Saturday, July 12, 2003

அம்ருதபிந்து உபநிஷத் - பாகம் 1 - மனித, இயந்திர - (எனக்குள் என்னைத் தேடி)




From: "ksuba100"
Date: Sat Jul 12, 2003 10:57 am
Subject: Subject:

சுருக்கம்

1.மனதின் ஆசையை சுத்தம் அசுத்தம் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
2.விஷயங்களில் பற்றுகொண்ட மனது பந்தங்களுக்குக் காரணமாகின்றது
3.விஷயத்தில் பற்றில்லாதது முக்திக்குக் காரணமாகின்றது.
4.பரம்பொருள் சிந்திக்கத் தகுந்த ஒரு பொருளேயாகும்.
5.முக்தி என்பது ஒரு நிலை. அது அனுபவித்து விளக்கக் கூடிய ஒரு பொருளல்ல!

குறிப்பு: பிந்து உபநிஷத்துக்கள் 5. அவை நாதபிந்து, ப்ரஹ்மபிந்து, அம்ருதபிந்து, த்யானபிந்து, தேஜோபிந்து ஆகியவையாகும். இவை ஐந்தும் கிருஸ்ஹ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்தவை.

[இத்தொடரின் முதற் கட்டுரைகளை http://www.subaonline.de/upani/listti.html என்ற எமது வலைப்பக்கத்தில் காணலாம்]

தொடர் சிந்தனை:

"இறந்த பிறகு நாம் என்ன ஆவோம் என்று எப்போதாவது நீ சிந்தித்திருக்கி ன்றாயா"என்று எனது நண்பன் அலெக்ஸைக் காபி நேரத்தில் ஒரு கேள்வி கேட்டேன். அவனும் ஒரு கணினி பொறியியளாளராகப் பணியாற்றுவதால் டெக்னி கலாகவே பதிலும் இருந்தது. "ஆமாம் சில நேரங்களில் சிந்திப்பதுண்டு. எப்படி நமது செர்வர்கள் shutdown செய்தவுடன் நின்று விடுகின்றனவோ அது மாதிரிதான் இந்த உடம்பும் என்று நினைக்கின்றேன். செர்வர்களைச் shutdown செய்வதற்கு நம்மைப் போன்றவர்கள் தேவை ஆனால் நம்மை shutdown செய்வது எது என்று தெரி யவில்லை. செர்வர்களை shutdown செய்து மறுபடியும் Reboot செய்துவிடலாம். ஆனால் நம்மை Reboot செய்ய முடியாது" என்றான். "டெக்னிகலாகப் பார்த்தால் இந்த உடம்பு, அதோடு இந்த உடம்பில் நாம் இதுவரைக்கும் தேடிச் சேர்த்து வைத்தி ருக்கும் அத்தனை அறிவும் (skills) ஒரே நேரத்தில் இல்லாமல் ஆக்கப்படுகின்றன" என்றான்.

"ஏன் இப்படி சொல்கிறாய்? இவ்வளவு படித்து, முயற்சி செய்து நாம் சேர்த்து வைத்தி ருக்கும் அனுபவம் எல்லாம் ஒரே நொடியில் அழிந்துவிடக்கூடியது என்று சொல்கிறாயே" என்று கேட்க, "இருக்க முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இதற்குப் பி றகு உள்ள உலகத்தில் இந்த அறிவு எந்த வகையில் பயன்படும் என்பது தெரியவில்லை. அதுதான் எனக்குக் குழப்பமாக இருக்கின்றது" என்றான். இந்த உடம்பு ஒரு செயலி (hardware). இதில் மென்பொருள் பதியப்படுகின்றது. அந்த மென்பொருள் இந்த செயலி யைப் பயன்படுத்திக் கொண்டு இயங்குகிறது; கற்கிறது; மேலும் மென்பொருளை வளர்ச்சி செய்து கொள்கின்றது. பிறகு ஒரு நாள் இந்த மென்பொருள் செயலியை விட்டு நீங்க, செயலியும் சேர்ந்து இல்லாமல் போய்விடுகின்றது" இப்படித்தான் இருக்க வேண்டும் என்றான்.

உன்னுடைய பதில் இந்த வாழ்க்கையையே பயனில்லாத ஒன்றாகத்தான் காட்டுகின்றது. ஏன் இப்படியும் இருக்கலாம் தானே என்று என்னுடைய கருத்தைக் கூற ஆரம்பித்தேன். 2 செயலிகள்(hardware) இருக்கின்றன; ஒன்று கண்களுக்குத் தெரிகின்ற செயலி; மற்றொன்று கண்களுக்குத் தெரியாத செயலி. கண்களுக்குத் தெரிவது இந்த பூத உடல்; கண்களுக்குத் தெரியாதது இந்தா ஆன்மா (Soul). மென்பொருள் இந்த இரண்டு செயலி களில் கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்ற செயலியிலேயே பதியப்படுகின்றது. இந்த வாழ்க்கை இருக்கும் வரை மென்பொருள் இயங்குகிறது; வளர்ச்சியடைகின்றது, மேலும் பெரிதானதாக, திறமை வாய்ந்தததாக மாற்றம் காண்கின்றது. இவையெல்லாம் இந்த இரண்டு செயலிகளின் துணையோடு நடக்கக் கூடியவை. கண்ணுக்குத் தெரிகின்ற இந்த செயலியான உடம்பு இறக்கும் போது மென்பொருள் இறப்பதில்லை. மாறாக அது கண்ணுக்குத் தெரியாத செயலியோடே சேர்ந்திருக்கும்; அந்த கண்ணுக்குத் தெரியாத செயலிக்கு ஒரு உடம்பு கிடைக்கும் வரை" என்றேன்.

எத்தனையோ அனுபவங்கள் காரியங்கள் என்று வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்ற போது ஒரே ஒரு நிமிடம் நம்மை உலுக்கும் கேள்விகள் எழுவதுண்டு. எத்தனை ஆண்டுகள் நாம் இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கப்போகின்றோம்? எத்தனை நாள் நாம் இந்த அலுவலகத்தில் இருக்கப்போகி ன்றோம்?; எத்தனை நாள் இந்த வீட்டில், எனது அறையில் எனது நகரில், எனது நாட்டில் எனது இந்த அழகிய உலகில் வாழப்போகின்றோம்? என்று கேள்வி திடீரெறு வந்து குழப்பி விட்டுச் செல்வதை யாராலும் மறுக்க முடியாதுதான். வயதும் வாழ்க்கை அனுபவமும் அதிகமாக இம்மாதிரியான கேள்விகள் மனதில் எழுவதன் எண்ணி க்கையும் அடிகமாகத்தான் செய்கின்றது.

பிறந்தவர்கள் எல்லோரும் சாகத்தான் போகின்றார்கள்; அதற்காக இப்போதே சாவைப்பற்றி நினைத்து புலம்ப வேண்டுமா..? இது சிலரது விவாதம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்போதுமே மனிதனைச் சிந்திக்க வைக்கின்றது. 10 வயது குழந்தைக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவாகின்றது. "எதிர்காலத்தில் நான் மருத்துவராகத்தான் இருப்பேன்; அதுதான் என்னுடைய ஆசை; அதனால் இப்போதே கணிதம் அறிவியல் பாடங்களை ஆசையோடு படிக்கின்றேன்" என்கிறாள் ஒரு குழந்தை. "இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் கோபுரத்தோடு கூடிய ஒரு ஆலயத்தை இந்த ஸ்டுட்கார்ட் நகரத்தில் அமைத்தே ஆகவேண்டும். எதிர்காலத்தில் நமது தமிழர்களுக்கு ஆன்மீகத்தை ஜெர்மனியில் பரப்ப இந்த ஆலயத்தைக் கட்டுவது முக்கி யமான ஒன்று" என்று தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அருகாமையிலுள்ள விநாயகர் ஆலயத்து நிர்வாகத்தினர். இப்படி ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஆசைகள் மனதை சூழ்ந்தி ருக்கின்றன. மனிதரை அவையே இயக்குகின்றன.

ஒன்றை அடைய வேண்டும் என்று நினைப்பவருக்குத்தான அந்த பொருள் கிட்டும். எதை அடையப் போகின்றோம்? எதை அடைய வேண்டும் என்ற தெளிவி ல்லாதவருக்கு...?????

எது வேண்டும் என்று நினைப்பவருக்குத் தான் தனக்கு வேண்டுவதை அடைவதற்கான தி ட்டங்களைத் தீட்டும் திறம் கிடைக்கும். திட்டங்களைச் செயல்படுத்தினால் தான் மனம் வி ரும்பியதை அடைய முடியும். மிகச் சுலபமான சூத்திரம்.

வேண்டுவது கிடைக்குமா..? நிச்சயம் கிடைக்கும்; போடுகின்ற முயற்சியைப் பொருத்து! "வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ" - பல ஆண்டுகளுக்கு முன்படித்த இனிய தேவாரப் பாடலின் வாசகம் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.


"எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் அருட்ஜோதி தெய்வம்" - என்று பாடுகின்றார் வள்ளலார். மனதிற்கு தைரியத்தைச் சேர்க்கும் இனிய வரிகள் இவை.

எதை வேண்டுவது...? வேண்டுகின்ற அப்பொருள் நமக்குக் கிடைக்கும் போது அப்பொருள் தனது கன்மங்களையும் சேர்த்தே கொண்டு வருவதுதான் நியதி. எனக்கு ஒரு கார் வேண்டும். ஆசை ஆசையாய் தேடி எனக்கு பிடித்த மாடலில், எனக்கு பிடித்த வர்ணத்தில் ஏறக்குறைய என்னால் சமாளிக்கக் கூடிய ஒரு காரை வாங்கி னேன். சந்தோஷம். ஆனால் அன்றிலிருந்து செலவு அதிகரிக்க ஆரம்பித்தது. எண்ணை விலை ஏறுகின்ற போதெல்லாம் மனம் தவிக்கின்றது. வாகனத்தை சுத்தம் செய்ய பணம் தேவை, அவ்வப்போது அதனை பழுது பார்க்க பணம் தேவை. எத்தனை செலவுகள்? இது போதாதென்று குளிர்காலங்களில் பணி பெய்யும் போது கார் முழுதும் பணி மூடிவி ட்ட நிலையில் அதனை சுரண்டி சுத்தம் செய்து அலுவலகம் செல்வதற்குள் போதும் போதும் என்ற நிலை. சுத்தம் செய்து முடிப்பதற்குள் குளிரில் கை உறைந்து, நடுங்கும் போது இந்த நிலை தேவை தானா என்று மனது கேட்கின்றது. சில வேலைகளில் தரையெங்கும் பணி கொட்டிக் கிடக்கும் போது நேரத்தைப் பொருட்படுத்தாமல் 40 நிமி டங்கள் நடந்தே அலுவலகம் போக வேண்டிய நிலக்குத் தள்ளப்படுகிறேன்.

சந்தோஷம் என்று நான் நினைத்த ஒன்று ஏன் எனக்கு வெறும் சந்தோஷத்தை மட்டும் தருவதில்லை..?

இப்படி ஒவ்வொரு பொருளாக மனம் ஆசைப்படுகின்றது; ஆசைப்பட்ட பொருள் கிடைக்கி ன்றது அல்லது கிடைக்காமல் போகின்றது. அனுபவம் பெறுகுகின்றது; ஆன்மா வளர்ச்சி அடைகின்றது. இப்போது ஒரு கேள்வி எழுகின்றது? எல்லா பொருளுமே நி றந்தரமற்றதுதானா..? முழுமையான சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு பொருள்(உயிர் இல்லாத/உயிர் உள்ள) இருக்கின்றதா..?

சிந்திக்கத் தகுந்த பொருள் பரம்பொருள்; சிந்திக்கத் தகுந்த பொருள் அப்பரம் பொருள் தருகின்ற ஞானம். அதுவே சிந்திப்பதற்கு உரிய அமிர்தம் என்கின்றது அம்ருதபிந்து உபநிஷத். ஆக கேள்விக்கான பதில்கள் நமக்குள்ளேயே தான் இருக்கின்றன. தேடி கண்டு கொள்வோம்!




ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?[47]

தக்கும் வகைக்கு ஓர்பொருளும் சாராமலே நினைவில்
பக்குவம்வந்து உன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? [50]

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?[24]
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....

அன்புடன்
சுபா

பரமஹம்ஸ உபநிஷத் - மனித, இயந்திர - மந்திராயனம் ஏகதண்டீ




From: "ksuba100"
Date: Sat Jul 12, 2003 10:57 am
Subject: Subject:

சுருக்கம்

நாராதர் விஷ்னு பகவானிடம் கேட்கின்றார்:
பரமஸர்களாகிய யோகிகளின் நோக்கம் என்ன?
அவர்களுக்கு ஏற்படும் வாழ்க்கை எப்படிப்பட்டது?

பகவானின் பதில்:
பரமஹம்சர்கள் எனப்படுபவர்கள் மிகச் சிலரே. அவர்களுடைய மனது எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே லயித்திருக்கும்; நானும் அவர்களிடத்தில் லயித்திப்பேன்.அவர்கள் மனித உறவுகள், பொருட் பற்று ஆகிய அனைத்தையும் துறந்து வாழ்வர். உடலை பொருட்படுத்தாது பற்றின்றி வாழ்வர்.

ஆசைகளை முற்றும் துறந்து ஞான தண்டத்தை தரித்த ஏகதண்டியே பரமஹம்சர்.

குறிப்பு: மிகச் சிறிய ஒரு உபநிஷத்து என்றாலும், இதனை ஞான வாழ்க்கையைப் பற்றி அலசும் பழம் தத்துவ நூல்களில் ஒன்று எனக் கொள்வது அவசியமாகின்றது. இந்த நூல் "ஓம் பூர்ணமத ..சாந்தி ..சாந்தி" எனத் தொடங்குவதால் இது சுக்லயஜுர்வேதத்தைச் சார்ந்த உபநிஷத்தாகக் கொள்ளப்படுகின்றது. 

தொடர் சிந்தனை:

எனது அலுவலக நண்பன் ஒருவன் விடுமுறையில் சென்று விட்டதால் அவனுடைய பொறுப்புக்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலை. ஐரோப்பிய அளவிளான ஒரு வங்கி யின் கணினிகளில் இரண்டில் புதிய அறிக்கை தயாரிக்கும் மென்பொருள் ஒன்றினைப் பதி யும் வேலை வந்து சேர்ந்தது. Virtual Vault என்று சொல்லப்படும் unix-ன் புதிய பொதில்நுட்பத்தை அடிப்படை மென்பொருளாகக் கொண்ட கணினிகள் அவை. எல்லா கணினிகளைப் போலத்தானே செய்ல்பாடுகள் இருக்கும் என்று நினைத்து காரியத்தில் இறங்கிய எனக்கு அதிர்ச்சி. பல அடுக்கு நிலைகளில் தளங்களைக் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அமைப்பு. ஒரு தளத்தில் உருவாக்கிய கோப்புக்களை மற்ற தளத்தில் பார்க்க முடிவதில்லை. அடித்தளத்தில் மட்டுமே மேல் தளங்களில் உள்ள கோப்புக்களைப் பார்க்க முடியும் என்ற ஒரு வடிவமைப்பு. ஒரு தளத்தில் கிடக்கும் அனுமதி கள் மற்ற தளத்தில் கிடைப்பதில்லை. இப்படி ஏராளமான பிரிவுகளைக் கொண்ட 'மிகப் பாதுகாப்பான' ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம்; அதில் வேலையைச் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய சிந்தனை; இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் போலத்தானே மனிதர்களாகிய நாமும் இருக்கின்றோம். காற்று வாங்க வெளியே செல்கின்றோம்; எனக்கு கண்களில் படும் பொருட்களோ அல்லது மற்ற விசயங்களோ என்னோடு அருகில் வரும் மற்ற நபருக்கு தெரி வதில்லை; அதேபோலத்தான் எனக்கும் ; அவர்களுக்கு முக்கியமாகத் தெரிவது எனக்கு பெரிதாகப் படாமலேயே போய்விடுகின்றன. எனக்கு ஒரு பிரச்சனையைப் பார்க்கும் போது தெரிகின்ற பின் விளைவுகள் மற்ற நபருக்கு மனதில் படாமலேயே போய்விடுகின்றன. அதேபோல, என் நண்பருக்குத் தெரிகின்ற பல விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விடுகின்றன. ஏன் இப்படி..?

பக்குவ வேறுபாடுகள் மனிதனை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.வாழ்க்கையில் நமக்குப் போராட்டக் களமாக அமைவது நமது குடும்பம்தான். எதில் அதிக ஆசைகளும் பற்றுக்களும் வைத்திருக்கின்றோமோ அதுவே அனைத்து மன வேதனைகளுக்கும், பி ரச்சனைகளுக்கும் மூலமாக அமைந்து விடுவதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்தைப் பார்த்து அதிலிருந்து சற்று வெளியாகி, தன்னை தனது செயல்களை வெளியேயிருந்து நோக்கி படிப்படியாக இந்த உறவுச் சங்கிலிகளை வெட்டி வீச உதவும் மருந்தாகவே நமது வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் பல வேளைகளில் பார்க்க மறந்து விடுகின்றோம். இப்படிப் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் மனிதர்கள் பிரச்சனைகளைச் சமாளிக்கும் விதம் தான் எத்தனை வகை?

நாம் கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கிச் சிந்தித்துப் பார்ப்போம்; அதில் எத்தனை விஷயங்களுக்கு நாம் ஆசைப்பட்டிருக்கின்றோம்; எத்தனை ஆசைகள் நிறைவேறி யுள்ளன; அந்த நிறைவேறிய ஆசைகளால் நாம் அடைந்த இன்ப துன்பங்கள் யாவை என்பதை கணக்கிடுவோம். முடிவில் நமக்குத் தெரிவதென்ன..? ஒவ்வொரு மனி னுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள். ஆனால் பெரும்பாலும் ஆசைள் நிறைவேறிவி ட்டன என்று நாம் அப்படியே அமைதி அடைந்து விடுவதும் இல்லை; அதேபோல அடைந்த ஆசையினால் மன நிறைவு பெற்று அதே சந்தோஷத்தில் மூழ்கிக் கிடப்பதுவும் இல்லை; கால ஓட்டத்தில் புதிய புதிய ஆசைகள் தோன்றுகின்றன; புதிய புதிய பிரச்சனைகள் தலைதூக்குகின்றன; புதிய புதிய சவால்கள எதிர்நோக்கி விட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதானிருக்கின்றோம். இதுதான் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை; ஆனால் அசாதாரன மனிதர் இதைனை மாற்றி அமைத்து வாழ்க்கையை வென்றவராகின்றார்.

பேச்சாளர் சுகி சிவம் அவர்களின் ஒரு சொற்பொழிவில் அழகான ஒரு கருத்தினைக் கேட்க நேர்ந்தது. "நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களாக இருக்க விரும்புகி ன்றீர்களா? அல்லது வாழ்க்கையையே வென்றவர்களாக இருக்கவிரும்புகின்றீர்களா?" என்ற ஒரு கேள்வியை எழுப்பினார். இது தான் ஒரு சாதாரன மனிதனுக்கும் அசாதாரன மனிதனுக்கு உள்ள வேற்றுமை.

நாம் சுலபமாக நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதில்லை; நமது ஆசைகளை, விருப்பங்களைச், சிந்தனைப் போகை, வாழ்க்கை முறையை யாரும் சுலபமாக மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.ஏதாவது ஒரு கட்டாயத்தின் பேரில் தான் பெரும்பாலும் நாம் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறோம். வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் மிக முக்கியமாக விளங்குவது மரணம். அதேபோல பிறரால் நமக்கு ஏற்படுகின்ற ஏமாற்றம், வெறுப்பு, தோல்வி, பொருள் இழப்பு போன்றவையும் நம்மை இப்போது சென்று கொண்டிருக்கின்ற நிலையிலிருந்து நிறுத்தி தற்போதைய போக்கை மாற்றி அமைத்து விடுவதைப் பார்க்கின்றோம். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கி ன்ற ஒன்று.

குடும்பம், பற்றுக்கள், ஆசைகள், திட்டங்கள் என மனதில் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கும் வரை இந்த சுழற்சியிலிருந்து தப்பிக்கவே முடியாது. அனைத்தும் விட்டு அமைதியை உண்மையாகப் பெற வேண்டுமானால் உறவுகளையும் ஆசைகளையும் துறக்க வேண்டும்.

சொந்தங்களையும் ஆசைகளையும் விட்டு விட்டு சவம் போல என்ன வாழ்க்கை என நாம் நினைக்கலாம். இங்கே இரண்டு விதமான வாழ்க்கையையைக் காணமுடிகின்றது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு சொந்த பந்தங்களில் மாட்டிக் கொண்டு பிரச்சனைகளில் மூழ்கித் தவித்து அவ்வப்போது வருகின்ற சிறிய சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து, பெரும்பாலும் துன்பத்தில் கிடக்கும் நிலை வேண்டுமா? அல்லது அனைத்தையும் ஒரே நிமிடத்தில் விட்டு விட்டு ஏகாந்தமான இறை அனுபவத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலை வேண்டுமா? பற்றுக்களை பெரி தாக நினைக்கும் மனிதனுக்குப் பற்றுக்களை முற்றிலும் அறுத்த அசாதாரன மனிதனை புரி ந்து கொள்ள முடிவதில்லை; Virtual Vault சிஸ்டத்தைப் போல.

மனிதர்களில் அசாதரணமானவர்களே பரமஹம்சர்கள். மனிதர்களாக பிறவியெடுத்த நாம் அனைவருமே பரமஹம்சர்களாகிக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் சைவ சி த்தாந்தம். பரமஹம்சர்கள் வானிலிருந்து தோன்றுவதில்லை; நாம் தான் வாழ்க்கையில் கிடைக்கின்ற அனுபவங்களை சிந்திக்க சிந்திக்க விடுபட வேண்டியவற்றிலிருந்து ஒவ்வொன்றாக விட்டு விட்டு இறுதில் இறைவனை மட்டுமே நினைவில் கொண்டு வாழும் நிலைக்கு வரும் போது பரமஹம்சர்களாகின்றோம்.

பரமஹம்சர்களுக்கு உள்ளது ஏக சிந்தனை; தன்னை மறந்து தன்னுள் உறைந்துள்ள இறைச்சிந்தனையில் மட்டுமே லயித்திருக்க, வாழ்க்கை நிறைந்த சுகானுபவத்தை வழங்குகி ன்ற நிலை.



பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் உடரொளி யாமே
 [ - திருமந்திரம், 1589.]

என்று திருமூலர் கூறுகின்றார்.

உள்ளொளியாகிய இச்சுடரொளியே தானாகி, நித்திய இன்பத்தில் இருப்பவர்களாக பரமஹம்சர்கள் விளங்குகின்றார்கள். இவர்களுக்கு உடல் பற்றுக்கள் இல்லை, உலக ஆசைகள் இல்லை, சாஸ்திரங்கள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை; இன்பமும் துன்பமும் இல்லை. சந்தேகம், பொய்யறிவு இவற்றிலிருந்து விலகி விட்டதால் அழியாத தன்மை படைத்த இறைவனுடன் இரண்டறக் கலந்து ஆனந்தமாய், அறிவே உருவாய் இவர்கள் இருப்பர் என பரமஹம்ஸ உபநிஷத் கூறுகின்றது. இந்நிலையில் ஞானம் எனும் ஒரே தண்டத்தை மட்டும் இவர் கொண்டிருப்பதால் இவரே எகதண்டீ.

"ஸர்வான் காமான் பரித்யஜ்ய அத்வைதே பரமேஸ்த்திதி
ஜ்ஞானதண்டோ த்ருதோ யேந ஏகதண்டீ ஸ உச்யதே!"



எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் நினைவாய்
கங்குல்பகல் இன்றி உனைக் கண்டிருப்பது எக்காலம்?

நின்றநிலை பேராமல், நினைவில் ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்?

என்னைவிட்டு நீங்காது என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நிங்காது ஒருப்படுவது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....

அன்புடன்
சுபா