Tuesday, August 27, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 56

திருப்பெருந்துறை புராணத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதி அதனை திருப்பெருந்துறையிலேயே அறங்கேற்றம் செய்த அந்த நாட்கள் பிள்ளையவர்கள் வாழ்க்கையில் பகலும் இருளும் போலமைந்தவை. ஒரு நாள் சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு நடந்தால் மறு நாள் ஏதாகினும் ஒரு பிரச்சனையோ வருத்தம் ஏற்படுத்தும் நிகழ்வோ ஏற்பட்டு விடும். அந்த மாறி மாறி வருகின்ற சூழலிலும் செய்யுள் தொடர்ந்து இயற்றி சுப்பிரமணியத்தம்பிரானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் பிள்ளையவர்கள். அக்கால கட்டத்தே நடந்த நிகழ்வுகள் விரிவாக என் சரித்திரம் நூலில் இல்லையென்றாலும் கூட ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் பாகம் 2ல் இவை விரிவாகச் சொல்லப்படுகின்றன.  இப்பகுதிகளை வாசிக்கும் போது ஏதோ நூல் தானே என நினைத்து வாசித்துச் செல்ல முடியவில்லை. அவரது அக்காலத்து சோகங்களும், கஷ்டங்களும் படிக்கின்ற வாசகர்களைத் தாக்கிச் செல்வதை மறுக்க முடியவில்லை.


மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை மடத்தில் இணைந்த சமயத்தில் மடத்தின் ஆதீனகர்த்தராக இருந்தவர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர். இவரைப் பற்றி பிள்ளையவர்கள் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் என்ற நூல் ஒன்றினை இயற்றி இருந்தமை பற்றி முன்னர் கூறியிருந்தேன். இந்த நூலும் நமது த.ம.அ மின்னூல்கள் சேகரத்தில் இடம்பெறும் ஒன்று. அந்த நூலையும் அது பற்றிய விவரங்களையும்  இங்கே காணலாம்.  http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/07/thf-announcement-ebooks-update.html.

இந்த நூலை பிள்ளையவர்கள் இயற்றி தேசிகர் முன்னிலையில் அறங்கேற்றிய வேளையில் அவருக்குத்  திருவாவடுதுறை மடத்திலிருந்து ஏறுமுகத்தில் அமைந்த தங்கத்தினாலான உருத்திராட்ஷ கண்டி ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இந்தக் கண்டிதான் எப்போதெல்லாம் பொருளாதாரப் பிரச்சனைகள் பிள்ளைவர்கள் வாழ்க்கையில்  குறிக்குடுமோ அப்போதெல்லாம் பணச் சிரமம் போக்கி காத்து வந்திருக்கின்றது. பணத்திற்கு தட்டுப்பாடு வரும் போதெல்லாம் இந்த கண்டி அடமாணம் வைக்கப்படுமாம்.  ஏதாகினும் ஒரு நூல் இயற்றி பொருள் ஈட்டியபின் வட்டியும் முதலுமாகக் கொடுத்து இந்தக் கண்டியைப்  பிள்ளையவர்கள் மீட்டுக் கொள்வாராம்.

திருப்பெருந்துறைப் புராண அறங்கேற்றத்திற்குச் செல்லும் ஆசிரியர் அவ்வேளையில் அடமானம் வைக்கப்பட்டிருந்த இந்தக் கண்டியை தரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என மாணவர்கள் விரும்பியிருக்கின்றனர். மாணவர் விருப்பத்தை நிறைவேற்ற ஆசிரியருக்கும் ஆசை தான்; ஆனால் பணம் இல்லையென்ற நிலை. தமக்குத் தெரிந்தவரான் சோழன்மாளிகை இரத்தினம்பிள்ளையென்பாரிடம் உ.வே.சா வை அனுப்பி விவரத்தைத் தெரிவித்து கடன் கேட்டு அப்பணத்தை வட்டியுடன் தாம் சமர்ப்பித்து விடுவதாக வாக்குறுதி அளித்து பணம் வாங்கி வந்து பின்னர் அந்த கண்டியைப் பெற்று மாணவர் மனம் குளிர அதனை அணிந்து கொண்டு திருப்பெருந்துறைக்குச் சென்றிருக்கின்றார் பிள்ளையவர்கள்.

இவருக்குப் பணம் கொடுத்து உதவிய அந்த நல்ல மனம் படைத்த இரத்தினம் பிள்ளை என்பவர் `இத்தொகையைப் பிள்ளையவர்கள் திருப்பித் தரவேண்டியதில்லை. நெடுநாட்களாக  ஏதாவது ஒரு வகையில் பிள்ளையவர்களைக் கௌரவிக்க வேண்டும்` என்ற எண்ணம் இருந்தமையைத் தெரிவித்து இச்சமயத்தில் உதவ முடிந்ததில் பெரு மகிழ்ச்சியே என பிள்ளையவர்களுக்குத் தெரிவிக்குமாறு உ.வே.சாவிடம் சொல்லியனுப்பியிருக்கின்றார். அந்த நல்லுள்ளம் படைத்தவரின் அன்பில் மகிழ்ந்து பிள்ளையவர்கள் அவருக்காக ஒரு செய்யுள் இயற்றினாராம். இது பிள்ளையவர்கள் சரித்திரத்தில் பக்கம் 192ல் காணப்படுகின்றது.

ஒரு நூல் அரங்கேற்றத்திற்கு முன் நூலின் எல்லா பாடல்களையும் எழுதி முடித்து விட்டுத்தான் அறங்கேற்றத்திற்குச் செல்லவேண்டும் என்ற நிலை முன்பு இருக்கவில்லை என்றே தெரிகின்றது. நூல் ஓரளவு தயாரானதும் நூல் அறங்கேற்றம் காண உள்ள ஊரிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பாடல் இயற்றி அதனைத் தொடர்ந்து அறங்கேற்றம் செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கின்றது அக்காலத்தில். அந்த நிலையில் தான் திருப்பெருந்துறை புராண அறங்கேற்றமும் நடைபெற்றிருக்கின்றது.

1873ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் சென்று நூல் அறங்கேற்றத்திற்குச் செல்லும் முன் ஆசிபெற்றுக் கொண்டு திருப்பெருந்துறை  புறப்பட்டிருக்கின்றார் பிள்ளையவர்கள். அப்பயணத்தின் போது பிள்ளையவர்களுடன் உ.வே.சா, பழனிக்குமாரத்தம்பிரான், அரித்துவாரமங்கலம் சோமசுந்தரதேசிகர், சுப்பையாபண்டாரம், கும்பகோணம் பெரியண்ண பிள்ளை, சவேரிநாதப்பிள்ளை, தில்லை விடங்கன் வேலுசாமி பிள்ளை ஆகியோரும் உடன் சென்றிருக்கின்றனர் என்பன போன்ற விவரங்களை உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது.


தொடரும்..

சுபா

Wednesday, August 21, 2013

Robert Langdon is back..- Boboli Garden! - 9

பிட்டி மாளிகையைப் பற்றி கடந்த இழை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மாளிகையின் பின் புறத்தின் வழியே நடக்கத் தொடங்கினால் பசுமை நிறைந்த பூங்கா ஒன்றிற்கு வந்து விடுவோம். இந்த பூங்கா ப்ளோரன்ஸ் நகரின் பெருமைகளுக்குச் சிகரம் சேர்க்கும் அமைப்புக்களில் ஒன்றாக விளங்கும் போபோலி தோட்டம் (Boboli Gardens).


அம்ஃபிதியேட்டருக்கு முன்னர் அமைந்துள்ள ஒபிலிஸ்க்குடன் காட்சியளிக்கும் போபோலி தோட்டத்தின் முன்பகுதி

ஐரோப்பாவின் எல்லா பெரிய நகரங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் எகிப்தின் பண்டைய நாகரிகத்தைக் குறிக்கும் ஒபிலிஸ்க் கட்டாயம் இருக்கும். அது பாரிஸாகட்டும், மட்ரிட்டாகட்டும், பெர்லினாகட்டும் இப்படி பல நகரங்களிலும் ஒரு சிறப்பான இடத்தில் ஒபிலிஸ்க்கை வைத்து அதனைப் பார்த்து மகிழ்வதை ஐரோப்பியக் கலாச்சாரம் விடாமல் தொடர்ந்து வருகின்றது. இத்தாலியில் பல ஊர்களில் ஆங்காங்கே ஒபிலிஸ்க் வடிவங்கள் இருக்கின்றன. இவற்றில் பல எகிப்திலிருந்து கொண்டு வரப்படவில்லை என்ற போதிலும் உள்ளூர் பளிங்கிலேயே செய்யப்பட்ட ஒபிலிஸ்க் வகைகள். போபோலி தோட்டத்தின் ஆரம்பப் பகுதியிலும் ஒரு ஒபிலிஸ்க் அலங்கரிக்கின்றது. ஆனால் இங்கிருப்பதோ ரோம் நகரிலிருந்து மெடிசி குடும்பத்தினரின் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த எகிப்தில் செய்யப்பட்ட ஒபிலிஸ்க் ஆகும். ரெனைஸான்ஸ் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த மெடிசி குடும்பத்தினரின் கலைப்படைப்பு இந்த போபோலி தோட்டம். அவர்கள் இங்கேயும் ஒபிலிஸ்கை வைத்திருப்பதற்கானக் காரணம் எகிப்திய பண்டைய நாகரிகம் அளித்த சிந்தனைப் பின்புலத்தின் தேடல் தொடர்ச்சி என்பதாகத்தான் நான் காண்கின்றேன்.

பிட்டி மாளிகையின் பின்புறத்து குன்றிலிருந்து கீழிறங்கும் நிலப்பகுதியை வாங்கிய கோசிமோ எல் டி மெடிசியும் துணைவியார் எலியோனாரா டி டொலேடோவும் (Cosimo I de´ Medici, Eleonora di Toledo) இந்தப் பகுதியை மிக விரிவாக்கி இதனை போபோலி தோட்டமாக மிகப் பெரிதாக உருவாக்கினர்.


கிரேக்க கடவுள் நெப்டியூன்

இது வெறும் பூக்கள் நிறைந்த ஒரு பூந்தோட்டம் மட்டும் அன்று. மாறாக இங்குள்ள சிற்பங்களையும் மாடங்களையும், கூடங்களையும் நோக்கினால் இது ஒரு கலைக்கூடம் என்பது புரியும். அதுமட்டுமல்லாமல் இந்தக் கலைச் சிற்பத்தின் ஊடாக மெடிசி குடும்பத்தினரும் இந்தப் பூங்காவை வடிவமைத்து கட்டியமைத்த சிற்பிகளின் மனதின் வெளிப்பாடும் பண்பாட்டு மாற்றத்தைச் செய்து அதில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்னும் அவர்களின் உள்ளக்கிடக்கையும் வெளிப்படும்.

இந்தப் பூங்காவை வடிவமைத்த சிற்பிகளின் பட்டியலில் இடம் பெறுபவர்கள் ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்தின் முக்கிய சிற்பிகளில் சிலரான நிக்கோலா ட்ரிபொலோ, வசாரி, பர்தலொமொ அம்மானாட்டி மற்றும் பெர்னார்டோ புவாண்டலண்டி  போன்றோர் (Niccolo Tribolo, Giorgio Vasari, Bartolomeo Ammannati, Bernardo Buontalenti ).


தோட்டத்தின் ஒரு பகுதி

இன்பெர்னோவின் ஆரம்பத்திலேயே வசாரியின் பெயரிலேயே (அது மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டாலும் ) தான் நூலின் முதல் பகுதியே தொடங்குகின்றது.வசாரியின் கலைப்படைப்பை பற்றி டான் ப்ரவுன் நூல் முழுக்க விவரித்துக் கொண்டே வருவதை வாசகர்கள் கவனிக்கலாம். அந்த வகையில் மிகச் சிறப்பு மிக்க புகழ்பெற்ற கலைஞரான வசாரியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறந்த படைப்புக்களில் இந்தப் பூங்காவும் இந்தக் கலைக்கூடமும் அடங்கும் என்பது இந்த போபோலி தோட்டத்தின் சிறப்பை விளக்க பயன்படும்.

போபோலி தோட்டத்தின் அமைப்புப் பணிகள் 1550ல் தொடங்கப்பட்டன. முதல் பகுதியாக ஒரு அம்ஃபிதியேட்டர் (Amphitheatre) அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அதன் எழில் குறையாமல் இன்னமும் மிக நேர்த்தியாக காட்சியளிக்கும் அம்ஃபிதியேட்டர்  இது.

நூலில் ஏறக்குறைய ஆறு பாகங்களில் தொடர்ச்சியாக சியன்னாவும், ரோபர்ட்டும் இந்த போபோலி தோட்டத்திற்குள் கடந்து சென்று தப்பிக்க முயல்வதையும் சான்றுகள் தேடுவதையும் போல ப்ரவுன் கதையை அமைத்திருக்கின்றார். இப்படி கதையைச் சொல்லிக் கொண்டே இந்த தோட்டத்திற்குள் இருக்கும் ரகசிய பாதை, குகை ஆகியன பற்றிய தகவல்களையும் எத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த ரகசியப் பாதை இன்னமும் பயன்படுத்தப்ப்படுகின்றது, யாரால் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் தெளிவாக விளக்கிச் செல்கின்றார்.  நாவல் என்பதைக் கடந்து இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்ற் சிறப்பையும் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பகுதிகளில் இவையும் அடங்கும்.

இச்சிறப்புக்களில் பலவற்றை அறியாமல் இந்தத் தோட்டத்தில் நடந்து சென்று பார்த்தை நினைக்கும் போது சற்றே மனம் வருத்தமாகத்தான் உள்ளது. மேலும் ஒரு முறை ப்ளோரன்ஸ் செல்ல வாய்ப்பு அமைந்தால் இந்த ரகசியப் பாதை உட்பட அனைத்தையும் இச்சிற்பிகளின் சிந்தனைகளோடு இணைந்து பார்த்து மகிழ விரும்புகின்றேன்.

சுபா

Friday, August 9, 2013

Robert Langdon is back..- Doge's Palace! - 8

இன்பெர்னோவை வாசிப்பவர்கள் ஒரு சினிமா படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே உணர்வார்கள். அந்த வகையில் கதையின் அமைப்பை அமைத்திருக்கின்றார் ப்ரவுன். டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன் போல இதுவும் சோனி நிறுவனத்தால் திரைப்படமாகக்கூடிய சாத்தியம் விரைவில் நிகழ உள்ளது. ஏனைய இரண்டு படங்களையும் இயக்கிய ரோன் ஹோவர்ட், தனது கதாநாயகனாகிய டோம் கேன்க்ஸை இன்பெர்னோவிற்காக பதிவு செய்திருப்பதாக அண்மையில் செய்தி வாசித்தேன். நல்லதொரு திரைப்படம் இக்கூட்டு முயற்சியில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

கதையில் இத்தாலியின் ப்ளோரன்ஸிலிருந்து பறந்து வெனிஸிற்குச் சென்று விடுகின்றார்கள் சியன்னாவும் ரோபர்ட்டும். அங்கு அவர்கள் தேடும் சில விஷயங்களினூடேயே தனக்கு வெனிஸ் நகரின் மேல் உள்ள காதலை ப்ரவுன் மறைக்காமல் விவரித்து விடுகின்றார்.

உலகின் ஏனைய பெரிய நகரங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் நகரம் வெனிஸ். இதன் சிறப்புக்களையும் அழகையும் வர்ணிக்கும் பல நூல்கள் வந்து விட்டன. இப்போது மட்டுமின்றி வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாக மிக பிஸியான நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது வெனிஸ். தற்சமயம் வெனிஸ் நகரம் ஐரொப்பாவின் 6 மிகப் பெரிய வர்த்தக நகரமாகக்கருதப்படுவது. வர்த்தகம் மட்டுமன்றி, கலாச்சர மையமாகவும் சீக்ரட் சொஸைட்டிகளின் முக்கிய சந்திப்பு நகரமாகவும், கிறிஸ்துவ மத மையமாகவும், சுற்றுலா நிமித்தமாகவும் என எப்போதுமே முக்கிய காரணங்களை மையமாக வைத்து பல நிகழ்வுகள் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இந்த நகரில் நிகழ்வது வழக்கம். இப்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரேய்க்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ரோயல் இறுதிக் காட்சிகள் வெனிஸ் நகரில் படமாக்கப்பட்டமையை பலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

வெனிஸில் கதையினூடே சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத்  தனது நாவலில் குறிப்பிடுகின்றார் ப்ரவுன். அதில் ஒன்று டோஜஸ் மாளிகை(Doge's Palace). இதனை நான் நேரில் பார்த்ததில்லை. அதனால் இணையத்தில் கிடைக்கும் தகவலை மாத்திரம் பார்த்து புரிந்து கொண்டேன். அந்த தகவல்களை உங்களுக்கும் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே.



டோஜஸ் மாளிகை


இன்றைக்குக் காட்சியளிக்கும் இந்த மாளிகை 1340-1420ல் கட்டப்பட்டது என்றாலும் இதன் ஆரம்ப நிலை மாளிகை 810ல் ஏற்படுத்தப்பட்டது என்று அறியக்கிடைக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசனின் மாளிகை இது. வெனெட்டியன் கோத்திக் வகை கட்டிட அமைப்பில் கலை வண்ணம் நிறைந்து காட்சியளிக்கும் வகையில் அமைக்கப்பட்டதொரு கட்டிடம். கொஞ்சம் அராபிய கட்டிடக் கலைகளின் தாக்கமிருப்பதையும் பார்க்கும் போதே உணரலாம்.



கோத்திக் வகை என்றாலே பெரிய அளவிலான வளைவுகளும் பூக்கள் போன்ற அமைப்புடைய சுவர்களும் தங்க நிறத்திலான சுவர் ஒரங்களும் மிகப் பிரமாண்டமான ஓவியங்களும் நிறைந்திருக்கும். இந்த மாளிகையிலேயே 24 காரட் தங்கத்தினாலான் மேல் கூறை சுவர் சித்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இக்கால மோடர்ன் வகை கட்டிட அமைப்பிற்கு  முற்றிலும் மாறுபட்டதொரு அமைப்பு கோத்திக் கட்டிட அமைப்பு எனலாம்.

இந்த டோஜஸ் மாளிகையில் தான் உலகின் மிகப் பெரிய ஓயில் பயிண்டிங் என வர்ணிக்கப்படும் டிண்டோரெட்டோஸ் எனப் பெயர் கொண்ட ஓவியர் வரைந்த பாரடைஸ் (paradise)  அமைக்கப்பட்டுள்ளது. நான் இணைத்திருக்கின்ற  யூடியூப் காணொளிகளில் ஒன்றில் இதனைக் காணலாம்.


ஓவியம்


மாளிகையின் வாசல் பகுதிகளின் படிகளில் மார்ஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கடவுளர்களும் காவலுக்கு நிற்கும் வகையில் அமைத்திருக்கின்றார்கள்.  நிலம், நீர் இரண்டு வகையிலும் ஆளுமை செலுத்தி சக்தி படைத்ததொரு முக்கிய நகரமாக வெனிஸ் திகழ்கின்றது என்பதை இவை குறியீடாகக் காட்டுகின்றன.

உலகில் பார்ப்பதற்குத்தான் எத்தனை சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன என வியுப்புத்தான் மேலிடுகின்றது. நான் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டிடங்களின் பட்டியலில் டோஜஸ் மாளிகையின் பெயரை இணைத்து விட்டேன்.

இரண்டு யூடியூப் விழியப் பதிவுகள். இவை இந்த மாளிகையின் எழிலை காட்டுவதில் துணை புரியும்.

http://www.youtube.com/watch?v=lLsGE3_kqsc
http://www.youtube.com/watch?v=Jh7lPFe12ao

நன்றி: http://en.wikipedia.org/wiki/Doge's_Palace,_Venice

Wednesday, August 7, 2013

Robert Langdon is back..Pitti Palace! -7

இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.

டான் ப்ரவுன் குறிப்பிடும் இன்பெர்னோவில் விவரிக்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் பிட்டி மாளிகையும் (Pitti Palace) அடங்கும்.  மிக விரிவாக குறிப்பிட வில்லையென்றாலும் இந்த மாளிகை, அதனை அடுத்து வரும் பொண்டொ வெச்சியோ பாலம் ஆகியவை தொடர்ச்சியாக வரும் வகையில் நாவலை ப்ரவுன் அமைத்திருக்கின்றார்.

இத்தாலி ப்ளோரன்ஸ் நகரத்தின் ஆர்னோ நதிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்றே.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்துக்கு முக்கியமாகத் திகழும் மெடிசி குடும்பத்தினரின் மாளிகையாகவும் இது சில நூற்றாண்டுகள் இருந்தது.  18ம் நூற்றாண்டில் நெப்போலியனின் மிக முக்கிய படைத்தளங்களில் ஒன்றாக இது பாவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கத்து என்பதோடு அதன் பின்னர் ஒன்றினைக்கப்பட்ட புதிய இத்தாலியின் அதிகாரப்பூர்வ அரச மாளிகையாகவும்  இருந்தமை இந்த மாளிகையின் சிறப்பைக் குறிப்பிடும்.

இத்தகைய பெருமை வாய்ந்த இம்மாளிகை 1458ம் ஆண்டில் லூக்கா பிட்டி என்னும் வணிகரால்  கட்டப்பட்டது. இதனை வடிவமைத்தவர் புகழ்பெற்ற கட்டிடச் சிற்பி பிலிப்போ ப்ரூனலிச்சி.  1549ம் ஆண்டில் பிட்டி குடும்பத்தாரிடமிருந்து இந்த மாளிகையை ப்ஃளோரன்ஸ் நகர அரசியார் எலியுனோரா டி டொலேடொ  வாங்கிய பின்னர் இது மெடிசி குடும்ப சொத்துக்களில் ஒன்றாகியது.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு கலை உலகிl முக்கியப் பங்கு வகித்த மெடிசி குடும்பத்தார் இந்த மாளிகையில் உலகப் புகழ்பெற்ற பல கலை ஓவியங்களை சேகரித்துள்ளனர். இவை இன்று இம்மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  மாளிகையில் உள்ள அறைகளில் 140 அறைகளில் மட்டுமே  அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 12 பெரிய அறைகள் மெடிசி குடும்பத்தாரின் பொருட்களை கொண்டுள்ளன. ஏனைய பல அறைகள் வெவ்வேறு வகை பயன்பாடுகளால் பொது மக்கள் பார்வைக்கு திபாறக்கப்படுவதில்லை.  இத்தாலியின் ப்ஃளோரன்ஸ் நகர் வருபவர்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய கட்டிடங்களிலில் இந்த பிட்டி மாளிகையும் ஒன்று.

நாவலில் சியன்னாவும் ரோபர்ட்டும் தப்பித்துச் செல்லும் போது இந்த மாளிகையைக் கடந்து செல்வதாகக் குறிப்புக்களைத் தருகின்றார் ப்ரவுன். சுவாரசியமான பகுதிகள் இவை!

சுபா

Robert Langdon is back..- Palazzo Pitti (பிட்டி மாளிகை)

இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.

டான் ப்ரவுன் குறிப்பிடும் இன்பெர்னோவில் விவரிக்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் பிட்டி மாளிகையும் (Pitti Palace) அடங்கும்.  மிக விரிவாக குறிப்பிட வில்லையென்றாலும் இந்த மாளிகை, அதனை அடுத்து வரும் பொண்டொ வெச்சியோ பாலம் ஆகியவை தொடர்ச்சியாக வரும் வகையில் நாவலை ப்ரவுன் அமைத்திருக்கின்றார்.

இத்தாலி ப்ளோரன்ஸ் நகரத்தின் ஆர்னோ நதிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்றே.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்துக்கு முக்கியமாகத் திகழும் மெடிசி குடும்பத்தினரின் மாளிகையாகவும் இது சில நூற்றாண்டுகள் இருந்தது.  18ம் நூற்றாண்டில் நெப்போலியனின் மிக முக்கிய படைத்தளங்களில் ஒன்றாக இது பாவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கத்து என்பதோடு அதன் பின்னர் ஒன்றினைக்கப்பட்ட புதிய இத்தாலியின் அதிகாரப்பூர்வ அரச மாளிகையாகவும்  இருந்தமை இந்த மாளிகையின் சிறப்பைக் குறிப்பிடும்.

இத்தகைய பெருமை வாய்ந்த இம்மாளிகை 1458ம் ஆண்டில் லூக்கா பிட்டி என்னும் வணிகரால்  கட்டப்பட்டது. இதனை வடிவமைத்தவர் புகழ்பெற்ற கட்டிடச் சிற்பி பிலிப்போ ப்ரூனலிச்சி.  1549ம் ஆண்டில் பிட்டி குடும்பத்தாரிடமிருந்து இந்த மாளிகையை ப்ஃளோரன்ஸ் நகர அரசியார் எலியுனோரா டி டொலேடொ  வாங்கிய பின்னர் இது மெடிசி குடும்ப சொத்துக்களில் ஒன்றாகியது.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு கலை உலகிl முக்கியப் பங்கு வகித்த மெடிசி குடும்பத்தார் இந்த மாளிகையில் உலகப் புகழ்பெற்ற பல கலை ஓவியங்களை சேகரித்துள்ளனர். இவை இன்று இம்மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  மாளிகையில் உள்ள அறைகளில் 140 அறைகளில் மட்டுமே  அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 12 பெரிய அறைகள் மெடிசி குடும்பத்தாரின் பொருட்களை கொண்டுள்ளன. ஏனைய பல அறைகள் வெவ்வேறு வகை பயன்பாடுகளால் பொது மக்கள் பார்வைக்கு திபாறக்கப்படுவதில்லை.  இத்தாலியின் ப்ஃளோரன்ஸ் நகர் வருபவர்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய கட்டிடங்களிலில் இந்த பிட்டி மாளிகையும் ஒன்று.

நாவலில் சியன்னாவும் ரோபர்ட்டும் தப்பித்துச் செல்லும் போது இந்த மாளிகையைக் கடந்து செல்வதாகக் குறிப்புக்களைத் தருகின்றார் ப்ரவுன். சுவாரசியமான பகுதிகள் இவை!

சுபா

Friday, August 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 55

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே கண்டிப்பும் கட்டளையும் பய உணர்வும் தான் இருக்க வேண்டுமா ? என்ற கேள்விக்கு மாற்றாக தாய்மை அன்பின் வழி அமைந்த உறவாகவும் இது அமைய முடியும் என்பதற்குச் சான்றாகி நிற்கும் ஆவணம் உ.வே.சா வின் என் சரித்திரம். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் மாணவர் உ.வே.சாவிற்கும் இடையிலான அன்பினை இத்தொடரின்  சில பகுதிகளில் முன்னர் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக வருகின்ற ஒரு நிகழ்வே இன்றைய பதிவின் மையமாக அமைகின்றது.

திருப்பெருந்துறைப் புராணத்தைப் பிள்ளையவர்கள் எழுதத் தொடங்கிய பின்னர் திருவாவடுதுறை மடத்தில் மாணாக்கர்களுக்கும் தம்பிரான்களுக்கும் பெரிய புராணத்தைப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்தார். பாடங்கள் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்த வேளையில் கண்ணப்ப நாயனார் புராணம் தொடங்கப்பட்ட வேளையில் உ.வே.சாவிற்கு உடல் நலம் குன்றியது. அம்மை நோய் கண்டு அது விரைவாக உடல் முழுதும் பரவி மிகச்சங்கடமான உடல் நிலைக்கு உள்ளாகியிருந்தார் உ.வே.சா. தான் தங்கியிருந்த சத்திரத்திலேயே இருந்து வந்த உ.வே.சாவை அடிக்கடி பார்க்க வந்து சென்று கொண்டிருந்தார் பிள்ளையவர்கள். மாணவரின் துயர் ஆசிரியரையும்  தாக்க பாடம் நடைபெறுவது மிகச் சிரமமாக ஆகிவிடவே இந்த நிலையை உணர்ந்த தேசிகர் பாடத்தை தற்காலிகமாக நிறுத்தும் படி கட்டளையிடவேண்டியது அவசியமாகியது.

மனம் சஞ்சலமில்லாமல், வேதனையில்லாமல் இருந்தால் கல்வியில் தெளிவு காணமுடியும். படிக்கும் பாடம் மனதில் ஆழப் பதிய உடல் நலம், மன நலம் இரண்டுமே மிக அவசியம் அல்லவா!

உடல் வேதனை உ.வே.சாவை வாட்ட, தனது கடன் சுமையயும் விட மாணாக்கரின் உடல் நலக்குறைவு ஆசிரியரை வாட்ட, பெரிய புராணப் பாடம் மடத்தில் தற்காலிகமாக நின்று போனது.

தனது பாட்டனாரின் ஊராகிய சூரியமூலைக்குச் சென்று பெற்றோரின் கவனிப்பில் சிறிது காலம் இருந்து வர விரும்பினார் உ.வே.சா. இதனை அறிந்த தேசிகர் அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி சூரியமூலைக்குக் கொண்டு செல்லும் படி மடத்தில் கட்டளையிட்டார்.  ஆசிரியரும் ஏனையோரும் விடையனுப்ப பல்லக்கில் சாய்ந்தபடி சூரியமூலைக்குப் புறப்படும் போது ஆசிரியர் கூறியதை தனது 80வது அகவையிலும் நினைவில் வைத்திருந்து என் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல் வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில் நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன். பிள்ளையவர்கள் என்னுடன் ஹரிஹரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத் திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை. வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும் இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே விரிந்து சென்று விடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது என் வயிறு பகீரென்றது."

இதனை வாசிக்கும் போதே அந்த நிகழ்விற்கே என்னை அழைத்துச் சென்று விடுகின்றார் உ.வே.சா. நானும் அக்கதாபாத்திரங்களில் ஒன்றாகி அவர்கள் உணர்வுகளோடு கலந்து நிற்கும் போது இந்த உணர்வின், அது தரும் பயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளும் நிலையில் என் மனதிலும் அந்த வேதனை உணர்வு தாக்கவே செய்கிறது.

துன்பத்திற்கு மேல் துன்பம் வரும் என்பார்களே. அது சில வேளைகளில் உண்மையாகிப் போவதுண்டு. ஒரு பிரச்சனையிலிருந்து மீள வேண்டும் என நினைத்து ஒரு வடிகால் தேடிச் செல்கின்ற போது அங்கே வேறோர் பிரச்சனை தாண்டவமாடிக் கொண்டிருக்கும். அதே நிலைதான் உ.வே.சாவிற்கு.

சூரியமூலைக்குச் சென்று பார்த்தால் அங்கே அவருக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தி நிகழ்ந்து  அவரை வேதனையின் அளவைக் கூட்ட காத்துக் கொண்டிருக்கின்றது. அம்மை நோய் கண்டிருக்கும் இவரை வீட்டிற்குக் கொண்டு செல்லாமல் தோப்பிலேயெ வைத்து அங்கேயே பார்த்துக் கொள்ளச் செய்யலாம் என உறவினர் நினைக்கின்றனர்.  அப்போது தனது வீட்டிற்குப் பலர் வந்திருப்பதை அறிகின்றார் உ.வே.சா. இவரது அம்மா வழிப் பாட்டனார், இவருக்குச் சிவதீட்ஷை செய்வித்து சிவநாமத்தைக் கற்றுக் கொடுத்த அப்பெரியவர் சிவபதம் அடைந்த செய்தி கிடைக்கின்றது.

"எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி விழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல் நாள் என் அருமை மாதாமகரும், சிவ பக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும் ஆன கிருஷ்ண சாஸ்திரிகள் சிவசாயுஜ்ய பதவியை அடைந்தனர். அவருடைய இனிய வார்த்தைகளையும் சிவபூஜா விசேஷத்தையும் வேறு எங்கே காண்போமென்று இரங்கினேன்."

சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற பெயரில் சில வேளைகளில் சூழ்நிலை அறியாது உயிர்களின் வேதனை அறியாது எழுதா  சட்டதிட்டங்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுவதுண்டு. அங்கும் அதே நிலை.

"இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில் சஞ்சயனத்தை நடத்தி விட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என் தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக் கொண்டார். “நம்முடைய குழந்தை; அவன் கஷ்டப்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு?
நன்றாய்ப்பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம் கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே கொணர்ந்து வைக்கச் செய்தார்."

வீடு வந்து சேர்ந்த விஷயத்தை ஆசிரியரிடம் தெரிவிக்கும் படி தன்னுடன் வந்தவர்களுக்குச் சொல்லியனுப்பி சூரியமூலையிலேயே அடுத்த சில மாதங்கள் தங்கி விட்டார் உ.வே.சா. அவ்வாண்டு மார்கழி மாதம் முழுமையும் நோயால் துன்பப்பட்டு தைமாதத்தில் உடல் நலம் பெற ஆரம்பித்தது. அவரது இந்த நிலையில் அவ்வப்போது திருவாவடுதுறையிலிருந்து  சிலர் வந்து இவரது நலன் விசாரித்துச் சென்ற விஷயத்தையும் குறிப்பிடுகின்றார்.

தொடரும்..

சுபா