Sunday, November 17, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 3) - மனித, இயந்திர - மந்திராயனம் (வாழ்வா தண்டனையா?)


From: "ksuba100"
Date: Sun Nov 17, 2002 11:13 am
Subject: Upanishad: Svethasvathara Upanishad- Part 3

மூன்றாம் நான்காம் காண்டம் - சுருக்கம்

1.மாயாவியான ருத்ரனே உலகை ஆள்கிறான்; அவனே உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகிறான்.
2.இருளுக்கு அப்பாற்பட்டவனான கயிலையில் வாழும் அவனை நான் அறிவேன்; அவனை அறிந்த பின்னரே ஒருவன் சாவைக் கடக்க முடியும். இல்லையேல் மக்கள்துன்பமுற்றவர்களாகின்றனர்.
3.இவன் மனிதர்களின் இருதயத்தில் வாழ்கின்றான். ஒன்பது வாயில்களுள்ள இத் தேகத்தில் வசிக்கின்றான். பாலில் மறைந்துள்ள நெய்போல் அதிசூஷ்மமாய் உள்ளான்.
4.அவனே பஞ்சபூதம்; அவனே ஸ்த்ரீ,புருஷன். எல்லாம் அவனே.
5.வேத மந்திரங்கள் குறிக்கின்ற இறைவனை ஒருவன் அறியவில்லையானால், அவனுக்கு அவ்வேத மந்திரங்களால் பயனில்லை.
6.அவனது உண்மை ரூபம் கண்ணுக்கெட்டுவதில்லை. மஹா வியாபகன் அவன்.
7.பிறவிக்கடலுக்கு பயந்த ஜீவன் உன்னை சரணடைகின்றான். உனது தெற்கு முகம் (தஷிணாமூர்த்தி) எதுவோ அதனால் காத்தருள்வீர்.
8.எங்கள் சொத்துக்களையும் புத்திரர்களையும் அழிக்க வேண்டாம்; காத்தருள்வீர்..

தொடர் சிந்தனை:
இப்பூமியில் பிறந்த உடனேயே ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படும் நாள் தள்ளி வைக்கப்படலாம். இது தான் வாழ்க்கை! - நஜன் (குண்டலினி சக்தி)

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கின்ற நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் வாழ்க்கையின் மேல் மனிதர்களாகிய நமக்கு பயம் ஏற்படுகின்றது. எத்தனையோ வகையான பயம் மனதில் பிண்ணிப்பினைந்து கிடக்கின்றது. அந்த பயந்திலிருந்து மீண்டு வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்கின்றோம். நினைத்தது நிறைவேற இறைவனை வேண்டுகின்றோம்; மாட்டிக் கொண்டிருக்கின்ற பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறோம்; தீங்குகள் வரக் கூடாது என்பதற்கு முன்னெச்செரிக்கையாக இருப்பதற்காகப் பூஜைகள் செய்கின்றோம்; வேண்டுதல்களை ஏற்கின்றோம்; விரதம் இருக்கின்றோம். கடவுள் என்ற ஒன்றின் மேல் பற்று இல்லாதோருக்கும் பயம் இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் இறைவனுக்குப் பதிலாக மனிதர்களையோ மற்ற பொருட்களையோ (பணம், சொத்து, அதிகாரம்) பற்றிக் கொள்வதன் வழி தமது பயத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டுக்கொள்கின்றனர்.

எனக்கு சிலந்திப் பூச்சியைக் கண்டால் பயம். எனது தோழி ஒருத்திக்கு பாம்பைக் கண்டால் பயம். (எனக்கு பாம்பை பார்த்தால் பயமே தோன்றாது. பாம்புகளைப் விளையாட்டுக்காகப் பிடித்து வைத்திருந்திருக்கின்றேன்.) எனது மற்றொரு தோழிக்கு திருமணத்தை நினைத்தாலே பயம். எனது நண்பன் ஒருவனுக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதை நினைத்தால் பயம் (அங்கே அதிகமாக பூச்சிகள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றான். பூச்சிகள் கடித்து இறந்து விடுவோம் என்ற அச்சம் அவனுக்கு!) இப்படி பலருக்கும் பல வகையில் பயம். இந்த பயத்தின் அளவைப் பொருத்தே ஒவ்வொருவரின் பற்றுக்கோட்டின் அளவும் அமைகின்றது.

உலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனாலும் நாம் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு வாழ்க்கையில் பலவற்றை சேர்க்கின்றோம். வாழ்க்கை நமக்கு பல வேளைகளில் நிலையற்றவற்றினைப் பற்றிய பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சில தேவைகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கின்றோம். எனது ஜெர்மானிய தோழன் ஒருவனுக்கு நான்கு முறை காதல் தோல்வி; இருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் காதலியைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான்; வாழ்க்கையில் மாறுதல் வேண்டும் என்பதற்காக ஸ்டுட்கார்டிலிருந்து பெர்லினுக்கு வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். இலங்கையில் யுத்தத்தின் காரணமாக வாழ்க்கையைத் தேடி வந்த தமிழினம் ஐரோப்பாவில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; தமிழ் பண்பாட்டையும், மொழியையும், கலை கலாச்சாரத்தையும் ஐரோப்பிய மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்; கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஒரு இடத்தில் தடை ஏற்படும் போது மற்றொன்றில் மனதைச் செலுத்தி போராடிப் போராடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டே இருக்கும் ஆன்ம பலம் உள்ளவர்களுக்கு மாறுதல் வாழ்க்கையில் கிடைக்கத்தான் செய்கின்றது.

பயம் மனதை விட்டு அகல வேண்டுமானால் மகா சக்தியான அப்பேரருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இறை அருள் துணையிருக்கும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையைத் தைரியமாக கடக்க உதவும். உலகில் பிறந்த எந்த மனிதருக்குத்தான பிரச்சனை இல்லை? சோதனை இல்லை? எதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் அதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்று மிகப்பெரிய கவலையாக, அதிர்ச்சியாகத் தெரிவது நாளைக்கு அதே அளவிளான மன பாதிப்பை அளிப்பதில்லை. நமது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்திருக்கின்றோம் என்று காணமுடியும். ஆனால் அந்த விஷயங்களை வெற்றிகரமாக கடந்து வந்த பின்னர் அவை நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றினைச் சாதிக்கக் கிடைத்த வெற்றியின் முதற்படியாகத் தான் நமக்குத் தோன்றும்.

வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் போராட்டத்திற்கு அஞ்சி வீழ்ந்து விட மாட்டான். லொரு வாசல் அடைக்கப்படும் போது மற்ரொரு வாச்ல் திறக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சித்துச் செல்லும் போதுதான் பிரபஞ்ச அமைப்பைக் காணும் திறமைக் கிட்டும். இத்திறம் சாதாரணமான ஒன்றல்ல. உடலுக்குள் உறைந்திருக்கும் இறைசக்தி இயக்குவதை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவனாலேயே தோல்வியிலுருந்தும் கஷ்டங்களிலிருந்து மீண்டு, சாதிக்க முடிகின்றது. அச்சக்தியைக் காண முடியாதவனுக்குச், சவம் போல அன்றாட வாழ்க்கையில் அமுங்கி வாழ்க்கையைத் தண்டனையாகக் காண்கின்ற நிலைதான் ஏற்படுகின்றது!

ச்வேதாச்வதர உபநிஷத்தின் மூன்றாம் நான்காம் காண்டங்கள், இறைவனைப் மனிதர்கள் பற்றிக் கொள்வதன் வழி எவ்வாறு உலக இன்பங்களிலிருந்து விலகி வாழ முடியும் என்பதை காட்டுகின்றது. இந்த உபநிஷத்தில் ருத்ரனனே அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கும் வல்லமை பொருந்திய தெய்வமாகக் காட்டப்படுகின்றார். சைவ சித்தாந்தத்தின்படி எத்தெய்வம் அழிக்கும் சக்தியைக் கொண்டதோ, அதுவே அனைத்தையும் உருவாக்கவும், காக்கவும், தொழிற்படுத்தவும் கூடிய வல்லமை படைத்த தெய்வம் என்பது உண்மை. இதனை சிவஞான போதத்தின் முதற் வெண்பாவாகிய:


  'அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமைவின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்'  விளக்குகின்றது.

ச்வேதாச்வதர உபநிஷத்தில் மஹா பரம்பொருளாகவே குறிக்கப் படும் ருத்திரன், சைவ சித்தாந்தத்தின்படி அழிக்கும் தொழிலுக்கு ஒரு பகுதியளவில் 'ஏகதேச சங்காரம்' மட்டுமே செய்வதாக காட்டப்படுகின்றது. பரம்பொருளான சிவமே அனைத்துக்கும் பெரியது எனவும், சிவத்தின் ஆணையினாலேயே பிரமன், மால், ருத்திரன் ஆகிய மூவரும் பிரபஞ்ச சிருஷ்டி, திதி, சம்காரம் ஆகிய முத்தொழிலைச் செய்வதாகவும் விளக்க உறை அமைகின்றது. ஆக உபநிடத காலத்தில் மஹா பரம்பொருளாக காட்டபப்ட்ட ருத்ரனின் தன்மை நாளடைவில் மாற்றம் கண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் காணமுடிகின்றது.

ச்வேதாச்வதர உபநிஷத்தில் மேலும் ருத்ரன் மக்களின் உடைமைகளையும் சொத்துக்களையும் வம்சத்தையும் காக்க வேண்டும் என்ற வேண்டுதல்களைப் பற்றிய குறிப்புக்களும் வருகின்றன. ருத்ரன் கோபம் கொள்ளக் கூடாது; அப்படி கோபம் வரும்போது தங்கள் குதிரைகள் இருப்பிடங்கள் ஆகியவற்றை அழித்து விடுவார் போன்ற பயம் கலந்த கூற்றுகளும் வருகின்றன. எல்லா பயமும் கவலைகளும் போக வேண்டுமானால் மக்கள் ருத்ரனின் தெற்கு முகத்தால் அருள் பெற வேண்டும் என்று இந்த உபநிஷத்தின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ருத்ரனின் தெற்கு முகம் என்பது தஷிணாமூர்த்தி வடிவம் என்று '108 உபநிஷத்ஸாரம்' நூலின் ஆசிரியர் 'அண்ணா' அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். தஷிணாமூர்த்தி ஞானத்திற்கு அதிபதி. ஞான வேட்கை உள்ள ஆன்மாக்களுக்கு அருள் பாலித்து அவர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவ பரம்பொருளே தஷிணாமூர்த்தி வடிவம் தாங்கியுள்ள தெய்வம். ஆக, ஞானம் ஒன்றே வேண்டும் என்று இறைவனை இருக்கப் பிடித்துக் கொள்ளும் ஆன்மாக்களுக்கு உலக அச்சத்தை நீக்கி, ஞானத்தை நல்குபவரே தஷிணாமூர்த்தி எனக் கொல்ளலாம். அவரே பிறவிக்கடலை தீர்த்து பிரவி அச்சத்தைப் போக்கக் கூடியவர்.!

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிகோட்டை கைக் கொள்வது எக்காலம்?

அற்ப சுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கொர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?

புல்லாய்; விலங்கா; புழுவாய்; நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....


அன்புடன்
சுபா

Saturday, November 16, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயனம் (மனம் எனும் குரங்கு / மகாசக்தி)




From: "ksuba100"
Date: Sat Nov 16, 2002 1:25 pm
Subject: Upanishad: Svethasvathara Upanishad- Part II

இரண்டாம் காண்டம் - சுருக்கம்

1.மனதைக் கட்டுப்படுத்தி சீராக்குவதன் வழி தத்துவஞானத்தைப் பெறலாம்.
2.மனதின் இயல்பு இன்பத்தை நாடுவது; அதை நெறிப்படுத்தி உயர்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
3.மனதை கட்டுப்படுத்தும் திறம் பெற்றவனே சிறந்த அறிவாளி.
4.பிறவிக்கானக் காரணத்தை அழித்துவிடும் போது (தவத்தினால்) இருவினை மறைகின்றது.
5.இந்திரியங்களை அடக்கி, பிராணயாமம் செய்து பேரொளியில் கலக்க வேண்டும்.
6.யோகத்தின் பலனாக உடல் பளுவின்மை, நோயின்மை, அவாவின்மை, நிறத்தெளிவு, நல்லகுரல், இனியமணம், மலஜல குறைவு ஆகயவை உண்டாகும்; இவை அடையாளங்கள்.

தொடர் சிந்தனை:
உலகிலேயே மிகவும் சிரமமான காரியம் என்ன?

சுகிப்பது சுலபம். பேசுவது அதை விட சுலபம். சிந்திப்பது கொஞ்சம் கடினம். இன்னும் ஆழமாகச் சிந்துப்பது இன்னும் கொஞ்சம் கடினம். சிந்தித்தை செயல்படுத்துவது அதனினும் பெரும் கடினம்!

நாளைக்குக் கடைக்குச் சென்று புது ஆடைகள் வாங்க வேண்டும் என்று மனம் நினைக்கின்றது. மனம் நினைத்தால் மாத்திரம் போதுமா? மறுநாள் காலையிலேயே எழுந்து வேலைகளையெல்லாம் முடித்து, பஸ் பிடித்து, கடை வீதிக்குச் சென்று தேவையான துணிகளைத் தேடி, அதற்குத் தேவையான பணத்தைச் செலவு செய்து அந்தத் துணிகளை வாங்கி வரவேண்டியிருக்கின்றது. இத்தனைக் காரியங்களையும் செய்தால் தான் வேண்டியது (மனம் நினைத்தது) செயல்படுத்தப்பட்ட வினையாகின்றது. இதைப் போலத்தான் நாம் அன்றாடம் செய்கின்ற எல்லா காரியங்களுமே.

மனம் நினைக்கின்றது; நினைத்ததைச் செயல்படுத்தும் திட்டத்தை படிப்படியாகத் தீட்டுகின்றது. பொறிகளும் உடலின் கருவிகளும் சேர்ந்து மணம் நினைத்த காரியத்தைச் செயல்படுத்துகின்றன.

இது ஒரு சிக்கலான விஷயம். மனம் நினைப்பது என்பது சிந்தனை. அந்த சிந்தனை செயல்வடிவம் பெற்றதா? இல்லை பெறாமலேயே கறைந்து விட்டதா ? என்பதே முடிவு. இச்செயலை கீழ்க்காணும் வகையில் பிரிக்கலாம்.

1. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; உடலும் மணமும் சேர்ந்து காரியத்தை முடிக்கின்றன.
2. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; உடல் ஒத்துழைத்தாலும், மணம் மாறி காரியம் நடைபெறாமல் போய்விடுகின்றன.
3. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; மணம் செய்ய நினைத்தாலும், உடல் ஒத்துழைக்காததால் காரியம் தடை பெறுகின்றது.
4. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; மணமும் உடலும் காரியத்தைச் செயல்படுத்தாமல் தள்ளி வைத்து விடும் நிலை.
5. மனம் நினைக்கின்றது; திட்டம் எதுவுமில்லை. அதனால் காரியம் நடைபெறாமலே அந்த சிந்தனை வீணாகி விடுகின்ற நிலை.
6. மனம் எதையுமே சிந்திக்காத நிலை.
நமது வாழ்வில் கணம் கணம் நிகழும் அனைத்து காரியங்களையும் மேற்கூறிய ஏதாவது ஒன்றினில் வகைப்படுத்திவிடலாம். நினைத்ததைச் சாதித்தவர்களே மக்களால் காலம் காலமாக பேசப்படுபவர்களாகத் திகழ்கின்றனர். நினைத்தைச் சாதிக்கும் உந்து சக்தி எல்லோரிடமும் இருப்பினும் அதனை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவனாலேயே அதனால் பயனடைய முடிகின்ற தன்மையைப் பார்க்க முடிகின்றது. சூக்குமத் தன்மை கொண்ட மனதை ஆன்மா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்கு தூலப் பொருளான உடல் கருவியாகின்றது. இந்திரியங்களை அடக்கி யோகத்தில் சென்று மனதை பயிற்சி படுத்துவது ஆரம்ப நிலை. நமது சித்தர் இலக்கியங்கள் அஷ்டாங்க யோகமாகிய யமம், நியமம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை மனத்தை இயக்கி அடக்கும் உத்திகளாகக் காட்டுகின்றன.

1.யமம் - ஒதுக்க வேண்டியவை. தூய்மையற்ற, உண்மையற்ற, நியாயமற்ற பழக்கங்கள் ஒதுக்கப் பட வேண்டியவை.
2.நியமம் - ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. தூய்மையான் செயல், உண்மையான செயல், அன்பான வாழ்க்கை, நெறியுடைய தன்மைகள் ஆகியவை.
3 ஆசனம் - இருக்கை. உடலை நேராக இருத்தி முதுகந்தண்டை நிமிர்த்தி இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சரியே பயனிக்க வைத்தல்.
4.பிராணாயாமம் - சுவாசப் பயிற்சி. மூக்கின் வழி உள்ளே இழுக்கப் படுகின்ற சுவாசம் சரி வர உடலுக்குள் செல்லுமாறு பயிற்சித்தல்.
5.பிரத்யாகாரம் - ஆற்றலை ஒன்றுபடுத்துவது. மனதில் தெளிவு பிறக்கும் போது ஆன்மா தனக்குள்ள ஆற்றல்களை உணரும் தன்மை பிறக்கின்றது. தனது ஆற்றலை உணர்ந்து அதனை சிந்தித்து சாதிக்க வேண்டியதை மனம் செயல்படுத்துவதே பிரத்யாகாரம்.
6.தாரணை - சக்திகளுக்கு வலிமையூட்டல். இறைசக்தி உடம்பிற்குள் உறைந்து கிடக்கின்றது. அதனை உபாசித்து இறைசக்தியே மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துச் செயல்படுத்த அனுமதித்தலே தாரணை.
7.தியானம் - மனம் தேடுகின்ற ஒன்றினை முற்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகத்தோடும் துடிப்போடும் ஆன்மாவை பிடித்துக் கொள்வது.
8.சமாதி - பேரின்பத்தில் அடங்குதல். இறையோடு ஒன்று கலக்கும் பேரின்ப நிலை.
மனம் ஒரு குரங்கு; காட்சிக்கு இனிமையாக இருப்பவையெல்லாம், புலன்களுக்கு சுகம் தரக்குட்டிய பொருள்களெல்லாம் தனக்குச்சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் மனதிற்கு உண்டு. ஒன்றை அடைந்ததும் அதிலிருந்து தாவி அடுத்த ஒன்றினை அடைய வேண்டும் என்று தவிப்பதும் அதன் இயல்பு. உலக சுகங்களில் மாட்டிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகின்ற தன்மையும் அதற்கு உண்டு.

குரங்காகத் தாவக் கூடிய இந்த மனத்தை ஆன்மா, பயிற்சிகளின் வழி அடக்கி ஆளும் போது உள்ளே அடங்கி இருக்கின்ற மாபெறும் சக்தியை பெறுகின்றது; அதுவே குண்டலினி. இந்தக் குண்டலினி உடலுக்குள் வாழும் பாம்பு; இது ஊணக்கண்னுக்குத் தென்படா பாம்பு. அக்னி சொரூபமான இப்பாம்பு மகா சக்தியை அளிக்கக் கூடியது. மனமெனும் மகா சக்தி இறைத் தன்மையைப் பெறும் போது பேராற்றல் வருகின்றது. இந்த பேறாற்றலே சாதனையாளர்களைப் இப்பூமியில் படைக்கின்றது. ஒருமித்த சிந்தனை, தெளிந்த குறிக்கோள், நல்ல நெறிகள்; இவை நினைத்தைச் சாதிக்கும் சக்தியை ஒரு ஜீவனுக்கு வழங்குகின்றன.

ஒரு மனிதனின் தகுதி அவனது உடம்பால் கணக்கிடப்படுவதல்ல. மனித உடலால் என்ன பயன்? ஒரு முதலையின் தோலினால் எத்தனையோ விலையுயர்ந்த் பொருட்கள் உருவாகின்றன. பறவைகளின் சிறகால் பல விலை மதிக்கத்த பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. ஆனால் மனித தேகத்தை மட்டும் மதிப்பிடுவதானால் மனிதர் அதிக விலை போகமாட்டார். ஒருவரின் உடலில் கிடைப்பவை: கொஞ்சம் சுண்ணாம்பு, 3 டஜன் தீப்பெட்டிகளை உருவாக்குவதற்கான போஸ்பரஸ், 3 சிறிய ஆணிகளை செய்யத் தேவையான இரும்பு, சில லிட்டர் தண்ணீர் செய்யக்கூடிய அளவு ஹைட்றோஜன், ஆக்ஸிஜன் ஆகியவையே; இவை தவிர மேலும் சிறிய அளவிலான சில உலோகங்கள். இவை அத்தனையயும் கூட்டினாலும் 10 டாலர் கூட மதிப்புப் பெறாத பொருட்கள் தான் மனிதனின் உடம்பில் இருக்கின்றன. [ இப்போதெல்லாம் சிறு நீரகம், இருதயம், கண்கள் என்று பல ஆயிரக்கணக்கில் மனித உடலின் அங்கங்கள் திருட்டுத்தனமாக விலைப் போகின்றன. அவற்றை இங்கெ ஒதுக்கி விட்டேன்..:) ] அப்படியென்றால் ஒரு மனிதரின் மதிப்பு உடம்பினால் பெறப்படுவது என்பது பொய்யாகின்றது. அவரவர் ஆன்ம சக்தியே மனிதருக்கு மதிப்பையும், தகுதியையும், சிறப்புத் தன்மையயும் வழங்கும் அளவு கோலாக அமைகின்றது.

பிறவிக்கான காரணத்தை அழிக்க முற்படும் முயற்சியில் முதலாவதானது தன்னைப் பற்றிய (ஆன்மா) உண்மைகளை அறிந்து கொள்ள ஒருவர் எடுக்கின்ற முயற்சிகளே. மனதை அலைக்கழிக்கும் பல இன்னல்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுபட தன் தெய்வீக இயற்கையை தேடுவதே சிறந்த வழி. மனதை குரங்காகவே வைத்திருப்பது, இந்த முயற்சிக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அதனை மகாசக்தியாக மாற்றுவதே வெற்றிக்கு முதற்படி.

வேடிக்கையும் சொகுசும் மெய்ப் பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கையெல்லாம் மறந்திருப்பது எக்காலம்?

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம்?

ஒலிபடரும் குண்டலியை உண்ணி உணர்வால் எழுப்பி
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம்?

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம் போல் திரிவதினி எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....


அன்புடன்
சுபா