Saturday, November 22, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 76

சுற்றுலா செல்வது என்பதே அலாதியான இன்பத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம் அல்லவா? ஒரே இடத்தில், செய்த காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கும் அன்றாட நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட சூழல்கள், வித்தியாசமான அனுபவங்கள் என அமைவது சுற்றுலாக்களின் போது நிகழ்பவை. சுற்றுலாக்கள் கேளிக்கை தானே என்ற ஒரு கண்ணோட்டத்துடன் காண்பதை என்பதை விடுத்து அதில் நம் கண்களுக்குத் தென்படும் புது உலகம் பற்றிய சிந்தனையைச் சற்று உயரத்தூக்கி கவனித்தால் சுற்றுலாக்கள் நமக்கு தரும் புதிய அனுபவங்கள் சிறந்த வாழ்க்கைப் பாடங்களாகவும் அமைவைதைக் காண முடியும். 

இக்கால சூழலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம், நகரம், ஊர், என பயணம் மேற்கொள்ள சிறந்த வசதி வாய்ப்புக்கள் அமைந்திருக்கின்றன. பொருளாதார துணை இருந்தால் விரைந்து பல இடங்களுக்குச் சென்று வருவது என்பது   சாத்தியப்படக்கூடிய ஒன்றே. இதே நிலை இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் அமைந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகச் சூழலில் பயணம் என நினைக்கும் போது பொதுப் போக்கு வரத்துக்காகp பெரும்பாலும் மாட்டு வண்டிகளை மக்கள் புழக்கத்தில் பயன்படுத்துவதே வழக்கமாக இருந்தது. அச்சமயம் தான் தமிழ்கத்திற்கு இரயில் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்த காலகட்டம். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஆதீனத்தைச் சேர்ந்தோருடன் தனது மதுரைக்காண பயணத்தை உ.வே.சா அவர்கள் விவரிக்கும் போது இத்தகைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

சோழ நாட்டிலேயே தனது பிறந்த நாள் முதல் வாழ்ந்து வந்த உ.வே.சா அவர்களுக்குப் பாண்டி நாடு செல்வது இதுவே முதல் முறை. அவருக்குப் புதிய இடத்திற்குச் செல்கின்றோம் என்ற உற்சாகம் ஒருபுறம். அதோடு ஆதீனகர்த்தரின் பரிவாரங்களில் அதிலும் முக்கியஸ்தர்களுடன் முக்கியஸ்தராக இணைந்து செல்கின்றோமே என்ற பெறுமை மறுபுறம். ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர், அடிப்படையில் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் அவருக்கு மீண்டும் இந்த ஊருக்கு வருவதில் அதிலும் கல்லிடைக்குறிச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி இருந்தது.  வெறும் நூல்களில் மட்டுமே.. அதிலும் திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்படும் பாண்டி நாட்டு ஆலயங்கலள் சூழல் பற்றி வாசித்து மட்டுமே அறிந்திருந்த உ.வே.சாவிற்கு இங்கே நேரில் வந்து புதிய இடங்களைப் பார்ப்பதும், ஆலய தரிசனங்களும், புதிய மனிதர்களைச் சந்தித்து உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சியை தந்தன.  தான் திருப்பூவனத்திற்கு வந்த போது  அங்கு திருப்பூவனத்துப் பெருமானைத் தரிசித்ததையும் வைகை நதியக் கண்டு களித்ததையும் குறிப்பிடுகின்றார் அத்தியாயம் 73ல். 

நான் இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த போது திருப்பூவனத்துப் பெருமான் சன்னிதி சென்று இறை தரிசனம் செய்து பொன்னனையாள் திருச்சிலையையும் கண்டு மகிழ்ந்தேன். ஆலயத்திற்கு எதிரே நீரில்லாத வைகையைக் கண்டு ஏக்கம் தான் உருவானது.

திருப்பூவணத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டிருக்கின்றனர். மதுரையைச் சார்ந்த வண்டியூர் தெப்பக்குளம் மேல் கரையிலுள்ள கோயில் ஒன்றில் தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்து  அங்கே தங்கியிருக்கின்றனர். அந்த இடத்தை ஆதீமூலம் பிள்ளை என்ற அந்த ஊரைச் சேர்ந்த கணவான் ஒருவர் மிகுந்த அலங்காரங்கள் செய்து சிறந்த வரவேற்பு நல்கியிருக்கின்றார். அந்த நாளில், இந்த நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்க அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர் 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு இரண்டு வேளை அன்னதானம் வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இந்த ஆதிமூலம் என்பவர் அந்த ஊரில் வாழ்ந்த நல்ல உள்ளம் படைத்த ஒரு காண்ட்ராக்டர் என்றும் நிறைந்த பக்திமான் என்றும் பல நற்காரியங்கள் செய்தார் என்றும் அதனால் அவர் பெயரில்  ஆதிமூலம் பிள்ளை தெரு என ஒரு தெருவிற்கு பெயரும் சூட்டப்பட்டிருந்தது என்றும் உ.வே.சா   குறிப்பிடுகின்றார். 

பயணத்தின் போது ஆதீனகர்த்தருக்கும் அவரது பரிவாரங்களாகச் சென்றோருக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு தனி வண்டிகளும் இந்தப் பயணத்தில் சென்றிருக்கின்றன.  ஆயிரக்கணக்கான பேர்கள் உண்ணுவதற்குப் போதுமான  அரிசி உணவுப் பதார்த்தங்கள் திருவாவடுதுறையிலிருந்து  வண்டி வண்டியாக வந்து குவிந்தன என்றும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

அக்கால நிலை இப்போது இல்லை. இன்று நடைமுறை  எல்லாவற்றிலும் மாற்றங்களை உட்புகுத்தி விட்டன. தூரப்பயணங்களுக்கு மாட்டு வண்டியில் ஆதீனத்தைச் சார்ந்தோர் பயணிப்பதும் மூட்டை மூட்டையாக பயணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது என்ற நிலையும் தேவையற்றவையாகி விட்டன. இன்றைய கால மாற்றம் பல புதிய நடைமுறைகளை ஆதீனங்கள் போன்ற சமய ஸ்தாபனங்களிலும் ஏற்படுத்தத் தவறவில்லை.

தொடரும்...


சுபா

Saturday, November 8, 2014

குடியரசில் பெரியார் உடன்....!- 10

சாதியின் பெயரால் கலவரங்கள் நடப்பதும் வன்முறைகள் நடப்பதும் இந்திய சூழலில் அதிலும் தமிழக சூழலில் இன்றளவும் நிகழ்ந்தவாறு இருப்பதை மறுப்பதற்கில்லை. கல்வி அறிவு பரவலாக வாய்த்து விட்ட இவ்வேளையில் சாதியின் பெயரால் அந்தஸ்தும், மனிதர்களுக்கிடையே  உயர்வு தாழ்வும் நோக்குதல் என்பது சாதாரண அறிவுக்கும் பொருந்தாது என்பதை உணர்ந்திருக்கின்றோம். 

கடந்த நூற்றாண்டும் இந்த நூற்றாண்டும் நமக்கு அளித்திருக்கும் பரவலான உலகளாவிய பார்வை என்பது நமக்கு மனிதர்களுக்கிடையே சாதி என்ற ஒரு விஷயம் மனித வாழ்க்கைக்கு, அதிலும் மாறுபட்ட மொழி, பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட இனக்குழு மக்களுடன் வாழும் நிலையில், எவ்வித தேவைக்கும் பலன் தரும் ஒன்றன்று என்ற உண்மையை தினம் தினம் நமது அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். இது மட்டுமன்றி சமூக நலன் விரும்பும் பெரியோர்கள் பலர், மக்கள் ஒற்றுமை, மக்களுக்கிடையே உயர்வு தாழ்வு எனக் காண்பது எனும் மடமை பற்றி விளக்கி சாதி என்ற ஒன்று நம் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் நச்சு போன்றது என இலக்கிய, சமூகவியல்பார்வையிலும் விளக்கிச் சென்றுள்ளனர், தொடர்ந்து சொல்லியும் வருகின்றனர்.  அப்படியான போதிலும் இன்றளவும் சாதி பெயர் சொல்லி மக்களுக்கிடையே பிரிவினை பார்ப்பதும் அந்தப் பிரிவினை வகுக்கும் நெறிகளைப் புகுத்தி அதன் வழியாக ஒரு மனித குல சட்டத்தை வரையறுத்து மக்களிடையே அதனைப் பரப்ப  முயற்சிகள் நடப்பதுவும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான முயற்சிகள் குருகிய பார்வையைக் கொண்ட, சுயநலப் போக்கை அடிப்படையாகக் கொண்ட நோக்கமென்பது தெளிவு.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகாவது இந்திய தேசத்து மக்களிடையே பிரிவினை என்பது சாதி வடிவில் என இல்லாது எல்லோரும் இந்திய தேசத்தவர் என்ற பார்வை தோன்றியிருக்க வேண்டும். அது இன்றளவும் முழுமையாகச் சாத்தியப்படவில்லை.

திரு.ஈ.வே.ராவின் குடியரசு இதழின் 1932ம் ஆண்டு வெளிவந்த தொகுப்பினை இன்று காலையில் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில்  அவரது கட்டுரை ஒன்று தீண்டாதார் துன்பம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார். ஆங்கிலேயர்களின் ராஜ்ஜியத்தில் இந்திய தேசத்து மக்கள் துன்பம் அனுபவிக்கின்றோம்; ஆகையால் இந்த தேசத்தை எங்களிடம் விட்டு விட்டு உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள் என்று ஆங்கிலேயர்களை நோக்கிக் கூறும் இந்தியர்கள், அதே இந்திய சமூகத்திற்குள்ளேயே ஒரு குழுவினரை தீண்டத்தகாதோர் எனப் பெயரிட்டு அழைப்பதும் அவர்களைத் துன்பப்ப் படுத்துவம் என்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றார். தீண்டத் தகாதோர், மற்றும் ஆதி திராவிடர் இனக்குழுக்களை மனிதர்களில் சரி சமமாக பார்க்கும் பார்வை இழந்த பாரபட்ஷமான நிலையை கண்டித்து இக்கட்டுரையை அவர் வரைந்திருக்கின்றார். அதில் அவர் குறிப்பிடும் சில சமகால நிகழ்வுகளும் சூழல்களும்   மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. 

கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் தீண்டத்தகாதோர் எனக் குறிப்பிடப்படுவோரை, உயர் சாதி என தம்மை அடையாலப்படுத்திக் கொள்வோர், அவர்கள் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அதனை தடுக்கும் பொருட்டு ஜில்லா கலெக்டருக்கும், போலிஸ் சூப்பரிண்டென்டுக்கும் விண்ணப்பக் கடிதம் அனுப்பி அவர்கள் முன்னேற்றத்தைத் தடைசெய்யக் கோரியமையைக் குறிப்பிடுகின்றார். அதோடு அவர்களுக்கு உயர் சாதிக் குழுவினர் என தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோர் தீண்டத்தகாதோர் எனத் தாம் அடையாலப்படுத்தும் சமூகத்தினருக்கு கொடுக்கும் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றார்.

1.பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது
2.பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது. படிக்கவும் கூடாது.
3.வெள்ளை வேஷ்டிக் கட்டக் கூடாது. அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும்.
4.பெண்கள் மார் ஆடை போடக்கூடாது. மீறி மார் ஆடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது.
5.நாகரிகமான நகைகள் போடக் கூடாது
6.குடைகள் பிடிக்கக் கூடாது. குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட வேண்டும்.
7.பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது. புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது.

.. இந்தக்கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? என்று கேட்கிறோம். இந்த நிலைதான் கிராமாந்தரங்களெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இதுவரை என்ன முயற்சியை, எந்தத் தேசீயவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம்.
                                                       -குடி அரசு - துனைத் தலையங்கம் - 21.02.1932

இக்காலத்தில் இத்தகைய நிலை இருக்கின்றதா என சிலர் வினவலாம். அதே நிலை முற்றும் முழுவதும் என்ற வகையில் இல்லாத போதிலும் சாதியின் பெயரால் நடக்கும் வன்முறைகளும், ஏற்றத் தாழ்வுகளும், தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளை, நம் சமூகத்தில் சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன் வரை இது போன்ற மனித குல சிந்தனைக்கு ஒவ்வாத சில விஷயங்கள் நடைமுறையில் இருந்தன என்பதையும் அறிந்து கொல்ள வேண்டியது அவசியம்.

சிறு பிராயத்திலேயெ சாதி சிந்தனையை குழந்தைகள் மனதில் ஊட்டி வளர்க்கும் பெற்றோர் சற்றே யோசிக்க வேண்டிய தருணம் இது. உலகின் பரப்பு, தான் தன் சமூகம் என்ற ஒரு பரப்பை கடந்து உலகமயமாக்கலில் மிக விரிந்த நிலையை அடைந்து விட்டது. ஆக, இக்காலகட்டத்திலும் பொது அறிவிற்குச் சற்றும் பொருந்தாத சாதிச் சிந்தனையை நம் மனதிலிருந்து களைவதோடு நமது குழந்தைகளுக்கும் சாதி எனும் இந்த விஷம் நிறைந்த சிந்தனைகள் சென்றடையாதவாறு காக்க வேண்டியது பெரியோர் கடமை!

தொடரும்...

சுபா

Tuesday, November 4, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 75

மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது மேலும் பல புதியமுயற்சிகளில் ஈடுபட மனம் நம்மைத் தள்ளும். உற்சாகம் பிறக்க மன மகிழ்ச்சி தேவை. அந்த மன மகிழ்ச்சியைப் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என நாம் எல்லோருமே அறிவோம்!

மன மகிழ்ச்சி பல காரணங்களால் ஏற்படலாம்.

சிலரது அன்பான சொற்கள் ஆர்வத்தைத் தூண்ட உதவலாம். சிறப்புக்கள் பெறும் போது மனதில் உற்சாகம் தோன்றும். பரிசு, பொருள், பாராட்டு .. என இவையெல்லாமே மனதில் மகிழ்ச்சியைத் தரக்கூடியவைதான் -  அந்தந்த சூழ்னிலைக்கேற்ற வகையில்!

பெரியவர்களே பாராட்டையும், இன்சொற்களையும், பரிசுகளையும் நினைத்து மகிழும் போது சிறுவர்களும் இளைஞர்களும் எத்தகைய வகையில் மன உற்சாகம் பெறுவார்கள் என்பதை நம்மால் உணர முடியும். இதனால் தான் நல்ல செயல்கள் செயப்படும் போது உற்சாகம் ஊட்டும் வகையில் பாராட்டுதல்களும் பரிசும் இன்சொற்களும் வழங்குவது மாணக்கர்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரவல்ல மாமருந்தாக அமைகின்றன. பள்ளிகளில் தான் பரிசும் இன்சொற்களும் பாராட்டுதல்களும் பெற்றால் இளைஞர்கள் நன்கு ஊக்கம் பெற்று கல்வியிலும் ஏனைய துறைகளிலும் நாட்டம் செலுத்துவார்கள் என்பதல்ல. இல்லத்தில் இனிமையான சூழலில் இன்சொற்களும் பாராட்டுதல்களும், பரிசுகளும் இளைஞர்களுக்கு மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்க வல்லன.

பல பெற்றோர்கள் கடுமையான சொற்களைச் சொல்லி, தங்கள் சிரமங்களை தம் குழந்தைகளுக்குச் சொல்லி, அதன் வலியை பகிர்ந்து கொள்வதே, குழந்தைகள் சிறப்பாக பெற்றோர் தம் சிரமம் அறிந்து  வளர உதவும் என்ற சிந்தனை கொண்டோராக இருப்பர். சில பெற்றோர்களுக்கு அதிலும் குறிப்பாக தந்தைமார் பலருக்கு முகத்தில் கடுகடுப்பும், கோபமும் கடுமையும் தான் தென்படும். குழந்தைகள் பயத்துடனும் நடுக்கத்துடனும் குற்ற உணர்ச்சியுடனுமே வலம் வருவதை விரும்பும் பலர் இன்றும் இருக்கின்றனர். இதுவே குழந்தைகளை பொறுப்பு மிக்கவர்களாக ஆக்கும் என்ற தவறான போக்கு கொண்டோர்கள் இத்தகையோர்.

குழந்தைகளின், இளைஞர்களின் உளவியல் கூறுகளை அறிந்து பெற்றோர் நடக்க வேண்டியது மிக அத்தியாவசியமானது. குழந்தைகளும் இளைஞர்களும் செய்யும் சிறு சிறு நல்ல   விஷயங்களையும் கவனித்து அதனை தக்க முறையில் பாராட்டுவது அவர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தை அளிக்கும். இப்போது செய்வதை விட இன்னமும் சிறப்பாகச் செய்து பாராட்டுதல் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டும். பெற்றோர் நமது நல்ல நடவடிக்கைகளைப் பார்த்து நம்மை, நமது செயல்களை அங்கீகரிக்கின்றனர் என்ற உணர்வே பல வேலைகளில் இளைஞர்களுக்கு ஒரு உளவியல் பலத்தையும் வழங்குகின்றது என்பதை நினைவு கொள்தல் அவசியம். அன்பு காட்டுதல், இனிய சொற்கள் சில கூறுவதும், ஒருவர் செய்த காரியத்தைச் சொல்லிக் காட்டி அதற்காகப் புகழ்ந்து பாராட்டுவது என்பன செய்வதற்கு அதிக சிரமமோ பொருள் தேவைப்படும் ஒன்றோ அல்ல. ஆனாலும் இதனைச் செய்வதற்குத்தான் பல பெற்றோருக்கு மனம் வருவதில்லை என்பது வேதனையான உண்மை. 

அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உள்ள வலிமை மிகப் பெரிது. இதனை உணர்ந்து தக்க முறையில் பயன்படுத்தும் போது அதனால் ஏற்படும் நல்ல வளர்ச்சி குறிப்பிடத்தக்க பலனைத் தருவதாகவே அமையும். 

உ.வே.சாவிற்கு உற்சாகம் கொடுக்கும் நிகழ்வுகளும் திருவாவடுதுறை மடத்தின் சார்பில் சில முறை நடந்தேறியுள்ளன. மதுரைக்கான பயணத்தின் போது கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றையும் பட்டு சால்வை, பட்டு தலையணை ஆகியவற்றை ஆதீனகர்த்தரிடமிருந்து பரிசாகப் பெற்றார் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

பயணத்தின் போது செல்லும் வழியில் மன்னார்குடியில் தங்கி இருந்த பொழுதில் உ.வே.சாவின் காதில் இருந்த பழைய கடுக்கனைப் பார்த்திருப்பார் போலும் தேசிகர். இந்த இளைஞனுக்குப் புதிதாக ஒரு கடுக்கண் வாங்கித்தருவோம் என நினைத்து ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அரும்பு கட்டிய சிகப்புக் கல் கடுக்கணை வாங்கி அதனை அணிந்து கொள்ளும்படி செய்திருக்கின்றார். இந்தக் கடுக்கணை கஸ்தூரி ஐயங்காரென்னும் ஒருவரை அழைத்து போட்டு விடும்படி தேசிகர் கேட்க அன்றிலிருந்து இந்தப் புதிய சிவப்புக்கல் கடுக்கண் உ.வே.சாவின் காதுகளை அலங்கரித்தன.

அதுமட்டுமா..?  மன்னார்குடியிலிருந்து புறப்படும் வேளையில் பட்டுக் கோட்டையில் ஒரு மோதிரத்தை வாங்கி தேசிகர் உ.வே.சாவிற்கு அணிந்து கொள்ளச் செய்திருக்கின்றார். இப்படி பொண்ணாபரணங்கள் பெற்ற மகிழ்ச்சி பெரும் குதூகலத்தை உ.வே.சாவிற்கு ஏற்படுத்தியது. அங்கிருந்து திருப்பெருந்துறை சென்று அங்கு சிலரை சந்தித்து உரையாடி பின் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியான பொழுதுகளையும் அது தனக்களித்த இன்ப அனுபவத்தையும் உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

இதனால் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகப் பொழுது போயிற்று. புதிய புதிய இடங்களையும் புதிய புதிய மனிதர்களையும் பார்க்கும் போது மனம் குதூகலமடைந்தது. கண்டியும், சால்வையும், கடுக்கனும், மோதிரமுமாகிய சம்மானங்களும், தேசிகருடைய அன்பு கனிந்த வார்த்தைகளும், அங்கங்கே கண்ட இனிய காட்சிகளும் என்னை ஒரு புதிய மனிதனாகச் செய்தன. நான் சந்தோஷத்தால் பூரித்தேன்.

தொடரும்..


சுபா