்ணங்கள், சிந்தனைகள், ஆசைகள், ஆன்ம திறன் போன்றவை.

மனிதனின் இயக்கத்தை மேலோட்டமாகப் பார்க்கின்ற போது வெளிப்படையாகத் தோன்றுகின்ற குணங்களை வைத்துத்தான் நாம் ஒருவரை எடைபோடுகின்றோம். ஒருவரோடு நாம் பழக வேண்டுமானால் முதலில் நமக்கு அவரைப்பற்றிய ஒரு பிம்பம்(image) தேவைப்படுகின்றது. உதாரணமாக, 'அவள் மிகவும் திறமையானவள்; நன்றாகப் பேசும் திறன் உள்ளவள்; தனது அலுவலகத்தில் நல்ல பொறுப்பாக இருப்பவள்; நண்பர்களோடு அன்பாக இருப்பவள்; எதிலும் வேகமாக முடிவெடுப்பவள்' என ஒரு பெண்ணைப் பார்த்து அவளோடு பழகிய சில நிமிடங்களில் நமது மூளை உடனே பதிந்து கொள்கின்றது.[இந்த பதிவு என்பது தூலப்பொருளான மூளையில் பதியப்பட்டாலும், அதன் தாக்கங்கள் ஆன்மாவிலும் பதியப்படுகின்றன.] இந்த கனிப்பின் அடிப்படையிலேயே நாம் அந்த பெண்ணைப் பார்க்கின்ற, நினைக்கின்ற ஒவ்வொரு முறையும் நமக்கு அவளைப்பற்றிய ஒரு காட்சி கிடைக்கின்றது. அதனைப் பொறுத்தே நமது அவளைப்பற்றிய சிந்தனை வெளிப்பாடுகளும் அமைகின்றன.

இந்த image என்பது வெறும் வெளித்தோற்றத்தின் அடைப்படையில் மாத்திரம் அமைந்த ஒன்றல்ல. தூல உடம்பின் கருவிளோடு சூக்கும உடம்பின் கருவிகளும் இணைந்து செயல்பட்டு இந்த முடிவினை, ஒரு விளக்கத்தினை ஒரு மனிதருக்குத் தருகின்றது. தூல உடம்பினது செயல்பாடுகள் சூக்கும கருவிகளின் செயல்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவை. இரண்டும் இணைந்தே செயல்படுபவை; ஒவ்வொரு காரியத்தின் செயல்முறைகளும் அதன் முடிவுகளும், அதனால் அந்த ஆன்மா கற்றுக்கொண்ட பாடங்களும் மூளையில் பதியப்படுகின்றன. அந்த பாடங்களின் அடிப்படையிலேயே ஆன்மா தன்னை திருத்திக்கொள்கின்றது; வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முயற்சிக்கின்றது; மேலும் தனது திறமைகளை வளர்த்துக் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே சமயத்தில், தனக்கென்று அமைந்திருக்கின்ற, பிற மனிதர் யாருக்கும் தெரியாத மற்றொரு சுக்கும உலகத்திலும் வாழ்கின்றார். இதுவே மந்திர உலகம். இந்த உலகில் ஒரு மனிதர் தன்னோடு உரையாடிக்கொள்ள முடியும்; தன்னையே ஒரு சோதனைப்பொருளாக எடுத்துக் கொண்டு தனது நடவடிக்கைகளை அலசிப்பார்க்க முடியும். இதனை நாம் எல்லோரும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சாதாரண மனிதர் தன்னை மட்டுமே அலசிப்பார்க்கும் சக்தியைக் கொண்டவர்; ஒரு ஞானியோ தன்னை உணரும் அதே தருணத்தில் பிறறது மந்திர உலகத்தில் புகுந்து, அவரது எண்ணங்களையும், கன்மங்களையும் அதனால் விளையக்கூடிய பலாபலன்களையும் அறிந்தவராகின்றார். ஒரு ஞானி என்பவர் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்பவர். பரப்பிரம்மத்தை தன்னுள்ளே அதிகமாக ஐக்கியப்படுத்திக் கொண்டு மனித குணாதிசியங்களாகிய ஆசை, பொறாமை, காமம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றிலிருந்து தன்னை விலக்கி வைத்து இறைவனோடு வாழ்பவர். பரப்பிரம்மம் வாழ்கின்ற இல்லமாக தனது உடம்பினை வைத்திருப்பவருக்கு பரப்பிரும்மத்தின் சக்திகள் படிப்படியாக அமைந்து மற்ற பிற உயிர்களுக்கு உதவும் வகையிலேயே எடுத்திருக்கின்ற இப்பிறவியும் இருக்கின்ற வாழ்க்கையும் அமைந்து விடுகின்றது. நமது பாரம்பரியத்தில் இந்த உதாரணங்களுக்கு பஞ்சமே இல்லை.

இந்த தெய்வீக சக்தியானது நன்மையைக் கொடுக்கின்ற அதே வேளையில், ஒரு சிலர் இந்த சித்திகளை அனுபவிக்கின்ற ஆரம்ப நிலையிலேயே எல்லாம் தெரிந்த ஞானிகளாக தன்னை நினைத்துக் கொண்டு இந்த மந்திர உலகத்தின் பெருமைகளைக் கண்டு அனுபவித்தவுடன் உடனே தன்னை இறைவனின் பிரதிநிதி என்று நினைத்துக் கொண்டு அகங்காரத்தோடு இந்த சக்திகளை தீயவழிகளில் பயன்படுத்தி தனக்கே துன்பத்தை வரவழைத்துக் கொண்ட செய்திகளையும் நாம் கேட்டிருக்கின்றோம். இம்மாதிரியானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு சில சக்திகளிக்குள்ளேயே (சித்திகள்) அடங்கிவிடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தச் செயலினால் அந்த அத்மா மேலும் கன்மத்தை ஈட்டுவதோடு, முழுமையான ஆன்ம விடுதலை பெறுவதிலிருந்து தாமதிக்கின்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றது.

பரப்பிரம்மத்தை ஆத்மாவோடு பதியவைத்து ஐக்கியப்படுத்த தியானம் தேவையாகின்றது. தியானம் மந்திர உலகத்தில் ஆன்மாவை சஞ்சரிக்க வைப்பது. இந்த மந்திர உலகம் அக்கர சக்கரங்களால் ஆனது. இந்த மந்திர உலகத்தில் பயனிப்பதற்கு இந்த உடல் தேவையற்றதாக இருப்பினும் அந்த உலகத்தினுள் செல்வதற்கு வாயிலாக அமைவது இந்த உடலே. உடலில் இருக்கின்ற சக்கரங்களை முடுக்கி அக்னியை எழுப்பிட ஆன்மா மந்திர உலகத்தினுள் புகுகின்றது. [இந்த அக்னி மண்டலம் மூலாதாரத்திற்கு இரண்டு விரளளவு மேலே, பிருதிவியும் அப்பும் (மண் தத்துவமும் நீர் தத்துவமும்) சேர்ந்த இடத்தில் முக்கோணமாய் நான்கு இதழ் தாமரை வடிவத்தில் இருப்பது.] இந்த மந்திர உலகம் முற்றிலும் மந்திரங்களால் ஆனது. ஓம்காரமே அவற்றிற்கு மூலமாகின்றது. ஓம்காரம் பிரிந்து பிரிந்து பல பல மந்திரங்களாக உருவெடுக்கின்றது. அந்த ஓம்காரத்தினுள்ளே புகுந்து அதுவே தானாகி ஆன்மா தியானிக்க வேண்டும். அப்பொழுது பரப்பிரும்மத்தை உணரமுடியும்; காணமுடியும்; அதோடு கலந்து இன்புற்றிருக்க முடியும். சிவவாக்கியர் ஓம்காரத்தையும் அக்கர சக்கரங்களையும் விளக்குகின்ற தனது ஒரு பாடலில் இப்படிச் சொல்கின்றார். "ஓரெழுத்து உலகெல்லாம் உதித்தஅட் சரத்துள்ளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேதெ அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே"

கனினி மென்பொருட்களின் சூக்கும இயக்கத்திற்கு எவ்வாறு binary விளங்குகின்றதோ அதே போல ஆன்ம இயக்கத்தின் மூல ஒலியாக ஓம்காரம் இருக்கின்றது. கண்களுக்கு புலப்படுகின்ற ஒரு மென்பொருளை கனினியில் பொருத்தி இயக்கும் போது அதன் செயல்திறனை அறிந்து கொண் பின்னரே ஒருவர் பயன்படுத்துகின்றார். ஆனால் பெரும்பாலும் எவ்வாறு அது செயல்படுகின்றது? எத்தனை module இணைந்து இந்த மென்பொருள் இயங்குகின்றது? அவை எவ்வாறு இணைக்கப்பட்டிருக்கின்றன? அது எவ்வாறு தனது GUI வர்ணங்களை வெளிப்படுத்துகின்றது? எழுத்துக்களை அச்சுவடிவத்தில் தருகின்றது? என்றெல்லாம் நாம் மறந்துவிட்டு (சிந்தனையிலிருந்து ஒதுக்கிவிட்டு) ஓமென்பொருள் வேலை செய்கின்றதா இல்லையா ? அது பழசாகி விட்டால் அதனை upgrade செய்யவேண்டும், அதனை எப்படி செய்வது?ஓ என இப்படித்தான் வெளிப்படையான பிரச்சனைகளில் பெரும்பாலும் மூழ்கி இயங்குகின்றோம். இதே போலத்தான் மனிதரைப்பற்றி நினைக்கின்ற போதும் நிகழ்கின்றது. 'நமது செயல்களுக்குக் காரணம் என்ன? எது என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது? எவ்வாறு நான் என்னை upgrade செய்து கொள்வேன்' என்று சிந்திப்பது குறைவே. அவ்வாறு தனது செயல்களுக்குக் காரணத்தைத் தேடி தன்னை மேம்படுத்திக் கொள்ள இந்த உடம்பும் நற்கருவியாக விளங்குகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உடம்பைக் கோயிலாகக் கொண்ட பாரம்பரியம் நமது. ஓம்காரத்தை ஒலித்து, அதற்குள்ளே ஆன்மாவை கொண்டு சென்று மந்திர உலகத்திற்குள் செல்லும் போது ஆன்மா தனது சக்திகளைப் பெறுக்கிக் கொள்கின்றது; பக்குவத்தில் உயர்கின்றது.

இந்த மந்திர உலகத்தின் கோட்பாடுகள், உலக வாழ்க்கையிலேயே தன்னை முற்றிலும் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்ட பலருக்கும் உண்மையற்ற ஒன்றாகவே தென்படும். மந்திர உலகத்தின் இருப்பையும் அதன் உண்மைகளையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக மனிதர்கள் வாழ்கின்ற இந்த உலகமும் அதனுள் நாம் மாட்டிக்கொண்டு அனுபவிக்கின்றவைகளுமே வாழ்க்கையாகவும் இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் Warnor Bros தயாரித்து வெளியிட்ட MATRIX படம் பார்த்தவர்கள் இந்த இரண்டு வகை உலகங்களைப் பற்றிய கோட்பாடுகளை இப்படம் மாறுபட்ட கோணத்தில் அலசிப்பார்ப்பதை மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, எந்த உலகம் உண்மை; எதை நோக்கி நமது தேடல் இருக்கின்றது என்பதை அலசுவது என்பது இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதை தேர்ந்தெடுப்பது என்னும் கேள்விக்கு விடை (அதாவது கன்மத்தை வடிவமைப்பது) மனிதனிடம் வழங்கப்பட்டுள்ள ஒரு சுதந்திரம். மனிதரே தனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடியும் என்பன போன்றவற்றை இந்த ஆங்கிலப் படம் மிகவும் சுவாரசியமான வகையில் காட்டியிருந்தது.

ஜீவன் இயற்கையிலேயே சுதந்திரத் தன்மையைக்கொண்டது. அந்த சுதந்திரத்தை ஆத்மா நல்வெழியில் செல்ல தேர்ந்தெடுக்கும் போது ஆன்மா தனது பக்குவத்தில் உயர்ந்து முக்தனாகின்றது. இதனை விளக்குவதாகவே பிரம்மோபநிஷத்து அமைந்துள்ளது.

இத்தோடு பிரம்மோபனிஷத்துக்கான விளக்கம் முடிவடைகின்றது. அடுத்த கட்டுரையில் கைவல்யோபனிஷத்துக்கான எனது சிந்தனை தொடரும்.

அன்புடன்
சுபா

Friday, March 9, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயணம் (பூணூல்)

Date: Fri, 9 Mar 2001 07:42:49 -0800 (PST)
From: "suba k."
Subject: Upanishad - Brahmopanishad (Part 2)
To: meykandar@egroups.com

சுருக்கம்:
- உடலில் தெய்வங்கள் இருக்கின்ற இடங்களை பிரம்மோபநிஷத் விளக்கியதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்த இரண்டாம் பாகத்தில் பூணூல் பற்றிய பிரம்மோபநிஷத் கூறும் விளக்கத்தினைக் காணலாம். இருதயம் இறைவன் உறைந்திருக்கின்ற இடம். அதனைக் உருவகப் படுத்திக் காட்டுவதாக இருதயம் இருக்கின்ற இடத்தில் தவழ்கின்ற முப்புரிநூல் இந்த உபநிஷத்தில் காட்டப்படுகின்றது. இந்த பூணூலானது ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவரோடு தோன்றிய தாகவும் அதோடு மனிதனின் ஆயுளை நீட்டித்து புகழ் தரக்கூடியதாகவும் இந்த உபநிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஞான ஒளியும் பலமும் இதனை அணிவதால் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

- இந்தப் பூணூலை பிரம்மோபநிஷத் ஸூத்ரம் என்று குறிக்கின்றது. ஸூசனை செய்வதாலும் ஞானத்தைச் சுட்டிக் காட்டுவதாலும் இதனை ஸூத்ரம் என்கின்றது பிரம்மோபநிஷத்.

- ஒரு ஞானி எனப்படுபவன், குடுமியோடு தலைமயிரை மழித்து உடலில் தரித்திருக்கின்ற பூணூலை அகற்றி விட வேண்டும். அழியாத ஸூத்ரமாகிய பரப்பிரம்மத்தையே ஞானியாகியவன் பூணூலெனத் தரிக்க வேண்டும்.

- ஸூத்ரத்தை அறிந்தவனே வேதத்தின் கரைகண்ட பிராமணனெனப்படுபவன்.

- சிறந்த ஞாணத்தை அடைந்தவன் வெளிப்பூணூலை விட்டுவிட வேண்டும். பிரம்ம பாவனையாகிய ஸூத்ரத்தை அணிபவனே அறிவாளி.

- வைதீக கர்மங்களில் அதிகாரமுடைய பிராமணர்கள் தங்களது கருமத்திற்கு அங்கமாக பூணூலை அணிய வேண்டும்.

தொடர் சிந்தனை

பொதுவாக பூணூல் எனப்படுகின்ற முப்புரி நூல், பிராமண சமூகத்தைச் சார்ந்தோரால் உடலின் அணியப்படுகின்ற ஒரு நூல். சாதி பிரிவில் பிராமணார் அல்லாதோர், கோயில் வழிபாடுகளைச் செய்கின்ற போதும், சிலர் திருமணத்தின் போதும் வேறு சில இடங்களில் சமய காரியங்களில் ஈடுபடும் போதும் அணியக் கூடிய ஒன்றாக இந்து சமயத்தில் ஒரு அங்கம் வகிக்கின்ற ஒரு பொருளாக இந்த பூணூல் விளங்குகின்றது. இந்த பூணூல் ஏன் அணியப்படுகின்றது? எதனை விளக்கும் முகமாக இது திகழ்கின்றது? போன்றவை சிந்தனைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கேள்விகள். இதனை பிரம்மோபநிஷத் விளக்குவது என்பது, பூணூல் அணியும் வழக்கத்தின் தொன்மையை நமக்கு விளக்குவதாக இருக்கின்றது.

இந்து சமய வழிபாட்டினை மேல் நோக்காக கவனிக்கின்ற போது பல வகையில் சடங்குகளோடும் பாவனைகளோடும் கூடியதாகவே தென்படுவதற்கான சாத்தியம் அதிகம். அந்த பாவனைகளையும், சடங்குகளையும் கடந்து சென்று அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் போதே இந்து சமய வழிபாட்டினையும் தத்துவங்களையும் அறிந்து கொண்ட, அநுபவித்த பலன் கிட்டும். வழிபாடுகளில் மட்டுமல்ல; சித்தர்களின் பாடல்கள் பலவற்றைப் படித்தவர்களும் அது பெரும்பாலும் பரிபாஷைகளாய் இருப்பதை உணர்ந்திருப்பர். இறை உண்மை, தத்துவ உண்மை எனப்படுபவை மறையாகவே இருப்பது இந்து சமயத்தை பொருத்தவரை வெளிப்படையான ஒன்று. அந்த வகையிலே பிரம்மோபநிஷத்தில் பேசப்படுகின்ற பூணூல் தத்துவமும் அடங்குகின்றது.

இன்றைய வழக்கத்தில் பொதுவாக ஒரு பிராமண சிறுவனுக்கு உபநயனம் செய்விக்கும் போது பூணூல் அணிவிக்கப்படுகின்றது. பூணூல் அணியப்படுவதற்கான தத்துவங்கள் உணர்த்தப்படுகின்றதோ இல்லையோ, ஆனால் இந்த சடங்கு மாத்திரம் கடமையாக பல காலங்களாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.

பூணூல் எனப்படுவது பரப்பிரம்மத்தையே உடலில் அணிந்து கொண்டிருப்பதை உருவகப்படுத்துகின்றது என்று விளக்கமளிக்கின்றது பிரம்மோபநிஷத். இறைவனை எப்படி உடலில் அணிவது? இங்கு அறிவுப்பூர்வமாக, ஞானப்பூர்வமாக செய்யப்பட வேண்டிய ஒரு காரியம் சடங்குப் பூர்வமாக (symbolic action) செய்யப்படுவதைக் காணமுடிகின்றது.

ஒரு ஞானி என்பவன் எப்படிப்பட்டவன் என்பதற்கும் விளக்கம் தரப்படுகின்றது. பரப்பிரம்மமான இறைவனை உடலில் ஏற்ற வேண்டும். ஆன்மா தங்கியிருந்து செயல்படுகின்ற உடல் எனும் வீட்ட்டில் இறைவனும் குடி புக வேண்டும்; குடி புகுந்து அந்த ஆன்மாவை வழி நடத்த வேண்டும். அப்படிப்பட்ட உடலுடையோனே ஞானி என்கின்றது பிரம்மோபநிஷத். இங்கு ஒரு ஞானியினுடைய தாத்பரியங்கள், தன்மைகள் (characteristics) சுட்டிக் காட்டப்படுகின்றன.

உடலினுள் ஆன்மாவோடு இறைவனும் குடிபுகுதல் என்பது சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு கருத்து. இங்கு கனினியின் செயல்பாடுகளோடு இந்த பிரச்சனையை ஒப்பிட்டு விளக்க முடியும். இந்த உடல் என்பது ஒரு சிஸ்டம். கனினியில் பல சிறிய இயந்திர பாகங்களை இணைத்து, அவற்றிற்கு மின்சாரத் தொடர்பினைத் தருகின்ற போது, அந்த இயந்திரம் இயங்கத் தொடங்குகின்றது. கனினியைப் பொருத்த மட்டில் அடிப்படையில் தேவைப்படுகின்ற இயந்திரம் என்பது ஒன்றுதான். சில மறுபாடுகள் வடிவத்திலும் இயந்திரங்களின் எண்ணிக்கையிலும் இருந்தாலும் பொதுவாக அடிப்படையில் தேவையாக இருப்பது mother board, microprocessor, RAM, cash memory, storage peripherals, cables அவற்றின் இணைப்பு ஆகியவைதான். இந்த அடிப்படை பொருள்களோடு மேலும் சில இயந்திர பாகங்கள் (hardware) சேரும் போதுஅந்த இயந்திரத்தின் திறனும் தன்மையும் அதிகரிக்கின்றது. இதே போலத்தான் மனிதனும்.

மனிதனின் உடலில் 30,000 ஜீன்கள் இருக்கின்றன. எல்லா மனிதனின் ஜீன் வரிசைக்கிரமமும் ஒன்றாகவே இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் இன, நிற பேதமின்றி ஜீன்கள் 99.99% ஒன்றாகவே இருகின்றன. இது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. மேலும் ஒரு விசயம் என்னவென்றால் மனிதர்களுக்கு பூச்சிகளை விட மூன்று மடங்கும், நுண்ணுயிர்களைவிட ஐந்து மடங்கும் தான் ஜீன்கள் அதிகம். சிறிய உயிரினங்களாக இருக்கின்றவை குறைந்த எண்ணிக்கையிலான ஜீன்களோடும் ஆறரிவு ஜீவனாகிய மனிதன் அதிக எண்ணிக்கையிலான் ஜீன்களோடும் இருக்கும் நிலை உள்ளது.

இதை நமது ஆன்மீக தத்துவ நூல்கள் அழகாக விளக்குகின்றன. உலகில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உயிர்பொருள் சடப்பொருள் எனவும், நமது பெருமைக்குறிய தமிழ் இலக்கணம் அதனை உயர்தினை அஃறினை எனவும் இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கின்றது. அதில் உயிர்பொருளை ஓறறிவு, ஈறறிவு,மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு எனப் பிரிக்கலாம். ஆறறிவு படைத்த ஜீவனே மனித இனம். இங்கு அறிவு எனப்படுவது புத்தியை விளக்குவது அல்ல. அறிவு எனப்படுவது உலகம்; ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு உலகம்; ஆன்மா படிப்படியாக ஒவ்வொரு உலகத்திலும் பல பிறவிகளெடுத்து வாழ்ந்து, உழன்று அடுத்த அறிவாகிய மற்றொரு உலகத்தினுள் புகுந்து மேலும் மேலும் பக்குவத்தில் உயரவே இந்த அறிவு. ஐந்து அறிவுகளின் அனுபவங்களையும் பெற்று ஆறாவது அறிவான உலகத்தில் நுழைபவருக்கே மனிதப் பிறவி என்பது அமைகின்றது.

மனிதப் பிறவியை எடுத்தோருக்கு பகுத்தறிவு என்ற கூடுதல் உலகம் அமையப் பெற்றதால் இந்த வளர்ச்சி. இந்த அடிப்படையில் நோக்கும் போது விஞ்ஞான கருத்துகளுக்கு ஏற்றார் போலவே இந்திய தத்துவ விளக்கங்களும் அமைவதை காணமுடிகின்றது. ஆறறிவு ஜீவனாகிய மனிதன், ஓறறிவு ஜீவனாகிய நுண்ணுயிர்களைவிட ஐந்து மடங்கு கூடுதல் ஜீன்களைக்கொண்டே இயங்குகின்றான். உயிர்களின் உலகம் பெருகும் போது ஜீன்களின் எண்ணிக்கையும் கூடுகின்றது என்று எடுத்துக் கொள்ளலாம். இதை தத்துவ மொழியில் கூறும் போது பக்குவத்தில் ஆன்மா உயர்கின்றது என்று கொள்ளலாம்.

ஆக, அடிப்படையில் எல்லோருக்கும் அமைந்துள்ள ஏறக்குறைய ஒரே மாதிரியான இந்த உடலாகிய இயந்திரத்தை இயக்கி செயல்படுத்தும் போது (உலக வாழ்க்கையில் ஈடுபட்டு பற்பல காரியங்களில் தன்னை திணித்துக் கொண்டு இன்ப துன்பங்களை அனுபவித்து வாழ்க்கை எனும் பாடத்தை கற்று அனுபவிக்கும் போது) அங்கு வேறுபட்டு நிற்பது ஆன்மபக்குவம் என்ற ஒன்றே. ஒவ்வொரு மனிதனின் பக்குவத்திற்கு ஏற்றாற் போன்றே அவனுடைய நடை உடை பாவனைகள் சிந்தனைத் திறம் செயலாற்றும் திறன் போன்றவை அமைகின்றன. இது ஒரு கனினியின் ஹார்ட் டிஸ்க்கில் நாம் போடும் மென்பொருளைப் (software) போன்றதாகும். கனினியில் WINDOWS 3.1 இருந்து அதனை இயக்குவதற்கும் WINDOWS 2000 இயக்குவதற்கும் உள்ள வேறுபாடு போல, WINDOWS NT 5.0இருந்து அதனை இயக்குவதற்கும் UNIX இயக்குவதற்கும் உள்ள வேறுபாடு போலத்தான் இந்த ஆன்ம பக்குவம் என்பதும். பக்குவம் அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் செயல்திறம் உயர்கின்றது.

ஆக, இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில் மனிதன் எப்படி தனது ஆன்ம பக்குவத்தை உயர்த்தலாம் என்பதே. விதி என்ற ஒன்று இயங்கிக்கொண்டிருப்பினும் ஆன்மா தனது சுய முயற்சியால் உயர்ந்த பண்புகளை, நன்னெறிகளை, இறைக்கூறுகளை தன்னுள்ளே பதிய வைக்கும் போது (installation process) பக்குவத்தில் உயர முடியும். இதனை எப்படி செய்வது..?

பிரம்மோபநிஷத் பூணூல் அணியப்படுவதன் தாத்பரியத்தினைக் கூறுகின்றது; அத்தோடு ஒரு ஞானி என்பவன் தனது உடலிலே இறைவனை பதியவைத்தவன் என்கின்றது. இந்த விளக்கமானது நேரடியாக ஒரு உருவகச் செயலை (symbolic action) விளக்கிய போதும் அது போதுமானதாகத் தோன்றவில்லை. இறைவனை உடலில் பதிய வைத்தல் என்பது எப்படி செயல்முறையில் நடைமுறைப்படுத்தப் படவேண்டியவை என்பதற்கான போதிய விளக்கங்கள் இங்கு இல்லை. அவற்றினை ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

மனிதன் ஆன்ம பக்குவத்தில் உயர்வது என்பது நினைத்த மாத்திரத்தில் செய்யப்படக்கூடிய ஒன்றன்று; அது எளிதான காரியமும் அன்று; மாறாக, கட்டுப்பாடுகளும், தியாகங்களும், விரதங்களும் (இங்கு குறிப்பிடப்படுவது உணவு உண்ணாமல் இருக்கின்ற விரதம் அல்ல, determination என்று எடுத்துக் கொள்ளலாம்) அடங்கியதே!

அதிலும் முக்கியமாக, தன்னையும் தனது செயல்களையும் சிந்தனைப் போக்குகளையும் ஆராய்ந்து தனது குறை நிறைகளைக் கண்டறியும் திறன் பெற்றிருப்பதே அடிப்படை. தனது குறைகளை உணரும் போதே எப்படி அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்பதற்கு வாய்ப்பு பிறக்கும். தனது குறைகளையே பார்க்காமல் ஓநான் செய்வதெல்லாம் சரிதான்; மற்றவர்கள் தான் சரியாக நடப்பதில்லைஔ என்று நினைக்கும் வரையில் ஒரு மனிதனுக்கு ஆன்ம பக்குவத்தில் உயர சந்தர்ப்பம் கிடைக்க வழி பிறக்காது.

தன்னை உணரும் அதேசமயத்தில் பிறரின் மனத்தை, அவர்களின் இன்ப துன்பங்களை அறியும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு அன்பு நெறியில் வாழப்பழகுதல் அடுத்த கட்டமாகின்றது. இது கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் நடை முறைப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்லவே.

சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மா சுதந்திரத் தன்மை வாய்ந்தது. அது மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றோடு சேரும் போது செய்கின்ற வினைக்கேற்ப பாவ புண்ணியங்களில் விழுந்து பற்பல பிறவிகளெடுத்து பரப்பிரம்மத்தோடு இரண்டரக் கலந்து வினை கடந்து முக்தி அனுபவிக்கும் நிலைக்குச் செல்லும் தன்மை வாய்ந்தது. அப்படிப்பட்ட ஆன்மா, முதலில் இறைவனை உடலில் ஏற்றும் தேவையை உணரவேண்டும். உடலில் இறைவன் சேர்ந்திருந்து ஆன்மாவை வழி நடத்துகின்ற போது மனிதன் தனது செயல்களில் தெளிவோடு, ஈடுபட முடிகின்றது.

இம்மாதிரியான பண்புகளை ஆன்மாவில் பதிய வைத்தல் என்பது ஆன்மாவின் பக்குவத்தை நாளுக்கு நாள் உயர்த்தவல்லது. எந்த சிந்தனையை எந்த போக்கை மனிதன் வாழ நினைக்கின்றானோ, அந்த வகையில் தான் அவனுடைய வாழ்க்கை அமைந்து விடுகின்றது.தன்னை அறிந்தவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் உணர்ந்தவன் ஆகின்றான். தியானப்பயிற்சிகள், யோகப்பயிற்சிகள், சமூகத் தொண்டு போன்றவை மேலும் இந்த முயற்சிக்கு உதவுவனவாக அமைகின்றன.

அத்தோடு மேலும் மேலும் இறைவனை எந்நேரமும் நினைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆலய வழிபாடுகளில் திருவிழாக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் என்பவையும் சேர்கின்றன.தத்துவங்கள் நூல் வடிவில் மட்டுமே இருக்கும் போதும் சடங்குகளாக மட்டுமே இருக்கும் போதும் யாருக்கும் அதனால் பயனில்லை. மனிதர்கள் அவற்றின் தாத்பரியங்களை உணர்ந்து வாழ்வில் கடைபிடித்து பக்குவத்தில் உயர்ந்து மன சாந்தி பெற வேண்டும்.

தொடரும்.....


அன்புடன்
சுபா

Wednesday, February 21, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயணம்

From: "suba k."
Date: Wed Feb 21, 2001 3:48 pm
Subject: Upanishad -BrahmoUpanishad (Part 1)

அறிமுகம்:
வேதங்களும் உபநிஷத்துக்களும் தமிழ் மொழியில் எழுதப்படவில்லையே என்ற ஆதங்கம் தமிழின் வழி இந்திய தத்துவ ஞானத்தை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல காலங்களாக ஒரு குறையாகவே இருந்து வந்துள்ளது. இதனை நிவர்த்திக்கும் வகையில் தற்பொழுது பல மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. எனது சமீபத்திய தமிழக பயணத்தின் போது எனக்கு 108 உபநிஷத்சாரம் என்னும் நூல் கிடைத்தது. 'அண்ணா' என்பவரால் சமஸ்கிருத்தத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது இந்த நூல். இதனை படிக்கும் போது, உபநிஷத்துக்கள் தோன்றிய காலத்து தத்துவ சிந்தனைகளுக்கும் தற்போதைய சிந்தனைகளுக்கும் உள்ள தொடர்ச்சி, ஒற்றுமைகள், சிந்தனை வளர்ச்சி ஆகியவை பற்றி எழுந்த எனது சிந்தனைகளை கட்டுரையாக அமைக்க விரும்பி எழுந்ததே இந்த முயற்சி. 

சுருக்கம்
மனித உடலில் நான்கு முக்கிய பாகங்கள் இருக்கின்றன. அவை தொப்பூழ், இருதயம், கழுத்து, தலை உச்சி ஆகும். இந்த நான்கு இடங்களிலும் இறைசக்தி பிரகாசித்துக் கொண்டிருப்பதாக இந்த உபநிஷத் கூறுகின்றது. அந்த இறை சக்திகளாவன ஒரு மனிதன் விழிப்பில் இருக்கின்ற போது பிரம்மாவும், கனவு நிலையில் இருக்கின்ற போது விஷ்ணு பகவானாகவும், தூக்கத்தில் ருத்ரனாகவும், துரிய நிலையில் பரப்பிரம்மாவாகவும் அமைந்திருக்கின்றன.

அந்த பரப்பிரம்மமானவன் மனித உருவிற்கு அப்பாற்பட்டு சுயஞ்சோதி வடிவினனானவன். அவனே சூரியனும், எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணுவும், உலகாளும் ஈசுவரனும் ஆவான்.

நிர்வாண நிலை என்பது எல்லாம் பரப்பிரம்மாக விளங்குகின்ற நிலையில் ஏற்படுவது.

எல்லா தேவதைகளும் மனித உடலில் இருதயத்தில் இருக்கின்றார்கள். உயிர் நிலையும் இங்குதான் இருக்கின்றது என்கின்றது பிரம்மோபநிஷத்.

தொடர் சிந்தனை:

மனித உடலின் இயக்கம் என்பது மிகவும் துல்லியமான (complex) ஒன்று. மனித உடலில் தெய்வ மந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன. இந்த மந்திர வடிவங்கள் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் பரவியிருப்பதால்தான் மனித உடல் இயங்க முடிகின்றது. மனித உடலின் எந்த ஒரு சிறு பகுதியிலிருந்தும் தெய்வ சக்திகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகின்ற சமயத்தில் அவ்வுருப்பு செயல் இழந்து விடும் தன்மையை பெருகின்றன.

இதனை தற்கால தொழிற்துறை வளர்ச்சியில் பெருமளவில் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து வந்துகொண்டிருக்கின்ற Artificial Intelligence, Robotics Engineering துறையோடு ஒப்பிட்டு மனித உடலமைப்பை ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது. ரோபோட் பலவகைப் படும். இவற்றில் சில மனித உருவத்தை ஒத்து அமைக்கப் படினும், பெரும்பாலானவை மனித உருவின் ஒரு சில பகுதிகளை மட்டுமே கொண்டு செயலாற்றுகின்றன. உதாரணமாக கார் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தொடர்ச்சியான வேலைகளைச் செய்வதற்காக செய்யப்பட்டுள்ள பல இயந்திரங்களைக் கூர்ந்து கவனித்தோமானால், அவை மனித உடலை எந்த அளவில் ஒத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வரும். பொதுவாக ஒரு இயந்திரம் மனிதனின் தலையிலிருந்து இடுப்புப் பகுதி வரை எலும்பு வடிவத்தை ஒத்திருக்கும்; அதோடு ஒரு தனிப்பட்ட வேலையைச் தொடர்ச்சியாகச் செய்வதற்கு ஒரு கைப்பகுதி போன்ற நீளமான ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கைப்பகுதியானது 90 அல்லது 180 டிகிரி (செயலுக்கு தக்க வகையில்) அளவிற்கு சுற்றி தொடர்ச்சியான வேலைகளைச் செய்யும். ஆக, அந்த கையானது அசைவதற்கு பல கனினி மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மென்பொருளும் இயந்திரத்தின் ஒரு தனிப்பட்ட செயலுக்கு பொறுப்பாகின்றன. அதோடு இயந்திரங்களில் மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படுவது அதன் கையிலுள்ள விரல் பகுதிகளாகும். அவை மனித விரலை உதாரணமாகக் கொண்டே வடிவமைக்கப்படும்.

பொதுவாக தானியங்கி ரோபோட் இயந்திரங்களில் மனிதவிரல்களைப் போல 5 விரல்களை அமைப்பது குறைவே. அத்தோடு பொருட்களைப் பிடிப்பதற்காக பெரும் பாலும் ஒன்று அல்லது இரண்டு விரல்களே அமைக்கப்படும். அவற்றின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு தனிப்பட்ட மென்பொருள் module தேவைப்படும். ஒரு சிறு கைவிரலின் இரும்பினை அசைப்பதற்கே கடினமான மென்பொருட்கள் எழுதப்படும் போது, மனித உடலை அதன் எண்ணற்ற அசைவுகளை இயக்குகின்ற மென்பொருட்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

மனித உடலில் ஒரு விரல் மட்டுமில்லையே. ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள், ஒவ்வொரு விரலிலும் 3 சிறு எலும்புகள் என 27 எலும்புகளைக் கொண்டு ஒரு கைப்பகுதி அமைந்துள்ளது. இது மட்டுமல்லாது உடல் முழுதும் 206 எலும்புகள் அமைந்துள்ளன. அதோடு தசைகள் உள்ளன; நரம்புகளும் ரத்த நாளங்களும் இன்னும் பல பகுதிகளும் இந்த உடம்பினில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இயக்குதல் என்பது எப்படி ஒரு மனிதனால் முடிகின்றது. தன்னைப் பற்றிய ஒரு தெளிந்த அறிவே ஒரு மனிதனுக்கு அமைவது இல்லை; தன்னுடைய திறமைகள் தெரிவதில்லை; தன்னுடைய எதிர்காலம் தெரிவதில்லை; தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளும், சிந்தனைகளும் கூட மறந்து விடுகின்ற நிலையிலேயே பெரும்பாலான மனிதர்கள் இருக்கின்றோம். ஆக இம்மாதிரியான பல நுண்மையான வி"யங்கள் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்ற சாதாரண மனிதர்களாகிய நம்மால் எவ்வாறு நமது உடலின் அங்கங்களை அசைத்து பல காரியங்களை இயற்ற முடிகின்றது?

மனிதன் பெரும்பாலும் தனது முழுச் சக்திகளையும் பயன் படுத்துவதோ அதனை பயன்படுத்தி பயன் பெருவதோ இல்லை. இதனை யோகப்பயிற்சி வல்லுநர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். யோகப் பயிற்சியின் மூலமாகவும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பின் மூலமாகவும் மனிதனால் உடலினை நல்ல கருவியாகப் பயன்படுத்தி தெய்வ சக்தியைப் பெற்று நல்வாழ்வு வாழ முடியும். இறைவனை முழுமையாக அடைகின்ற நிலையில் உடல் என்பது இல்லாமல் போனாலும், இறைவனை அடைகின்ற வழியில், உடலைக் கொண்டே அது சாத்தியமாகின்றது. அதனை திருமூலரின் கீழ்வரும் பாடல் விளக்குவதைக் காணலாம்.


உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே (704)

பொதுவாக இறை சக்தியானது உடல் முழுதும் இருந்தாலும் குறிப்பாக ஆறு ஆதாரங்களில் அவை Sதிரப்பட்டு, உடல் இயக்கத்தையும் ஆன்மப்போக்கையும் நிர்ணயிக்கின்றன. மனித உடலினில் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களைப் பற்றிய குறிப்புக்கள் சித்தர் நூல்களில் பரவலாகக் கிடைக்கின்றன. மூலாதாரம், சுவாதி?டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களும் திருமந்திரத்தில் ஆழமாக, ஒவ்வொன்றின் தனித்தன்மைகளை விளக்கும் வகையில் தரப்பட்டுள்ளன. இதனையே அடிப்படையாகக் கொண்டு பல சித்தர் பாடல்கள் மேலும் இவற்றினை விளக்கும் முகமாக எழுதப்பட்டுள்ளன.

இந்த பிரம்மோபநி"த்தில் மூலாதாரம், சுவாதி?டானம் தவிர்த்த பிற நான்கு ஆதாரங்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதைக் காண முடிகின்றது. பொதுவாக மூலாதாரத்தில் சித்தி புத்திகளுடன் கூடிய விநாயகனும், சுவாதி?டானத்தில் சரSவதி பிரம்மாவும், மணிப்பூரகக்தில் மகாலOEமியுடன் சேர்ந்த வி?ணுவும், அநாகதத்தில் ருத்ரியுடன் கூடிய ருத்ரனும், விசுத்தியில் மணோன்மனி சதாசிவமாகவும், ஆக்ஞையில் பராசக்தி பரசிவனாகவும், இவையெல்லாம் கடந்த சகSரதலத்தில் உருவற்ற அருட்சோதியாகவும் கொள்ளப்படுகின்றது.

ஆனால் பிரம்மோபநி"த்தை கவனிக்கும் போது அங்கே இறைவன் உறையும் இடமாக தொப்பூழ், இருதயம், கழுத்து, உச்சி ஆகிய நான்கு நிலைகளே கூறப்படுவதை கவனிக்க வேண்டும். அத்தோடு இந்த நான்கு நிலைகளிலும் உடலின் நிலைக்கேற்ப விழிப்பில் பிரம்மாவும், கனவில் வி?ணுவும், உறக்கத்தில் ருத்ரனும், துரியத்தில் பரப்பிரம்மமும் இயங்குவதாகக் குறிக்கப்பட்டுள்ளதேயன்றி ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு தெய்வசக்தி உரியது என்னும் கருத்து குறிக்கப்படவில்லை. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோடு, பிற்காலத்தில் ஒவ்வொரு தளத்திற்கும் சக்தியோடு கூடிய ஆண் தெய்வங்கள் கூறப்படுவது போல இங்கு பெண் தெய்வங்களைப் பற்றிய எந்த செய்திகளையும் காணவில்லை.

மனித உடலின் ஒவ்வொரு பாகங்கள் அசைவதற்கும் அங்கே அதனை இயக்குகின்ற ஒரு சக்தி நிச்சயம் தேவைப்படுகின்றது. அந்த மந்திர சக்திகளை நாம் இறை தேவதைகளாகவும் காணலாம். இறைதேவதைகள் ஒவ்வொரு அனுவிலும் உறைந்திருந்து அதனை தனது சக்தியின் முலமாக இயக்குகின்ற போதே மனிதனால் இயங்க முடியும். ஆக பிரம்மோபநிஷத்தில் குறிப்பிட்டிருப்பது போலில்லாது உடல் முழுவதும் இறைசக்திகள் நிறைந்திருப்பதாகத்தான் கொள்ள முடியும். ஒரு வகையில், பிரம்மோபநிஷத்தின் குறிப்புக்களை ஆறு ஆதாரக் கொள்கையின் ஆரம்ப நிலைக் கருத்துக்களாகக் கொள்ளவும் வாய்ப்பிருக்கின்றது.

தொடரும்.....


அன்புடன்
சுபா