Monday, December 31, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 38


2012ம் ஆண்டின் இறுதி நாள் இன்று!

இந்த ஆண்டில் நான் மிகவும் ரசித்துப் படித்த ஒரு நூல் என் சரித்திரம். அந்த நூலைப் பற்றி நான் எழுதி வரும் இந்த உலாவில் இந்த ஆண்டின் இறுதி நாளிலும் ஒரு பதிவு அமைய வேண்டும் என்று என் மனதில் நேற்றிலிருந்து சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. காலையில் தங்கும் விடுதியில் உணவை முடித்து 2 மணி நேரம் பணித்திடலில் நோர்டிக் க்ரூஸ் பயணம் செய்து முடித்து விட்டு அறைக்கு வந்ததுமே நூலை எடுத்துக் கொண்டேன். இதோ சென்ற பதிவின் தொடர்ச்சியாக சில சிந்தனைகள்..!

தளிர் ஆராய்ச்சி செய்து ஆசிரியரின் மனதில் இடம் பிடிக்க உ.வே.சா அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் பலித்தது. நைடதம் முடிந்ததும் புதிய பாடத்தை விரைவில் தொடங்கி விடலாம் என்று பிள்ளையவர்கள் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைச் சொல்லி விட்டார்.

எத்தனை நாட்கள் சவேரிநாதரிடம் மட்டுமே பாடம் கேட்பது என்று தவித்துக் கொண்டிருந்த உ.வே.சா நைடதத்தில் பாடல்களை வேக வேகமாக அவசரப் படுத்தி சாவேரிநாதரிடம் கேட்டுப் படித்து, விரைவில் முடித்துக் கொண்டார். உடனே தாமதிக்காமல் பிள்ளையவர்களிடம் சென்று நைடதம் முடிவடைந்தது என்று கூறி புதிய பாடத்தை ஆசிரியர் ஆரம்பிக்கலாம் என அவருக்குக் குறிப்பால் உணர்த்தி நின்றார். மாணவரின் ஆர்வம் பிள்ளையவர்களின் உள்ளத்தை கவர்ந்திருக்க வேண்டும். மறுநாள் தாமே உ.வே.சாவை அழைத்து அமரச் செய்து தானே இயற்றிய ஒரு பிரபந்த நூலை பாடம் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் பாடம் சொல்ல ஆரம்பித்த அந்த நூல் திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது. கும்பகோணத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீகும்பேசுரர் மேல் பாடப்பட்ட திரிபந்தாதி. முதல் நாளே நூலில் இருந்த 40 பாடல்களுக்கு மேல் பாடம் சொன்னார் பிள்ளையவர்கள். எந்தெந்த இடங்களில் விளக்கம் தேவையோ அவைகளில் மட்டும் விளக்கியும், விஷேஷமான சில பகுதிகளை மட்டும் விளக்கியும் இலக்கணக் குறிப்புக்களில் கவனம் வரவேண்டிய இடங்களில் தெளிவு தரும் வகையில் விவரித்தும் பாடத்தை நடத்தினார் பிள்ளையவர்கள்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்பதை வேறு ஆசிரியர்களிடமிருந்து ஒப்பிட்டுப் பார்க்கின்றார் உ.வே.சா. இப்பகுதி என் சரித்திரம் நூலில் 30ம் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றது.

“அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக் காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விட வேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிர்ஷ்டம் போல லாபம் கிடைக்கும். எவ்வளவுக் கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.


... மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத் தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்தி விட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடி விட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.”

பாடம் சொல்லும் போதே மாணாக்கருக்கு எப்பகுதியில் தெளிவு தேவை என்பதை உணர்ந்து கொண்டு அப்பகுதியை தெளிவாக்கி விளக்குவதில் சிறந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்ற செய்தியை அறிகின்றோம்.  ஒரு ஆசிரியர் எனப்படுபவர் மாணவர்களின் அறிவுத்தாகத்தை தீர்ப்பவராக அமைவது அம்மாணவரின் வாழ்க்கையைத் திறம்பட அமைப்பதில் உதவும்.

தற்காலத்தில் பலர் சான்றிதழும் பட்டங்களும் பெற்று ஆசிரியர் தொழிலுக்கு வந்து விடுகின்றனர்.  ஆனால் அவர்களில் பலர் தாம் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்குக் கொண்டிருக்கும் காரணங்களை அறியும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நெறிகளோடு எவ்வளவு வேறுபாடாக இருக்கின்றது என்று நினைத்து வியக்கின்றேன். என் அனுபவத்திலேயே பல ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்குக் காரணம் காலை நேரத்து வேலை நேரம் போக மாலை  நேரம் வீட்டு விஷயங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனிக்க சரியாக இருக்குமே என்பதாகவே அமைகின்றது. இதனைக் குறை கூற முடியாது. கால ஓட்டத்தில் சமுதாய சிந்தனைகளும் எதிர்பார்ப்புக்களும் சில தேவைகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. ஆனால் அவ்வகையான அமைப்புக்குள் இருந்தாலும் தாம் கொண்டிருக்கும் பணியை நேசித்து அதில் ஒன்றி மாணவர்களுக்கு நல்லதொரு வழுகாட்டியாக இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியைகளுக்கும் உண்டன்றோ..!


தொடரும்...
சுபா

Saturday, December 22, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 37


வாசித்துக் கொண்டிருந்த சமயங்களில் என் சரித்திரம் நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் என் மனதில் விதம் விதமான எண்ணங்களைத் தோற்றுவிக்கத் தவறியதில்லை. நூலில் உள்ள சில பகுதிகள் ஆழமான சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடியவை; சில வியப்பை ஏற்படித்தக்கூடியவை; சில மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை; சில சிரிக்க வைத்தவை; சில சோகத்தால் என் மனதை வாட்டியவை; சில அன்பின் ஆழத்தை நூலிலே படித்து தெரிந்து கொள்ள உதவியவை. இப்படி பல்வேறுபட்ட உணர்வுகளை வாசிப்போர் உள்ளத்தில் தோற்றுவிக்கக் கூடிய தன்மை வாய்ந்தது என் சரித்திரம் நூல்.

அப்படிப்பட இந்த நூலில் ஒரு அத்தியாயம் நான் வாசித்துக் கொண்டிருக்கும் போதே என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. அந்தப் பதிவினையும் அதற்கான சூழலையும் இந்தப் பதிவில் குறிப்பிடலாம் எனக் கருதுகின்றேன்.

நைடதத்தை மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் பாடங் கேட்க ஆரம்பித்திருந்தார் உ.வே.சா. ஏற்கனவே உ.வே.சா நைடதத்தைக் கற்றிருந்தமையினால் தெரியாத பகுதிகளுக்கு விளக்கம் என வரும் போது அதனை ஆழமாக விவரித்து வந்தார் பிள்ளையவர்கள். பின்னர் அப்பாடத்தை சவேரிநாதப் பிள்ளை தொடரும் படி ஏற்பாடு செய்தார் பிள்ளையவர்கள். பிள்ளையவர்களிடம் கற்று அதில் இன்புற வேண்டும் என்ற கனவுடன் இருந்து உ.வே.சாவுக்கு இதில் கவலையுண்டாயிற்று. சவேரிநாதப்பிள்ளை நன்கு போதித்தாலும் பல இடங்களில் தனக்குத் தெரிந்த விஷயங்களில் கூட சவேரிநாதப்பிள்ளைக்குத் தெளிவில்லாமை இருப்பதைக் கண்டு உ.வே.சா சற்று கலக்கம் கொண்டார். அதனால் ஆசிரியருக்கு இதனை குறிப்பால் உணர்த்தும் வகையில் ஏதேனும் செய்ய திட்டமிட்டார்.

முதலாவதாக ஆசிரியர் பாடம் நடந்து கொண்டிருக்கும் வழியே வரும் போது சவேரிநாதப் பிள்ளையை உ.வே.சா குறுக்குக் கேள்விகள் கேட்டு தனக்கு அவரை விட மேலும் தெரியும் என்பதை ஆசிரியருக்கு உணர்த்திப் பார்த்தார்.இதனால் சவேரிநாதப் பிள்ளை உ.வே.சா மேல் கோபமோ வருத்தமோ கொள்ளவே இல்லை. பிள்ளையவர்களோ இருவருக்குமாக அப்பகுதியை மீண்டும் விளக்கி விட்டுச் சென்று விடுவார். ஆனாலும் இந்த யுக்தி முழுதாகப் பலிக்கவில்லை.  இனி என்ன செய்யலாம் என யோசித்தார் உ.வே.சா. அவருக்கு இன்னொரு யோசனை தோன்றியது.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாவரங்கள், மரம், செடிகள் பால் அலாதிப் பிரியம் கொண்டவர். அவர் தானே வாங்கி குடி பெயர்ந்த அந்த மயூரம் வீட்டில் பெரிய தோட்டத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்ததோடு அத்தோட்டத்தில் தினம் சில மணி நேரங்களைச் செலவிடுவதில் கழித்து வந்தார். பிள்ளையவர்களுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் தோட்டத்தைச் சென்று பார்த்து ஒவ்வொரு செடியையும் தானே கவனித்து அதில் ஏதேனும் பட்டுப் போய் உள்ளதா, புதிய இலைகள் தளிர்கள் தோன்றியுள்ளனவா, மலர்கள் பூத்துள்ளனவா என்று கண்காணிப்பது வழக்கம். அப்படி ஏதாகினும் செடிகள் பட்டுப் போயிருந்தால் பிள்ளையவர்கள் மனம் வாடி விடுவார். அதே சமயம் ஏதேனும் புதிய செடிகள் முளைத்திருந்தாலோ செடிகளில் புதுத் தளிர்கள் தோன்றியிருந்தாலோ அவருக்கு அளவில்லா ஆனந்தம் உண்டாகும் . மாலை வேளிகளில் தானே செடிகளுக்கு நீர் விடுவது போன்ற பணிகளையும் பிள்ளையவர்களே செய்து வந்தார். இதனை உ.வே.சா நன்கு கவனித்தார்.

இந்தச் செடிகளை வைத்தே ஆசிரியரின் மனதைக் கவர முயற்சிக்கலாமே என்று சிந்தித்து அதனைச் செயல்படுத்தி வெற்றியும் கண்டார் உ.வே.சா. என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 30ல் தளிர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் வருகின்ற செய்திகள் சுவையானவை. நீண்ட பகுதியாக இருந்தாலும் அதனை நான் ரசித்த வகையிலேயே இப்பதிவை வாசிக்கும் நீங்களும் உணர்வதற்காக அப்படியே அப்பகுதிகளை இங்கே வழங்குகின்றேன்.

"
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர் தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவைகளில் ஏதாவது பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டு விட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே இராது. வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சொல்லுவார். மாலை வேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்கு ஜலம் விடுவார்.

அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும் உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத் துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்க வில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில் ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள் உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத் தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக் கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது” என்றேன்.

அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை; என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோஷமடைந்தார். பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய் விட்டது என்று அவர் எண்ணியிருந்தார். அச்செடியில் ஓரிடத்தில் ஒரு தளிர் மெல்லத் தன் சிறுதலையை நீட்டியிருந்தது. “இதைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிக்க சந்தோஷமடைவார்கள்” என்று நான் எண்ணினேன். ஆதலின், “இதோ, இச்செடி கூடத் தளிர்த்திருக்கிறது” என்று நான் சொன்னதுதான் தாமதம்; “என்ன அதுவா? அது பட்டுப்போய் விட்டதென்றல்லவா எண்ணினேன்! தளிர்த்திருக்கிறதா? எங்கே, பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே விரைவாக அதனருகில் வந்தார். அவர் பார்வையில் தளிர் காணப்படவில்லை. நான் அதைக் காட்டினேன். அந்த மரத்தில் தளிர்த்திருந்த அந்த ஒரு சிறிய தளிர் அவர் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது; அம்மலர்ச்சியைக்கண்டு என் உள்ளம் பூரித்தது. “நம்முடைய முயற்சி பலிக்கும் சமயம் விரைவில் நேரும்” என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. அத்தளிர்களை வாழ்த்தினேன்.

நான் அதோடு விடவில்லை. பின்னும் நான் ஆராய்ந்து கவனித்து வைத்திருந்த வேறு தளிர்களையும் ஆசிரியருக்குக் காட்டினேன். காட்டக் காட்ட அவர் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தார்.

அது முதல் தினந்தோறும் காலையில் தளிர் ஆராய்ச்சியை நான் நடத்திக்கொண்டே வந்தேன். சில நாட்களில் மாலையிலே பார்த்து வைத்துக் கொள்வேன். பிள்ளையவர்களும் அவற்றைக் கண்டு திருப்தியடைந்து வந்தனர்.

ஒரு நாள் அவர் எல்லாச் செடிகளையும் பார்த்து விட்டுத் திரும்பியபோது என்னை நோக்கி, “இந்தச் செடிகளைப் பார்த்து வைக்கும்படி
யாராவது உம்மிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்.

“ஒருவரும் சொல்லவில்லை. நானாகவே கவனித்து வைத்தேன்” என்றேன் நான்.

“எதற்காக இப்படி கவனித்து வருகிறீர்?”

“ ஐயா அவர்கள் தினந்தோறும் கவனித்து வருவது தெரிந்தது; நான் முன்னதாகவே கவனித்துச் சொன்னால் ஐயா அவர்களுக்குச்

-       பிள்ளையவர்களை ஐயா அவர்களென்றே வழங்குவது வழக்கம் நேரில் பேசும்போது அப்படியே கூறுவோம்.

சிரமம் குறையுமென்று எண்ணி இப்படிச் செய்து வருகிறேன்” என்றேன்.  சாதாரண நிலையிலிருந்தால் இவ்வளவு தைரியமாகப் பேசியிருக்க மாட்டேன். சில நாட்களாகத் தளிரை வியாஜமாகக் கொண்டு அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தமையால் தைரியம் எனக்கு உண்டாயிற்று. நாளடைவில் அவரது அன்பைப் பூரணமாகப் பெறலாமென்ற துணிவும் ஏற்பட்டது. “நல்லதுதான். இப்படியே தினந்தோறும் பார்த்து வந்தால் அனுகூலமாக இருக்கும்” என்று என் ஆசிரியர் கூறினார். நானாகத் தொடங்கிய முயற்சிக்கு அவருடைய அனுமதியும் கிடைத்துவிட்ட தென்றால் என் ஊக்கத்தைக் கேட்கவா வேண்டும்?

தினந்தோறும் காலையில் பிள்ளையவர்களை இவ்வாறு சந்திக்கும் போது அவரோடு பேசுவது எனக்கு முதல் லாபமாக இருந்தது. அவர் வர வர என் விஷயத்தில் ஆதரவு காட்டலானார். என் படிப்பு விஷயமாகவும் பேசுவது உண்டு. “இப்போது பாடம் நடக்கிறதா? எது வரையில் நடந்திருக்கிறது? நேற்று எவ்வளவு செய்யுட்கள் நடை பெற்றன?” என்ற கேள்விகளைக் கேட்பார். நான் விடை கூறுவேன்.


எங்களுடைய சம்பாஷணை வர வர எங்களிருவருக்கும் இடையே அன்பை வளர்த்து வந்தது.
"

தொடரும்...

சுபா

Sunday, December 16, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 36



சங்கீத நாட்டமும் அதனையே தொழிலாகவும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த உ.வே.சாவுக்கு சங்கீதத்தில் தேவையான அளவு முறையான பயிற்சி இருந்தமை குறித்து இத்தொடரின் என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். சங்கீதத்தை விட தமிழ்க்கல்வியே அவர் மனதை முழுதுமாக ஆக்ரமித்தது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  தமிழ்க் கல்வி மேல் தீவிரப் பற்று இருந்தாலும் கற்ற இசை மனதை விட்டு அகலுமா?

பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்த ஓருரிரு நாட்களிலேயே உ.வே.சாவுக்கு நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. முதல் சந்திப்பில் அவருக்குக் கோபால கிருஷ்ண பாரதியின் மேல் இல்லாமலிருந்த மதிப்பு நாளடைவில் மாற்றம்  காண்பதையும்  என் சரித்திரம் நூலில் 29ம் அத்தியாயத்தில் காண்கின்றோம்.  கோபால கிருஷ்ண பாரதியை முதன் முதலில் சந்திக்கும் நிகழ்வை உ.வே.சா  இப்படிப் பதிகின்றார்.

" அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில் கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். ...
...“என்ன செய்து கொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோஷம். மீனாட்சி சுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விஷயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்."

கனம் கிருஷ்னையர் பால் அதீத மதிப்பும் அன்பும் கொண்டவர் கோபாலகிருஷ்ண பாரதி. வேங்கட சுப்பையர் அவரது மாணாவராக இருந்தமையினால் கோபாலகிருஷ்ண பாரதிக்கு இவர்கள் குடும்பத்தார் மீதும் அன்பு நிறைந்திருந்தது. ஒருவாராகப் பேசி உ.வே.சா அவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியிடம் தினமும் சங்கீதப் பயிற்சியையும் மேற்கொள்வதென்பது முடிவாக, தினம் தினம் விடியற்காலையிலும் மாலையிலும் சங்கீத அப்பியாசம் செய்து வரலானார் உ.வே.சா. இந்த ஏற்பாடு பற்றி உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குத் தெரிவிக்க வில்லை. தாம் தமிழ் படிக்க வந்து முற்றும் முழுதும் அதிலேயே கவனம் வைக்காமல் இசையையும் படித்து வருகின்றோம் என்று தெரிந்தால் ஆசிரியர் தம் மேல் கோபம் கொள்வாரோ என்ற அச்சம்  தான் அதற்குக் காரணம். அதோடு கோபால கிருஷ்ண பாரதியார் வேறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சங்கீத விரோதி என்று  கூறி இருந்தமையால் கூடுதல் அச்சம். அதனால் இந்த விஷயத்தை உ.வே.சா மனதிற்குள் மறைத்தே வைத்திருந்தார்,  தானாக இந்த விஷயம் ஒரு முறை வெளிவரும் வரையில்.

உ.வே.சா  தருகின்ற குறிப்புக்களிலிருந்து கோபாலகிருஷ்ண பாரதியைப் பற்றியும் ஓரளவு நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

கோபாலகிருஷ்ண பாரதி வேடிக்கையாகப் பேசி ரசிக்கும் வகையில் கதைகள் சொல்வாராம். ஏதாகினும் ஒரு சொல்லைக் குறிப்பிட்டால் போதும். உடனே அதற்கு ஒரு புராணக் கதையைக் கூறுவாராம். பேச்சினூடேயே அடிக்கடி பழமொழிகளைச் சொல்வாராம். அவரது சாரீரம் கம்மலாக இருந்தமையால் சில வருஷங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று  தான் தனிமையில் இருக்கும் வேளைகளில் அதை வாசித்து பொழுது போக்குவாராம். தினமும் காலையிலும் மாலையிலும் மாயூரநாதர்கோயிலிலுள்ள அகஸ்தீசுவர ஸ்வாமி சந்நிதியில் நீண்ட நேரம் யோகம் செய்து கொண்டிருப்பாராம். பாரதியாருடன் பழகப் பழக அவர் ஒரு மகான் என்பதை தான் உணர்ந்தமையை உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

அவரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர் பல புதிய கீர்த்தனைகளை உ.வே.சா கற்றுக் கொண்டிருக்கின்றார். நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளுக்கான மெட்டையும் ராகத்தையும் தாளத்தையும் அவரே சொல்லிக் கற்றுத்தந்திருக்கின்றார்.

நந்தனார் சரித்திரம் நூலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய நூலகத்தில் இங்கே வாசிக்கலாம். http://www.tamilvu.org/library/l5J50/html/l5J50001.htm


தொடரும்...
அன்புடன்
சுபா

Saturday, December 15, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 35



தான் இதுவரை யாரிடம் மாணக்கராகச் சேர வேண்டும் என்று கனவு கொண்டிருந்தோமோ அவரிடமே மாணாக்கராகச் சேர்ந்தாயிற்று..  இனி.. அடுத்து தொடர்ந்து பல நூற்களைக் கற்று தேர்ச்சி பெறுவதே நோக்கம் என்று பாடங் கேட்டலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் உ.வே.சா. முதல் பாடமாக நைடதத்தை தொடங்கி வைத்தார் பிள்ளையவர்கள். ஏற்கனவே நைடதத்தை உ.வே.சா வேறு ஆசிரியரிடம் படித்திருந்தாலும் இப்புலவர் பெருமானின் விளக்கத்தோடு கேட்கும் போது அதில் பல பொருள் புரியாத சொற்களுக்கு விளக்கமும் தெளிவும் பெற்றுக் கொண்டதாகவும் அவருடைய போதனை தனக்கு இன்பத்தை உண்டாக்கியது என்றும் குறிப்பிடுகின்றார் உ.வெ.சா.

சில நூல்களை நாம் ஒரு முறை படிப்பது என்பது அன்னூல் பற்றிய முழுமையான தெளிவினை நமக்கு வழங்காது. நமது மனதின் நிலைக்கும் கிரஹிக்கும் தன்மைக்கும் ஏற்ப படிக்கின்ற நூலை புரிந்து கொள்கின்றோம். ஒருமுறைக்கு மறுமுறை படிக்கும் போது நூலில் நமக்குக் கிடைக்கின்ற தெளிவு முன்னதைக் காட்டிலும் வேறுபட்டிருப்பதையும் அன்னூல் பற்றிய மேலும் ஆழமான புரிதல் கிடைப்பதற்கு உதவும் என்பது நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும் அனுபவ உண்மை. அதோடு நாம் ஒருமுறைக்கு இரு முறையாக ஒரு நூலை வாசிக்கும் போது கிடைக்கின்ற புரிதலைக் காட்டிலும் அதனை புரிந்து கொண்ட ஒருவர் தெளிவுற விளக்கினால் அது மேலும் ஆழமாக நூலின் கருத்தை புரிந்து கொள்ள உதவும். ஒரு ஆசிரியரின் பணி அது தானே!

மகன் விரும்பிய ஆசிரியரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் ஊருக்குப் புறப்பட சித்தமானார் வேங்கட சுப்பையர். உ.வே.சா என் சரித்திரம் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடம் கேட்க ஆரம்பித்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கஷ்டம் தீர்ந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாஸ்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே? "

கலியின் தொல்லைகள் நீங்க நைடதத்தை வாசிப்பார்கள் என்பது புதிய செய்தியாக எனக்குத் தோன்றியது. எத்தனையோ விஷ்யங்களில் நம்பிக்கை வைத்துத்தான் மனிதர்கள் உழன்று கொண்டிருக்கின்றோம். ஒரு சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் நம்பிக்கைகள் தான் நமது வாழ்க்கையை நாம் தொடர்ந்து நடத்திச் செல்ல உதவுவதாக அமைகின்றது. நம்பிக்கை இழக்கும் போது மனம் நிலையில்லா தனமையை அடைந்து தன் நிலையிலேயே சோர்வு அடைகின்றது. மனிதர்கள் நாம்  நம்பிக்கையை நிலை நாட்டிக் கொள்வதற்காக பூஜைகள், சடங்குகள், உறவுகள், பொருளாதார ஏற்பாடுகள், என்பனவற்றை தொடர்ந்து பற்றிக் கொண்டு வாழ்வது இயல்பாகி விட்டது.

இளம் தலைமுறையினர் மாணவர் பருவத்தில் கல்வி மேல் சலனமில்லாத ஆர்வம் கொள்வது மிக மிக அவசியம். சிலருக்கு தானாகவே அவ்வகை ஆர்வம் இயல்பாக வந்து விடுகின்றது. சிலருக்குச் சிலரது தூண்டுதலால் அவ்வகை ஆர்வம் ஏற்படுகின்றது. புத்தகங்கள் வாசிப்பதை பரீட்சைக்காகக் கடமைக்குச் செய்வதாக நினைக்கும் மாணவர்களுக்கு நூல்கள் நிச்சயமாகச் சுமையாகித் தான் போகும். மாறாக நூலை வாசிப்பதில் இன்பம் காணும் மாணாக்கர்கள் அதில் ஒவ்வொரு முறை வாசித்தலிலும் தெளிவு பெறும் போதும் ஆழ்ந்த இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்த நிலையை இயல்பாகப் பெறாத இளம் தலைமுறையினருக்குக் கல்வி மேல், நூல்கள் மேல் விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை பெற்றோரையும் ஆசிரியரையும் சேர்ந்ததாகின்றது.


தொடரும்...

அன்புடன்
சுபா

Saturday, December 8, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 34


ஒரு நல்லாசிரியர் என்பவர் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல நினைக்கையிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஒரு அளவு கோலாக எடுத்துக் கொள்ளலாம். மாணவர் நலன் மாணவர் கல்வி உயர்வு, மாணவர் அடிப்படை தேவைகள், மாணவர்களுக்கும் பெருமை மாணவர்களுக்கு எதிர்காலத் தொழில் அமைத்தலில் உதவி என மாணவர் நலன் மட்டுமே மனதில் கருத்தாகக் கொண்டு விளங்கிய ஒரு மாமனிதர். அவர் எழுதிக் குவித்த செய்யுட்களையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து அவற்றை பாதுகாக்க வேண்டுயது நமது பணி என்று என் மணம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது.

மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியானால் தான் அவர்களுக்குக் கல்வி மேல் உள்ள ஆர்வமும் கற்கின்ற கல்வியில் தெளிவும் நிலைக்கும் என்பது அவர் எண்ணம். ஆகையால் தம்மிடம் படிக்கின்ற மாணவர்களின்  உணவு, திருமணம் அவர்களுக்குத் தக்க தொழில் அமைத்துக் கொடுத்தல் என எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வழிகாட்டியாக இருந்து அவர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

தனது ஒவ்வொரு நூல் அறங்கேற்றத்தின் போதும் கிடைக்கின்ற வருமானத்தை உடனே தனது மாணவர்களின் திருமணம், அவர்களுக்குக் குடித்தனம் செய்வதற்கான செலவுகளைப் பராமரிக்க, அவர்களுக்குத் தயங்காமல் உணவு கிடைக்க ஏற்பாடு என செய்து பார்த்துக் கொண்டவர்.  திருமணமான தனது மாணவர்கள் குடும்பத்தைப் பிரிந்து அந்தப் பிரிவின் சோகத்தில் வாடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டாறேயானால் உடனே அந்த மாணவருக்கும் கூடத் தெரிவிக்காமல் அவர்தம் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு வரச் செய்து குடும்பத்தோருட்ன் வாழ்ந்து கல்வி கற்று வருமாறு ஏற்பாடுகளைச் செய்து தரும் பரந்த மனதைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கின்றார். தனது இறக்கும் தருவாயிலும் கூட தனது அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்த சவேரிநாதப் பிள்ளைக்குச் சில கடிதங்களைக் கொடுத்து தாம்  இறந்த பின்னர் இவர்களைச் சென்று பார்த்து அதில் குறிப்பிட்டிருக்கும் படி அவர்களிடமிருந்து பொருளுதவி பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழும் படி செய்வித்து மறைந்தவர்.  தனக்கு கணிசமான அளவு தொகை கடன் இருக்கும் அந்த நிலையிலும் கூட அவர் மனம் தனக்குப் பிறகு தனது மாணவர்களை யாரேனும் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருந்தது என்பதை இவ்வகை விளக்கங்களை என் சரித்திரம் நூலிலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாகம் 1, 2 நூல்களில் படிக்கும் போதும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்படிப்பட்ட ஒரு கல்விமானிடம் தான் உ.வே.சா கல்வி பயில தன் இளம் வயதில் வந்து சேர்கின்றார்.

பிள்ளையவர்களின் மாயூர இல்லத்தில் தந்தையும் மகனுமாக வந்து நின்று பிள்ளையவர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்ட பிறகு நடக்கும் நிகழ்வுகளை என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 28ல் காண்கின்றோம். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“ “என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்து விடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்து விட்டதென்றே தோன்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கி விட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்ல தினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த ஸந்தோஷம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார். “

உடனே பாடம் ஆரம்பித்தாலும் அந்தக் கவிஞரின் மாணவராக அமர்ந்து பாடங்கேட்க சித்தமாக இருந்த உ.வே.சாவைக் இங்கு காண்கின்றோம். கல்வி மேல் அவருக்கிருந்த அளவில்லா இன்பமும் ஆர்வம் தான் நம்மை வியக்க வைக்கின்றது.


தொடரும்...


அன்புடன்
சுபா

Saturday, December 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 33


திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் என்ற சிறப்புப் பட்டம் பெற்று ஆதீனத்தின் வித்துவானாக பதவி வகித்த கால கட்டத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பல நூற்களை எழுதியிருக்கின்றார்கள். அக்கால கட்டத்திலே தமிழகத்தின் பல இடங்களிலிருந்து அவரிடம் வந்து கல்வி கற்ற மாணாக்கர்கள் பலர் இருந்தனர். சிலர் அவருடன் நெடுங்காலம் தொடர்பில் இருந்தனர். பலர் ஓரளவு கற்றதும் தாங்களும் சுயமாக வித்துவானாக ஆகி தமிழ் ஆசானாக அவரவர் ஊர்களில் இருந்து வந்தனர். சிலர்  தனியாக தாங்கள் ஆசிரியர் பணி தொடங்க உள்ள விருப்பத்தைத் தெரிவித்தோ, குடும்ப சூழலை விவரித்தோ, பொருளாதார சிக்கலின் நிலையினாலே அவரிடம்சொல்லிக் கொண்டு போவதும் உண்டு. சிலர் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விடுவதும் உண்டு. சொல்லிக் கொள்ளாமல் போய்விடும் மாணவர்களை நினைத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையர்கள் வருந்திய செய்தியை இந்த நூலில் ஆங்காங்கே காண்கின்றோம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் நெடுங்காலம் இணைந்திருந்தவர்கள் பட்டியலில் சவேரிநாத பிள்ளையவர்களும் இணைந்து கொள்கின்றார். இவர் மதத்தால் ஒரு கிறிஸ்தவர். வேதநாயகம் பிள்ளை அவர்களால் அனுப்பப்பட்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்க வந்தவர்.  மிக நல்ல கல்வி ஞானமும் பிள்ளையவர்களின் பால் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர் இவர். உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வரும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வீட்டில் இவரை சந்திக்கும் விஷயத்தை என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார்.

சவேரிநாத பிள்ளை கல்வி ஞானத்துடன் ப்ரசங்கம் செய்வதிலும் தேர்ந்தவர். அவருக்கு இருந்த இனிய சாரீரமும் அவரது பிரசங்கங்கள் கேட்போரை அவர் வசம் ஈர்க்கும் தன்மையை வழங்கியது. பிள்ளையவர்கள் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் மற்ற எல்லா மாணவர்களைக் காட்டிலும் பிள்ளையவர்களுக்கு வேண்டிய அனைத்து தொண்டுகளையும் அதிகமாகச் செய்து வந்தார் என்று உ.வே.சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு பகுதி 1  நூலில் குறிப்பிடுகின்றார். சவேரிநாத பிள்ளை மீனாட்சி  சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவராக வந்து சேர்ந்ததன் பின்னர் அவரை ஒரு நாளும் பிரிந்து சென்றதில்லையாம். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். " இக் கவிஞர் பிரானுடைய இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையாக அவரைப் போல் வேறு எவரும் இருக்கவில்லை. "

ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் திருவாவடுதுறை ஆதீனமாக பொறுப்பேற்ற பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆதீனத்தில்  படித்து வந்த ஸ்ரீ நமச்சிவாயத் தம்பிரான் அவர்களுக்கு ஆதீனத்தின் சின்னப்பட்டமாக அபிஷேகம் செய்வித்து நமச்சிவாய தேசிகர் என்னும் சிறப்பு பெயரை ஆதீனகர்த்தர் அமைத்துக் கொடுத்தார்.  இந்தச் சின்னப்பட்டமானவர் கல்லிடைக் குறிச்சி நகரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கல்லிடை குறிச்சி சென்று பங்கேற்று  வந்தார்.

அதற்குப் பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் புதிதாக மாயூரத்தில் வாங்கி செப்பஞ் செய்திருந்த வீட்டிலேயே தங்கி  வசிக்க ஆசை கொண்டார். இந்த வீட்டில் அவருடன் மாணவர்கள் பலரும் தங்கியிருந்தனர். அவரது குடும்பத்தினர் திரிசிரபுரம் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இந்த மாயூர வீடு ஒரு கல்விக் கோயிலாக திகழ்ந்தது என்றே தெரிகின்றது. இந்த மாயூர வீட்டில் தங்கியிருக்க விருப்பம் கொண்டதை  சுப்பிரமணிய தேசிகரிடம் கூறி அனுமதி பெற்று தனது மாணவர் குழுவுடன் தனது மாயூரம் வீட்டிற்கு மாற்றலானார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு பாகம் 1 நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. .... இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலையமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையிலும் இவருடைய வேலையாக இருந்தன. எதை மறந்தாலும் தமிழை மறவாத பெருங்கவிஞராகிய இவர் இங்ஙணம் தமிழறிவை வரையாமல் வழங்கி வரும் வண்மையைப் புகழாதவர் அக்காலத்து ஒருவரும் இல்லை. தமிழை நினைக்கும் பொழுதெல்லாம் இக் கவிஞர் கோமானையும் உடனினைத்துப் புகழ்தலைத் தமிழ் நாட்டினர் மேற்கொண்டனர். அவர்களுள்ளும் சோழனாட்டார் தங்கள் சோறுடைய சோணாடு தமிழளிக்கும் சோணாடாகவும் இப் புலவர் பிரானால் ஆனமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து வந்தனர். அச்சோழ நாட்டுள்ளும் மாயூரத்தைச் சார்ந்த பிரதேசத்திலுள்ளவர்கள் தமிழ்த்தெய்வமே ஓர் அவதாரம் ஆகித் தங்களை உய்விக்க வந்திருப்பதாக எண்னிப் போற்றி வரலாயினர். தமிழ்ப் பயிற்சி இல்லாதவர்கள் கூட இப்புலவர் சிகாமணியைப் பார்த்தல் ஒன்றே பெரும்பயனென்று எண்ணி வந்து வந்து இவரைக் கண்டு களித்துச் செல்வார்கள். "

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழைப் போற்றி செய்யுட்கள் இயற்றி மாணவர்களைப் படிப்பித்து வந்த அச்செயலைத் தமிழ்த்தெய்வ வழிபாடு என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். இந்தக் கலைமகள் நிலையத்தில் தான் தனக்கு ஆசானாக நினைத்து நினைத்து ஏங்கி உருகி எதிர்பார்த்து தன்னையும் இப்புலவர் பெருமானாரின் மாணக்கர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தி ஏக்கத்துடன் நிற்கின்றார் உ.வே.சா.

தொடரும்.


அன்புடன்
சுபா

Friday, November 23, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 32


நேற்று திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் அவர்கள் சிவபதம் அடைந்த செய்தியை மின்தமிழில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டதன் வழி அறிந்து கொண்டேன்.  இந்தச் செய்தியோடு உ.வே.சாவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சிந்தனையும் மனதில் வந்து  போகின்றது.

பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்துவானாக தனது இறுதி காலம் வரை இருந்து தமிழ்ப்பணி செய்தவர் என்பதை பதிவு 29ல் குறிப்பிட்டிருந்தேன். அவரது மறைவுக்குப் பின்னர் உ.வே.சா அவர்களுக்கும் திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு மிக அணுக்கமானதாகவே இருந்து வந்தது. இதனைப் பற்றி பின்வரும் பதிவுகளில் குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன். இந்தப் பதிவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும்  திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையிலான நெருக்கத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுவதால் அது தொடர்பான சில தகவல்களைப் பதிகின்றேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலில் திருவாவடுதுறை சென்று பாடங் கேட்டது அப்போது அங்கே ஆதீன கர்த்தராக இருந்து வந்த அம்பலவாண தேசிகரிடம் தான். அங்கே  அது சமயம் சின்னபட்டமாக இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர். இவர் நிறைந்த கல்வி ஞானம் மிக்கவர்.  பல நூல்களைப் பாடங்கேட்டவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மடத்திற்கு வரும் சமயத்தில் இருவருக்கும் நல்ல அன்பும் நட்பும் தோன்றியது.

பிள்ளையவர்களின் தமிழ் ஞானப் பரப்பையும் ஆளுமையையும் அறிந்தவராக இருந்த  சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களை மடத்திலேயே தங்க வைத்து அங்கேயே தம்பிரான்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பாடம் போதிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் ஆதீன கர்த்தர் அம்பலவாண தேசிகரிடம் தனது எண்ணத்தை வெளியிட்டு சம்மதத்தையும் பெற்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை மடத்திலேயே தமிழ் வித்துவானாக இருக்கும் வகை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.

இது தொடர்பாக அம்பலவாண தேசிகருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமையும் பகுதி நூலில் மிக சுவாரசியமாகவும் அதே வேளை இருவரது சிந்தனை ஓட்டங்களையும் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

திரிசிரபுரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள நகரங்கள் மட்டுமன்றி சென்னையிலும் கூட இந்தக் கல்விமாணுக்குச் சிறந்த பெயரும் மதிப்பும் இருப்பதை சுப்பிரமணிய தேசிகர் எடுத்துச் சொல்கின்றார்.  தோற்றத்தைப் பார்க்கும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மிக சாதுவாக இருக்கின்றாரே என அம்பலவாண தேசிகர் வினவும் போது  “நன்றாகப் படித்தவர்கள் அவ்வாறே இருப்பார்கள். பிறர் தாமே அறிந்து தங்களை உபசரித்தால்தான் தம்முடைய ஆற்றலை அவர்கள் புலப்படுத்துவார்கள்” என்று பதில் கூறுகின்றார் சுப்பிரமணிய தேசிகர்.

சரி என்று ஒத்துக் கொள்ளும் அம்பலவாண தேசிகர், ”இவரிடம் அதிகமான மாணவர்கள் சேர்ந்தே இருக்கின்றனரே. இவர்கள் அவரை விட்டு நீங்கமாட்டார்கள் போலிருக்கின்றதே. இவரோடு எல்லோரும் இங்கே இருந்தால் அதிக செலவாகுமே”  என வினவ அதற்கு  சுப்பிரமணிய தேசிகர் சொல்லும் பதில் சுவையானது.

”அவ்வளவு பேரும் இவருடைய மாணாக்கர்கள். இவர் எங்கே இருந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களுள் முன்னமே படித்தவ்ர்கள் சிலர்; இப்பொழுது படிப்பவர்கள் சிலர்; இனிப் படிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சிலர்; அவர்களுக்குள்ளே பந்தியிலே உண்ணத்தக்கவர்களுக்குப் பந்தியிலும், ஏனையவர்களுக்கு அவரவர்க்கு ஏற்றபடியும் ஆகாரம் செய்விக்கலாம். இங்கே சாப்பாட்டுச் செலவில் ஒன்றும் குறைவில்லையே.  படித்த வித்துவான்கள் இருத்தலும் அவர்களைக் கொண்டு  பலரைப் படிப்பித்தலும் மடத்துக்கு ஏற்றவையாகும்.”

இப்படி சொல்லி விளக்கிய பிறகு அவருக்குத் தக்க சம்பளம் கொடுக்க வேண்டி வருமே என வினவும் அம்பலவாண தேசிகரிடம் சுப்பிரமணிய தேசிகர் இப்படிச் சொல்கின்றார். “அதைப் பற்றி கவலை சிறிதும் வேண்டாம்.  இவருடைய மாணாக்கர்களைப் போஷித்துப் பாதுகாத்தலே போதும். அதனாலேயே இவர் மிகவும் திருப்தியடைவார். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் “.

இப்படி ஒருவர் தன்னலம் விடுத்து, மாணாக்கர்கள் நலமே தன் வாழ்க்கை என இருந்திருக்கின்றார் என வாசித்து அறியும் போது என் மனம் அதிசயத்திலும் அதற்கு அடிப்படையாக அமைந்த அவரது எல்லையில்லா அன்பிலும் நெகிழ்ந்து போகின்றது.

இப்படிக் கூறி சம்மதம் பெற்று மடத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஆதீன வித்துவானாக நியமித்தமை குறித்து தகவலளித்து அவருக்கு வேண்டிய வசதிகளைத் தயார் செய்து கொடுக்கும் படி ஏற்பாடுகளையும் செய்வித்தார் சுப்பிரமணிய தேசிகர். அத்துடன் இவருக்கு இரண்டு  தவசிப்பிள்ளைகளையும் ஏற்பாடு செய்து தந்திருக்கின்றார். மடத்திலிருந்து மாதச் சம்பளத்தை ஏற்பாடு செய்தும் கொடுத்திருக்கிருக்கின்றார்.

அடுத்த சில நாட்களில் அம்பலவாண தேசிகர் மீது ஒரு கலம்பகம் ஒன்றை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியிருக்கின்றார். பல வித்துவான்கள் முன்னிலையில் அரங்கேற்றம் கண்டது அந்த நூல்.

இந்த அரங்கேற்ற நிகழ்வின் போது, திருவாவடுதுறை தொடர்பாக பல நூல்கள் இருந்தாலும் கூட இந்த நூல் பல புதிய விஷயங்களை ஆழ்ந்த பொருளுடன் இனிய தமிழில் விளக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றதே என அதனைக் கேட்ட அனைவரும் புகழ்ந்திருக்கின்றனர். இதற்காகவேனும் இவரைச் சிறப்பிக்க வேண்டும் என மடத்துப் பெரியோர்கள் விரும்ப, அதனை ஏற்றுக் கொண்ட அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகருடன் கலந்தாலோசித்து விட்டு இவருக்கு ”மகாவித்துவான்”  எனும் பட்டத்தை அந்த நிகழ்வில் வழங்கினார்.

அம்பலவாண தேசிகருக்குப் பின்னர் ஆதீன பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகருக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மேல் அளவற்ற அன்பு. அவரது கல்வி ஞானத்தின் மேல் மிகப் பெரிய நம்பிக்கை; ப்ரமிப்பு; வியப்பு. ஒரு உரையாடலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். “ உங்கள் கவித்துவத்தையும் புகழையும் யாரால் மறைக்க முடியும்? சூரியனை மறைப்பதற்கு யாரால் இயலும் ? ” (பக் 234)

பிற்காலத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு திருநாகைப் புராணம் இயற்றி வரும் வேலையில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் சிவபதம் அடைந்தார். இது 1869ம் ஆண்டு நிகழ்ந்தது.

தொடரும்..


அன்புடன்
சுபா

Sunday, November 18, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 31


பதிவு 31

திருவாவடுதுறை ஆதீனத்தில் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட பிணைப்பின் தொடக்கத்தை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவில் தொடர்ச்சியாக அவர் வாழ்வில் நடந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்வது தொடருக்குப் பயனளிக்கும்  என்று நினைக்கின்றேன்.

பிள்ளையவர்களின் 29வது வயதில் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். தனதுதந்தையின் பெயரையே அக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார் பிள்ளையவர்கள். இந்தக் குமாரனின் திருமணத்திற்கு உ.வே.சா சென்று வந்தமை பற்றி என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார்.

பிள்ளையவர்கள் எப்போதுமே தனக்குக் கிடைக்கும் வருமானத்தையெல்லாம் மாணாக்கர்களைப் பராமரிப்பதற்காகவே பெரும்பாலும் செலவு செய்பவராக இருந்திருக்கின்றார். குடும்பஸ்தராகிவிட்ட இவருக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாத நிலையில் அவரது 33-வது வயதில் மலைக்கோட்டை தெற்கு வீதியில் இவருக்கு ஒரு மெத்தை வீடொன்றை அருணாசல முதலியார் வாங்கித் தந்து ஆதரித்திருக்கின்றார். இதனைக் குறிப்பிடும் உ.வே.சா, "திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களென்று உலகமெல்லாம் கொண்டாடும் வண்ணம் செய்தது இந்த அருணாசல முதலியாருடைய உதவியே" என்று குறிப்பிடுகின்றார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சென்னைக்குச் சென்று அங்கு தமிழ் கற்றோரைச் சென்று சந்தித்து அவர்களுடன் அளவளாவி வரவேண்டும் என்று பெறும் ஆவல் கொண்டிருந்தார். அதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையவே சென்னைக்குச் சென்று அங்கு சில காலங்கள் தங்கியிருந்து பல தமிழ்க்கல்விமான்களுடன் அளவளாவும் வாய்ப்பும் பெற்று அவர்களுடனான நட்பையும் ஏற்படுத்திக் கொண்டு வந்தார். சென்னையில் இவரைச் சந்தித்த  பலரும் இவரது கல்வி ஞானத்தக் கண்டு வியந்து போற்றி இவரை ஆதரித்தும் வந்தனர். பின்னர் பெங்களூருக்கும் மீண்டும் சென்னைக்கும் சென்று வந்திருக்கின்றார். இததகைய பயணங்களின் போது தமிழ்ச்சங்கங்களின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் பல அறிஞர்களுடனான தொடர்பு இவருக்கு ஏற்பட்டமையையும் இந்த மீனாட்சி சுந்தம் பிள்ளை வரலாறு நூலில் விளக்கமாகக் காணமுடிகின்றது.

பிள்ளையவர்களின் சிறந்த கல்வி ஞானத்தைப் போற்றி கௌரவிக்கும் வகையில் சில கல்விமான்களும் செல்வந்தர்களும் அவருக்கு வித்துவான் என்ற பட்டத்தினை வழங்கினர். அது முதல் அவர் வித்துவான் பிள்ளையவர்கள் என்றேஅழைக்கப்பட்டு வரலானார். இந்த  வித்துவான் பட்டம் கிடைக்கப்பட்ட பின்னர் அவர் இயற்றிய நூல்கள்  அனைத்திலும் இவர் பெயருக்கு முன்னால் வித்துவான் என்ற சொல் சேர்ந்திருக்கும். முதலில் அப்படி பெயர் சேர்த்து வெளிவந்தது குசேலோபாக்கியானம் எனும் நூல்.

இவர் சைவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவராயினும் சிவ தீட்ஷை பெற்று சிவ நாமம் சொல்வதில் மனம் நிறைந்தவராக இருந்து வந்தாலும் பிற சாதியைச் சேர்ந்தோரையும்  பிற மதத்தைச் சேர்ந்தோரையும் போற்றி அரவணைத்து வருவதில் சிறிதளவும் பாரபட்சம் காட்டாதவராகவே திகழ்ந்திருக்கின்றார் என்பதை உ.வே.சா எழுதியிருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூலில் பரவலாகக் காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக 16ம் அத்தியாவத்தில் மாணவர்கள் வகை என்ற பகுதியில் குறிப்பிடத்தக்க சில விபரங்களை உ.வே.சா எழுதியிருக்கின்றார். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"இவர் தம்பால் யார் வந்து கேட்பினும் அவர்களுக்குப் பாடஞ் சொல்வார். இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு. பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிற சாதியினரும், கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு."

அவ்வகையில் குறிப்பிடத்தக்கவர் புதுச்சேரியிலிருந்து வந்து பாடங்கேட்ட சவராயலு நாயகரென்னும் ஒரு கிறிஸ்துவர். இவர் வீரமாமுனிவர் என்று அறியப்படும் பெஸ்கிபாதிரியார் இயற்றிய தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற கிறிஸ்துவ சமய தமிழ் நூல்களைப் பாடங் கேட்க  விருப்பங்க் கொண்டு பிள்ளையவர்களிடம் வந்தார். பிள்ளையவர்கள் இத்தகைய பிற மத நூல்களைப் பாடம் சொல்லக்கூடாது என்று வாதிட்டவர்களும் அக்காலத்தில் இருந்தனர். ஆனால் அதிலும் இருப்பது தமிழே என அவர்களுக்கு உரைத்து மாணவர்களின் தேவையறிந்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றார் பிள்ளையவர்கள். சவராயலு நாயகர் விஷயத்தில் பிள்ளையவர்களும் அவரை பரீட்சித்துவிட்டு மேலும் சில அடிப்படை நூல்களை பாடம் சொல்லி பின்னர் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் இன்னும் சில நூல்களையும் பாடஞ்சொல்லி நன்கு பயிற்சி தந்து அனுப்பி வைத்தாராம்.

தமிழ் உலகம் நன்கறிந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்களும் இவரிடம் தாம் படித்து வந்த பல நூற்களுக்கு விளக்கம் கேட்டு தனது ஐயங்களைத் தெளிந்து கொண்டார். பிள்ளையவர்களுடனான நட்பு வேதநாயகம் பிள்ளையவர்களுக்குப் பல காலம் தொடர்ந்தது என்பதையும் குறிப்பிட  வேண்டும்.

தொடரும்....


அன்புடன்
சுபா

Saturday, November 10, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 30




திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங் கேட்க வந்த உ.வே.சா மாணாக்கராக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விபரங்களைக் கொடுத்து அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கையின் சில பகுதிகளைச் சுருக்கமாக சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதில் இன்று திருவாவடுதுறை ஆதீனத்துடனான தொடர்பு எவ்வாறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு அமைந்தது என்பதை சிறிது கூறலாம் என நினைக்கின்றேன்.

பிள்ளையவர்களின் தந்தையார் சிவபக்தர்; அதே வழியில் சிவபக்தி கொண்டிருந்ததோடு ஆலய தரிசனங்கள் சென்று கண்டு வருவதிலும் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்தார் இவர்.சிவனை தினந்தோரும் நியமங்களின் படி பூஜிக்க விரும்பமும் கொண்டிருந்தார். அதனால் முறையாக தீட்சை பெற மிகுந்த ஆவல் எழுந்தது இவருக்கு. திரிசிரபுரத்திலிருந்தசெட்டிபண்டாரத்தையா என்பவர் தீட்ஷை செய்விக்க அது முதல் பிள்ளையவர்கள் முறையாக சிவபூஜையை செய்து வரலானார். பூஜைகளுடன் நூல்களைப் படித்து இறையுணர்வில் ஆழ்ந்திருப்பத்ல் மிக  விருப்பம் கொண்டவராக இருந்தார்.

அவ்வாறு படித்து வருகையில் திருவாவடுதுறையாதீனத்து வித்துவான் ஸ்ரீ கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருவானைக்காப்புப்ராணம் படிக்கும் வாய்ப்பும் இவருக்குஅமைந்தது. ஏனைய புராணங்களை விட இது முற்றிலும் வேறுபாட்டுடன் அமைந்திருப்பதைக் காணவே அவரது வேறு பிற வேறு நூல்களையும் தேடி வாசிக்கலானார். அதில் அமைந்துள்ள சைவ சித்தாந்த சாஸ்திர கருத்துக்கள் மனதைக் கவரவே மனம் அந்த ஆராய்ச்சியிலேயே சென்று கொண்டிருந்தது. அப்போது அவருக்கு இருபத்தியோரு வயது.

இதன் விளைவாக திருவாவடுதுறை ஆதீனம் செல்ல வேண்டும்; அங்குள்ள தேசிகர்களிடமும் பண்டிதர்களிடமும் பாடங்  கேட்க வேண்டும் என்ற பேராவல் இவருக்கு உருவாயிற்று. தன்னுடைய மாணவர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் புறப்பட்டு விட்டார். வழியில் காண்கின்ற தலங்களிலெல்லாம் வழிபாடு செய்து கொண்டே திருவாவடுதுறை ஆதீனம் வந்து சேர்ந்தார். இடையில் பட்டீச்சுரத்திலும் சில நாட்கள் இருக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்தப் பயணத்தில் இவர் அறிந்து கொண்ட பட்டீச்சுரத்து நல் உள்ளம் கொண்ட மக்களுடனான தொடர்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு முதுமை காலம் வரை நீடித்தது. இங்கு இருந்த போது பட்டீச்சுரம் ஸ்ரீ தேணுபுரீசுரர் மீது ஒரு அந்தாதியை  இவர் இயற்ற வேண்டும் என்று அன்பர்கள் கேட்டுக் கொள்ள இங்கே பட்டீச்சுரம் ஸ்ரீ தேணுபுரீசுரர் பழசைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றி அங்கே அறங்கேற்றமும் செய்தார்.

அது சமயம் திருவாவடுதுறை அதீனத்தில்வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் ஆதீனகர்த்தராக இருந்தார். இவரே இந்த மடத்தின் 14ம் பட்டத்து ஆதீனகர்த்தர். தமிழ் வடமொழி இரண்டிலும் தேர்ந்தவர். பிரசங்கம் செய்வதில் சக்தி வாய்ந்தவர் எனவும் பாடஞ் சொல்வதிலும் மிகவும் விருப்பம் உடையவர் என்றும் புகழ்பெற்றவர்.திருவாவடுதுறை மடத்தில் தற்சமயம் வரை சம்பிரதாயமாக கடித முறைகளில் உள்ள சட்ட திட்டங்கள்  அவர் புதுப்பித்து அறிமுகப்படுத்தியவையே. இப்பெரும் தேசிகரைக் காண வேண்டும் என்ற பேராவல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு இருந்தது.

ஆதீனத்தை அடைந்து தனது விருப்பத்தை அங்குள்ளோரிடம் தெரிவிக்கவே, தேசிகரை தரிசிக்க இவருக்கு அழைப்பு வந்தது. அவரை கீழே விழுந்து வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டு அவருக்காக இயற்றி வந்த சில செய்யுட்களையும் வாசித்துக் காட்டினார். அவற்றில் நாட்டம் கொண்ட தேசிகர் இவரது வரலாற்றை விசாரிக்க தன்னைப் பற்றி சுருங்க  விவரித்துக் கொண்டு நூல்களில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படித்தினார். தேசிகரும் இவர் நாட்டத்தைப் புரிந்து கொண்டு மடத்தில் இருந்து வர அனுமதி அளித்தார். காலை மாலை தேசிகரை சந்தித்துப்  பாடங் கேட்டு வந்தார் பிள்ளையவர்கள்.  அங்கு சில காலங்கள் இருந்து பின்னர் மீண்டும் திரிசிரபுரம் மீண்டார்.

இப்படித்தான் திருவாவடுதுறை ஆதீனத்தோடு பிள்ளையவர்களுக்குத் தொடர்பு உண்டாகிற்று. இத்தொடர்பு அவர் இறக்கும் தருவாயிலும் இருந்தது என்பதும் அவர் உயிர் பிரிந்ததும் இந்த திருவாவடுதுறை அதீனத்திலேதான் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

தொடரும்..

குறிப்பு: இப்பதிவில் குறிக்கப்படும் செய்திகள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு பாகம் 1 நூலில் இருக்கும் விஷயங்களின் அடிப்படையில் எழுதப்படுகின்றது.

டூலிப் வெங்காயங்கள் - அடுத்த வருடத்துக்காக ஆயத்தம்


இன்று என் தோட்டத்திலிருந்து ஏதும் மலர்கள் இங்கே வரப்போவதில்லை. குளிர் காலம் தான் ஆரம்பித்து விட்டதே!

அதிசயம் என்னவென்றால் குளிரிலும் கூட தாக்குப் பிடித்து நிற்கும் பைன் மரங்கள் போல சில செடி வகைகளும் கூட அதிகக் குளிரிலும் பனி கொட்டும் காலத்திலும் கூட விளைகின்றன என்பதே. ஒரு முறை ப்ளேக்ஃபோரெஸ்ட் தெற்குப் பகுதி நகரமான ப்ரைபெர்க் பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நடைப்பயணம் மேற்கொண்டோம். அப்போது அங்கே சில வகைச் செடிகள் அந்தக் குளிரிலும் கூட பூத்திருப்பதைப் பார்த்து வியந்தேன். அது தொடங்கி அவ்வகைச் செடிகள் சிலவற்றை குளிர்காலத்துக்கக நான் ப்ரத்தியேகமாக வாங்கி நட்டு வைப்பது உண்டு. ஆனால் இன்றைய பதிவு அதைப் பற்றியல்ல.

கடுமையான குளிர் காலம் நெருங்கும் முன்னதாகவே இங்கே தோட்டத்தை தூய்மை படுத்தி வசந்த காலச் செடிகளின் வருகைக்காக தயார் செய்ய வேண்டியது அவசியம். நான் டூலீப் செடிகளையும் க்ரோக்கெட்ஸ் எனப்படும் செடிகளின் பூக்களையும் விரும்புவதால் அவற்றின் வெங்காயங்களை வாங்கி இலையுதிர் காலத்தில் நட்டு வைப்பது வழக்கம்.



பொதுவாக ஒரு முறை நட்டு விட்டால் அவை வருடா வருடம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஆனாலும் சில காரணங்களுக்காக கோடை காலத்தில் இந்த வெங்காயங்கள் சேதப்பட்டிருந்தால் இவை மீண்டும் முளைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் முடிந்த வரை நான் ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தின் இறுதியில் புதிய டூலிப் வெங்காயங்களை வாங்கி நட்டு வைத்து விடுவேன்.



குளிர் மிக அதிகமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே இவை நடப்பட வேண்டும். அதனால் மழை நீர் பட்டு வேர்கள் முளைக்க ஆரம்பித்து விடும். குளிர் கடுமையாவதற்கு முன்னர் இலைகளைப் போட்டு மூடி வைத்து விடுவேன். டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களும் இங்கே கடுமையான குளிர் இருக்கும். குளிர் இவற்றை சேதப்படுத்தாமல் இருக்க பஞ்சு போன்று அமையும் இலைகள் உதவுகின்றன.



இந்த வருடம் புதிய கலவை வர்ணங்களில் சில வெங்காயங்களை நட்டு வைத்திருக்கின்றேன். ஏப்ரல் மாத இறுதியில் இவை வளர்ந்து பெரிதாகும் போது இம்மலர்களை பார்த்து ரசிக்கலாம்.

அன்புடன்
சுபா

Sunday, November 4, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 29


இளம் பிராயத்திலேயே தந்தையாரை இழக்கும் நிலையை அடைந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். ஒரு விரோதி ஆண்டில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சிவபதம் அடைந்தமையை நினைத்து அப்போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்  மனம் வருந்தி சில செய்யுட்கள் இயற்றினாராம். அவற்றில் உ.வே.சா அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாடல் இது.

"முந்தை யறிஞர் மொழி நூல் பலநவிற்றும்
தந்தை யெனைப்பிரியத் தான்செய்த - நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனு மப்பெயர்நிற் கேதகுமால்
ஈண்டேது செய்யா யினி "

தந்தையார் மறைவுக்குப் பின்னர் தொடர்ந்து அங்கேயே குடும்பத்தாருடன் இருந்து வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் காவேரி ஆச்சியென்னும் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்து வைத்தனர் அவ்வூரார். திரிசிரபுரம் சென்றால் தனது கல்வித்தேடலுக்கு அது உறுதுணையாக இருக்கும் என நினைத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மீண்டும் ஊரார் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு திரிசிரபுரம் வந்தடைந்தார்.

திரிசிரபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கல்வி கற்ற ஆசிரியர்கள் சிலர் இருந்தமையால் இவர் அவர்களைச் சென்றடைந்து பாடம் கேட்டு தனது தமிழ் புலமையின் ஆழத்தை விரிவாக்கிக் கொண்டிருந்தார். அவர்களில் குறிப்பாக

  • உறையூர் முத்துவீர வாத்தியார்
  • திரிசிரபுரம் சோமசுந்தரமுதலியார்
  • வீமநாயக்கன்பாளையம் இருளாண்டி வாத்தியார்
  • பாலக்கரை வீரராக செட்டியார்
  • கொட்டடி ஆறுமுகம் பிள்ளை
  • கற்குடி மருதமுத்துப் பிள்ளை
  • திருநயம் அப்பாவையர்
  • மருதநாயகம் பிள்ளை

ஆகியோர் அக்காலத்தில் திரிசிரபுத்த்திலும் அதன் அருகாமையிலும் இருந்த பிரபலமான வித்துவான்கள்.

ஒரு சமயம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் முறையாக பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த வேலாயுத முனிவரென்பவர் திரிசிரபுரம் வந்திருக்கின்றார். அச்சமத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அவர் பால் வந்து சில நூற்களைப் பெற்று ;சுயமாகப் படியெடுத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் வந்து பாடங்கேட்டுச் செல்வாராம்.

தண்டியலங்காரம் படிக்க வேண்டும்  என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் விரும்பினார். ஆனால் அச்சமயத்தில் அவ்வூரில் இந்த நூலை அறிந்து பாடம் சொல்லத் தகுதியானவர்கள் வேறெவரும் இருக்கவில்லை.  ஒரே ஒருவர், அவ்வூரில் உள்ள ஒரு பரதேசி, ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று  பிச்சைக் கேட்டு வருபவர். அவருக்குத் தமிழ் நூல்களில் பரிட்சயம் உண்டு என்றும் அதிலே தண்டியலங்காரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்றும் அறிய வர, அவரை அனுகி  தனக்குப் பாடம் சொல்ல முடியுமா எனக் கேட்டிருக்கின்றார். அந்த பரதேசியானவர் வேறு யாருக்கும் பாடம் சொல்லித் தந்த அனுபவம் இல்லாதவர். தாம் இருந்த மடத்தில் மட்டும் சில நூற்களைச் சேமித்து வைத்திருந்திருக்கின்றார். அதில் தண்டியலங்கார நூலும் இருந்திருக்கின்றது.

இந்த நூலைப் பெற்று பாடங்கேட்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அந்தப் பரதேசியானவர் வரும் நேரமாகச் சென்று அவர் பிச்சையெடுக்க வரும் நேரம் தெருத்தெருவாக அவருடனேயே பேசிக் கொண்டே சென்றும், அவருக்குப் பிரியமான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து  அவருக்குத் தேவைப்படும் வேளைகளில் அதனைக் கொடுத்தும், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் புத்தகத்தைப் பெற்று படியெடுத்துக் கொண்டு பாடமும் விளக்கமும் கேட்டு வந்தாராம். இப்படி பணிவுடன் தன்னோடு தொடர்ந்து வரும் இந்த இளைஞரைப் பார்த்த அப்பரதேசிக்கும் திருப்தி ஏற்பட்டிருக்கின்றது. இதனால் தன்னிடம் இருந்த மேலும் சில நூல்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அப்பரதேசி கொடுத்திருக்கின்றர.

இப்படி தமிழ்க்கல்வி கற்க எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சென்று பல்வேறு முயற்சிகள் செய்து தமிழ் இலக்கியங்களையும், பிரபந்தங்களையும் இலக்கணங்களையும் கற்று வந்திருக்கின்றார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.  மேலும் மேலும் கற்க வேண்டும் என விரும்புவோருக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார் இவர்.

தொடரும்..

அன்புடன்
சுபா

Saturday, October 27, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 28


மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் முடிந்த அளவு கிடைத்த அனைத்து தகவல்களையும் இணைத்து வெளியிட வேண்டும் என்ற உ.வே.சா அவர்களின் எண்ணம் நன்கு வெளிப்படுகின்றது. பல குறிப்புக்கள், சமகாலத்து நண்பர்களிடமிருந்தும் மற்ற இதர மாணாக்கர்களிடமிருந்தும் பெற்ற சிறு சிறு தகவல்கள், சிறு செய்யுள் குறிப்புக்கள் என கிடைத்த அனைத்து தகவல்களையும் பொக்கிஷமாக நினைத்து இந்த நூலில் வடித்திருப்பது தனிச்சிறப்பு. இதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் ஜாதகக் குறிப்பையும் உ.வே.சா விட்டு வைக்கவில்லை. இந்த நூலில் இணைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் ஜாதகக் குறிப்பின் பிரதியை இங்கே இணைத்திருக்கின்றேன்.



ஜாதகம் வாசிக்கத் தெரிந்தவர்கள் பார்த்து இந்த ஜாதகம் தொடர்பான உங்கள் குறிப்புக்களையும் இங்கே வழங்கலாமே.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த சில மாதங்களுக்குப் பின்னர் அதவத்தூர் என்ற ஊருக்கு அருகேயுள்ள சோமரசம்பேட்டை என்னும் ஊரில் உள்ளவர்கள் சிதம்பரம் பிள்ளையை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல எண்ணி மிகவும் வேண்டி அவரை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர் விரும்புவோருக்குத் தமிழ் பாடம் சொல்லி வந்ததுடன் அங்கே ஒரு பாடசாலையை அமைத்து குழந்தைகளுக்குக் கல்விச்சேவை செய்திருக்கின்றார் என்ற விஷயத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.  அக்கால கட்டத்தில் அவருக்கு மேலும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஐந்து வயதானதும் தன் தகப்பனார் நடத்தி வந்த அதே பள்ளியில் கல்வி கற்றிருக்கின்றார். பள்ளிப் பிராயத்திலேயே பலரும் புகழும் படி சிறந்த ஞாபகச் சக்தி பெற்றிருந்ததோடு செய்யுட்களைப் பொருளறிந்து ஆராயும் திறனையும் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார்.

தந்தையிடமே கல்வி கற்றமையால், தனியாக மேலும் பல பாடங்களை வீட்டில்தந்தையாரிடம் கற்று வந்ததோடு  நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் இளம் வயதிலேயே கற்று வந்திருக்கின்றார். மீண்டும் மீண்டும் எழுதி வைத்துப் பழகும் போது பாடங்கள் மனதில் நிலைத்துப் போவதை நம்மில் பலர் நமது அனுபவத்தில் உணர்ந்திருப்போம். அக்காலத்தில் அச்சு நூல்கள் பயன்பாடு இல்லாத நிலையில் இவர் தந்தையாரிடமே முறையாக ஏட்டில் எழுதப் பழகினார்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குத் தன் தந்தையாரிடம் பாடம் கேட்கும் அனைத்து நூல்களையும் தானே தனியாக ஏட்டில் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கின்றது.

செய்யுள் இயற்றும் திறமை இவருக்கு இருந்தமையால் இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றி வாசித்துக் காட்டுவாராம். பள்ளியில் படித்த  ஏனைய மாணக்கர்களை விடவும் இவரது கல்விக் கேள்வியும் ஞானமும் விரிவாக வளர்வதைக் கண்டு பலர் வியக்க,  இந்தச் செய்தி அயலூர்களுக்கும் எட்ட ஆரம்பித்திருக்கின்றது.  ஓய்வு நாட்களில் சிதம்பரம் பிள்ளை செல்கின்ற இடங்களுக்கு இவரையும் கூட்டிச் செல்வாராம். அங்கே தமிழ் பாடம் கேட்க விழையும் செல்வர்களுக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையே செய்யுள் கூறி அதற்குப் பொருளும் கூறுவாறாம். இப்படி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கல்வி ஞானம் என்பது இளம் வயதிலேயே மிக உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தமையும் அவரது கேள்வி ஞானம் பற்றி அருகாமையில் இருந்த ஊர்களில் இருந்தவர்கள் கூட அறிந்து வியந்து போற்றினர் என்ற தகவல்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூலில் உ.வே.சா அவர்கள் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார்.


தொடரும்....
சுபா

Friday, October 26, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 27


வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசித்த போது இந்த தமிழறிஞர் இயற்றிய அனைத்து நூல்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் தொகுப்பில் இணைத்து வைக்க முயற்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உறுதியானது. ஆக இந்தத் தொடரை எழுதும் பொதுதே அந்தப் பணியையும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனை வேறொரு தனி இழையில் தொடங்கலாம் என நினைத்திருக்கின்றேன். எத்தனை நூல்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளனவோ தெரியாது. சில நூல்கள அழிந்தும் இருக்கலாம். முயற்சி செய்தால் முதலில் ஒரு பட்டியலைத் தயாரித்து நூல்களைத் தேடும் பணியை நாம் தொடங்கலாம்.

சரி.. உ.வெ.சா மாணாக்கராக பிள்ளையவர்களிடம் சேர வந்த அந்த தினத்தையும் மாணாக்கராக தன்னை அவர் ஏற்றுக் கொண்ட நிகழ்வுகளையும் முந்தைய பதிவில் விவரித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி சில விஷயங்களை அறிமுகப் படுத்தும் நோக்கில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தந்தையார் சிதம்பரம்பிள்ளை தமிழ்க்கல்வி கற்றவர். இவர்களது குடும்பத்தினர் சைவ வேளாளர் சமூகத்தின் நெய்தல் வாயிலுடையான் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒரு கோத்திரமும் அதனைச் சார்ந்த சமூகத்தினரும் பற்றி பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசிக்கும் போது தான் அறிந்து கொள்ள முடிந்தது.இவர்கள் குடும்பத்தினர் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் கோயிலுக்குரிய முத்திரைக் கணக்கர்களுள் மீன முத்திரைப் பணிக்குரியவர்களாக இருந்தவர்கள் என்ற ஒரு செய்தியும் நமக்கு இந்த நூலில் கிடைக்கின்றது.

சிதம்பரம்பிள்ளையவர்கள் தேவார திருவாசகம், பெரிய புராணம், கம்பராமாயணம், கந்த புராணம், மேலும் பலவகையான பிரபந்தக்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றில் சிறந்த பயிற்சியுடையவராக அக்காலத்தில் திகழ்ந்தவர்.  தன்னிடம் கற்கின்ற மாணவர்களுக்கு அன்புடன் பாடம் நடத்தும் ஆசிரியராக அறியப்பட்டவர்.அத்துடன் சிறந்த சிவபக்தியும்  கொண்டவர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் கோயில் அதிகாரிகளுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் தோன்றவே கோயில் கணக்கர் பணியை விட்டு விட்டு தம் மனைவியுடன் மதுரையை விட்டுப் பிரிந்து வடக்கு நோக்கிச் சென்று திரிசிரபுரத்திற்கு மேற்கே காவிரி நதியின் தென்திசையிலுள்ள எண்ணெய்க் கிராமம் எனும் ஒரு கிராமத்தில் குடி பெயர்ந்தார்.

கல்வி கற்றோருக்குத் தான் செல்லும் இடமெல்லாம் சிறப்பாயிற்றே. எண்ணெய்க் கிராமத்து மக்கள் சிதம்பரம் பிள்ளையின் கல்வி ஞானத்தை அறிந்து அவருக்கு தங்குமிடம் தந்து உணவிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து ஆதரித்தனர். அப்படி அவ்வூரில் இருக்கையிலே சிதம்பரம் பிள்ளையவர்கள் அவரிடம் வந்து சென்று பாடம் கேட்டுச் செல்பவர்களுக்குப் பிரபந்தங்களையும் தமிழ் நூல்களையும் பாடம் சொல்லி வந்தார்.

அவரது கல்விச் சிறப்பும் அவரது அன்பான குணமும் மக்களைக் கவரவே பலர் வந்து அவரிடம் பாடம் கேட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் இவரது புகழ் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பரவியது. அருகாமையில் இருந்த அதவத்தூரென்னும் ஊரிலிருந்த பெரியோர் சிலர் அவ்வூரில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சிலகாலம் இருந்து தமிழ்ப்பாடங்கள் நடத்த வேண்டும் என்று கேட்க,  எண்ணெய்க் கிராமத்து மக்களிடம் உடன்பாடு பெற்றுக் கொண்டு அங்கு சென்று தமிழ்ப் பாடங்கள் சொல்லி வந்தார். பாடம் சொல்லி வருவது மட்டுமன்றி அவ்வூர் குழந்தைகளுக்கும் கணக்காயராக இருந்து  வர வேண்டும் என்று அவ்வூர் மக்கள் அன்புடன் கோரிக்கை விடுக்க அதனை ஏற்று அவ்வூரிலேயே கணக்காயராக இருந்து வந்தார். கணக்காயர் என்பது ஆசிரியர் என்பதன் ஒரு பழஞ்சொல் என்றே கருதுகின்றேன்.

இப்படி சிதம்பரம் பிள்ளையவர்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகையிலே அவருக்கு 6-4-1815ம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தம் குலதெய்வமாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுரரின் நினைவாக அப்பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் கணக்காயர் சிதம்பரம் பிள்ளையும் அவரது மனைவியும். உ.வே.சா இப்பகுதியை எழுதும் போது இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“.. தமிழ்நாடு செய்த பெருந்தவத்தால்.. ஒரு புண்ணிய குமாரன் அவதரித்தார். இக்குழந்தை பிறந்த வேளையிலிருந்த கிரக நிலைகளை அறிந்து இந்தக் குமாரன் சிறந்த கல்விமானாக விளங்குவான் என்றும் இவனால் தமிழ் நாட்டிற்குப் பெரும்பயன்  விளையும் என்றும் சோதிட நூல் வல்லவர்கள் உணர்த்தவே சிதம்பரம்பிள்ளை மகிழ்ந்து ”நம் குலதெய்வமாகிய  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசருடைய திருவருளினாலேயே இந்தச் செல்வப்புதல்வனை நாம் பெற்றோம்” என்றெண்ணி அக்கடவுளின் திருநாமத்தையே இவருக்கு இட்டனர்.

தொடரும்...


அன்புடன்
சுபா

Saturday, October 13, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 26


தான் யார் யாரிடம் பாடம் கற்றோம் என்ற விபரங்களையெல்லாம் உ.வே.சா சொல்லி விவரிக்க அவரிடம் நைடதத்திலிருந்து அவருக்குத் தெரிந்த ஒரு பாடலைக் கூறி விளக்கச் சொல்கின்றார் பிள்ளையவர்கள். இந்த மகாவித்துவான் முன்னிலையில் நடுங்கிக் கொண்டே கூறும் உ.வே.சா அவர்களை உற்சாகமும் தைரியமும் படுத்தி மீண்டும் ஒரு செய்யுளைக் கூறச் செய்து கேட்கின்றார் பிள்ளையவர்கள். மாணவர் தகுதியாணவர்தாம் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டிருக்கும் போல. நிகண்டை மனனம் செய்வது உ.வே.சாவுக்கு பயனளிக்கும் என்று ஆலோசனையும் கூறுகின்றார்.

பிறகு இவரை மாணவராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று உ.வே.சாவின் தந்தையார் வினவும் போது சிறிது தயக்கம் காட்டுகின்ரார். சில மாணவர்கள் முதலில் மிகுந்த ஆர்வத்துடன் வருவதும் பின்னர் சில நாட்கள் சென்று வருவதாகக் கூறிச் சென்று விடுவதும் மீண்டும் வந்து பாடங்களைத் தொடராமல் போவதுமாக தனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை வித்துவான் மீனாட்ட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்~ கூறுகின்றார்கள். இது உ.வே.சாவிற்குத் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாரோ என்ற மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அந்த நிமிடத்து தனது மனப்போக்கினையும் நிகழ்வையும் என் சரித்திரம் நூலில் இப்படிப் பதிகின்றார் உ.வே.சா.

"அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கி விட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விஷயங்களையெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை என் பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம்  இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான்
உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது
சொன்னேன்; வேண்டிக் கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது."

இதனை வாசித்த போது என் மனதில் இப்படியொரு தந்தை அமைய உ.வே.சா பெரும் தவப்பயன் செய்திருக்கின்றார் என்றே உடன் தோன்றியது. இந்த நிகழ்வு மாத்திரமல்ல. அவரது சிறு பிராயத்திலிருந்து இறுதி வரை பற்பல சூழல்களில் உ.வே.சாவின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கின்றார் வெங்கடசுப்பையர். உ.வே.சாவின் தெளிந்த சிந்தனை அவரது வாழ்க்கைப் பாதையை அமைத்தது என்றால் அந்தப் பாதையை அமைக்க உறுதுணையாக இருந்தது வெங்கடசுப்பையரின் அர்ப்பணிப்பு என்பதில் சந்தேகமில்லை.

இவர்களின் தீவிரத்தைப் பார்த்த பிள்ளையவர்களின் முகத்திலே மலர்ச்சி. இப்படி ஒரு மாணவர் நிச்சயமாக கவனம் சிதறாமல் தமிழ்க்கல்வியில் நிறைந்த ஈடுபாட்டுடன் நிச்சயம் நல்ல நிலையை அடைவார் என்ற நம்பிக்கை மனதில் வந்திருக்க வேண்டும். அவரை மாணவராக ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்து தங்குவதற்கும் உணவிற்கும் எப்படி ஏற்பாடு என்று வினவுகின்றார்.

உ.வே.சாவின் தந்தையார் பிள்ளையவர்களையே இவரை முழுதுமாக கவனித்துக் கொள்ள வேண்டிக் கேட்க திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் இருக்கும் காலத்தில் முழுதுமாக உ.வே.சாவைப் பராமரித்துக் கொள்வதாக உறுதியளிக்கின்றார் பிள்ளையவர்கள். ஏனைய காலங்களில் அவர் சொந்தங்களின் துணையில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்வது ஏற்புடையதாக இருக்கும் என்று கூறி தனது நிலையை விளக்குகின்றார் பிள்ளையவர்கள். பின்னர்,

"பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்.” 

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அஸ்தமன சமயமாகி விட்டமையால் நாங்கள் மறு நாட்காலையில் வருவதாக விடை பெற்றுக் கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்."

உ.வே.சாவின் விளக்கக் குறிப்புக்களின் வழியாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை அறிந்து கொள்கின்றேன். அவரைப் பற்றிய பரவலான தகவல்கள் கிடைப்பது அறிதாகவே இருக்கின்றது.  என் சரித்திரம் மட்டுமன்றி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு பாகம் 1ல் இவரைப் பற்றி ஆழமான பல விவரங்களை நான் அறிந்து வருகின்றேன். அதனை இங்கு தேவைப்படும் பதிவுகளில் பகிர்ந்து கொள்வதும் நலம் பயக்கும் என்று நான் கருதுவதால் அவற்றை அவ்வப்போது குறிப்பிடவும் நினைத்திருக்கின்றேன்.

மாணாக்கர்களிடம் பிள்ளையவர்கள் எவ்விதம் அன்பு காட்டுவார் என்பதை  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு பாகம் 1ல் உ.வே.சா ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின் யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவரகளை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்து வந்தது. அதனால், பாடங்கேட்கவரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு  அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னிலையிலும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவி செய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர் பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது. பக். 106-107."

இதனை வாசித்து என் மனம் நெகிழ்ந்தது.  இப்படி ஒரு புலவர் பெருமானைப் பற்றி அறிந்து கொள்ளும் போது நமக்கு வழியாட்டியாகவும் அமையத்தக்கவர் இவர் என்றே என் மனம் உணர்த்துகின்றது.


தொடரும்..

சுபா

Thursday, October 11, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 25


தற்காலத்தில் கல்லூரிகளில் இணைவதற்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் கல்வி கற்று பட்டம் பெறவும் அடிப்படைத் தகுதிகளை நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றனர். இதற்கு நேர்மாறான நிலைதான் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கின்றது

ஒரு ஆசிரியரிடம் மாணவராக இணைவதற்கு அம்மாணவர் தன்னை தகுதி படைத்தவராக தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவரது ஒழுக்க நெறி அமைந்திருக்க வேண்டும். கல்வி ஞானம் இருப்பதுவும் கல்வியின் பால் ஆழ்ந்த வேட்கை இருப்பதையும் ஆசிரியருக்கு இம்மாணவர் நிரூபித்துக் காட்டவும் வேண்டும்.  இந்த மாணவர் உண்மையான நாட்டம் கொண்டிருக்கின்றார் என்று அறிந்த பின்னர் மட்டுமே மாணவராக ஒருவரை ஏற்றுக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாக இருந்திருக்கின்றது என்பதை என் சரித்திரம் நூலின் வழி தெரிந்து கொள்கின்றோம்.

முதன் முதலாகப் பார்க்கும் பொழுது, நெடுநாளாகக் காத்திருந்த உபாஸகன் போல இருந்த தனக்கு காட்சியளித்த ஆசிரியர் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முகத்திலேயே உ.வெ.சா அவர்களின் முழு கவனமும் ஒன்றித்துப் போயிருந்தது என்பதை முந்தைய பதிவில் விவரித்திருந்தேன். ஆசிரியரைப் பார்த்த பின்னர் அவர் தம்மை தனது மாணாக்கர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வாரா என்ற ஐயம் உ.வே.சாவுக்கு இல்லாமலில்லை.

தன்னைப் பார்க்க சில புதியவர்கள் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டதும் இவர்களைப் பார்க்க வருகின்றார் பிள்ளையவர்கள். வந்திருந்த இருவரையும் அவர்கள் பெயர்களைக் கேட்டறிந்து அவர்கள் வந்ததன் நோக்கம் கண்டறிந்த பின்னர்  உ.வே.சா அவர்களிடம் விசாரிக்கின்றார்.  அதனை உ.வே.இப்படிக் குறிப்பிடுகின்றார்.

”பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். ”

இதுவே பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் பேசிய முதல் பேச்சு. அது அவருக்கு மனதில் நன்கு நிலைத்திருந்தமையால் அப்படியே என் சரித்திரம் நூலில் பதிந்திருக்கின்றார்.

தன்னை விட வயதில் சிறியவாராகினும் தன்னிடம் பாடம் கேட்க வந்திருக்கின்றார் என்று தெரிந்த பின்னரும் கூட ”நீர்” என்று குறிப்பிட்டு மரியாதையாக ஒருவரை அழைக்கும் இந்தப் பண்பு என் மனதை மகிழ்விக்கின்றது. பல ஆசிரியர்கள் தங்களிடம் கல்வி கற்கின்ற மாணவர்களை இவ்விதம் மரியாதை அளித்து மதித்து கூப்பிடும் வழக்கம் இல்லமல் இருப்பதை வழக்கத்தில் காண்கின்றோம். ஆரம்ப நிலைப்பள்ளிகள் மட்டுமில்லாது கல்லூரிகளில் கூட இந்த நிலை இருக்கின்றது.  இதனைத் தவிர்த்து மாணாக்கர்களிடம் அன்பும் நம்பிக்கையும் மரியாதையும் காட்டும் போது மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பால் ஏற்படும் அன்பு அளவிட முடியாதது என்பது உண்மை. முன்னர் எனது ஓராண்டு கால ஆசிரியர் பணியிலும் இந்த அன்பினை நான் அநுபவித்திருக்கின்றேன்.

தொடரும்....

சுபா

Tuesday, October 2, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 24


பதிவு 24

என் சரித்திரம் நூலில் ஒரு சில பதிவுகளை வாசிக்கும் போது நான் என்னை மறந்து விடுவதுண்டு. ஒரு நூலை வாசிக்கின்றேன் என்பதை விட அந்த நூலில் உள்ள கதாபாத்திரமாக நானே மாறி அந்த உணர்வுகளை உ.வே.சாவின் மன நிலை போலவே உணர்ந்து அந்த நிலையில் அது துக்கமோ, கவலையோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ, அல்லது நடுக்கமோ.. எல்லா வித உணர்வுகளையும் லயித்து உணார்ந்து போகின்றேன். என்னைப் போலத்தான் வாசித்த பிறருக்கும் கூட அனுபவம் அமைந்திருக்கலாம். இது உ.வே.சாவின் எழுத்து நடைக்கு அமைந்துள்ள தனிப் பெரும் சிறப்பு என்று மட்டுமே சொல்லத் தோன்றுகின்றது.

இன்னூலில் சில குறிப்பிட்ட பதிவுகள் அவற்றை வாசித்த பின்னர் அடுத்த சில நிமிடங்கள் என்னை அடுத்த பக்கங்களை வாசிக்க விடாமல் அவ்விவரணையின் பின்புலமாக அமைந்திருக்கின்ற நிகழ்வுகளிலேயே அழுந்திப் போய்   இருக்கச் செய்திருக்கின்றன. அத்தியாயம் 27ல் அத்தகைய ஒரு அனுபவம் அமைந்தது எனக்கு.

நாம் நெடுநாள் காத்திருந்து காத்திருந்து அவரைப் பார்போமா, பார்க்க வாய்ப்பு அமையுமா, அம்மனிதருடன் நமக்குள்ள உறவு தொடருமா, அவரை நெருங்கி அவரது ஆதரவில் இருக்கும் நிலை அமையப் பெருவோமா, அவரது கவனம் நம் மேல் விழுமா, அவருக்கு அன்னியோன்னியமானவர்களில் ஒருவராக நான் ஆவோமா என பல சந்தேகங்களும் தீவிர ஆர்வமும் சிந்தனையை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில் அம்மனிதரை நாம் சந்திக்க நேர்ந்தால்.. அது ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னான நாளாகத்தானே அமையும்? இப்படி ஒரு சந்தர்ப்பம் நம்மில் பலருக்கும் நமது வாழ்க்கையில் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சேர்ந்து பாடம் கேட்டால் மட்டுமே தனக்கு தமிழ்க்கல்வியில் தான் தேடிக் கொண்டிருக்கும் நிலையை அடைய முடியும் என்பதை மனதில் மிக மிக ஆழமாக பதிந்து கொண்டு விட்டார் உ.வே.சா என்பதனை முந்தைய பதிவுகளில் விவரித்திருந்தேன். அவரைப் பார்க்கச் சென்ற அந்த நாள் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒரு நாள் தான் என்பதை அத்தியாயம் 27 அழகாகக் காட்டுகின்றது. அந்த ஒவ்வொரு கணமும் அதன் இயல்புகளும், காத்திருந்த வேளையில் உள்ள மன நிலையும், இவர் தானா அவர் என வேறொருவரை நினைத்து மயங்கிய நிலை, பின்னர் அவரைப் பார்த்ததும் அவரை கண்களால் முழுதாகப் பார்த்து அவரை மனதிற்குள் பதிந்து வைத்து கொண்ட தருணங்கள் அனைத்துமே மிகச் சுவையான பகுதிகள். இவற்றை ஒரு முறைக்கு இரண்டு முறை வாசித்து நானும் மகிழ்ந்தேன்.

முதற்காட்சி என்று தலைப்பிட்டு இப்பகுதியை விவரிக்கின்றார் உ.வே.சா. அவரது அத்தருணத்து உணர்வின் வெளிப்பாடாக அமைந்த எழுத்தாக்கத்தை நான் விளக்குவதை விட அவர் எழுத்திலேயே வாசிப்பது தானே தகும்.

"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி யடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர் பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கி விட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்து விட்டன."

தொடரும்...
சுபா

Sunday, September 30, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 23


பதிவு 23

சென்ற பதிவில் வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் நாகப்பட்டின புராணம் இயற்றிய பின்னர் நாகையிலிருந்து புறப்பட்டு மாயூரம் வந்தடைந்த செய்தியறிந்து அவரை நேரில் சென்று காண உ.வே.சா அவர்களின் குடும்பத்தினர் புறப்பட செய்த ஆயத்தங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். உறவினர்களையும்  தமக்கு உதவி செய்த செல்வந்தர்களையும் தமிழாசிரியர்களையும் சந்தித்து இந்த விபரங்களைத் தெரிவித்து ஆசி பெற்றுக் கொண்டு இறுதியாக கருவுற்றிருந்த தாயாரை  உத்தமதானபுரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தந்தையும் மகனும் மட்டும் மாயூரம் வந்து சேர்ந்தனர். மாயூரம் வருவதற்குக் கையில் பணமில்லாது இருந்த போது தந்தையாரின் நண்பர் சாமு மூப்பனார் என்பவர் அளித்த தொகையைக் கொண்டு பிரயாணம் மேற்கொண்டு மாயூரம் வந்தடைந்தனர். மாயூரத்திலே தான் இவரது சிற்றப்பாவும் சின்னம்மாவும் இருந்தனர். ஆகையால் தங்கிக் கொள்ளவும் உணவிற்கும் வழி இல்லையே என்ற கவலை இல்லாமல் போயிற்று.

உ.வே.சாவின் மனதில் தனது நெடுநாள் ஆசைகள் நிறைவேறப்போகும் நாளை நினைத்து நினைத்து ஆனந்தம் சூழ்ந்திருந்தது. மாயூரம், வந்த நாள் முதல் மாயூரத்தின் வேறு எந்த விஷயங்களும் அவரது மனதை கவர்வதாக இல்லை. மனம் முழுதும் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைக் காணப்போகும் தருணத்தை எதிர்பார்த்து அந்த எண்ணங்களிலேயே லயித்திருந்தது. இவர்கள் மாயூரம் வந்த சமயத்தில் அந்த ஊரில் நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் தான் இருந்தார். ஆனால் அவரையும் கூட சென்று சந்திக்க வேண்டும் என்ன எண்ணம் தோன்றாமல் முழு மனதும் தனக்கு வரப்போகும் தமிழ் ஆசானைப் பற்றியதாகவே ஆக்ரமித்திருந்தது உ.வே.சாவுக்கு. இதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பல நாட்களாக நினைந்து நினைந்து எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப் போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான் அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடி வைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்; மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு பொருளிலும் செல்லவில்லை."

என் சரித்திரம் எழுதத்தொடங்கிய 80 வயதிலும் கூட இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் மனதிலே அழியாத ஓவியங்களாக நிலைத்திருந்தன என்பதனை அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் விளக்கும் இந்தத்தன்மையினால் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு மாணவருக்கு தனது ஆர்வம் எதை நோக்கியதாக அமைந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானதும் அவசியமான ஒன்றும் கூட. பிறர் கூறும் வழிகளை விட தனது அறிவும் சிந்தனையும் ஆர்வமும் எந்தத் துறையில் ஊன்றி ஆழமாகப் பதிந்திருக்கின்றதோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதனில் ஈடுபடுவது மனதிற்கும் முழுமையான தொழிற் வாழ்விற்கும் நிறைவளிக்கும் தன்மையினதாக அமையும்.

தற்காலத்தில் இந்தெந்த துறைகள் வருமானம் தரக் கூடியனவாக இருக்கும் என்ற எண்ணத்தில் அந்தத் துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கல்வி கற்று உத்தியோகம் பெறுவது சிறப்பு என நினைக்கும் மனப்போக்கினைப் பரவலாகக் காண்கின்றோம். குழந்தைகள் விருப்பம் என்ன? எந்தத் துறையில் அவர்கள் ஆர்வம் நிறைந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முனைவதை விட தங்கள் விருப்பம் என்னவோ அதனை குழந்தைகளின் மனதில் விதைத்து அதனை அவர்களின் விருப்பமாக மாற்றிப் பார்க்க நினைக்கும் பெற்ரோர்களே அதிகம். பெற்ரோர்களின் எண்ணமும் அவர்களின் நிலைப்பாடும் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைய வேண்டும் என்பதை விடுத்து  குழந்தைகளின் வாழ்க்கையயே நிர்ணயிர்ப்பவர்களாக இருப்பதில் நோக்கம் கொண்டவர்களாக இருப்பதைக் காண்கின்றோம். இது குழந்தைகள் தங்கள் சுயம் என்பதையே இழந்து பெற்றோர் காட்டும் வழியில் மட்டுமே நடக்கின்றவர்களாக மாற்றி அமைத்து சுய கருத்துக்கள் அற்றவர்களாக அவர்களை ஆக்கி விடுகின்றது.   இதனால் பிற்காலத்தில் தனது சுய தேடுதல் ஆரம்பிக்கும் போது மனதில் ஆழமான வேதனையும், நிராசையையும் மனம் லயிக்காத தொழில் வாழ்க்கையும் அமைந்து விடுவதை தவிர்க்க இயலாது.

பிறருக்காகத் தேர்ந்தெடுத்து நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் இவ்வகைக் கல்வி மனதிற்கு முழுமையான திருப்தியை வழங்கி விடுவதில்லை. நாம் செய்யும் தொழிலானது மனதிற்கு மகிழ்ச்சியைத்  தருவதாக அமைந்திருப்பதும் மிக அவசியம். நம்மில் ஒவ்வொருவரும் ஒரு நாளின் எல்லா முக்கிய நேரங்களையும் நமது தொழிலுக்காகத் தான் செலவிடுகின்றோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்ற நமது தொழில் வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதை விட்டு மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பதாகவும் சிந்தனை வளர்ச்சியைத் தருவதாகவும் அறிவு மேம்பாட்டைத் தூண்டிக் கொண்டே இருப்பதாகவும் அமையும் போது  வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக அமைகின்றது.

உ.வே.சாவின் மாணவர் பருவத்தில் அவரது சுற்றத்தார் பலரது விருப்பங்கள் இவர் இவ்வழியில் செல்லவேண்டும் அவ்வழியில் செல்ல வேண்டும் என்று அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டுதானிருந்தது. தமிழ்க் கல்வி ஒன்றே தனக்கு மனதிற்கு நிலையான இன்பமும் நிறைவும் தரக்கூடியது என அவர் உறுதியாக இருந்தார்.

உ.வே.சா எழுத்துக்களிலேயே அவரது மன நிலையை வாசிப்போமே..!

"ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான்  தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும் அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் ஸம்ஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண பாரத பாகவத காலக்ஷேபம் செய்து ஸம்ஸ்கிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீஷ் படித்து விருத்திக்கு வர வேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன் வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன் பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால் அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத் தமிழ் காத்திருந்தது."

தொடரும்..

சுபா

Saturday, September 22, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 22


பதிவு 22

தனக்கு ஒரு சிறந்த ஆசிரியர் அமையப்போகின்றார் என்ற நம்பிக்கை மனதில் வந்தவுடன் உ.வே.சா அவர்களின் கற்பனைக் கோட்டை அந்த ஆசிரியரின் வடிவத்தை அவரது மனதிலேயே செதுக்கி வைத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டது. அவரோடு தாம் பழகப்போகும் நாட்கள், அத்தருணங்கள், ஆசிரியருடன் தான் கழிக்கும் பொழுதுகள், கற்பனை நிகழ்வுகளை எல்லாம் அவர் மனம் கனவு காண ஆரம்பித்து விட்டது.  இந்தப் பகுதியை மிக அழகாகக் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

"உத்தமதானபுரம் பள்ளிக்கூட உபாத்தியாயராகிய சாமிநாதையர் முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் வரையில் யாவரும் அவ்வப்போது சொன்ன விஷயங்களால் என் மனத்துக்குள்ளே பிள்ளையவர்களைப் போல ஓர் உருவத்தைச் சிருஷ்டி செய்து கொண்டேன். ஆசிரியர்களுக்குள் சிறந்தவர், கவிகளுக்குள் சிகாமணி, குணக் கடல் என்று அவரை யாரும் பாராட்டுவார்கள். அவர் எனக்குப் பாடம் சொல்லுவது போலவும், நான் பல நூல்களைப் பாடம் கேட்பது போலவும், என்னிடம் அவர் அன்பு பாராட்டுவது போலவும் பாவனை செய்து கொள்வேன்; கனாவும் காண்பதுண்டு."

இக்கனவு நனவாகிப் போகாமல் பலித்தது. இதற்கு உ.வே.சாவின்  மன உறுதியும், உள்ளார்ந்த ஆர்வமும் இறைவனின் கருணையும் தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

இந்த விஷயங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் நாகபட்டினம் சென்று அங்கேயே தங்கியிருந்து  நாகபட்டின புராணம் இயற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதை இன்னூலில் உள்ள குறிப்பால் அறிகிறோம். இந்த புராணம் எழுதும் பணி சிறப்புற முடிந்து அவர் மாயூரம் திரும்புகின்றார் என்ற செய்தியை உ.வே.சா குடும்பத்தினர் கேள்வியுற்றனர். இதுவே அவரைச் சென்று காண தக்க தருணம் என்னும் எண்ணம் உதிக்க செங்கணத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகினர்.

கல்விக்காகவும் பணிக்காகவும் ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்வது என்பது இப்போது மட்டும் உள்ள வழக்கமல்ல இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரும் பலர் தங்கள் வாழ்க்கை தேவைகளுக்க்காக ஆங்காங்கே செல்ல நேரிடுவது வழக்கமாகத்தான் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.

இப்படி செங்கணத்திலிருந்து புறப்பட்ட உ.வே.சா குடும்பத்தினர் நேராக மாயூரம் செல்லவில்லை. உறவினர், முன்னாள் ஆசிரியர், ஆதரித்து வந்தோர் ஆகியோரையெல்லாம் சந்தித்து  வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இவ்வாறு உ.வே.சா மகாவித்துவானிடம் படிக்கப்போகின்றார் என்று சொல்லி ஆசி பெற்றுச் சென்ற விவரத்தையும் காண்கின்றோம். செங்கனத்திலிருந்து புறப்பட்டு குன்னம் சென்று பின்னர் அரியலூர் சென்று அங்கே தனது முதல் ஆசிரியர் சடகோபையங்காரிடமும் ஆசி பெற சென்றிருந்தார் உ.வே.சா. அங்கே நடந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிடுவது தகும் என்று கருதுகிறேன்.

ஆசிரியர் சடகோபையங்காரிடம் ஆசி பெற சென்றிருந்த நாளில் அவர் வீட்டில் ஒரு நூலை ஏதேச்சையாகக் காண்கின்றார். அதனை எடுத்து வைத்துப் பார்க்கும் போது அது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல் என்பது தெரியவருகின்றது. அதனை இப்படி குறிப்பிடுகின்ரார்.

"அப்புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக்காரோணப் புராணமாக இருந்தது. நான் பிள்ளையவர்களுடைய புலமையைப் பற்றிக் கேட்டிருப்பினும் அவர் இயற்றிய நூல் எதனையும் பார்த்ததில்லை. அப்புராணம் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததை ஒரு பெரிய நன்னிமித்தமாக எண்ணினேன். அதில் ஒவ்வோர் ஏடாகத் தள்ளிப் பார்த்தேன்; சில பாடல்களையும் படித்தேன். யாப்பிலக்கணத்தை நன்றாகப் படித்து முடித்த சமயமாதலால் அச்செய்யுட்களின் அமைப்பையும் எதுகை மோனை நயங்களையும் ஓசை இன்பத்தையும் தெரிந்து அனுபவித்து மகிழ்ந்தேன். பலவிடங்களில் திரிபுயமகங்களும் சித்திர கவிகளும் அதில் அமைந்திருந்தன. “இந்த நூலையும் இது போன்ற பல நூல்களையும் இயற்றிய மகா புருஷரிடம் படிக்கப் போகிறோம்” என்று எண்ணி எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன்."

அரியலூரிலிருந்து புறப்பட்டு கீழைபழுவூர் வந்து அங்கே செல்வந்தராகிய சபாபதிப்பிள்ளை அவர்களைச் சந்தித்து அங்கே ஒரு வாரம் தங்கியிருந்தனர். அவ்வேளையில் திரு.சபாபதிப்பிள்ளையவர்கள் தஞ்சை வாணன்கோவை மூலமுள்ள புஸ்தகத்தையும் வேறு சில புஸ்தகங்களையும் உ.வே.சா வுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த நூல்களை சில நாட்களிலேயே வாசித்து முடித்தார். பயணத்தின் போதும் கிடைக்கின்ற நூல்களை வாசிப்பதில் இவருக்கு அலுப்பு இருக்கவில்லை. எதையும் தள்ளிப் போடாமல் கிடைக்கும் நூல்களையெல்லாம் வாசித்து தனது புலமையை நாளுக்கு நால் அதிகரித்துக் கொண்டே வந்தமை தெளிவு. அங்கிருந்து புறப்பட்டு உத்தமதானபுரத்திற்கு வந்து சேர்கின்றனர். இந்த சமயத்தில் உ.வே.சா அவர்களின் தாயார் கருவுற்றிருந்தமையால் உத்தமதானபுரத்திலேயே அவரை விட்டு விட்டு தந்தையாரோடு மாயூரம் புறப்படுவது என ஏற்பாடாகியது.

தொடரும்....

குறிப்பு: இப்பகுதியில் கையாளப்பட்டுள்ள குறிப்புக்கள் 26ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

Sunday, September 16, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 21


பதிவு 21

ஏதோ ஒரு விஷயத்தில் ஆவலோடும் ஆர்வத்துடனும் இருக்கும் சமயத்தில் அந்த ஆர்வத் தீயில் எண்ணெய் வார்ப்பது போல மேலும் மேலும் நம் கவனத்தைத் தாக்கும் செய்திகளையே கேட்கும் வாய்ப்பு எழுந்தால் அந்த விஷயத்தின் பால் உள்ள தீவிரம் நிச்சயமாகக் கூடும்.  மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் சென்று சேர்ந்து பாடம் கேட்பதுவே உ.வே.சாவின் தமிழ் தாகத்திற்கு சரியான தீர்வு என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேச்சுக்கள் நிகழ்ந்தாலும் விருத்தாசல ரெட்டியாரின் ஆர்வமும் இதே போக்கில் செல்ல நேர்ந்த போது வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சென்று பாடம் கேட்டே ஆக வேண்டும் என்னும் எண்ணம் உ.வே.சா மட்டுமன்றி அவரது தந்தைக்கும் தீவரமாகி உறுதியானது.

பாடம் சொல்லிக் கொண்டே விருத்தாசல ரெட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்களைப் பற்றி குறிப்பிடுவதை உ.வே.சா இப்படிச் குறிப்பிடுகின்றார்.

"திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக் காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம் போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புஸ்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார்."

இதுவரைப் பார்த்திராத ஒரு கல்விமானின் மேல் விருத்தாசல ரெட்டியார் வைத்திருந்த மதிப்பும் பண்பும் மனதைத் தொடுகின்றன. என்றாவது ஒரு நாள் காண்போம். அப்போது தனது ஐயங்களைத் தெளிவு செய்து கொள்வோம் என்ற நம்பிக்கையில் ஏட்டுச் சுவடியில் தனது சந்தேகங்களுக்கான குறிப்பை விருத்தாசல ரெட்டியார் எழுதிக் கொண்டே வந்திருக்கின்றார் என்ற விஷயத்தையும் இந்தக் குறிப்பின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

உ.வே.சா மட்டுமின்றி பல்வகை சிறந்த பண்புகளும் கல்வியின் மேல் தீராத ஆர்வமும் கொண்ட பல மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதாலேயேயும் கூட "என் சரித்திரம்" கல்வி கற்கும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுக்கும் சிறந்ததொரு  வழிகாட்டியாக அமைகின்றது என்பது எனது திடமான எண்ணம்.

அவ்வப்போது பிள்ளையவர்களைப் பற்றி விருத்தாசல முதலியார் வழங்கும் பிரஸ்தாபங்கள் உ.வே.சா வின் ஏக்கத்தை அதிகரித்து எப்போது அந்த மகானைக் காண்போம் என்ற எண்ணத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. பிள்ளையவர்களிடம் சென்று சேர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று தனது மனதில் இருந்த ஆசைகளையும், அதற்காக தான் கயிறு சார்த்திப் பார்த்த விஷயங்களையும் விருத்தாசல ரெட்டியாரிடம் பகிர்ந்து கொண்ட போது அவரது ஆசை நியாயமானது என்பதைக் குறிப்பிட்டு விருத்தாசல ரெட்டியார் கூறுவதை இப்படி குறிப்பிடுகின்றார் உ.வெ.சா.

"இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடம் கேட்கலாம்; உமக்குத் திருப்தி யுண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். "

செங்கணத்தில் அப்போது உ.வே.சா குடும்பத்தினர் விருத்தாசல ரெட்டியாரின் ஆதரவில் இருந்து வந்தனர். தம்மால் இயன்ற அளவிற்கு உ.வே.சா குடும்பத்தினரை ஆதரித்து வந்ததோடு உ.வே.சாவிற்குப் பாடமும் சொல்லிக் கொடுத்து அவரது வாழ்வில் ஒரு கால கட்டத்தில் ஒளியேற்றி வைத்தவர் விருத்தாசல ரெட்டியார். இப்படி ஒரு ஆதரவும் அன்பும் கொண்ட மனிதர்களை இப்பொழுது எங்கு தேடினும் கிடைப்பது மிக அரிது.மகேசன் சேவை மக்கள் கல்வியை வளர்த்தல் என்ற பண்பு கொண்ட இவ்வகை மனிதர்களை நினைத்துப் போன்ற வேண்டியதும் நம் கடன்.

"என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற் கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தை விட்டுப் புறப்படச் சித்தமாயினர்."

தொடரும்..

குறிப்பு: இப்பகுதியில் கையாளப்பட்டுள்ள குறிப்புக்கள் 25ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

Saturday, September 15, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 20


பதிவு 20

சில குறிப்பிட்ட நூல்களை நாம் பல காலமாகத் தேடிக் கொண்டிருப்போம்.திடீரென்று யார் வழியாகவோ அந்த நூல் நமக்குக் கிடைக்கும். அது நமக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடும். அப்படித்தானே தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்திற்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூல் கிடைத்தது.

நமக்குப் பிடித்த சில விஷயங்களை நாம் மிகக் கடினமான விதிகளையும் மேற்கொண்டு அதனை அடைய முயற்சிக்கின்றோம். பலன் சாதகமாக அமைந்தால்  முயற்சியும் அதற்கான நமது உழைப்பும் அர்த்தமுள்ளதாகிப் போகின்றது. முதலில் ஒரு குறிக்கோள் மனதில் இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கையின் பலன் தான் யாது? அடைய வேண்டிய விஷயம் அதனை அடையும் வழி ஆகியவை தெளிவோடு இருக்கும் போது தான் நாம் அமைத்துக் கொள்ளும் பாதையும் வெற்றியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

உ.வே.சாவின் கனவும் குறிக்கோளும் தமிழ்க் கல்வி என்ற ஒன்றே. அதனை அடைய, தனது ஐயங்களுக்குத் தெளிவைப் பெற அவர் வெவ்வேறு நூல்களைத் தேடித்தேடி அவற்றைப் பெற்று, அன்னூல்களைக் கற்றோரிடம் பாடம் கேட்டு அதில் கிடைக்கும் தெளிவில் மனம் அமைதியுற்று பின்னர் மீண்டும் எழும் ஐயங்களுக்காகப் புதிய நூல்களைத் தேடுவதும் தகுந்த ஆசிரியரைத் தேடுவதும் என்ற நிலையிலேயே அவரது நிலை சென்று கொண்டிருந்தது.

விருத்தாசல ரெட்டியாரிடம் இருந்த  ஒரு திருக்குறள் நூலை உ.வே.சா படிக்க ஆரம்பித்திருந்தார். தன்னிடமும் ஒரு திருக்குறள் நூல் இருந்தால் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்று வாசிக்க உதவியாக இருக்குமே என்ற எண்ணம் மனதில் தோன்றி அது நாளுக்கு நாள் வளர தனக்கும் ஒரு திருக்குறள் நூல் வேண்டும் என்ற எண்ணம் மனதில் வலிமை பெற ஆரம்பித்து விட்டது. ஒரு நூலை வாங்குவதற்கு அதிலும் அச்சுப் பதிப்பு நூலை வாங்குவதற்கான பொருளாதார வசதி உ.வே.சாவிற்கு இல்லை. முன்னர் குன்னத்தில் இருந்த பொழுதில் குன்னத்தில் சந்தித்த பெரும்புலியூர் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்த ராயர் ஒருவர்  தன்னிடம் ஒரு திருக்குறள் அச்சுப் பிரதி இருப்பதாகவும் தன்னிடம் வந்து அதனை உ.வே.சா பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆக அந்த ஞாபகம் வந்ததும் அந்த நல்ல மனிதரைத் தேடிச் சென்று அவர் தருவதாகச் சொல்லியிருந்த நூலை வாங்கி வர வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது உ.வே.சாவிற்கு.

அவர் இருந்தது பெரும்புலியூர் என்னும் ஒரு ஊரில். இந்த ஊர் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனாலும் நெடு தூரம் நடந்து சென்றால் தான் அந்த  ஊரை அடைய வேண்டியிருக்கும் என்றும் ஒரே நாலில் சென்று பெற்று வந்ததாக வாசிக்கும் போது ஏறக்குறைய 15 கிமீ தூரத்திற்குள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

விருத்தாசல ரெட்டியாரும் ஒரு வித்தியாசமான மனிதர். அவருக்கு நூல்கள்.. நூல்கள்.. நூல்கள்.. தான் வாழ்க்கையே. நூல்களை வாசிப்பதும் அதனை பாடம் சொல்வதும் தமிழ்பிரியர்களோடு சம்பாஷிப்பதுமே அவருக்குத் தொழில். உ.வே.சாவின் தமிழ்க்காதல் விருத்தாசல ரெட்டியாருக்கு இவர் பால் நிறைந்த அன்பினை ஏற்படுத்தியிருந்தது.

ஆக ஒரு நாள் உ.வே.சா தான் பெரும்புலியூர் சென்று அங்கிருந்து திருக்குறள் நூலை பெற்று வரச் செல்லப்போவதாகத் தெரிவித்ததும் இவரும் சேர்ந்து பேசிக் கொண்டே பெரும்புலியூர் சென்று வாக்களித்திருந்த அந்த நல்ல மனிதர் ராயரிடமிருந்து திருக்குறள் நூலைப் பெற்றுக் கொண்டு இருவரும் மீண்டும் திரும்பினர்.

இதே போல வேறொரு தருணத்திலும் உ.வே.சா ஒரு நூலைப் பெறுவதற்காக ஒரிடத்திற்கு பல மணி நேரங்கள் நடந்து சென்ற கதையினை என் சரித்திரம் நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண முடிகின்றது.


தொடரும்..
சுபா

Sunday, September 9, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 19


பதிவு 19

மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களிடம் பாடம் கேட்கும் தருணத்திற்காகக் காத்திருந்த வேளையிலும் உ.வே.சா புதிய நூல்களைக் கற்கும் முயற்சியை விட்டு விடவில்லை.  இடையில் விருத்தாசல முதலியார் என்னும் ஒரு பண்டிதரிடம் சில நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அதிலும் குறிப்பாக சில இலக்கண நூல்களைப் பாடம் கேட்டு தனது செய்யுள் இயற்றும் திறனை வளர்த்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார்.

விருத்தாசல ரெட்டியார் வழியாக இவருக்கு யாப்பருங்கல காரிகை நூல் அறிமுகமானது. அதிலும் அச்சு வடிவத்தில். அச்சில் நூல்கள் வெளிவருவது அக்காலத்தில் சற்றே அறிமுகமாகியிருந்த சமயம் அது. ஏட்டுச் சுவடிகள் என்பது மாறி அச்சுப் புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்த காலம் அது. அச்சு வடிவத்திலான யாப்பருங்கல காரிகை நூலை விருத்தாசல ரெட்டியார் இவருக்கு அளித்தார். அது மட்டுமன்றி வேறு சில ஏட்டுச் சுவடி நூல்களையும் இவருக்கு வழங்கினார். உ.வே.சாவின் தமிழ் கற்க வேண்டும் என்ற விருப்பமும் ஈடுபாடும் விருத்தாசல ரெட்டியார் போன்ற செல்வந்தர்கள் இவரைப் போற்றி அரவணக்கும் பண்பினை வழங்கிற்று. தனக்கு விருத்தாசல ரெட்டியார் மூலமாக கிடைத்த நூல்களைப் பெரும் செல்வமாக போற்றி நினைத்து உ.வே.சா பெருமைப்படுவதைக் காண்கின்றோம்.

அக்காலத்தில் தமிழ் கற்றோர் பலர் தாங்கள் பாடம் கேட்டு கற்ற நூல்களைத் தாங்களே ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை என் சரித்திரம் நூலில் ஆங்காங்கே காண்கின்றோம். அந்த  வகையில் விருத்தாசல ரெட்டியாரும் சில நூல்களை தம் கையாலேயே ஏட்டுச் சுவடியில் எழுதி வைத்திருந்திருக்கின்றார். இதனைக் குறிப்பிடும் வகையில் 25ம் அத்தியாயத்தில் உ.வெ.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. தம் கையாலேயே அந்நூல் முழுவதையும் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். ஓய்ந்த நேரங்களில் நான் அப்புஸ்தகங்களை எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். அவற்றிலுள்ள விஷயங்களை ரெட்டியாரிடம் கேட்பேன். அவர் சொல்லுவார். இத்தகைய பழக்கத்தால் தமிழ்க் கடலின் ஆழமும் பரப்பும் பல நூற்பகுதிகளும் சில வித்துவான்களுடைய சரித்திரங்களும் விளங்கின. தண்டியலங்காரம் திருக்குறள், திருக்கோவையார் என்னும் நூல்களை நானே படித்தேன். கம்ப ராமாயணத்திலும் பல பகுதிகளைப் படித்து உணர்ந்தேன்."

யாப்பருங்கல காரிகையை முழுமையாக பாடங் கேட்டு முடித்த பின்னர் விருத்தாசல ரெட்டியார் உ.வே.சாவுக்குப் பொருத்த இலக்கணங்களையும் பிரபந்த இலக்கணங்களையும் பாடம் சொல்லத் தொடங்கினார். இலக்கணத்தில் சிறந்த புலமை பெற்றவராக விளங்கியவர் விருத்தாசல ரெட்டியார். தன் வீட்டின் சுவற்றிலேயே பல இடங்களில் இரட்டை நாகபந்தம், அஷ்ட நாகபந்தம் முதலிய சித்திர கவிகளை எழுதி வைத்திருப்பாராம்.

நாக பந்தம் எனச்சொல்லப்படும் செய்யுள் வகையிலான நூலை எனக்கு திரு.சுந்தர் பரத்வாஜ் வழங்கி அறிமுகப்படுத்தினார். சித்திரக்கவிமாலை என்னும் அந்த நூல் நமது மின்னூல்கள் சேகரிப்பில் 218வது நூலாக உள்ளது. வியக்க வைக்கும் வடிவிலான சித்திரங்களும் அதற்குள்ளே கவிதைகளும் என்ற வகையில் உருவாக்கப்பட்டதொரு அற்புதமான ஒரு நூல் அது. இதைப் போலத்தான் விருத்தாசல ரெட்டியாரின் வீட்டுச் சுவரும் இருந்திருக்கும் போல.

ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப் பிரதியாக கொண்டுவரும் செயல் என்பது மிகக்கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. பதிப்பியல் பற்றி பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள் கூறியிருப்பதையும் இங்கே நினைவு கூறுதல் கடமையாகின்றது. ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் பதிப்புக்குச் செல்லும் போது சில வேளைகளில் பாட பேதங்களை கவனியாது, செய்யுட்களை முறையாக ஆராயாது அப்படியே கிடைக்கின்ற நூலில் உள்ள செய்யுட்களை அச்சுப் பதிப்பாக கொண்டு வந்துவிடும் நிலை பல முறை நிகழ்ந்துள்ளது. உ.வே. போன்ற அறிஞர்கள் ஒரு நூலின் பல பிரதிகளை ஆராய்ந்து பின்னர் முறையான அச்சுப்பதிப்பை கொண்டு வர பாடுபட்டவர்கள் என்பதை நாம் காண்கின்றோம். கம்ப ராமாயண அச்சுப் பதிப்பில் தனது அனுபவத்தில் தாம் கண்ணுற்ற ஒரு நிகழ்வைப் பற்றி உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"ஒரு நாள் வழக்கம்போல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்பரெட்டியார் கம்ப ராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடன் இருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளி விட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புஸ்தகத்தில் விட்டுப் போயின. என் பிரதியில் அப் பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்ப ராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்."

தொடரும்..

சுபா

Saturday, September 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 18


ஏதாவது ஒரு சங்கடம் வரும் போதோ சஞ்சலம் தோன்றும் போதோ சாஸ்திரம் பார்க்க வேண்டும், ஜோதிடரை சென்று பார்த்து பலன் அறிந்து வரவேண்டும் என்று ஒரு வழக்கம் நமது சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருகின்றது. ஜோதிடம் பார்க்காவிட்டாலும் கூட பல்லி, பூனை, மாடு என பிராணிகளைச் சகுனங்களுக்குக் காரணமாக வைத்து மனிதர்கள் நாம் நல்ல சகுனமா கெட்ட சகுனமா என்று வகுத்துப் பார்க்கும் பண்புடையவர்களாக இருக்கின்றோம். இறைவனின் திருவருள் எண்ணம் எப்படி இருக்கின்றது, நல்லவை நடக்குமா..? பிரச்சனைகள் விலகுமா? சோதனை காலம் முடியுமா? நினைத்த காரியம் கைகூடுமா ? என்பதே ஒவ்வொருவர் மனதிலும் எதிர்கால நற்பலன்களை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வைத்து விடுகின்றது. அதில் ஜோதிடர் நல்ல பலனைச் சொல்லி விட்டாலோ சகுனம் நல்லபடியாக அமைந்து விட்டாலோ நமது மனம் முழு திருப்தி அடைந்து விடுகின்றது. சஞ்சலம் குறைந்து நம்பிக்கையும் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கை தானே வாழ்க்கை பயணத்தின் ஆதாரம்.

குறி பார்ப்பது என்னும் கலை நமது தமிழ் சமுதாயத்தில் எல்லா நிலை மக்களிடமும் சமூகத்திலும் இருப்பதைக் காண்கின்றோம். கயிறு சார்த்திப் பார்த்தல், பூவை இறைவனின் பாதத்தில் வைத்து எந்தப் பூ வருகின்றதோ அதற்கு ஒரு பலனை கற்பனை செய்து கிடைக்கின்ற பூவிற்குக் கொடுத்த பலனே தனக்கு வருவதாக எடுத்துக் கொள்ளும் செயல், கோடாங்கி வந்து சொல்லும் காலை நேரத்து நல்ல-கெட்ட செய்திகள், கிளி ஜோசியக்காரர் கூறும் விளக்கம் -  இவையெல்லாமே சகுனத்தை அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் இன்றளவும் வைத்திருக்கும் சில நடைமுறைகளாகவே உள்ளன.

உ.வே.சாவின் வாழ்க்கையிலும் சஞ்சலம் வந்து குடி புகுந்த தருணங்கள் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் பற்றியே இப்பதிவு அமைகின்றது.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து அவரிடம் பாடம் கேட்கச் செல்லும் நாளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார் உ.வே.சா. முதலில் தன்னை மாணவராக அவர் ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொண்டாலும் கல்வி கற்க ஏற்படும் செலவுகளை எப்படி சமாளிப்பது? வீட்டிலிருந்து வித்துவான் இருக்கும் இடம் சென்று அங்கு கல்வி கற்கச் செல்வது சாத்தியமா? குடும்பத்தாரை விட்டு பிரிந்திருக்க வேண்டுமே. உணவிற்கும் தங்கும் இடத்திற்கும் என்ன செய்வது என பல கவலைகள் உ.வே.சா அவர்களையும் அவர் குடும்பத்தாரையும் வறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாகினும் கல்வியை வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கற்றாக வேண்டும் என்ற எண்ணமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரலாயிற்று. இந்த நிலையில் உ.வே.சா அவர்கள் தனக்கு பலன் எப்படி அமையப் போகின்றது என்று சோதித்துப் பார்க்கின்றார்.

"ஒரு நாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து அயர்ந்து போன என் உள்ளத்தில் ஓர்
எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறு சார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம் திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக் கொண்டு கயிறு சார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக் கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம். 

நான் ஒரு சிறுவனைக் கொண்டு கயிறு சார்த்தச் செய்து புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி டு பங்குனி மாதம் பதிப்பிக்கப் பெற்ற அப்பழம்
புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து
வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து
வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன்.

“என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என்
மனம் திக்குத் திக்கென்று அடித்துக் கொண்டது நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.

“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப 
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால்,
என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சி சுந்தரக் கடவுள்
முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.
என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்."

இப்பகுதியை வாசித்து முடித்த போது வரிக்கு வரி உ.வே.சா அவர்களின் எழுத்திலிருந்து அவரது மனப்போக்கை நான் மனமார உணர்ந்தேன்.  நல்லாசிரியருக்காக தவம் செய்த இம்மாணவருக்கு இறையருள் கருணை கிட்டாமலா போகும்? நல்லன நினைத்து அதே சிந்தனையில் தவம் புரிபவர்களுக்கு அருள் கிட்டத்தானே செய்யும்!

பிற்காலத்தில் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தலை மாணவராகத் திகழ்ந்து அவர் இறக்கும் தருவாயிலும் அவருடன் இருக்கும் பாக்கியம் பெற்றவராக இருந்தார் உ.வே.சா என்பதைக் காண்கின்றோம். நல்ல எண்ணங்கள் செயலாக்கம் பெரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சுபா

Friday, August 31, 2012

மலேசிய தேசிய மலர்


நேற்று மலேசியாவின் 55ம் ஆண்டு சுதந்திர தினம். இந்த நாளில் மலேசிய தேசிய மலர் என் வீட்டில் பூத்திருப்பதால் இன்றைய என் வீட்டு தோட்டத்துப் பரிசாக இங்கே சிவப்பு நிற செம்பருத்திப் பூ.




சென்ற ஞாயிற்றுக் கிழமை ஒரு மலர் பூத்திருந்தது. இன்று இரண்டு மலர்கள்.





செம்பருத்தி மலர் மலேசியாவில் நாடெங்கிலும் காணக்கிடைப்பது. பல வர்ணங்களில் இது பூத்து அலங்கரித்தாலும் சிவப்பு நிற செம்பருத்திப் பூவே தேசிய மலராக மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் தேர்ந்தெடுத்து ப்ரகடனப்படுத்தப்பட்டது.  சிவப்பு நிறம் வீரத்தைக் குறிப்பதாகவும் மலரில் உள்ள 5 இதழ்களும் தேசிய கோட்பாடுகள் ஐந்தினைக் குறிப்பதாகவும் குறிக்கப்படுவது.

அன்புடன்
சுபா

இப்பதிவுக்கு கிடைத்த கவிதை.. கவிஞருக்கு நன்றி!


இயற்கை பூவோடு உரையாடினால்... 

குளிக்கும் போது நீராவேன்
களிக்கும் போது நகையாவேன்
அளிக்கும் போது வானாவேன்
துளிர்க்கும் போது கதிராவேன். 

நீ ஆனதெல்லாம் ஆகி 
என்னையும் எழில்பூவாக்கி 
உன்முடியில் எனைச் சூடி 
என்மடியில் நீவளர்தல் வியப்பேயம்மா ! 
 --ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்