Saturday, May 30, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 81

திருவாவடுதுறை திருமடத்தில் இருந்த காலங்களில் உ.வே.சாவின் வாழ்க்கை தமிழ்ப்பாடம் கற்றல், ஏனைய மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றுவித்தல், செய்யுள் இயற்றுதல் என்ற வகையிலேயே அமைந்திருந்தது. ராகத்தோடு பாடலும் பாடக்கூடிய திறமையைக் கொண்டிருந்த உ.வே.சா, வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யும் திறனையும் பெற்றிருந்தார் என்பதையும் என் சரித்திரம் நூல் வழி அறிகின்றோம்.

யாரேனும் வடமொழி வித்துவான்கள் மடத்திற்கு வந்தால் அவர்கள் தாம் அறிந்த பழைய சுலோகங்கள் ஏதாகினும் சொல்வர் என்றும் அதனை தாமே தேசிகருக்கு மொழி பெயர்ப்பு செய்து தமிழில் சொல்வார் என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். அவைக்கு வரும் வடமொழி அறிஞர்களும் தனது இருமொழிப் புலமையை அறிந்து 'மடத்தின் பெருமை இது'  என நினைத்து பாராட்டிச் செல்வர் என்றும் கூறி மகிழ்கின்றார். சுப்பிரமணிய தேசிகரும் வடமொழியும் தமிழும் அறிந்த இருமொழிப் புலமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

பிள்ளையவர்களிடம் மாணாக்கராக இருந்த காலத்தில் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க தமக்கு மிகுந்த ஆவல் இருந்த போதிலும் அதற்கு காலம் இடம் கொடுக்கவில்லை என்ற வருத்தம் உ.வே.சாவின் மனதில் இருந்தது. மடத்திற்கு அறிஞர்களும் கணவான்களும் வரும் சமயத்தில் தேசிகர் உ.வே.சா அவர்களை அழைத்து சில சமயங்களில் சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்துக்களை வாசித்துக் காட்டச் சொல்வதுண்டு. பாஷ்யத்தைத் தேசிகர் தாமே சொல்வதைக் கேட்டு, எப்போது நாமும் முறையாக சைவ சித்தாந்த சஸ்திரம் கற்கப் போகின்றோம் என்று ஏக்கத்துடன் இருந்த உ.வே.சாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தேசிகரே இவரது மனக்குறிப்பை அறிந்து கொண்டார். 'நானே சைவ சித்தாந்த உரைகளை உமக்கு கற்றுத்தருகின்றேன். ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு கற்றுத்தருவதே ஒரு ஆசிரியருக்கு இன்பம்' எனக் கூறி பாடம் நடத்தியவர் தேசிகர் என்பதையும் இக்குறிப்புக்களால் அறிகின்றோம்.

கல்வியில் தீராத தாகம் மாணாக்கர்களுக்கு இருக்க வேண்டும். தேடுதல் என்பதும் புதிய கற்றல் என்பதும் பறந்த விரிவான விஷயங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த வேட்கையும் ஈடுபாடும் மாணக்கர்களுக்கு இருக்க வேண்டும். கல்வி கற்றல் என்பது வெறும் வேலைக்கு ஒரு அடிப்படை தகுதியைப் பெறும் நடவடிக்கை என்ற சிந்தனையில்லாது தன்னைச் செம்மைப்படுத்தவும் அறிவின் விசாலத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டு தனக்கும் தாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் நல்லதொரு கடமையைச் செய்யக்கூடியவகையில் தம்மை தகுதியானவராக ஆக்கிக்கொள்வதற்கும் கல்வி அமைந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு எவ்வகையில் கல்வியில் தீவிர நாட்டம் இருக்கின்றதோ அதே போல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு வகையான தகவல்களைத் தரக்கூடிய வகையில் அவர்களுக்குச் சிந்தனை சுதந்திரத்தைத் தரக்கூடிய வகையில் கல்வியை வழங்கும் வகையில்  போதனையையும் அமைப்பதும் அவசியம்.

கல்வி என்பது மனனம் செய்து ஒப்புவித்து அதனை அப்படியே சோதனையில் வெளிக்காட்டி விட்டு மட்டும் செல்வதல்ல என்பதும் தம்மை சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கின்ற வகையில் கல்வி அடித்தளத்தை அமைக்கும் கருவியாகச் செயல்படவும் வேண்டும் என்பதுவும் முக்கியம். அப்படியல்லாத போதனை ஒரு இயந்திரத்தனமான ஒன்று மட்டுமே என்பதில் அய்யமில்லை.

வேதநாயகம் பிள்ளையவர்கள் ஒருமுறை தாம் இயற்றிய செய்யுட்களைத் தேசிகர்க்கு வாசித்துக்காட்டும் படி குறிப்பிட்டு உ.வே.சாவிற்கு கடிதம் அனுப்ப, அதனை வாசித்துக் காட்டிவிட்டு பதில் கடிதமாக ஒரு செய்யுளை எழுதி அனுப்பியிருக்கின்றார். அதனையும் தேசிகருக்கு வாசித்துக் காட்டுகையில் இச்செய்யுட்களைக் கேட்கும் போது வித்வான் மீனாட்சி சுந்தரம் நினைவுகள் தாம் வருகின்றன எனக் குறிப்பிட்டமையை நினைவு கூறுகின்றார்.

சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது  தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும்.

இப்படி நாளும் பொழுதும் தமிழ்க்கல்வி என்ற நிலையில் தன் வாழ்க்கையை மன நிறைவுடன் செலுத்திக் கொண்டிருந்த உ.வே.சாவின் வாழ்க்கைப்பாதை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கும் தருணமும் உண்டாயிற்று. 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மாற்றங்கள் வரத்தான் செய்யும். மாற்றங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொளளத் தெரிந்தோரே தம் வாழ்க்கை லட்சியத்தில்  வெற்றி பெற்றவர்களாக உயர்ந்து நிற்கின்றனர். உ.வே.சா வைப் போல!


தொடரும்..

சுபா 

Friday, May 15, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 80

திருப்பனந்தாள் மடத்தின் முதல் குருவாக அமைந்தவர் குமரகுருபர சுவாமிகள். அவர் தாம் பிறந்த நாள் முதல் தமது ஐந்து வயது வரை வாய்பேசமுடியாத நிலையில் இருந்து பின்னர் பேசும் திறனைப் பெற்றவர் என்ற குறிப்புண்டு. அவர் முதன் முதலாக இயற்றிய நூல் கந்தர் கலிவெண்பா எனும் பெயர்கொண்ட நூல்.இந்தக் கந்தர் கலிவெண்பா நூலின் இறுதி வரியில்,  தமக்கு ஆசு கவி முதல் நாற்கவியும் பாடும் வன்மை வேண்டும் என்று குமரகுருபரர் சுவாமிகள் தாம் விரும்பிக் கேட்பதை பாடல் வரிகளில் இணைத்திருக்கின்றார். இதனை வாசிப்போரும் இப்பகுதியைப் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் போது, இவ்வகை கவித்துவம் தமக்குக் கிட்டும் என நினைப்பது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு, தாமும் தினமும் இச்செய்யுட்களைப் பாராயணம் செய்வதைத் தொடங்கியதை உ.வெ.சா குறிப்பிடுகின்றார். தமிழ் பற்று அதிகம் கொண்டவர் உ.வெ.சா. தமக்கு நிறைந்த தமிழ் ஞானமும் கவித்துவமும் புலமையும் வேண்டும் என்று தாம் செந்திலாண்டவரை துதித்து தன் மனதில் இருந்த ஆசையை வேண்டுதலாக்கி, தமக்கு நல்ல செய்யுள் இயற்றும் திறன் வேண்டி,  தினம் கந்தர் கலிவெண்பா படித்தமை பற்றி அறிகின்றோம். இன்று நம்மில் பலர் இது வேண்டும் அது வேண்டும் என பொருளியல் விருப்பங்களையே மனம் முழுக்க நினைத்து வைத்துக் கொண்டு இறைவனை ஒரு விற்பனைத் தரகர் போல பார்க்கப் பழகி விட்டோம். இதனைச் செய்கிறேன், என் வேண்டுதலை நிறைவேற்றி  விடு, என இறையருளை வியாபாரத்தன்மையுடன் நோக்கும் சிந்தனை மிக விரிவாகப் பரவிவிட்டது என்பது நிதர்சனம். 

தேசிகரின் பாண்டி நாட்டிற்கான பயணம் முற்றுப்பெறாத நிலையிலேயே, தேசிகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மகாவைத்தியநாதய்யரையும் அழைத்துக் கொண்டு உ.வெ.சா திருவாவடுதுறை சென்று இருந்து விட்டு சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் திருப்பெருந்துறைக்கு வரும் வகையில் திருவாவடுதுறைக்குச் திரும்புகின்றார். அங்கு அதற்குள் அப்போது மடத்தின் சின்ன காறுபாறாக (மேலாளர்) இருந்த  குமாரசாமித் தம்பிரான் மடத்தையும் அதன் சுற்றுப் புறத்தையும் மேம்படுத்தி புதுப்பொலிவுடன் திருமடத்தை புதுப்பித்து முடித்திருந்தார். அக்கால கட்டங்களில்,  தான் கந்தர் கலிவெண்பா படித்து, மனத்தில் நினைத்து முடிவெடுத்தது போலவே தினம் ஒரு செய்யுள் இயற்ற வேண்டும் என முடிவு செய்துகொண்டு ஸ்ரீகோமுத்தீசுவரர் பெயரில் தினமும் ஒரு செய்யுளை இயற்றிக் கொண்டு வந்தார் உ.வெ.சா. ஸ்ரீகோமுத்தீசுவரர் ஆலயமே திருவாவடுதுறை மடத்தின் பிரதான ஆலயம். ( குறிப்பு: எனது 2013ம் ஆண்டு பயணத்தின் போது இங்கு ஆலயத்தின் முழு பகுதியையும் பார்த்து புகைப்படம் எடுத்து தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக வெளியிட்டுள்ளேன்)

மனதில் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின்னர் அதனைச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். நம்மில் சிலர் இதனைச் செய்வோம், பின்னர் அதனைச் செய்வோம் என திட்டமிடுகின்றோம். அதில் நம்மில் ஒரு சிலரே செய்ய நினைத்ததை ஒரு ஒழுங்குடன் செய்து படிப்படியாக முழுமையாக செய்ய நினைத்து அடைய விரும்பிய நிலையை அல்லது அடையவேண்டிய இலக்கை அடைகின்றோம். நம்மில் பலர் வேறு சில, பல காரணங்களைக் காட்டி மனதில் நினைத்ததோடு  அக்கனவுகளுக்கு மூடுவிழா செய்து விட்டு அன்றாட விசயங்களில் மூழ்கி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றோம். மனதில் சாதிக்க நினைத்ததைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கு பெரும்பாலோர் வெளியில் நடக்கும் விசயங்களைக் காரணமாகக் காட்டுவதையே விரும்புகின்றோமே தவிர மனத்தின் ஒழுங்கீனத்தை அதனை ஒரு குறைபாடாக பார்க்கும் சிந்தனை போக்கு அற்றவர்களாக இருக்கின்றோம். 

எவர் ஒருவர் தமது இயலாமை என்ன என்பதை அறிகின்றாரோ, அவரால் மட்டுமே அந்த இயலாமையைச் சரி செய்து சீராக்கி நேர்படுத்தி கட்டுக்கோப்புடன்  தனது இலக்கை நோக்கிப் பயணம் செல்ல வழியமைக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் புறத்தே காரணத்தைத்தேடிக் கொண்டு இலக்குகளை பின்தள்ளிபோடுவதிலேயே கவனமாக இருப்பர். இதனால் வாழ்க்கையில் மேம்பாடு காணமுடியாத நிலையே அமைந்து சராசரி வாழ்க்கையே தொடர்வது அமையும்.

மாணவப் பருவத்தில் இருப்போருக்கு படிப்படியான நல்ல இலக்குகள் தேவை. அந்த இலக்கை அடைய கடமை உணர்வும், அக்கடமை உணர்வை செயலாற்ற ஒழுங்கும் மிகத் தேவை. ஒழுங்கு என்பது சாதிக்க நினைத்த ஒரு காரியத்தை சாதிக்க, நாம் மனதிற்குள்போடும் திட்டங்களை அதன் ஆரம்ப நிலையில் நமக்கிருந்த சிந்தை மாறாமல் அதே ஒழுங்குடன் செயல்படுத்திக் காட்டி இலக்கை அடையும் ஒரு தன்மையாகும். மனதில் நினைத்ததை முடிப்பது என்பது சாதாரண ஒரு விசயமல்ல. பலர், நான் இதனைச் செய்கின்றேன், அதனைச் செய்கின்றேன், எனச் சொல்வார்கள். ஆனால் பேச்சளவிலேயே இந்தச் சாதனை முற்றுப் புள்ளியை எட்டியிருக்கும். கனவு காண்பது மட்டும் போதாது. அக்கனவுகளைச் சாதித்துக் காட்டும் ஒழுங்கும் கடமை உணர்வும் வைராக்கியமும் ஒவ்வொருவருக்கும் அவசியம். செயல்படுத்தாத கனவுகள் காகிதக் கப்பலுக்குச் சமம்!

உ.வெ.சாவின் குறிப்புக்களிலிருந்து தினம் தினம் ஒரு செய்யுள் இயற்ற வேண்டும் என தாம் எடுத்துக் கொண்ட முடிவை மனதில் கொண்டு அவர் அதனை ஒரு ஒழுங்குடன் தொடர்ந்து செய்து வந்தார் என்பதை அறிய முடிகின்றது. இப்படித் தாம் இயற்றும் செய்யுட்களை தாம் குமாரசாமித் தம்பிரானுக்குப் படித்துக் காட்ட, இருவரும் அதன் பொருளை ஆய்ந்து பேசி மகிழ்வார்களாம். வார இறுதி நாட்களில் அங்கு கும்பகோணத்திலிருந்து வரும் தியாகராச செட்டியாரும் இவர்களுடன் இணைந்து கொள்ளும் போது அவர்களுக்குள்ளே தமிழைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்  என்றும் அறிய முடிகின்ரது. இந்த தியாகராச செட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களது தலைமை மாணாக்கர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடரும்..
சுபா

Sunday, May 3, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 6

வாசிப்பின் பதிவு 6

மூன்றாம் நூலிலே சாக்ரடீஸ் தனது நண்பர்களுடன் உரையாடுவதாக வரும் பகுதிகளில் அலசும் விஷயங்களைப்  பார்க்கும் போது நுணுக்கமாக ஒரு ராஜ்ஜியத்தில் யார் யார் எப்படி எப்படியான வாழ்க்கை முறை நியமங்களைக் கையாள வேண்டும் என அவர் கருத்தை முன்வைப்பதை ப்ளேட்டோவின் இந்த நூல் வழி தெரிந்து கொள்ள முடிகின்றது.  மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய மன்னர் மற்றும் அவரது படையினர் ஆகியோர் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உறுதியாகச் சொல்வதாகவும் இப்பகுதி அமைகின்றது.

மது மனிதரை மயக்கத்தில் ஆழ்த்தும் திறன் கொண்டது. மது அருந்துதல் ஒரு மனிதரை அவர்தம் இயல்பான சிந்தனையிலிருந்து தள்ளி, மயக்க நிலையில் வைக்கும் தன்மை கொண்டது.  இதனால் மது அருந்துவோருக்கு தெளிவற்ற நிலையே ஏற்படும். ஒரு சாதாரண மனிதர் மதுவினால் அடையும் நன்மை என ஒன்றும் கிடையாது. அது தேக ஆரோக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைப்பதில் எவ்வகையில் பங்கு வகிக்கின்றதோ அதே வகையில் மனத்தின் ஆரோக்கியத்தைத் தெளிவற்றதாக்குவதிலும் பங்கு வகிக்கும் தன்மை கொண்டது.

மது அருந்துவதைத் தடுக்க பல உத்திகள் கையாளப்படுகின்ற வேளையில், ஒரு தனி மனிதர் தானே மதுவினால் உண்டாகின்ற வினையை அறிந்தால் ஒழிய அதிலிருந்து வெளிவருவது என்பது சாத்தியமல்ல. மதுவினால் சீர்கெட்ட குடும்பங்கள் பற்றி தினம் தினம் அறிந்தாலும் கூட, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மனிதர்கள் இறக்கின்றார்கள் என செய்தியை அறிந்தாலும் கூட மதுவிற்குத் தன்னை பழக்கிக் கொண்ட பலர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக பல பாசாங்குத் தனமான காரணங்களாகவே அமைகின்றன.

சோகத்தை மறக்க மது  அருந்துவதாகச் சிலரும்..
துன்பத்திலிருந்து மீள அருந்துவதாகச் சிலரும்..
வீரத்தைக் காட்ட அருந்துவதாகச் சிலரும்..
பண பலத்தைக் காட்ட அருந்துவதாகச் சிலரும்..
என மதுவிற்கு அடிமையானோர் காரணம் கற்பிக்கத் தவருவதில்லை.

மதுவினால் அழிவது பிறரல்ல.. தானும் தன் குடும்பமும் தான் என ஒருவர் உணர்ந்தால் வேறு எந்த சட்டமும் தேவையில்லை .. மதுவை அறவே ஒழிக்க.
ஆனால் அந்தத் தெளிவு வராத காரணத்தினால் தான் புறத்தே சில காரணங்களைக் கற்பித்துக் கொண்டு  மது அருந்தும் பழக்கத்தை காரணங்களை உருவாக்கிக் கொண்டு தொடர்கின்றனர்.

இதில் தமிழ் சினிமா ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது என்பதை ஒதுக்கித் தள்ள முடியாது.

ஒரு  இளைஞன் என்றால் அவன் நண்பர்களைச் சந்திக்கும் போது மது அருந்துவான். அது நாகரிகம் என்ற வகையிலோ.. ஹீரோயிசத்தைக் காட்டும் ஒரு வழியாகவோ மது அருந்துவது தமிழ் நாடகங்களிலும் சினிமாக்களிலும் காட்டப்படுகின்றது. சுயமாகச் சிந்திக்கும் தன்மையையே இழந்து நிற்கும் பலருக்கு இவ்வகை விஷயங்கள் தவறான பாதையக் காட்டுவனவாக அமைந்துவிடுகின்றன. ஆக இவ்வகை தவறான வழிகாட்டுதல்களைத் தரும் போக்கு தடுக்கப்பட வேண்டியது மிக அவசியமாகின்றது. வழிகாட்ட வேண்டியவர்களே தவறான பாதையை அமைத்துக் கொடுக்கும் போது ராஜ்ஜியத்தில் எப்படி உடல்ஆரோக்கியமும், உள ஆரோக்கியமும் கொண்ட மக்கள் இருப்பார்கள்.

சாக்ரடீஸ் தம் சகாக்களுடன் உரையாடுவதைக் காண்போம்.

சாக்: தேகப் பாதுகாப்பு சம்பந்தமாக, சில பொதுவான விதிகளை மட்டும்  நாம் இங்கு சொல்லிக் கொண்டு போவோம். ஏற்கனவே நாம் குடிப்பழக்கம் கூடாதென்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். ஒரு தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றவன், குடித்துவிட்டு இந்த  உலகத்திலே நாம் எங்கே இருக்கின்றொமென்று தெரியாத நிலையில்  கிடந்தால் அதனை நாம் அனுமதிக்கலாமா?

கிளா: கூடவே கூடாது. அவன் மற்றவர்களைப் பாதுகாப்பது போய், மற்றவர்கள் அவனைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது மகா கேவலமல்லவா?

தொடரும்..