Monday, December 22, 2014

தொ.பா. (தொ.பரமசிவன்)

Inline image 1

தொ.பா. (தொ.பரமசிவன்) - ஆய்வுலகில் ஒரு தனி இடம் பெறும் தற்கால ஆய்வறிஞர். 

பண்பாட்டு அசைவுகள்.. நூலை வாசித்து இவரது விரிவான ஆய்வுப் பார்வையை அறிமுகமாக்கிக் கொண்ட போது நான் அகமகிழ்ந்தேன். 

இவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. மிக ஏழ்மையான குடும்பத்தில் தாழ்த்தப்பட்டோர் என குறிப்பிடப்படும் சாதிப் பிரிவில் பிறந்தவர். கல்வெட்டு, சமூகவியல், தமிழ் நிகண்டுகள், சமஸ்கிருதம், தமிழ் இலக்கணம், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் என் பல்முக ஆய்வுகளில் ஈடுபாட்டினைக் கொண்டவராகத் திகழ்பவர்.
பண்பாட்டு மானுடவியல் என்பது இவரது சிறப்பு ஆய்வுத்துறையாக அமைகின்றது. 
பலதுறையில் ஆர்வம் கொண்டவர். சைவ வைஷ்ணவ சித்தாந்தங்களில் ஆர்வம் கொண்டவர்.

தமிழின் மேல் ஆர்வம் உள்ளோர் அறிந்திருக்க வேண்டிய சிறந்த ஆய்வறிஞர். இவரது நூற்களை வாங்கி வாசித்தல் அவசியம். அதற்கு முன் இவரை அறிமுகம் இல்லாதோர் இந்த ஆவணப்படத்தைப் பார்த்து அறிந்து கொள்வது உதவும்.


நடிகர் திரு.கமலஹாசன் இவரது பண்பாட்டு அசைவுகள் நூலை வாசித்து விட்டு தனது அண்மைய விஜய் டிவி பேட்டிக்கு சென்ற போது இந்த நூலின் 50 பிரதிகளை வாங்கிச் சென்று ஊழியர்களுக்குக் கொடுத்தாராம். இந்தச் செய்தியைப் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

இவரது பேட்டியைக் கேட்ட பின்னர்தான் ஈழம் என்ற சொல்லுக்கே மனைமரம் என்று பெயர் என்பதை அறிந்து கொண்டேன்.  பனை பற்றி சற்றே விரிவாக, மிக ஆர்வத்துடன் பேசுகின்றார்.

இவரது பேச்சில் பளிச்சென்று மனதைக் கவர்ந்தது ஒரு வாசகம். .. புத்தக வாசிப்பு போல மனித வாசிப்பு என்பது மிக முக்கியம் என்கின்றார். 

ஒப்பனை.. மிகை.. கற்பனை அற்ற தெளிவான சிந்தனை எழுத்து இவருடையது. இவை மிஞ்சிக் கிடப்பவை தானே இன்றைய பெரும்பாலான எழுத்துக்கள். 

நல்ல ஆய்வாளர்களை மதிக்க வேண்டியதும், போற்ற வேண்டியதும், அவர்களின் தொடர் ஆய்வுகளுக்கு உதவ வேண்டியதும் கற்றோர் கடமை.

சுபா

Sunday, December 21, 2014

அன்பில் இருமனம் கலந்தால்....

தற்செயலாக நேற்று எனது நண்பர் தோமஸை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது சந்தித்தேன். இருவரும் சந்தித்துப் பேசி ஏறக்குறைய 5 மாதங்கள் இருக்கும். 

இருவரும் கேக் சாப்பிட்டுக் கொண்டு பேசலாம் என ரெஸ்டாரண்டில் கேக் காபி ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். நான் கிறிஸ்மஸ் பரிசுகளை குடும்பத்தாருக்கு வாங்க வந்த கதைகளைச் சொல்ல அவரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக தனது பாட்டிக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் வாங்க வேண்டி வந்ததாகவும் அந்த குறிப்பிட்ட பொருள் எங்கு தேடியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். 

அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. 
'சுபா.. உனக்குத் தெரியுமா.. இப்போது நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. வாழ்க்கையே புதிய அர்த்தத்தோடு இனிமையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இனிமையாக இருக்கின்றது. எனது கோபங்கள்.. வருத்தங்கள் எல்லாம் மறைந்து விட்டன. நான் மனம் நிறைய மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.. இதற்கு காரணம் எனது வாழ்க்கை துணை தான். அவரின் கணிவான நட்பும், அன்பும் என் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன' என சிரித்து முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க புதுமணப் பெண் போல நாணத்துடனும் அளவில்லா மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். 

தோமஸ் எனது அலுவலக நண்பராக 11 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு நிறுவனத்திற்கு பணி மாற்றிக் கொண்டு சென்றாலும் எங்கள் நட்பு இன்றளவும் தொடர்வது.

இவரது வாழ்க்கைத் துணை ஒரு ஆண். இவர்களது மணம் ஒத்துப் போனமையால் இவர்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை ஏறக்குறைய 8 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியிருக்கின்றனர்.  இவர்கள் நட்பை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். தோமஸ் ஒரு கணினி பொறியியளாளர். என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு ஊரில் வசிப்பார். இவரது வாழ்க்கை துணை சுவிஸர்லாந்தின் லூஸர்ன் நகரில் இருப்பவர். அவர் ஒரு ஹோட்டலுக்குச் சொந்தக்காரர். அதனை நிர்வாகம் செய்வதே அவர் பணி. இருவரும் 2 வாரங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் வார இறுதியில் சந்தித்து 3 நாட்களை தங்களுக்காக செலவிடுகின்றனர்.  

அண்மையில் தான் விடுமுறைக்கு மூன்று வாரம் சென்றிருந்தனராம். விடுமுறை இதுவரை தான் அனுபவித்திராத வகையில் இனிமையாக கழிந்தது. என்று சொல்லி மகிழ்ந்தார் தோமஸ். வார்த்தைக்கு வார்த்தை தன் வாழ்கைத் துணையை வர்ணிப்பதும், அவர் சிறப்பைச் சொல்வதும் என காதலில் மூழ்கிக் கிடக்கும் இளம் காதலர்களின் உணர்வை பிரதிபலித்தது தோமஸின் பேச்சு. அவர்கள் இருவருமே 40களின் இறுதியில் இருப்பவர்கள். 

ஆண்கள் இருவர் இணைந்து காதலர்களாக, துணையாக வாழ்வது ஜெர்மனியில் மிகச் சகஜமாகிக் கொண்டு வருவது என்பது எனக்கு தெரிந்த விஷயம். ஆயினும் இப்படி காதலில் மயங்கி தன் துணையை வர்ணிக்கும் காதல் பேச்சினை நேற்று தான் நான் முதன் முதலாக கேட்டேன். 
கேட்டேன் என்பதை விட கேட்டு ரசித்தேன் எனச் சொன்னால் தான் சரியாக இருக்கும். 

அன்பில் இருமனம் கலந்தால் அதற்கு மேல்  வேறென்ன வேண்டும்??

Saturday, November 22, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 76

சுற்றுலா செல்வது என்பதே அலாதியான இன்பத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம் அல்லவா? ஒரே இடத்தில், செய்த காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கும் அன்றாட நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட சூழல்கள், வித்தியாசமான அனுபவங்கள் என அமைவது சுற்றுலாக்களின் போது நிகழ்பவை. சுற்றுலாக்கள் கேளிக்கை தானே என்ற ஒரு கண்ணோட்டத்துடன் காண்பதை என்பதை விடுத்து அதில் நம் கண்களுக்குத் தென்படும் புது உலகம் பற்றிய சிந்தனையைச் சற்று உயரத்தூக்கி கவனித்தால் சுற்றுலாக்கள் நமக்கு தரும் புதிய அனுபவங்கள் சிறந்த வாழ்க்கைப் பாடங்களாகவும் அமைவைதைக் காண முடியும். 

இக்கால சூழலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம், நகரம், ஊர், என பயணம் மேற்கொள்ள சிறந்த வசதி வாய்ப்புக்கள் அமைந்திருக்கின்றன. பொருளாதார துணை இருந்தால் விரைந்து பல இடங்களுக்குச் சென்று வருவது என்பது   சாத்தியப்படக்கூடிய ஒன்றே. இதே நிலை இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் அமைந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகச் சூழலில் பயணம் என நினைக்கும் போது பொதுப் போக்கு வரத்துக்காகp பெரும்பாலும் மாட்டு வண்டிகளை மக்கள் புழக்கத்தில் பயன்படுத்துவதே வழக்கமாக இருந்தது. அச்சமயம் தான் தமிழ்கத்திற்கு இரயில் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்த காலகட்டம். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஆதீனத்தைச் சேர்ந்தோருடன் தனது மதுரைக்காண பயணத்தை உ.வே.சா அவர்கள் விவரிக்கும் போது இத்தகைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

சோழ நாட்டிலேயே தனது பிறந்த நாள் முதல் வாழ்ந்து வந்த உ.வே.சா அவர்களுக்குப் பாண்டி நாடு செல்வது இதுவே முதல் முறை. அவருக்குப் புதிய இடத்திற்குச் செல்கின்றோம் என்ற உற்சாகம் ஒருபுறம். அதோடு ஆதீனகர்த்தரின் பரிவாரங்களில் அதிலும் முக்கியஸ்தர்களுடன் முக்கியஸ்தராக இணைந்து செல்கின்றோமே என்ற பெறுமை மறுபுறம். ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர், அடிப்படையில் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் அவருக்கு மீண்டும் இந்த ஊருக்கு வருவதில் அதிலும் கல்லிடைக்குறிச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி இருந்தது.  வெறும் நூல்களில் மட்டுமே.. அதிலும் திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்படும் பாண்டி நாட்டு ஆலயங்கலள் சூழல் பற்றி வாசித்து மட்டுமே அறிந்திருந்த உ.வே.சாவிற்கு இங்கே நேரில் வந்து புதிய இடங்களைப் பார்ப்பதும், ஆலய தரிசனங்களும், புதிய மனிதர்களைச் சந்தித்து உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சியை தந்தன.  தான் திருப்பூவனத்திற்கு வந்த போது  அங்கு திருப்பூவனத்துப் பெருமானைத் தரிசித்ததையும் வைகை நதியக் கண்டு களித்ததையும் குறிப்பிடுகின்றார் அத்தியாயம் 73ல். 

நான் இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த போது திருப்பூவனத்துப் பெருமான் சன்னிதி சென்று இறை தரிசனம் செய்து பொன்னனையாள் திருச்சிலையையும் கண்டு மகிழ்ந்தேன். ஆலயத்திற்கு எதிரே நீரில்லாத வைகையைக் கண்டு ஏக்கம் தான் உருவானது.

திருப்பூவணத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டிருக்கின்றனர். மதுரையைச் சார்ந்த வண்டியூர் தெப்பக்குளம் மேல் கரையிலுள்ள கோயில் ஒன்றில் தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்து  அங்கே தங்கியிருக்கின்றனர். அந்த இடத்தை ஆதீமூலம் பிள்ளை என்ற அந்த ஊரைச் சேர்ந்த கணவான் ஒருவர் மிகுந்த அலங்காரங்கள் செய்து சிறந்த வரவேற்பு நல்கியிருக்கின்றார். அந்த நாளில், இந்த நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்க அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர் 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு இரண்டு வேளை அன்னதானம் வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இந்த ஆதிமூலம் என்பவர் அந்த ஊரில் வாழ்ந்த நல்ல உள்ளம் படைத்த ஒரு காண்ட்ராக்டர் என்றும் நிறைந்த பக்திமான் என்றும் பல நற்காரியங்கள் செய்தார் என்றும் அதனால் அவர் பெயரில்  ஆதிமூலம் பிள்ளை தெரு என ஒரு தெருவிற்கு பெயரும் சூட்டப்பட்டிருந்தது என்றும் உ.வே.சா   குறிப்பிடுகின்றார். 

பயணத்தின் போது ஆதீனகர்த்தருக்கும் அவரது பரிவாரங்களாகச் சென்றோருக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு தனி வண்டிகளும் இந்தப் பயணத்தில் சென்றிருக்கின்றன.  ஆயிரக்கணக்கான பேர்கள் உண்ணுவதற்குப் போதுமான  அரிசி உணவுப் பதார்த்தங்கள் திருவாவடுதுறையிலிருந்து  வண்டி வண்டியாக வந்து குவிந்தன என்றும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

அக்கால நிலை இப்போது இல்லை. இன்று நடைமுறை  எல்லாவற்றிலும் மாற்றங்களை உட்புகுத்தி விட்டன. தூரப்பயணங்களுக்கு மாட்டு வண்டியில் ஆதீனத்தைச் சார்ந்தோர் பயணிப்பதும் மூட்டை மூட்டையாக பயணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது என்ற நிலையும் தேவையற்றவையாகி விட்டன. இன்றைய கால மாற்றம் பல புதிய நடைமுறைகளை ஆதீனங்கள் போன்ற சமய ஸ்தாபனங்களிலும் ஏற்படுத்தத் தவறவில்லை.

தொடரும்...


சுபா

Saturday, November 8, 2014

குடியரசில் பெரியார் உடன்....!- 10

சாதியின் பெயரால் கலவரங்கள் நடப்பதும் வன்முறைகள் நடப்பதும் இந்திய சூழலில் அதிலும் தமிழக சூழலில் இன்றளவும் நிகழ்ந்தவாறு இருப்பதை மறுப்பதற்கில்லை. கல்வி அறிவு பரவலாக வாய்த்து விட்ட இவ்வேளையில் சாதியின் பெயரால் அந்தஸ்தும், மனிதர்களுக்கிடையே  உயர்வு தாழ்வும் நோக்குதல் என்பது சாதாரண அறிவுக்கும் பொருந்தாது என்பதை உணர்ந்திருக்கின்றோம். 

கடந்த நூற்றாண்டும் இந்த நூற்றாண்டும் நமக்கு அளித்திருக்கும் பரவலான உலகளாவிய பார்வை என்பது நமக்கு மனிதர்களுக்கிடையே சாதி என்ற ஒரு விஷயம் மனித வாழ்க்கைக்கு, அதிலும் மாறுபட்ட மொழி, பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட இனக்குழு மக்களுடன் வாழும் நிலையில், எவ்வித தேவைக்கும் பலன் தரும் ஒன்றன்று என்ற உண்மையை தினம் தினம் நமது அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். இது மட்டுமன்றி சமூக நலன் விரும்பும் பெரியோர்கள் பலர், மக்கள் ஒற்றுமை, மக்களுக்கிடையே உயர்வு தாழ்வு எனக் காண்பது எனும் மடமை பற்றி விளக்கி சாதி என்ற ஒன்று நம் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் நச்சு போன்றது என இலக்கிய, சமூகவியல்பார்வையிலும் விளக்கிச் சென்றுள்ளனர், தொடர்ந்து சொல்லியும் வருகின்றனர்.  அப்படியான போதிலும் இன்றளவும் சாதி பெயர் சொல்லி மக்களுக்கிடையே பிரிவினை பார்ப்பதும் அந்தப் பிரிவினை வகுக்கும் நெறிகளைப் புகுத்தி அதன் வழியாக ஒரு மனித குல சட்டத்தை வரையறுத்து மக்களிடையே அதனைப் பரப்ப  முயற்சிகள் நடப்பதுவும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான முயற்சிகள் குருகிய பார்வையைக் கொண்ட, சுயநலப் போக்கை அடிப்படையாகக் கொண்ட நோக்கமென்பது தெளிவு.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகாவது இந்திய தேசத்து மக்களிடையே பிரிவினை என்பது சாதி வடிவில் என இல்லாது எல்லோரும் இந்திய தேசத்தவர் என்ற பார்வை தோன்றியிருக்க வேண்டும். அது இன்றளவும் முழுமையாகச் சாத்தியப்படவில்லை.

திரு.ஈ.வே.ராவின் குடியரசு இதழின் 1932ம் ஆண்டு வெளிவந்த தொகுப்பினை இன்று காலையில் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில்  அவரது கட்டுரை ஒன்று தீண்டாதார் துன்பம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார். ஆங்கிலேயர்களின் ராஜ்ஜியத்தில் இந்திய தேசத்து மக்கள் துன்பம் அனுபவிக்கின்றோம்; ஆகையால் இந்த தேசத்தை எங்களிடம் விட்டு விட்டு உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள் என்று ஆங்கிலேயர்களை நோக்கிக் கூறும் இந்தியர்கள், அதே இந்திய சமூகத்திற்குள்ளேயே ஒரு குழுவினரை தீண்டத்தகாதோர் எனப் பெயரிட்டு அழைப்பதும் அவர்களைத் துன்பப்ப் படுத்துவம் என்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றார். தீண்டத் தகாதோர், மற்றும் ஆதி திராவிடர் இனக்குழுக்களை மனிதர்களில் சரி சமமாக பார்க்கும் பார்வை இழந்த பாரபட்ஷமான நிலையை கண்டித்து இக்கட்டுரையை அவர் வரைந்திருக்கின்றார். அதில் அவர் குறிப்பிடும் சில சமகால நிகழ்வுகளும் சூழல்களும்   மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. 

கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் தீண்டத்தகாதோர் எனக் குறிப்பிடப்படுவோரை, உயர் சாதி என தம்மை அடையாலப்படுத்திக் கொள்வோர், அவர்கள் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அதனை தடுக்கும் பொருட்டு ஜில்லா கலெக்டருக்கும், போலிஸ் சூப்பரிண்டென்டுக்கும் விண்ணப்பக் கடிதம் அனுப்பி அவர்கள் முன்னேற்றத்தைத் தடைசெய்யக் கோரியமையைக் குறிப்பிடுகின்றார். அதோடு அவர்களுக்கு உயர் சாதிக் குழுவினர் என தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோர் தீண்டத்தகாதோர் எனத் தாம் அடையாலப்படுத்தும் சமூகத்தினருக்கு கொடுக்கும் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றார்.

1.பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது
2.பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது. படிக்கவும் கூடாது.
3.வெள்ளை வேஷ்டிக் கட்டக் கூடாது. அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும்.
4.பெண்கள் மார் ஆடை போடக்கூடாது. மீறி மார் ஆடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது.
5.நாகரிகமான நகைகள் போடக் கூடாது
6.குடைகள் பிடிக்கக் கூடாது. குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட வேண்டும்.
7.பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது. புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது.

.. இந்தக்கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? என்று கேட்கிறோம். இந்த நிலைதான் கிராமாந்தரங்களெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இதுவரை என்ன முயற்சியை, எந்தத் தேசீயவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம்.
                                                       -குடி அரசு - துனைத் தலையங்கம் - 21.02.1932

இக்காலத்தில் இத்தகைய நிலை இருக்கின்றதா என சிலர் வினவலாம். அதே நிலை முற்றும் முழுவதும் என்ற வகையில் இல்லாத போதிலும் சாதியின் பெயரால் நடக்கும் வன்முறைகளும், ஏற்றத் தாழ்வுகளும், தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளை, நம் சமூகத்தில் சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன் வரை இது போன்ற மனித குல சிந்தனைக்கு ஒவ்வாத சில விஷயங்கள் நடைமுறையில் இருந்தன என்பதையும் அறிந்து கொல்ள வேண்டியது அவசியம்.

சிறு பிராயத்திலேயெ சாதி சிந்தனையை குழந்தைகள் மனதில் ஊட்டி வளர்க்கும் பெற்றோர் சற்றே யோசிக்க வேண்டிய தருணம் இது. உலகின் பரப்பு, தான் தன் சமூகம் என்ற ஒரு பரப்பை கடந்து உலகமயமாக்கலில் மிக விரிந்த நிலையை அடைந்து விட்டது. ஆக, இக்காலகட்டத்திலும் பொது அறிவிற்குச் சற்றும் பொருந்தாத சாதிச் சிந்தனையை நம் மனதிலிருந்து களைவதோடு நமது குழந்தைகளுக்கும் சாதி எனும் இந்த விஷம் நிறைந்த சிந்தனைகள் சென்றடையாதவாறு காக்க வேண்டியது பெரியோர் கடமை!

தொடரும்...

சுபா

Tuesday, November 4, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 75

மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது மேலும் பல புதியமுயற்சிகளில் ஈடுபட மனம் நம்மைத் தள்ளும். உற்சாகம் பிறக்க மன மகிழ்ச்சி தேவை. அந்த மன மகிழ்ச்சியைப் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என நாம் எல்லோருமே அறிவோம்!

மன மகிழ்ச்சி பல காரணங்களால் ஏற்படலாம்.

சிலரது அன்பான சொற்கள் ஆர்வத்தைத் தூண்ட உதவலாம். சிறப்புக்கள் பெறும் போது மனதில் உற்சாகம் தோன்றும். பரிசு, பொருள், பாராட்டு .. என இவையெல்லாமே மனதில் மகிழ்ச்சியைத் தரக்கூடியவைதான் -  அந்தந்த சூழ்னிலைக்கேற்ற வகையில்!

பெரியவர்களே பாராட்டையும், இன்சொற்களையும், பரிசுகளையும் நினைத்து மகிழும் போது சிறுவர்களும் இளைஞர்களும் எத்தகைய வகையில் மன உற்சாகம் பெறுவார்கள் என்பதை நம்மால் உணர முடியும். இதனால் தான் நல்ல செயல்கள் செயப்படும் போது உற்சாகம் ஊட்டும் வகையில் பாராட்டுதல்களும் பரிசும் இன்சொற்களும் வழங்குவது மாணக்கர்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரவல்ல மாமருந்தாக அமைகின்றன. பள்ளிகளில் தான் பரிசும் இன்சொற்களும் பாராட்டுதல்களும் பெற்றால் இளைஞர்கள் நன்கு ஊக்கம் பெற்று கல்வியிலும் ஏனைய துறைகளிலும் நாட்டம் செலுத்துவார்கள் என்பதல்ல. இல்லத்தில் இனிமையான சூழலில் இன்சொற்களும் பாராட்டுதல்களும், பரிசுகளும் இளைஞர்களுக்கு மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்க வல்லன.

பல பெற்றோர்கள் கடுமையான சொற்களைச் சொல்லி, தங்கள் சிரமங்களை தம் குழந்தைகளுக்குச் சொல்லி, அதன் வலியை பகிர்ந்து கொள்வதே, குழந்தைகள் சிறப்பாக பெற்றோர் தம் சிரமம் அறிந்து  வளர உதவும் என்ற சிந்தனை கொண்டோராக இருப்பர். சில பெற்றோர்களுக்கு அதிலும் குறிப்பாக தந்தைமார் பலருக்கு முகத்தில் கடுகடுப்பும், கோபமும் கடுமையும் தான் தென்படும். குழந்தைகள் பயத்துடனும் நடுக்கத்துடனும் குற்ற உணர்ச்சியுடனுமே வலம் வருவதை விரும்பும் பலர் இன்றும் இருக்கின்றனர். இதுவே குழந்தைகளை பொறுப்பு மிக்கவர்களாக ஆக்கும் என்ற தவறான போக்கு கொண்டோர்கள் இத்தகையோர்.

குழந்தைகளின், இளைஞர்களின் உளவியல் கூறுகளை அறிந்து பெற்றோர் நடக்க வேண்டியது மிக அத்தியாவசியமானது. குழந்தைகளும் இளைஞர்களும் செய்யும் சிறு சிறு நல்ல   விஷயங்களையும் கவனித்து அதனை தக்க முறையில் பாராட்டுவது அவர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தை அளிக்கும். இப்போது செய்வதை விட இன்னமும் சிறப்பாகச் செய்து பாராட்டுதல் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டும். பெற்றோர் நமது நல்ல நடவடிக்கைகளைப் பார்த்து நம்மை, நமது செயல்களை அங்கீகரிக்கின்றனர் என்ற உணர்வே பல வேலைகளில் இளைஞர்களுக்கு ஒரு உளவியல் பலத்தையும் வழங்குகின்றது என்பதை நினைவு கொள்தல் அவசியம். அன்பு காட்டுதல், இனிய சொற்கள் சில கூறுவதும், ஒருவர் செய்த காரியத்தைச் சொல்லிக் காட்டி அதற்காகப் புகழ்ந்து பாராட்டுவது என்பன செய்வதற்கு அதிக சிரமமோ பொருள் தேவைப்படும் ஒன்றோ அல்ல. ஆனாலும் இதனைச் செய்வதற்குத்தான் பல பெற்றோருக்கு மனம் வருவதில்லை என்பது வேதனையான உண்மை. 

அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உள்ள வலிமை மிகப் பெரிது. இதனை உணர்ந்து தக்க முறையில் பயன்படுத்தும் போது அதனால் ஏற்படும் நல்ல வளர்ச்சி குறிப்பிடத்தக்க பலனைத் தருவதாகவே அமையும். 

உ.வே.சாவிற்கு உற்சாகம் கொடுக்கும் நிகழ்வுகளும் திருவாவடுதுறை மடத்தின் சார்பில் சில முறை நடந்தேறியுள்ளன. மதுரைக்கான பயணத்தின் போது கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றையும் பட்டு சால்வை, பட்டு தலையணை ஆகியவற்றை ஆதீனகர்த்தரிடமிருந்து பரிசாகப் பெற்றார் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

பயணத்தின் போது செல்லும் வழியில் மன்னார்குடியில் தங்கி இருந்த பொழுதில் உ.வே.சாவின் காதில் இருந்த பழைய கடுக்கனைப் பார்த்திருப்பார் போலும் தேசிகர். இந்த இளைஞனுக்குப் புதிதாக ஒரு கடுக்கண் வாங்கித்தருவோம் என நினைத்து ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அரும்பு கட்டிய சிகப்புக் கல் கடுக்கணை வாங்கி அதனை அணிந்து கொள்ளும்படி செய்திருக்கின்றார். இந்தக் கடுக்கணை கஸ்தூரி ஐயங்காரென்னும் ஒருவரை அழைத்து போட்டு விடும்படி தேசிகர் கேட்க அன்றிலிருந்து இந்தப் புதிய சிவப்புக்கல் கடுக்கண் உ.வே.சாவின் காதுகளை அலங்கரித்தன.

அதுமட்டுமா..?  மன்னார்குடியிலிருந்து புறப்படும் வேளையில் பட்டுக் கோட்டையில் ஒரு மோதிரத்தை வாங்கி தேசிகர் உ.வே.சாவிற்கு அணிந்து கொள்ளச் செய்திருக்கின்றார். இப்படி பொண்ணாபரணங்கள் பெற்ற மகிழ்ச்சி பெரும் குதூகலத்தை உ.வே.சாவிற்கு ஏற்படுத்தியது. அங்கிருந்து திருப்பெருந்துறை சென்று அங்கு சிலரை சந்தித்து உரையாடி பின் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியான பொழுதுகளையும் அது தனக்களித்த இன்ப அனுபவத்தையும் உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

இதனால் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகப் பொழுது போயிற்று. புதிய புதிய இடங்களையும் புதிய புதிய மனிதர்களையும் பார்க்கும் போது மனம் குதூகலமடைந்தது. கண்டியும், சால்வையும், கடுக்கனும், மோதிரமுமாகிய சம்மானங்களும், தேசிகருடைய அன்பு கனிந்த வார்த்தைகளும், அங்கங்கே கண்ட இனிய காட்சிகளும் என்னை ஒரு புதிய மனிதனாகச் செய்தன. நான் சந்தோஷத்தால் பூரித்தேன்.

தொடரும்..


சுபா

Monday, October 20, 2014

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

Change does not roll in on the wheels of inevitability, but comes through continuous struggle. And so we must straighten our backs and work for our freedom. 
-Martin Luther King, Jr.

இதனை வாசித்த போது என் மனதில் எழுந்த சிந்தனை...

போராட்டங்கள் எப்போதுமே வெற்றியில் தான் முடிய வேண்டுமா? தோல்வியும் கூட அடுத்த கட்ட பரிமாணத்தை முன் வைப்பதாக அமைய வாழ்க்கை காட்டும் வழிதான்!

ஒரு சுதந்திர நிலையை நோக்கியதாக அமைகின்ற பயணங்கள் எதுவும் சுலபமாக கைக்குக் கிடைத்ததாக உலக வரலாறு காட்டிக் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்த போராட்டம்.. அதில் சில வெற்றிகள், பல தோல்விகள்.. இவை அனைத்தும் கொடுக்கும் அனுபவப் பாடங்கள்.. இவையே கண் முன் தெரியும் நிதர்சனம்.

தோல்வி கொடுக்கும் பாடங்கள் அடுத்த கட்ட வெற்றியை அமைக்கும் படிகளாகத் தான் அமைகின்றன. தோல்வியின் சுவடுகள் நம் மனத்தை நோகச் செய்ய நாமே அனுமதிக்க வேண்டாம்.. நம் சிந்தனை, நமது சுய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கியதாக மட்டும் இருக்கட்டும்!

சுபா

Sunday, October 19, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 74

அக்காலத்தில் யாத்திரை செய்வது என்பது இன்று போன்று சுலபமான ஒரு காரியம் இல்லை என்பதை நம்மால் ஊகித்தறியமுடியும். இன்றைக்கு போல வாகன வசதிகள் அல்லாத காலகட்டம் அது. மடங்களிலிருந்து ஆதீனகர்த்தர் பயணிக்கவேண்டும் என்றால் அதற்கு நீண்ட நாளைய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது மிக அவசியம். தை மாதத்தில் ஒரு பிரயாணம் அப்படி ஏற்பாடாகி இருந்தமையையும் அதில் தானும் உடன் பங்கு கொண்டமையையும் விரிவாக உ.வே.சா அத்தியாயம் 72ல் குறிப்பிடுகின்றார்.

தஷிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவ்வந்திபுரத்தில் ஒரு மண்டபம் ஒன்றை அச்சமயம் கட்டியிருக்கின்றார். அதற்கு சுப்பிரமணிய தேசிக விலாசம் என பெயரிட்டு சிறப்பு செய்திருக்கின்றார். ஆதீனத்தோடு தொடர்புடைய மண்டபம் என்பதால் இம்மண்டபம் இன்னமும் இங்கு இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது என்றே கருதுகின்றேன்.

இந்தத் தம்பிரான் தேசிகரை தமது குழுவினருடன் இந்தப் பகுதிக்கு  வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என மிக விரும்பி விண்ணப்பம் அளித்திருந்தார். அதே சமயம் மதுரை மீனாஷி சுந்தரேசுவரர் ஆலயத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று மேலும் ஒரு சிறப்பு அழைப்பும் அவருக்கு வேறொருவரிடமிருந்து கிடைத்திருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு அவ்வருடம் தை மாதம் மதுரைக்கு ஒரு பிரயாணம் செல்ல தேசிகர் திட்டம் அமைத்தார்.

செல்லும் வழிகளில் இருக்கும் கனவாண்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் ஆதீனகர்த்தரின் வருகையைப் பற்றிய செய்தி அனுப்பிவைக்கப்பட்டது. செல்லும் வழியில் தாம் சந்திக்கும் நபர்களோடு உரையாட தம்மோடு சிலரையும் கூட்டிச் செல்ல தேசிகர் உத்தேசித்திருந்தார். அதில் உ.வே.சாவிற்கு முக்கிய பணிகளையும் மனதில் நினைத்திருந்தார். அதாவது வழியில் சந்திப்போருடன் உரையாடும் போது செய்யுட்கள் சொல்லவும் தமிழ் இலக்கிய விளக்கங்களை அளிக்கவும் என்ற வகையில் தேசிகரின் குழுவில் இருக்கும் தம்பிரான்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்தப் பயணத்தின் போது கல்லிடைக் குறிச்சியில் இருந்த சின்னப்பட்டம் ஸ்ரீ நமசிவாய தேசிகருக்கு மதுரையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி சுப்பிரமணிய தேசிகர் செய்தி அனுப்பியிருந்தார். இந்தச் செய்தி அனுப்புதல் என்பதை உ.வே.சா 'திருமுகம் அனுப்பினார்' எனக் குறிப்பிடுகின்றார். அந்த யாத்திரையின் போது வழியில் தேவைப்படும் தங்கும் வசதி உணவு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன.

தம்மோடு தமது தந்தையும் இந்தப் பயணத்தில் உடன் வருவதை உ.வே.சா விரும்பினாலும் வேங்கடசுப்பையருக்கு அதில் உடன்பாடு காட்டவில்லை. காரணம் அப்போதுதான் மதுரைக்கு முதன்முதலாகப் புகை வண்டி அறிமுகம் செய்யப்பட்ட காலம். பிரயாணத்தின் போது தாமும் பிறரும் புகை வண்டியில் பிரயாணம் செய்ய நேரும்.  வேங்கட சுப்பையர் இதில் பயணம் செய்யமாட்டார். ஆக அதனால் அவரையும் உடன் அழைத்துச் செல்வது என்பது நடக்காத காரியம் என்றும் உணர்ந்து திருவாவடுதுறையிலேயே அவரை குடும்பத்தாருடன் விட்டுச் செல்வது என முடிவானது.

தைப்பூசத்திற்கு முதல் நாள் தேசிகர் தம் பரிவாரங்களுடன் யாத்திரையைத் தொடங்கியிருக்கின்றார். திருவிடைமருதூரில் அச்சமயம் பிரமோத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே போய் தேசிகர் திருத்தேரை நிலைக்குக் கொண்டு வந்து பூஜை செய்து அங்கே அனைவரும் வழிபட்டனர். 

உ.வே.சாவிற்கு பயணத்திற்கு தேவைப்படும் என்று கித்தான்பை (இது என்ன வகை பை என்று தெரியவில்லை) ஒன்றையும் பட்டால் செய்யப்பட்ட தலையணையையும் ஜமக்காளம் ஒன்றினையும் தேசிகர் கொடுத்திருக்கின்றார். பிறகு தனக்க்ருகில் அமர வைத்து அன்புடன் ஒரு தம்பிரானிடம் சொல்லி கொணர்ச் செய்த கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றை உ.வே.சாவின் கழுத்திலே அணிவித்து ஒரு சால்வையைப் போர்த்தி இதே கோலத்தில் பெற்றோரிடம் சென்று பார்த்து அவர்கள் மனம் குளிர வைத்து ஆசிபெற்று வரும் படி சொல்லி அனுப்பியிருக்கின்றார்.

இதனை உ.வே.சா என் சரித்திரம் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். 

பிறகு என்னைச் சமீபத்தில் வந்து உட்காரச் செய்து, “நாம் யாத்திரை செய்யும் இடங்களிலெல்லாம் உமக்குத் தொந்தரவு கொடுக்க நேரும். தமிழபிமானிகளாகிய கனவான்கள் பலர் வருவார்கள். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தமிழ்ப் பாடல்களைச் சொல்ல வேண்டியது உமது கடமை” என்று கூறினார். “அப்படிச் செய்வது என் பாக்கியம்” என்றேன் நான்.

அவர் கட்டளையின்படி உடனே ஒரு தம்பிரான் கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றைக் கொணர்ந்து என் கழுத்திலே போட்டு ஒரு சால்வையை என் மேல் போர்த்தினார். நான் அச்சமயத்தில் ஆனந்த மிகுதியால் ஸ்தம்பித்துப் போனேன்; மயிர்க் கூச்செறிந்தது “இப்படியே திருவாவடுதுறைக்குப் போய்த் தந்தையாரிடம் விடை பெற்றுக் கொண்டு இங்கு வந்து விடும். நம்மோடு புறப்படலாம்” என்று தேசிகர் சொல்லி என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார்.

இப்படி தேசிகரிடம் அன்பையும் பெருமையையும் பெற்ற நாட்கள் உ.வே.சாவின் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள் என்பதில் ஐயமில்லை. தமிழ் மேல் தீவிர பற்று கொண்ட உ.வே.சா என்ற அந்த இளைஞன் மீது   தேசிகர் கொண்டிருந்த அன்பும் நம்மை உருகச் செய்கின்றது.

தொடரும்...
சுபா

Monday, October 13, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 73

உ.வே.சாவின் வாழ்க்கை திருவாவடுதுறையிலேயே தொடர்ந்தது. தனது பெற்றோரையும் மனைவியையும் பிரிந்து அவர் திருவாவடுதுறை ஆதீனத்திலேயே தங்கியிருந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தொடர்ந்து வந்தார். அதே வேளை சுப்ரமணிய தேசிகரிடத்திலும் பாடம் கேட்பதைத் தொடர்ந்து வந்தார்.நாளுக்கு நால் இவரது அறிவின் விசாலம் விரிவடைந்து வந்தது. மடத்திற்கு வரும் பல கல்விமான்கள், செல்வந்தர்கள் ஆகியோர் நட்பும் கிடைக்கப்பெற்றது. 

மடத்தில் இருக்கும் தம்பிரான்களில் இவரிடம் பாடம் படிக்கும் சிலர் உ.வே.சா மடத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டால் தங்களுக்கு அது தமிழ் கற்றலில் மிக உதவும் என நினைத்து சுப்பிரமணிய தேசிகரை அணுகி மடத்திலேயே அவர் பணி தொடர தேசிகர் உதவ வேண்டும் என அவ்வப்போது கேட்டு வந்தனர். தேசிகர் மனத்திலும் இந்த விருப்பம் இருந்திருக்க வேண்டும். 

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கற்றவர் என்ற ஒரு பெருமையுடன் உ.வே.சாவின் தமிழ்க் கல்வி ஞானமும் அதன் மேல் அவர் கொண்டிருந்த பற்றும் தேசிகரிடம் அவர் காட்டிய பணிவும் அன்பும், மரியாதையும் தேசிகரை மிகக் கவர்ந்திருந்தன. ஆக திருமடத்திற்குத் தகுந்ததொரு புலவர் உருவாகிக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் அவர் மனதிலும் இருந்து வளர்ந்து வந்தது.

இந்த நிலையில் குடும்பத்தாரைப் பிரிந்து தனியாக உ.வே.சா வாழ்க்கையைத் தொடர்வது சரியல்ல என முடிவெடுத்து திருவாவடுதுறையிலேயே அவருக்கு ஒரு தனி வீட்டினை கட்டும் பணியை மடத்து அதிகாரிகளுக்குப் பிறப்பித்தார் தேசிகர். இந்த வீடு உருவாகி முடியும் வரை இது உ.வே.சா குடும்பத்தினருக்குத் தான் என்பது உ.வே.சாவிற்கே தெரியாது. புது மனை கட்டி முடிவானதும் பெற்றோருக்குக் கடிதம் போட்டு வரச் சொல்லும் படி பணித்தார் தேசிகர். 

திருவாவடுதுறை வந்து சேர்ந்த உ.வே.சாவின் குடும்பத்தினருக்கு ஆனந்தம் நிறைந்த ஆச்சரியமாக இந்த விஷயம் அமைந்தது. பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராக மாறி மாறி நாடோடி போல சில காலங்கள் தமது குடும்பத்தை வழி நடத்தி வந்த உ.வே.சாவின் தந்தையாருக்கு இனி நிரந்தரமாகக் குடும்பத்துடன் தங்க ஒரு இடம் கிடைத்தது மாபெரும் மகிழ்ச்சி என்பதில் ஐயமேது ? எக்காலத்து செய்த நற்செயலோ, பூர்வ ஜன்ம புண்ணியமோ திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் வடிவில் அவர்கள் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை கிடைத்திருக்கின்றதே என அவர்கள் மனம் மகிழ்ந்து போனார்கள்.

ஒரு சுப நாளில் புது மனைக்குச் சென்று தனது புது வாழ்க்கையை தனது பெற்றோர் மனைவியுடன் தொடங்கினார் உ.வே.சா.

சாமிநாத ஐயர் என உ.வே.சாவை அப்போது மடத்திலும் சரி ஏனைய தமிழ்ப் புலவர்களும் சரி, நண்பர்களும் சரி அழைப்பது வழக்கம். அது பிறகு திருவாவடுதுறை சாமிநாத ஐயரென்று வழங்குவது மரபாக உருவாகியது. இது ஒரு ஊர்ப் பெயராக இருப்பினும் தமது பெயரோடு இணைத்து வழங்கப்படுவதைக் கேட்கையில் உ.வே.சாவிற்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி ஏற்பட்டதென்று தனது குறிப்புக்களின் வழி என்.சரித்திரத்தில் அவர் தன் மனதின் மகிழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார்.

”என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை என் பெயரோடு சேர்த்தபோது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. ”

ஆதீனத்தில் நெடுங்காலம் இருக்கும் நிலை உவே.சாவிற்கு வாய்க்கவில்லை. ஆதீன வித்வானாக இல்லாத போதிலும் சில பதிப்புக்களில் தேசிகர் உ.வே.சா வை ஆதீன வித்வான் எனக் குறிப்பிட்டு எழுதியமையைப் பெருமையாகக் கருதி அதனைக் குறித்து வைக்கின்றார் உ.வே.சா.

”சுப்பிரமணிய தேசிகர், ஆதீன வித்துவான் என்று போடவேண்டுமென்று சொன்னதே எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கிற்று. அவர் என்னைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்தை அறிந்தேன். அப்பெயரை அப்பொழுது மும்மணிக் கோவைப் புஸ்தகத்தில் அச்சிடாவிட்டாலும், தேசிகர் பிற்காலத்தில் தம் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். நான் கும்பகோணம் காலேஜில் உத்தியோகம் பெற்ற பிறகு அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும், அனுப்பிய புஸ்தகங்களின் முன் பக்கங்களிலும், “நமது ஆதீன வித்துவான்”, “ஆதீன மகா வித்துவான்” என்றெல்லாம் எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.”

ஆதீன வித்வானாகவோ புலவராகவோ ஆவதற்கு முன்னரே அவருக்கு மற்றொரு வாய்ப்பு அமைந்தது. இதுவே அவரது வாழ்க்கை பயணத்தில் மூன்றாவது மிகப் பெரிய மாற்றத்தை அவருக்கு உருவாக்கி அமைத்தது. இளம் வயது இளைஞனாக இருந்த உ.வே.சா கல்வி கற்ற அறிஞராக,  ஒரு பணியை பொறுப்புடன் எடுத்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து செயலாற்றும் பணிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வல்லமை பெற்றவராக அவர் வாழ்க்கையில் புதிய அடிகளை எடுத்து வைக்கும் புதுப் பயணம் தொடங்கிற்று..!

தொடரும்...

சுபா

Monday, October 6, 2014

ஜெர்மானிய லூதரன் மதபோதகர்களின் தமிழ் பங்களிப்புக்கள்

கட்டுரை ஆசிரியர்: முனைவர்.க.சுபாஷிணி



அறிமுகம்

இந்திய நிலப்பரப்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் உருவாக்கம் கண்ட லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டில் தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில், அதில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர். இந்தப் பாதிரிமார்களின் தீவிர மதம் பரப்பும் பணிகளின் பலனாக அமைந்ததுதான் தமிழின் முதல் அச்சு வடிவம் பெற்ற நூலாக விளங்கும் தம்பிரான் வணக்கம். தமிழ் மட்டுமன்றி இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு வடிவம் பெற்ற ஒரு இந்திய மொழி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கு உண்டு. இந்த நூல் அச்சு வடிவம் பெற்று  வந்த பின்னர் தொடர்ச்சியாக மேலும் சில நூல்கள் அச்சுப்பதிப்பாகி வெளிவந்தன

1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்.  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகம் செய்வது மட்டுமே ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லூதரேனியன் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை மன்னர் விரும்பினார். 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது.

சீகன்பால்க் (1682 –1719)

1706ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி டென்மார்க்கிலிருந்து  அப்போதைய அரசர் மாமன்னர் நான்காம் ஃப்ரெடெரிக் அவர்களது உத்தரவில் இந்தியாவின் தமிழகத்தின் தரங்கம்பாடி நகருக்கு வந்திறங்கிய கப்பலில் ஜெர்மானிய லூத்தரன் சபையைச் சார்ந்த பாதிரியார் சீகன்பால்க் அவர்களும் ப்ளெட்சோவ் அவர்களும் வந்தனர். பாதிரியார் சீகன்பால்க் தனித்துவம் மிக்க மதபோதகராகத் திகழ்ந்தவர். மதம் பரப்பும் பணியில் ஈடுபடுவது சிரமம் நிறைந்த, கட்டுப்பாடுகள் பல நிறைந்த காரியமென்பதால் வர்த்தகத்தில் ஈடுபடுவதை  மட்டும் நோக்கமாக  கொண்டிருந்தது டேனிஷ் குழு. ஆக மத போதனை செய்து தமிழகத்தின் இந்து மக்களை மதமாற்றம் செய்யும் பணிக்காக ஜெர்மனியில் ஹாலெ, ட்ரெஸ்டன் பகுதிகளில் ஃப்ரான்க்கன் நிறுனத்தைச் சார்ந்த பாதிரிமார்களின் உதவியை நாடியது டேனீஷ் அரசு.

இங்கிருந்து தான் லூதரன் கொள்கைகளைப் பரப்பும் பாதிமார்கள் கல்வி பயின்று ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மதம் பரப்பும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் ட்ரெஸ்டன் ஹாலே நிறுவனமே முக்கிய மைய நகரமாகவும் விளங்கி வந்தது. இந்த முயற்சியின் பலனாக சீகன்பால்க் முதல் லூதரன் மிஷனரியாக டேனிஷ் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் தரங்கம்பாடியில் வந்திறங்கினார்.

தமிழ் மட்டுமே அறிந்திருந்த  உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்ய பாதிரிமார்களுக்கு அதி முக்கியமாகத் தேவைப்பட்டது தமிழ் மொழி அறிவே. சீகன்பால்கைப் பொருத்தவரை அவர் தனது தாய்மொழியான ஜெர்மானிய மொழியும் லத்தீன் மொழியும் மட்டுமே அறிந்தவர். இந்தியா வந்து சேர்ந்தவுடன் அவருக்கு இருந்த பெரும் சோதனை மொழியறியா உலகில் தனது குறிக்கோளை நிறைவேற்ற மொழித்தடையாக அமைந்ததே. ஆக சீகன்பால்க் தமிழ் மொழியை எழுதவும் பேசவும் கற்பதையே தனது முதல் பணியாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்கினார்.


சீகன்பால்கின் குறிப்புக்களின் வழி அக்காலகட்டத்தில் தமிழ் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்த உள்ளூர் மக்கள் மிகச் சொற்பமான எண்ணிக்கை தான். 2% மக்களே கல்வியறிவு பெற்றோராக இருந்தனர் என்று அவர் தனது குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கின்றார்.  கல்வி கற்றல் என்பது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே அளிக்கப்பட்ட உரிமையாக அக்கால கட்டத்தில் இருந்தது. ஆக அந்த நிலையில் அயல் நாட்டைச் சேர்ந்த சீகன்பால்க் தமிழ் மொழியைக் கற்பது என்பது எளிமையான காரியமாக அமையவில்லை. கற்க சரியான ஆசிரியர் கிடைப்பது என்பது ஒரு சோதனையாக இருந்த அதே பொழுது அயல் நாட்டினரான இவர் தமிழ் மொழி கற்பதையும் சிரமங்களுக்கிடையே மேற்கொள்ள வேண்டியிருந்தது.  சீகன்பால்க் முதலில் போர்த்துக்கீஸிய மொழியைக் கற்க ஆரம்பித்தார். ஏனெனில் முன்னரே தமிழகம் வந்திருந்த போர்த்துக்கீஸிய பாதிரிமார்களின் முயற்சியால் உள்ளூர் மக்களில் சிலர் போர்த்துக்கீஸிய மொழியைக் கற்றிருந்தனர். ஆக போர்த்துக்கீஸிய மொழியும் உள்ளூர் மக்களுடன் தொடர்பினை ஏற்படுத்த உதவும் என்ற காரணத்துடன் போர்த்த்துக்கீஸிய மொழியைக் கற்றார் சீகன்பால்க்.

அதன் பின்னர் உள்ளூரில் தமிழ் பாடம் போதித்துக் கொண்டிருந்த ஒரு ஆசிரியரை தனது வீட்டிற்கு வரவழைத்து அங்கு அவர் தனது மாணவர்களையும் அழைத்து வந்து பாடம் நடத்தலாம் எனச் சொல்லி அனுமதி வழங்கி தனது வீட்டிலேயே தமிழ்ப்பாடம் நடக்கும் படி ஏற்பாடு செய்தார். அப்படி தமிழ்ப்பாடம் நடக்கும் போது அதில் மாணவராக இணையாமல் முழு பாடம் நடக்கும் போதும் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டு தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்தார்.  அவருக்கு அலெப்பா என்ற ஒரு தமிழ் உதவியாளரும் அமைய அவருடன் தமிழில் பேசியும் உள்ளூர் விஷயங்களை அவர் வழியாக போர்த்திக்கீஸிய மொழிக்கு மாற்றம் செய்தும் அறிந்து கொண்டார் சீகன்பால்க். முதல் மூன்று ஆண்டுகள் தமிழை மட்டுமே வாசிப்பது பேசுவது என்று கட்டுப்பாட்டை உறுதியாக வைத்துக் கொண்டார். அக்கால கட்டத்தில் எந்த ஜெர்மானிய நூலையும் லத்தீன் மொழி நுலையும் தாம் படிக்கவில்லை என தமது நாட்குறிப்பு நூலில் குறிப்பிடுகின்றார்.



தமிழகத்தில் தான் இருந்த தனது முதல் இரண்டு ஆண்டுகளில் தான் சேகரித்த 161 தமிழ் புத்தகங்களை இவர் கோப்பன்ஹாகன் நகரில் இருக்கும் அரச தலைமையகத்திற்கு  அனுப்பி வைத்திருக்கின்றார். இவற்றுள் 16 நூல்கள் சீகன்பால்க் தாம் கைப்பட எழுதிய தமிழ் நூல்கள். அக்காலகட்டத்தில் தாம் சந்தித்த ஒரு தமிழ் விதவை பெண்மணியிடமிருந்து பெற்ற ஓலைச்சுவடி நூல்களையும் இவர் கோப்பன்ஹாகன் நகரின் அரச தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தார்.  வெகு விரைவில் பல தரப்பட்ட தமிழ் நூல்களை வாசிக்கும், புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றதோடு தமிழ்ச் சொற்களை நூல்களில் வாசிக்கும் போது பட்டியலிட்டு குறித்து வைத்தார். இதன் அடிப்படையில் தான் இவரது முதல் தமிழ் லத்தின் மொழி அகராதி உருவாக்கம் பெற்றது. ஒவ்வொரு நாளும் எட்டரை மணி நேர தீவிர தமிழ் பயிற்சி மேற்கொண்ட சீகன்பால்க் தமிழ் மொழியில் பேசவும் நூல்களை எழுதும் திறனும் பெற்றார். இந்த வளர்ச்சின் விளைவாக 1708ம் ஆண்டில் தரங்கம்பாடியில் தேவாலயத்தில் தமிழில் முதன் முதலாக தனது மத உரையை ஆற்றி தமிழில் லூதரேனியன் சமய சேவையைத் தமிழகத்தில் தொடக்கினார்.

சீகன்பால்கின் தமிழ் நூல்கள்

ஒரு மொழியைக் கற்க அம்மொழியின் இலக்கணம் இன்றியமையாதது. ஆக இலக்கண நூலை உருவாக்குவதை தமது முக்கிய கடமையாகக் கொண்டார் சீகன்பால்க்.  தமிழ் படிக்க ஆரம்பித்த தருணத்திலேயே தனது இலக்கண நூல் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டார்.  1716ம் ஆண்டில் ஜெர்மனியின் ஹாலெ நகரில் இவரது முதல் நூலான Grammatica Damulica அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.




இந்த நூல் எட்டு பகுதிகளைக் கொண்டது.  இந்த நூலின் அணிந்துரையை சீகன்பால்க் தாம் நோர்வே நாட்டில் 1715ம் ஆண்டில் சில மாதங்கள் தங்கியிருந்த காலகட்டத்தில் எழுதினார். இந்த அறிமுக உரை லத்தீன் மொழியில் அமைந்தது.  நூலின் முதற் பகுதி  தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் பகுதி.  இரண்டாம் பகுதி தமிழ் சொற்களின் உச்சரிப்பை விளக்கும் பகுதி.  மூன்றாம், நான்காம், ஐந்தாம் பகுதி இலக்கண விதிகளை விளக்கும் பகுதி. ஆறாம் பகுதி வினைச்சொல்லை விளக்கும் பகுதி.  ஏழாம் எட்டாம் பகுதிகள் சொற்களின் அமைப்பை விளக்குவன.  ஆக மொத்தம் 128 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல் இது .

லத்தீன் மொழியைக் கொண்டு ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் விளக்கும் விதமாக இந்த நூலை இவர் உருவாக்கியிருக்கின்றார். லத்தீன் மொழியிலேயே ஒவ்வொரு சொல்லின் பொருளும் விளங்குமாறும் அமைத்திருக்கின்றார். இந்த நூலில் முழுமையாக நாம் புள்ளிகளற்ற தமிழ் மொழி எழுத்தை தாம் காண்போம்.

எழுத்தின் மேல் புள்ளி வைத்து மெய்யெழுத்துக்களை எழுதும் வழக்கத்தை அறியத் தவறிய சீகன்பால்க் தாம் அறிந்த முறையிலேயே  இந்த இலக்கண நூலைப் பிழையுடனேயே தயாரித்தார் என்பது வரலாற்று உண்மை. இதற்கு அடிப்படை காரணம், தாம் தமிழ் கற்ற வேளையில் ஓலைச்சுவடியில் பாடத்தை எழுதி கற்பித்த ஆசிரியர் பனை ஓலையின் தன்மை நிலைக் கருதி புள்ளி வைப்பதைத் தவிர்த்த போக்கின் அடிப்படை காரணத்தை அறியாது தானும் இவ்விஷயத்தில் போதிய தெளிவில்லாமலேயே அச்சு வடிவத்திலும் புள்ளிகளை நீக்கிய தமிழ் எழுத்துக்களை எழுதியே அதனைத் தமிழ் என அறிமுகப்படுத்தி இந்த நூலின் வழியாக ஐரோப்பிய சமூகத்துக்குக் குறிப்பாக டேனிஷ் ஜெர்மானிய சமூகத்துக்கு தமிழை அறிமுகப்படுத்தினார்.

இதே தவற்றை முந்தைய கத்தோலிக்க பாதிரிமார்களின் முயசிகளிலும் நாம் காண்கின்றோம். போர்த்துக்கீஸிய பாதிரியார் ஹெண்ட்ரிக் அடிகளாரின் தம்பிரான் வணக்கம் நூலும் கிரிஸ்தியாயினியும் கூட மெய்யெழுத்துக்கள் புள்ளிகள் நீங்கிய வடிவத்திலேயே தாம் அமைந்திருக்கின்றன.

சீகன்பால்க் Grammatica Damulica வை அடுத்து ஒரு சொற்பொருள் அகராதி ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு முதலில் 20,000 சொற்கள் கொண்ட ஒரு லெக்ஸிகனை உருவாக்கினார். சமயம், இலக்கியம், வானியல், சமூகம், மருத்துவம் என பல்வேறு வகைப்பட்ட நூல்களை வாசித்து அவற்றிலிருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு இந்த லெக்ஸிகனை அவர் உருவாக்கினார். இந்த லெக்ஸிகன் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தமிழ்சொல்லை வரிசைப்படுத்துவது. இரண்டாம் பகுதி இந்தச் சொல்லை உச்சரிக்கும் விதம் லத்தீன் மொழியிலும் மூன்றாவது பகுதி அதே சொல்லின் ஜெர்மானிய மொழி விளக்கமும் என்ற வகையில் அமைந்த நூல் இது. ஆரம்பத்தில் 20,000 சொற்களுடன் உருவாகிய இந்த நூல்  1712ம் ஆண்டில் 40,000 சொற்களுடன் விரைவடைந்தது என்பதை அறிகின்றோம்.

தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தைத் தமிழ் நிலப்பரப்பில் வாழும் கால கட்டத்தில் சீகன்பால்க் தாம் உணர்கின்றார். ஆக இலக்கிய செழுமையை விளக்கும் சொற்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களிலிருந்தும் பேச்சு சொற்களிலிருந்தும் மாறுபடுவதை உணர்ந்து கவித்துவம் நிறைந்த இலக்கியச் சொற்களின் பட்டியல் ஒன்றை தாம் தயாரிக்க வேண்டும் என சீகன்பால்க்  விரும்பினார்.  பொதுவாக இலக்கிய நூல்கள் சமய நூல்களாக சமய சார்புடன் அமைந்தவையாக இருப்பதனால் அச்சொற்களையும் தாம் அறிந்து அதனையும் அறிமுகப்படுத்த ஒரு நூல் அவசியம் எனக் கருதி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.  இந்த முயற்சியின் விளைவாக 1708ம் ஆண்டில் 17,000 சொற்கள், குறிப்பாக இலக்கியச் செழுமை வாய்ந்த சொற்களின் தொகுப்பாக ஒரு லெக்ஸிகனை உருவாக்கினார் சீகன்பால்க்.  இந்த நூலே தமிழில் இருக்கின்ற எல்லா இலக்கிய நூல்களையும் ஐரோப்பியர் வாசித்துப் படித்து கற்றுக் கொள்ள வழி செய்யும் திறவுகோலாக அமையும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார் சீகன்பால்க்.  இதனைச் செயல்படுத்த நான்கு புலவர்களைத் தேடி அழைத்து வந்து அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து நான்கு மாதங்கள் பணியில் அமர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த 17,000 சொற்களைப் பட்டியலிட்டு புரிந்து கொண்டு லத்தீன், ஜெர்மன் மொழியில் உச்சரிப்பும் விளக்கமும் எழுதி அதனைத் தயாரித்தார்.

இதனை தாம் தயாரித்த போது அனைத்தையும் ஓலைச்சுவடியிலேயே எழுத்தாணி கொண்டு எழுதியிருக்கின்றார் என்பது தமிழைக் கற்றுக் கொள்வதில் அவர் காட்டிய தீவிரத்தை உணர்த்துவதாக அமைகின்றது. ஜெர்மனியின் ஹாலே ஃப்ரான்கன் நிருவனத்தின் அறிக்கையில் குறிப்படப்படும் செய்திகளின் அடிப்படையில், 1712ம் ஆண்டில் தாம் பனை ஓலைச் சுவடிகளில் எழுதி சேகரித்த இந்த  சொற்களஞ்சியமானது 1726ம் ஆண்டில், அதாவது சீகன்பால்க் மறைந்து சில ஆண்டுகள் கடந்த பின்னர் தான் நூல் வடிவம் பெற்றது என்ற செய்தியை அறிகின்றோம்.


இது தவிர தனது இந்தியாவிற்கான இரண்டாவது கடற்பயணத்தின் போதும் சீகன்பால்க் ஒரு நூலை உருவாக்கினார். இது லத்தீன் தமிழ் சொற்றொடர் களஞ்சியம். இந்த நூல் சற்றே வித்தியாசமானது. பொது மக்கள் பயன்பாட்டில் புழங்கப்படும் சொற்றொடர்களின் தொகுப்பாக அமைவது இந்த நூல்.  இந்த நூலில் ஒருமை பண்மை, வேற்றுமை உருபுகளின் பயன்பாடு என்பன எளிமையாக விளக்கப்பட்டிருக்கும். இந்த நூலிலும் மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றியே அச்சு வடிவத்திலும் எழுதப்பட்டன.



சீகன்பால்கின் புகழ் கூறும் மேலும் ஒரு  நூல் Bibliotheca Malabarica. இது பல தமிழ் நூல்களின் தகவல் அடங்கிய ஒரு அட்டவணை என்றும் கூறலாம். இந்த நூலை நான்கு பகுதிகளாக சீகன்பால்க் பிரித்திருக்கின்றார்.



முதல் பகுதி தமிழில் அமைந்த லூதரேனியன் மத நூல்களின் பட்டியல். இரண்டாம் பகுதியாக அமைவது தமிழில் கிடைத்த கத்தோலிக்க மத நூல்களின் பட்டியல். அடுத்ததாக வருவது 119 தமிழ் ஹிந்து மத, சமண மத நூல்களின் பட்டியல். இந்த பட்டியல் வியக்கத்தகும் வகையில் தமிழ் நூல்களை நமக்கு அறிமுகப்படுத்தும் ஆவணமாகவும் திகழ்கின்றது. இந்த நூல்கள் யாரிடமிருந்து பெறப்பட்டன என்ற பின்புலக் குறிப்புக்களையும் இந்த நூலின் முன்னுரை பகுதியில் சீகன்பால்க் வழங்கியிருக்கின்றார்.  இறுதிப் பகுதியாக அமைவது இஸ்லாமிய தமிழ் நூல்களின் பட்டியல்.

முக்கிய லூதரன் பாதிரிமார்கள்

க்ருண்ட்லர் தமிழ் மொழி ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர் என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றார். தமிழ் இலக்கணம் என்பதை விட தமிழ் மருத்துவத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் குருண்ட்லர். இவர் மருத்துவ ஓலைச் சுவடிகளை வாசித்து அவற்றை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் Malabar Medicus என்ற ஒரு லத்தீன் மொழி நூலை ஐரோப்பியர் பயன்பாட்டிற்காக எழுதினார். இவர் தனது மிஷனரி பணிக்காலத்தில் கணிசமான  எண்ணிக்கையில் தமிழில் அமைந்த பனை ஓலைச் சுவடிகளைச் சேகரித்து கோப்பன்ஹாகன் அரசு மையத்திற்கு அனுப்பி வைத்தார். இவை இப்பொழுதும் டென்மார்க் அரசு ஆர்க்கைவிலும் மற்றும் ஜெர்மனியில் ஹாலே ஃப்ராங்கன் நிறுவனத்தில் பாதுகாப்பில் உள்ளன.

பெஞ்சமின் ஷூல்ட்ஸெ (Benjamin  Schultze) தமிழ் மட்டுமன்றி தெலுங்கு ஹிந்துஸ்தானி மொழியிலும் பாண்டியத்துவம் பெற்ற பாதிரியார்.  தமிழில் மிகச் சரளமாக உரையாற்றக் ஊடிய திறமை பெற்றவர் இவர். இவரே பைபிளை தெலுங்கிலும் ஹிந்துஸ்தானி மொழியிலும் முதன் முதலாக மொழி பெயர்த்தவர் என்ற  பெருமையைப் பெறுபவர். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளின் இலக்கியச் செழுமையை ஜெர்மன் டடேனிஷ் மொழிகளோடு ஒப்பீடு செய்து  எழுதியவர்.  ஷூல்ட்ஸெ பல ஜெர்மானிய கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தார். Hymnologia Damulica  என்ற இவரது தமிழ் மொழியாக்க நூல் 1723ம் ஆண்டில் வெளியிடப்படது.  சீகன்பால்க் பைபிளை தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்து அப்பணி முடியாமலேயே மறைந்த நிலையில், அப்பணியின் தொடர்ச்சியை மேற்கொண்டு  பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார் இவர்.  இவரது மொழி பெயர்ப்பு பணிகளின் போது சமஸ்கிருத மொழிக்கும் லத்தீன், கிரேக்க, ஜெர்மானிய மொழிக்கும் தொடர்பு இருப்பதாக தாம் அறிவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.




வால்தர் (Christoph Theodosius Walther 1699 - 1741),  தேம்பவாணி எழுதிய வீரமாமுனிவரின் தமிழ் இலக்கண நூலை பிழை திருத்தம் செய்து வெளியிட்ட ஜெர்மானிய லூத்தரன் மிஷனரி  என்ற பெருமையைப் பெருபவர். தமிழ் இலக்கணத்தில் மிக ஆழமான புலமைக் கொண்டிருந்தவர். லூதரன் பாதிரிமார்களின் வரிசையில் தனியிடம் பெறுபவர் இவர். இவரது Grammatical Observationes (1739) நூல் இவரது தமிழ் இலக்கணத் திறனை வெளிப்படுத்தும் சான்று. கத்தோலிக்க பாதிரியார் வீரமாமுனிவரின் (Jesuit C.J. Beschi) சமகாலத்தவர் இவர். வீரமாமுனிவரின் நூலை பிழை திருத்தி முன்னுரை எழுதியவர் என்ற பெருமையும் பெருபவர் இவர் என்றால் இவரது தமிழ் புலமையை ஓரளவு ஊகிக்க முடிகின்றது அல்லவா?

ரைனூஸ் Rhenius (1790 - 1838) 22 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்து தமக்கு முந்திய லூதரன் பாதிரி மார்களின் இலக்கண நூல் உருவாக்க முயற்சிகளை ஆய்ந்து அவற்றை மேலும் செம்மையாக்கி தனது தமிழ் இலக்கணப் படைப்பாக  A Grammar of the Tamil language with an Appendix  என்ற 300 பக்க நூலை உருவாக்கினார். இந்த நூல் 1836ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

முடிவுரை
ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழகத்திற்கான வருகையும் அதன் பின்னர் அவர்கள் தீவிர ஈடுபாட்டுடன் தமிழ் மொழி கற்று ஐரோப்பாவில் தமிழ் மொழி கல்லூரியில் பாடமாக போதிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகளும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள். தமிழ் மொழியில் அமைந்த நூல்களும் ஆவணங்களும் இன்னமும் பல ஐரோப்பிய நூலகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன என்ற செய்தியை அறிந்து அவற்றை வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது உலகளாவிய அளவில் தமிழ் மொழியின் நிலையை அறிந்து கொள்ள உதவும்!

துணை குறிப்புக்கள்

  • German Indology, C.S.Mohanavelu
  • தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம், தமிழ்நாடன்
  • Es begann in Tranquebar, Die Geschichte der ersten evangelischen Kirche in Indien, Arno Lehmann
  • German Tamil studies, Arno Lehmann

Saturday, September 27, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 72

இன்றும் கூட தமிழ் மொழிக்கான சிறப்பான அகராதி ஒன்று வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். க்ரியா, சென்னைப் பல்கலைக்கழக அகராதி போன்ற குறிப்பிடத்தக்க ​முயற்சிகளை நினைவு கூறும் அதே வேளை முந்தைய முயற்சிகளைப் பற்றியும் சற்றே அறிந்திருப்பதும் இவ்வகை முயற்சிகளின் ஆரம்ப நிலையை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைகின்றன. 

ஆண்டோ டி ப்ரென்கா (Antao de Proenca) (1625 - 1666) என்ற போர்த்துக்கீஸியர் தொகுத்த அகராதி ஒன்று தமிழ்-போர்த்துக்கீஸிய மொழியில் அமைந்த முதல் அச்சு வடிவ அகராதி நூல். இதில் 16,546 சொற்களின் பட்டியல் இருப்பதாக அறிய முடிகின்றது. 1732ல் வீரமாமுனிவரின் (பெஸ்கி) தமிழ்-தமிழ் சதுரகராதி வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதிய 'அபிதானகோசம்' என்பதே அகராதியியலில் கலைக்களஞ்சியங்களுக்கான பிரிவில் வந்த முதல் நூல். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்திலும் இடம்பெறுகின்றது. 

இப்படி சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் இருந்த போதிலும் சிறப்பான அகராதி ஒன்றிற்கான தேவை இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது நாம் எதிர்பார்ப்பது போல சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தராக இருந்த காலத்தில் ஒரு அகராதி நூல் உருவாக்கம் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் எழுந்திருக்கின்றது என்பதையும் உ.வே.சாவின் என் சரித்திரம் நூலில் உள்ள குறிப்புக்களின் வழி காண்கின்றோம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இருந்த காலத்தில் மடத்திற்கு வருகை தந்த உதவி கலெக்டராக இருந்த ராவ்பகதூர் திரு.பட்டாபிராம பிள்ளை என்ற ஒருவரை பற்றிய சில குறிப்புக்கள் இந்த நூலில் இடம்பெறுகின்றன. திரு.பட்டாபிராம பிள்ளையவர்களும் நல்ல தமிழ்ப்புலமை கொண்டவராகத் திகழ்ந்திருக்கின்றார். இவர் மடத்திற்கு வரும்போது தேசிகரிடம் ஒரு அகராதி நூல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன் வைத்திருக்கின்றார். பிள்ளையவர்களிடம் இந்த விண்ணப்பம் வந்து சேர்ந்த்து என்றாலும் அவர் காலத்தில் இப்பணி தொடங்கப்படவில்லை. பிள்ளையவர்களின் இலக்கியப் பணிகள் அனைத்துமே கோயில் தலபுராண உருவாக்கங்களிலும், அந்தாதி, பிரபந்த நூற்கள் உருவாக்கத்திலுமே முடிந்தது. 

பிள்ளைவர்கள் மறைவுக்குப் பின்னர் ஒரு முறை ஆதீனத்திற்கு வந்திருந்த திரு.பட்டாபிராம பிள்ளை தனது பழைய வேண்டுகோளான, முறையான ஒரு அகராதிக்கான தேவை பற்றி தேசிகரிடம் கூறி, இருக்கின்ற மாணவர்களை வைத்தே ஆதீனகர்த்தர் அகராதி உருவாக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றலாம் என் விண்ணப்பித்திருக்கின்றார். தேசிகருக்கும் இந்த முயற்சியில் விருப்பம் இருந்தமை தெரிகின்றது. ஆயினும் இதற்கு முழு ஈடுபாட்டைக் காட்டி மாணவர்களைக் கொண்டு இதனை செய்து முடிக்கவில்லை.

திரு.பட்டாபிராம பிள்ளை திருவாவடுதுறை மடத்திற்கு மட்டுமல்லாது ஏனைய எல்லா சைவ திருமடங்களுக்கும் இந்த விண்ணப்பத்தை அனுப்பியிருக்கின்றார் என்று தெரிகிறது. பாடல் புனைவதிலும் திறமையானவராக திகழ்ந்தவர் இந்த திரு.பட்டாபிராம பிள்ளை என்பதால் தமது விண்ணப்பத்தைச் செய்யுளாக இயற்றி சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பியிருக்கின்றார். அந்தச் செய்யுள் இதோ.

அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
றான்றோர் யாரும்
பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
ணவர்கட் கெல்லாம்
நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
நெடிய சீட்டுத்
தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
தளர்வாய் நின்றேன்.

இந்தச் செய்யுளும் மேலும் மூன்று செய்யுள்களும் எழுதி தேசிகருக்கு அனுப்பியிருக்கின்றார் ராவ்பகதூர் திரு.பட்டாபிராம பிள்ளை. கடிதம் கண்ட வேளையிலும் பின்னர் அதற்கடுத்த சில நாட்களிலும் அகராதி தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மடத்தில் பலருக்கு உண்டாயிருக்கின்றது. அதற்காக பல நிகண்டு நூல்களையும் வீரமாமுனிவரின் சதுரகராதியையும் வாசித்திருக்கின்றனர் மாணவர்கள் ஆயினும் இந்த உற்சாகம் நெடுநாள் இருக்க வில்லை என்பதை உ.வே.சாவின் குறிப்புக்களின் வழியே அறிகிறோம்.

இந்தக் கடிதத்தைக் கண்டு நாங்களெல்லாம் வியப்புற்றோம். இப்பாட்டுக்கள் புலவர் பாடல்களைப் போன்றனவாக இராவிட்டாலும் பட்டாபிராம பிள்ளைக்கு எவ்வளவு தமிழன்பு இருந்ததென்பதை வெளிப்படுத்துகின்றன. ஓர் அரசாங்க உத்தியோகஸ்தர் அவ்வளவு அன்புடன் செய்யுள் இயற்றி விண்ணப்பம் செய்யும் திறமை படைத்திருப்பதே பெரிய ஆச்சரியமன்றோ?

அவர் கடிதம் வந்த சில நாட்கள் வரையில் சுப்பிரமணிய தேசிகரும் நாங்களும் அகராதியைப் பற்றிப் பேசினோம், வீரமா முனிவரென்னும் பெஸ்கி பாதிரியார் இயற்றிய சதுரகராதியின் அச்சுப் பிரதியும் ஏட்டுப் பிரதியும் வருவிக்கப்பட்டன. நிகண்டுகளை எடுத்துத் தட்டிக் கொட்டி வைத்தோம். இந்த உத்ஸாகம் சில நாட்கள் வரையில் இருந்தது. பிறகு அகராதியைப் பற்றிய பேச்சே நின்று போயிற்று. பட்டாபிராம பிள்ளையைப் பற்றிய பேச்சு வந்தால்
மட்டும், “திடீரென்று வந்து அகராதி எந்த மட்டில் இருக்கிறது?” என்று அவர் கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனை உண்டாகும்.

அகராதிக்கென்று அன்றும் இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்கின்றது.
இன்றும் இந்த நிலை தொடர்கின்றது!

தொடரும்...

சுபா

Sunday, August 31, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 71

என் சரித்திரம் நூலின் வழியாக உ.வே.சா தனது சொந்த வாழ்க்கைக் குறிப்பை மட்டும் பதிந்தார் என்று நாம் இதன் பரப்பை சுருக்கி காண முயற்சித்தல் இன்னூலைப் பற்றிய சரியான புரிதலைத் தராது. பல சமகாலத்து செய்திகளையும் நடைபெற்ற விஷயங்களையும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் இவர் இன்னூலில் பதிவதையே பெரும் ஆர்வத்தோடு செய்திருக்கின்றார்.

அந்த ஆண்டு தமிழகத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. 

பஞ்சம் மக்களின் வாழ்க்கையை நிலை குலையச் செய்யும் இயற்கை பேரிடர் தானே. வாழும் இடத்தில் உணவுக்கு வழியில்லை என்றால் பிழைக்க புதிய இடம் தேடிச் செல்வது தானே வாழ்க்கையைத் தொடர வழிகொடுக்கும். பஞ்சத்தால் இருந்த இடத்திலேயே இருந்து மடிவதை விட பிழைக்க புதிய வழி தேடி மக்கள் புதிய பகுதிகளுக்குச் செல்வது மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகவியல் நிகழ்வு. 

அந்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் அல்லலுற்ற பலர் தாம் வசிக்கும் இடங்களிலிருந்து பெயர்ந்து திருவாவடுதுறை பகுதிக்கும் பயணித்திருக்கின்றனர் என்பதை என் சரித்திரக் குறிப்புக்களில் காண்கின்றோம். அப்படி பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் உணவிண்றி வாடும் நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுக்குத் தொழிலை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது திருவாவடுதுறை மடம். 

மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் செயல்பாட்டை வாசித்து அறியும் போது ஆச்சரியப்படுகின்றேன். ஏழைகள் வருகின்றார்களே என்பதற்காக தொடர்ந்து இலவசமாக உணவு கொடுப்பது என்ற போக்கை விடுத்து அவர்களுக்குத் தொழில் செய்து முன்னேற வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார் தேசிகர். அம்மக்களுக்குக்  கஞ்சித் தொட்டிகளை வைத்து மக்களுக்கு கஞ்சி கொடுத்து பசியைப் போக்கியதோடு சுற்று வட்டாரத்தில் இருந்த புன்செய் நிலங்களை அதன் தன்மை மாற்றி நன்செய் நிலங்களாக ஆக்க வைத்து அதில் விவசாயத்தைச் செய்து மக்கள் ஜீவனத்துக்குப் புதிய வழியைக் காண உதவியிருக்கின்றார். 

உண்மையான ஒரு உதவி என்பது தொடர்ந்து மனிதர்கள் ஏதாவது ஒரு வகையில் தம் பிழைப்பை தாமே பார்த்துக் கொள்ளும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான். இலவச உணவு, இலவச வாழ்க்கை நிலை என இருக்கும் சூழலை உருவாக்குவது சமூகத்தில் கொடிய   பின்விளைவுகளைத் தான் உருவாக்கும். காரணம் இலவசத்துக்குப் பழகிப் போன மக்களின் மனம் உழைப்பை நாடாது. உண்ணும் ஒரு பிடி உணவும் தன் சொந்த உழைப்பில் வந்ததுதான் என்ற எண்ணம் கொண்டவருக்கே தொடர்ந்து தன் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறும் அறிவும் திறனும் ஆர்வமும் இருக்கும். 

அந்த வகையில் மடத்தில் நிகழ்ந்த இந்தச் செயல்பாட்டை நான் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகவே கருதுகின்றேன். 

இச்செய்தியை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி ஒரு சிந்தனை  தோன்றுகின்றது என்பது ஒரு புறமிருக்க, இச்செய்தி அறிந்த வேதநாயகம் பிள்ளையவர்கள் தேசிகரை இச்செயலுக்காகப் பாராட்டி ஒரு செய்யுளும் எழுதியிருக்கின்றார். இதனை உ.வே.சா தன் சரிதத்தில் குறித்து வைக்கின்றார்.

“எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும் 
கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க 
அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம் 
சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே.” 

[இடங்கர் - முதலை. கரா - முதலை. அரி - திருமால். பொன் சக்கரம்
- பவுன். வெள்ளிச் சக்கரம் - ரூபாய்.] 

வேதநாயகம் பிள்ளையின் இறுதி காலம் வரை உ.வே.சாவிற்கு அவருடன் மிக நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. மடத்தின் பல முக்கிய எழுத்துப் பணிகள், அரசாங்கப் பணிகள், ஆங்கிலத்தில் எழுத வேண்டிய  கடிதங்கள், சட்ட விஷயங்கள் ஆகியற்றில் வேதநாயகம் பிள்ளையவர்கள் துணையிருந்து உதவியிருக்கின்றார் என்பதையும் அறிய முடிகின்றது.

தொடரும்...

Saturday, August 23, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 70

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவராக இருந்தவர் அச்சமயத்தில் மாயூரத்தில் முன்சீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளை அவர்கள். இவர் தமிழில் நிறைந்த புலமை மிக்கவராகத் திகழ்ந்தவர் என்றும் நிறைய செய்யுட்களையும் பாடல்களையும் இயற்றியவர் என்றும் பலரும் அறிந்திருப்போம். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரது தமிழின் மேலான ஆர்வமும் சைவ சமய நூற்களின் மேலான பற்றும், திருவாவடுதுறை மடத்தின் மீதும்  அதன் ஆதீனகர்த்தர் சுப்ரமணிய தேசிகர் மீது அவர் கொண்டிருந்த பற்றும் ஆர்வமும் அளப்பறியதாகவே இருந்தது.

சுப்பிரமணிய தேசிகரின் மேல் பல செய்யுட்களை இவர் இயற்றியிருக்கின்றார். ஒரு கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர், அதிலும் பெரிய அரசாங்க உத்யோகத்தில் இருந்தவர், இந்த அளவு தீவிரமாக சைவ மடத்தோடு தனது உறவை பினைத்துக் கொண்டிருக்கின்றாரே என உ.வே.சா வியந்து போகின்றார். தனது வியப்பை அவர் தனது சரிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

ஒரு கிறிஸ்தவ கனவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தி யன்றோ? அன்றியும் பொறுப்புள்ள அரசாங்க உத்தியோகம் ஒன்றை வகித்து வந்தவரும், பிறரை அதிகமாக லக்ஷியம் செய்யாதவருமான வேதநாயகம் பிள்ளை பாடினாரென்பது யாவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமையையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலயமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று.

இன்று தமிழ்மொழியைப் பாதுகாக்கும், முறையாகப் பயன்படுத்தும் நிலை குறைந்து வருவதைப் பற்றி நாம் அடிக்கடி பேசிக் கொள்கின்றோம், உரையாடுகின்றோம். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்களின் கலப்பு என்பது நிகழ்ந்து தமிழின் செம்மையைக் குலைப்பதை நினைத்து வருந்துகின்றோம்.  சிலர் ந்ன்கு தமிழறிந்தோராக இருந்தாலும் கூட ஆங்கில மோகத்தால் தமிழை பிறர் முன்னிலையில் பேசாது ஆங்கில மொழியில் உரையாட விரும்புவதைக் கண்டு வருந்துகின்றோம். 

மொழி என்பது ஒரு கருவி. எத்தனை மொழிகளைக் கற்கின்றோமே அத்தனையும் நாம் நமது அறிவை விரித்தி செய்து கொள்வதற்கும், அந்தந்த மொழி நூல்களையும் இலக்கியங்களையும் அறிவுக் கருவூலங்களையும் வாசித்து அறிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவும் தன்மையன. வேறொரு மொழி நல்ல வேலை வாய்ப்பையும் பொருளாதார பலத்தையும் தரும் என்பதற்காக மட்டுமே நமது தாய்மொழியை விட்டு விட்டு, மறந்து விட்டு வேறொரு மொழியைக் கற்க நினைப்பது நாமே நமது அடிப்படையை அழிப்பதற்கு காரணமாகிவிடும். ஆக இக்கால நிலையில் அதிலும் கணினி யுகத்தில் பல மொழிகள் கற்பது என்பது எவ்வகையில் சாத்தியமாகின்றதோ, அதே வகையில் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சிறியவர்களோ பெரியவர்களோ, தமிழை  கணினி, இணையம் வழி கற்று தம் தாய்மொழி மறக்காத தமிழர்களாக வாழலாம். 

இளம் பிராயத்தில் மொழிகள் கற்பது என்பது கற்றலை சுலபமாக்கும். ஆக தமிழ் மொழியோடு ஆங்கிலம், அதோடு தாம் வாழும் நாட்டில் உள்ள அரசாங்க மொழி, வேறு ஏதேனும் விருப்பப்படும் மொழி என பலமொழிகளைச் சிறு பிராயத்திலேயே குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆரம்பகாலத்தில் அமைக்கப்படும் அடிப்படையானது பலமாக இருக்கும் போது தொடர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது வெகு விரைவாக மொழிகளைக் கற்று தங்கள் வாழ்க்கை தேவையையும் திறம்பட அமைத்துக் கொள்ள வழி ஏற்படும்.

ஆங்கிலேய அரசின் கீழ் ஆங்கிலக்கல்வி விரிவாகி வந்த காலகட்டமது. இன்று எப்படி நாம் தமிழ் மொழியை மக்கள் மறந்து போகின்றனர் என்று சொல்லி வருந்துகின்றோமோ, அதே போலவே  உ.வே.சாவின் காலகட்டத்தில் திருவாவடுதுறை மடத்துடன் தொடர்பில் இருந்து அடிக்கடி வந்து செல்லும் வேதநாயகம் பிள்ளையவர்கள் மடத்தில் தொடர்ச்சியாக மிக நல்ல முறையில் தமிழ் வகுப்புக்கள் நடைபெறுவதை நினைத்து மனம் மகிழ்வாராம். இப்படி தமிழ் வளர்க்கும் சேவை செய்யும் தேசிகரைப் புகழ்ந்து பாடல்களும் இயற்றியிருக்கின்றார் வேதநாயகம் பிள்ளை. 66ம் அத்தியாயத்தில் உள்ள ஒரு செய்யுள் உதாரணமாக.

“வானென் றுதவ வருஞ்சுப்ர மண்ய வரோதயனே
தானென்று வெண்ணரன் பாஷையிந் நாட்டிற் றலையெடுக்க
ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே.” 

இப்படி வேதநாயகம் பில்ளையவர்கள் மடத்தைப் பற்றியும் தேசிகரைப் பற்றியும் பாடிய பாடல்கள் பல உண்டு. இவை திருமடத்தில் சுவடி நூல்களாக இப்போதும் இருக்க வேண்டும். மடத்திற்கு அவ்வப்போது வருபவர்கள் வேதநாயகம் பிள்ளையவர்கள் தேசிகர் மேல் இயற்றிய பாடல்களை கேட்க விரும்பினால் உடனே தேசிகர் உ.வே.சாவை அழைத்து இப்பாடல்களைப் பாடிக் காட்டச் சொல்வாராம். இசை ஞானமும் கைவரப்பெற்றிருந்த உ.வே.சா இசையுடன் பாடி பொருளும் உரைப்பாராம்.

விருந்தினர்களுக்கும் வருகையாளர்க்கும் இது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்திருக்கும் அனுபவமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தொடரும்...

Monday, August 11, 2014

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மனம் அதிகமாகவே தயக்கம் காட்டுகின்றது; மாற்றங்களை ஒதுக்கித் தள்ளி, பழகிய விஷயங்களிலும் தோய்ந்து போன பழக்கங்களிலும் தொடரவே மனம் விரும்புகின்றது. 

..ஆயினும்... 
...மாற்றங்களே புதிய சிந்தனைகளுக்கும் புத்துணர்ச்சி தரும் புதுமைகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்பினை தரும் அட்ஷய பாத்திரங்களாக அமைகின்றன. 

இன்று வாசித்ததில் மனதை தொட்ட வரிகள் கீழே.. பலமுறை வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போது புதிய ஒளியை சிந்தனையில் தரும் வரிகள் இவை.

It is not the strongest of the species that survives, 
nor the most intelligent, but rather the one
most responsive to change.
-Charles Darwin

Wednesday, August 6, 2014

Tamil cultural connections across the world - Archeological Evidenve from Outside Tamil Nadu - Dr.V.Selvakumar

விமானப்பயணத்தின் போது இம்முறை Tamil Cultural Connections Across the World (Up to 1600CE) : Archaeological Evidence from Outside Tamil Nadu   என்ற நூலை வாசித்துக் கொண்டே வந்தேன்.  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல்துறை ஆய்வாளர் டாக்டர்.வி.செல்வகுமார் அவர்கள் எழுதிய நூல் இது.

நூலில் 6 பாகங்கள் உள்ளன.

  • DNA studies and Prehistoric Human Migrations  in South Asia
  • The Indus Valley Civilization
  • Cultures Contemporary to and Post-Dating the Harappans
  • The early Historic period
  • The Early medieval period
  • The Late Medieval Period

என்று படிப்படியாக ஆய்வுத்தகவல்களை வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். இத்துறை தொடர்பான முந்தைய தகவல்களோடு தற்கால ஆய்வு வெளியீடுகளையும் வழங்கி ஒரு தொடர்ச்சியை இன்னூலில் ஆசிரியர் நன்கு காட்டுகின்றார்.

4 பாகங்களை விமானப்பயணத்தின் போதே படித்து முடித்தேன். விரிவான ஆய்வு.. தரமான ஆய்வுத்தரவுகள்
... கோர்வையாக விஷயத்தை வழங்கும் விதம் என நூல் வாசிப்போரை ஆர்வம் குறையாமல் வாசிக்க வைக்கின்றது.

முதல்பாகத்தில் கடந்த 80,000 ஆண்டுகளில் இன்றைய இந்திய, குறிப்பாக தமிழக நிலப்பரப்பு உள்ள பகுதியில் நிகழ்ந்த மக்கள் குடியேற்றம் பற்றிய சில குறைப்பிடத்தக்க தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Pre Historic Period என்ற வகையில் Epi Palaeolithic, Lower Palaeolithic, Middle Palaelithic, Mesolithic, Neolithic, Chalcolithic, Iron Age  என்ற கலாச்சார கால மாற்ற வகைகளின் ஆண்டு, மக்கள் நாகரிக வளர்ச்சி, இக்காலகட்டத்தின் முக்கியக் கூறுகளை இப்பகுதி விளக்குகின்றது.

DNA அடிப்படையில் தொடர்ச்சியாக பல ஆய்வுத்தகவல்களை வழங்கி இறுதியாக இக்காலத்தில் தமிழ் பேசப்படும் நிலப்பகுதியில் அறியப்படுகின்ற மக்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறியவர்களாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் உள்ளன என முதல்பாகம் நிறைவடைகின்றது.

இரண்டாம் பாகம் முழுமையாக சிந்து வெளி நாகரிக ஆய்வுத்தளங்கள், அடிப்படை தகவல்கள் ஆகியன விரிவாக விளக்கப்படுகின்றன.

அதற்கடுத்த 3ம் 4ம் பாகங்களில் கிமு 5000த்திலிருந்து கிபி 500 வரை தமிழ் நிலப்பரப்பில் இருந்த சமூகங்களின் தன்மைகளாகக் கருதப்படும் கூறுகளும் வரலாற்று காலத்தின் ஆரம்ப கால கட்டமாகிய கிமு 500லிருந்து கிபி 500 வரையிலான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இறுதி 2 பாகங்களை நான் இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. ஆயினும் நூல் சிறந்த ஆய்வுத்திறனுடன் எழுதப்படுள்ளது என்பதை மறுக்க இயலாது. ஒரே ஒரு குறையாக நான் கருதுவது... நூலில் வழங்கப்பட்டுள்ள வரைடங்களின் தெளிவு குறைவு.இதன் தரத்தை மறுபதிப்பில் செம்மை படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

கல்லூரி மாணவர்களுக்கும், anthropology, archeology, sociology ஆகிய துறைகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கும் பயன் தரும் நூல் என்பதில் மறுப்பில்லை.

சுபா​

Tuesday, August 5, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 69

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மறைவுக்குப் பிறகு திருவாவடுதுறை மடத்திலேயே தங்கியிருந்து ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் பாடம் கேட்டு வந்ததோடு அங்கு பாடம் ​படித்து வந்த இளையோருக்குத் தமிழ்போதிக்கும் பணியையும் உ.வே.சா  மேற்கொண்டிருந்தார். அவரது தந்தையார் வேங்கடசுப்பையரும் உடன் வந்து தங்கியிருந்தார். வேங்கடசுப்பையர் இக்காலகட்டத்தில் தேசிகருடன் சற்றே நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்தது என்றும் இசையில் மனம் லயிக்கும் தேசிகர் கர்நாடக இசைஞானத்தில் சிறந்தவரான வேங்கட சுப்பையரைப் பாடவைத்து கேட்டு மகிழ்வார் என்ற செய்திகளையும் என் சரிதத்தில் உ.வே.சா பதிகின்றார். 

பிள்ளையவர்களிடம் அவரது இறுதி காலகட்டங்களில் கம்பராமாயணத்தைப் பாடம் கேட்க ஆரம்பித்திருந்தனர் அவரது மாணாக்கர்கள். இதில் உ.வே.சாவும் ஒருவர். அயோத்தியா காண்டம் வரை பாடம் அப்போது சென்றிருந்தது.  ஆனால் பாடம் முற்றுப் பெறா நிலையிலேயே பிள்ளையவர்களின் மறைவு நிகழ்ந்து விட்டது. அதனால் மாணாக்கர்களே இணைந்து பிள்ளையவர்களுடைய ஏட்டுப் பிரதியை வைத்துக் கொண்டு திருமடத்தில் இருந்த ஏனைய ஏட்டுப் படிகளையும் வைத்துக் கொண்டு பாட பேதங்கள் பார்த்து உரைகள் ஆகியனவற்றை வாசித்து தாமே இந்த நூல்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது மகாபாரதம், பாகவதம், திருக்குற்றாலப் புராணம், பலவகையான பிரபந்த நூல்கள் ஆகியனவற்றை படித்தும் விசாரணை செய்தும் தங்கள் கல்வி ஞானத்தை  விரிவாக்கிக் கொண்டு வந்தனர். தம்மோடு சண்பகக் குற்றாலக் கவிராயரும் ஏனைய சிலரும் அப்போது இருந்தார்கள் என்றும்  இவர்கள் யாவரும் பிள்ளையவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தங்கியிருந்தனர் என்ற குறிப்பையும் அறிய முடிகின்றது.

திருவாவடுதுறை ஆதீனப் புலவருடன் - திருவாவடுதுறை மடத்தில் பிள்ளையர்கள் தங்கியிருந்த இல்லத்தின் முன் பகுதியில்

சென்ற ஆண்டு மார்ச் மாதம் நான் திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது இந்த இல்லத்தைப் பார்வையிட்டேன். புலவர்கள் குடியிருப்பில் முதலாவதாக அமைந்திருக்கும் பகுதி இது. திருவாவடுதுறை திருமடத்தின் வாசல் பகுதிக்கு எதிர் திசையில் இந்த வீடு அமைந்திருக்கின்றது.  வரிசையான வீடுகள். இப்போது இவ்வீடுகள் மேம்படுத்தப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு சிறப்பாக காட்சி அளிக்கின்றன. தற்சமயம் இங்கே தம்பிரான்கள் தங்கியிருக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

உ.வே.சா ஒரு ஆசிரியரிடம் மட்டுமே பாடம் கற்க வேண்டும் என்ற நிலையில் மட்டுமல்லாது தனது சுய முயற்சியில் பல நூற்களைத் தொடர்ந்து வாசித்தும் புரிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டும் வந்தவர் என்பது நன்கு புலப்படுகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெற திருவாவடுதுறை மடம் அவருக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம். திருவாவடுதுறை சரசுவதி மகாலில் உள்ள சுவடிக் கட்டுக்கள் இதனை நிரூபிப்பவை. இங்கிருந்த நூல்கள் உ.வே.சா மட்டுமல்ல.. கல்வி ஞானத்தைத் தீவிரமாகக் கறற ஏனைய பல மாணவர்களுக்கும் இந்த நூலகம் கல்வி வழங்கிய அட்ஷய பாத்திரமாகவே பங்காற்றியுள்ளது.  சரசுவதி மகால் நூலகத்தை  நான் நேரில்  பார்த்திருப்பதால் இந்த நூலகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து இதனை நான் குறிப்பிட முடிகின்றது. 

தேசிகரே தமக்குக் குருவாக அமைய தவம் செய்தவர் உ.வே.சா. 

இலக்கண நூற்களையும் சைவ சித்தாந்த நூற்களையும் தேசிகரிடத்த்தில் பாடங் கேட்க ஆரம்பித்தனர் உ.வே.சாவும் ஏனைய மாணாக்கர்களும். இந்தப் பாடங்களைக் கற்று வரும் வேளையில் தேசிகர் கூறிய விளக்கங்கள் உ.வே.சா வின்  மனதில் நீண்ட காலங்கள் பதிந்திருந்தன போலும். அதனை தெளிவாக வாசகர்களாகிய நாம் புரிந்து அதனை அவர் அனுபவித்தது போல நாமும் அனுபவிக்கும் வகையில்  என் சரிதத்தில் குறிப்பிடுகின்றார். அதில் ஒரு பகுதியில் நன்னூல் விருத்தியுரைக்குத் தாம் விளக்கம் கேட்ட போது தேசிகர் குறிப்பிட்ட விஷயங்களையும் பின்னர் தாம் இந்த நூலை வாசிக்க ஆரம்பித்த விததையும் இப்படி குறிப்பிடுகின்றார்.

நன்னூல் விருத்தியுரையைப் பாடம் கேட்க விரும்பியபோது சுப்பிரமணியதேசிகர் அதன் சம்பந்தமாகச் சில விஷயங்களைச் சொல்லலானார்;

“நன்னூலுக்கு முதலில் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். பிறகு சிவஞான முனிவர் அதைத் திருத்தியும் புதுக்கியும் விருத்தியுரையை அமைத்தார். அவர் தாம் எழுதிய சிவஞானபோத திராவிட மகாபாஷ்யத்தில் அமைத்துள்ள அரிய வடமொழி தென்மொழிப் பிரயோகங்களை எளிதிற் பிற்காலத்தவர்க்குப் புலப்படுத்த நினைந்து இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூல்களிலும் பிறவற்றிலும் உள்ள முக்கியமான சிலவற்றை அவ்வுரையில் அங்கங்கே சேர்த்தார். சில இடங்களில் சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றை மாற்றியும் எழுதி நிறைவேற்றினார். இலக்கணக் கொத்து முதலிய மூன்றையும் பாடம் கேட்ட பிறகுதான் விருத்தியுரை தெளிவாக விளங்கும்” என்று சொல்லிச் சிவஞான முனிவர் தம் கரத்தாலேயே திருத்திய ஏட்டுப் பிரதி ஒன்றை எடுத்துக் காட்டினார். அப்பிரதியில் அங்கங்கே அடித்தும் கூட்டியும் மாற்றியும் அம்முனிவர் எழுதியவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம்.

தேசிகர் கட்டளைப்படியே இலக்கணக் கொத்து முதலிய மூன்று நூல்களையும் பாடம் கேட்டுப் பிறகு நன்னூல் விருத்தியுரையைக் கேட்கத் தொடங்கினோம். சங்கர நமச்சிவாயர் உரைமாத்திரம் இருந்த ஏடொன்று மடத்தில் இருந்தது. அதையும் வைத்துக் கொண்டு எங்கெங்கே சிவஞான முனிவர் விருத்தியுரையில் திருத்தம் செய்திருக்கிறாரோ அங்கெல்லாம் ‘சி’ என்ற அடையாள மிட்டுக் குறித்துப் படித்தோம்.

நாம் அதிகம் கேள்விப்படாத நூல்களின் பெயர்களையும் இத்தகைய விளக்கங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. அதே வேளை இப்படி மடங்களில் வழி வழியாக தேசிகர்களாலும் புலவர்களாலும் பாடம் சொல்லப்பட்டு எண்ணற்ற மாணாக்கர்களால்  வாசிக்கப்பட்ட இந்த  ஓலை நூல்கள் என்னவாயின..?  எத்தகைய நிலையில் தற்சமயம் இந்த நூல்கள் உள்ளன..? இவை அனைத்தும் அச்சு வடிவம் பெற்று விட்டனவா..?
இவை இன்று கல்லூரிகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களிலும் பாட போதனையில் இடம் பெறுகின்றனவா..? என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.

தொடரும்..

சுபா