Monday, December 22, 2014

தொ.பா. (தொ.பரமசிவன்)

Inline image 1

தொ.பா. (தொ.பரமசிவன்) - ஆய்வுலகில் ஒரு தனி இடம் பெறும் தற்கால ஆய்வறிஞர். 

பண்பாட்டு அசைவுகள்.. நூலை வாசித்து இவரது விரிவான ஆய்வுப் பார்வையை அறிமுகமாக்கிக் கொண்ட போது நான் அகமகிழ்ந்தேன். 

இவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. மிக ஏழ்மையான குடும்பத்தில் தாழ்த்தப்பட்டோர் என குறிப்பிடப்படும் சாதிப் பிரிவில் பிறந்தவர். கல்வெட்டு, சமூகவியல், தமிழ் நிகண்டுகள், சமஸ்கிருதம், தமிழ் இலக்கணம், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் என் பல்முக ஆய்வுகளில் ஈடுபாட்டினைக் கொண்டவராகத் திகழ்பவர்.
பண்பாட்டு மானுடவியல் என்பது இவரது சிறப்பு ஆய்வுத்துறையாக அமைகின்றது. 
பலதுறையில் ஆர்வம் கொண்டவர். சைவ வைஷ்ணவ சித்தாந்தங்களில் ஆர்வம் கொண்டவர்.

தமிழின் மேல் ஆர்வம் உள்ளோர் அறிந்திருக்க வேண்டிய சிறந்த ஆய்வறிஞர். இவரது நூற்களை வாங்கி வாசித்தல் அவசியம். அதற்கு முன் இவரை அறிமுகம் இல்லாதோர் இந்த ஆவணப்படத்தைப் பார்த்து அறிந்து கொள்வது உதவும்.


நடிகர் திரு.கமலஹாசன் இவரது பண்பாட்டு அசைவுகள் நூலை வாசித்து விட்டு தனது அண்மைய விஜய் டிவி பேட்டிக்கு சென்ற போது இந்த நூலின் 50 பிரதிகளை வாங்கிச் சென்று ஊழியர்களுக்குக் கொடுத்தாராம். இந்தச் செய்தியைப் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

இவரது பேட்டியைக் கேட்ட பின்னர்தான் ஈழம் என்ற சொல்லுக்கே மனைமரம் என்று பெயர் என்பதை அறிந்து கொண்டேன்.  பனை பற்றி சற்றே விரிவாக, மிக ஆர்வத்துடன் பேசுகின்றார்.

இவரது பேச்சில் பளிச்சென்று மனதைக் கவர்ந்தது ஒரு வாசகம். .. புத்தக வாசிப்பு போல மனித வாசிப்பு என்பது மிக முக்கியம் என்கின்றார். 

ஒப்பனை.. மிகை.. கற்பனை அற்ற தெளிவான சிந்தனை எழுத்து இவருடையது. இவை மிஞ்சிக் கிடப்பவை தானே இன்றைய பெரும்பாலான எழுத்துக்கள். 

நல்ல ஆய்வாளர்களை மதிக்க வேண்டியதும், போற்ற வேண்டியதும், அவர்களின் தொடர் ஆய்வுகளுக்கு உதவ வேண்டியதும் கற்றோர் கடமை.

சுபா

Sunday, December 21, 2014

அன்பில் இருமனம் கலந்தால்....

தற்செயலாக நேற்று எனது நண்பர் தோமஸை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது சந்தித்தேன். இருவரும் சந்தித்துப் பேசி ஏறக்குறைய 5 மாதங்கள் இருக்கும். 

இருவரும் கேக் சாப்பிட்டுக் கொண்டு பேசலாம் என ரெஸ்டாரண்டில் கேக் காபி ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். நான் கிறிஸ்மஸ் பரிசுகளை குடும்பத்தாருக்கு வாங்க வந்த கதைகளைச் சொல்ல அவரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக தனது பாட்டிக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் வாங்க வேண்டி வந்ததாகவும் அந்த குறிப்பிட்ட பொருள் எங்கு தேடியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். 

அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. 
'சுபா.. உனக்குத் தெரியுமா.. இப்போது நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. வாழ்க்கையே புதிய அர்த்தத்தோடு இனிமையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இனிமையாக இருக்கின்றது. எனது கோபங்கள்.. வருத்தங்கள் எல்லாம் மறைந்து விட்டன. நான் மனம் நிறைய மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.. இதற்கு காரணம் எனது வாழ்க்கை துணை தான். அவரின் கணிவான நட்பும், அன்பும் என் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன' என சிரித்து முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க புதுமணப் பெண் போல நாணத்துடனும் அளவில்லா மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். 

தோமஸ் எனது அலுவலக நண்பராக 11 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு நிறுவனத்திற்கு பணி மாற்றிக் கொண்டு சென்றாலும் எங்கள் நட்பு இன்றளவும் தொடர்வது.

இவரது வாழ்க்கைத் துணை ஒரு ஆண். இவர்களது மணம் ஒத்துப் போனமையால் இவர்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை ஏறக்குறைய 8 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியிருக்கின்றனர்.  இவர்கள் நட்பை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். தோமஸ் ஒரு கணினி பொறியியளாளர். என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு ஊரில் வசிப்பார். இவரது வாழ்க்கை துணை சுவிஸர்லாந்தின் லூஸர்ன் நகரில் இருப்பவர். அவர் ஒரு ஹோட்டலுக்குச் சொந்தக்காரர். அதனை நிர்வாகம் செய்வதே அவர் பணி. இருவரும் 2 வாரங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் வார இறுதியில் சந்தித்து 3 நாட்களை தங்களுக்காக செலவிடுகின்றனர்.  

அண்மையில் தான் விடுமுறைக்கு மூன்று வாரம் சென்றிருந்தனராம். விடுமுறை இதுவரை தான் அனுபவித்திராத வகையில் இனிமையாக கழிந்தது. என்று சொல்லி மகிழ்ந்தார் தோமஸ். வார்த்தைக்கு வார்த்தை தன் வாழ்கைத் துணையை வர்ணிப்பதும், அவர் சிறப்பைச் சொல்வதும் என காதலில் மூழ்கிக் கிடக்கும் இளம் காதலர்களின் உணர்வை பிரதிபலித்தது தோமஸின் பேச்சு. அவர்கள் இருவருமே 40களின் இறுதியில் இருப்பவர்கள். 

ஆண்கள் இருவர் இணைந்து காதலர்களாக, துணையாக வாழ்வது ஜெர்மனியில் மிகச் சகஜமாகிக் கொண்டு வருவது என்பது எனக்கு தெரிந்த விஷயம். ஆயினும் இப்படி காதலில் மயங்கி தன் துணையை வர்ணிக்கும் காதல் பேச்சினை நேற்று தான் நான் முதன் முதலாக கேட்டேன். 
கேட்டேன் என்பதை விட கேட்டு ரசித்தேன் எனச் சொன்னால் தான் சரியாக இருக்கும். 

அன்பில் இருமனம் கலந்தால் அதற்கு மேல்  வேறென்ன வேண்டும்??