Sunday, July 5, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 11

எல்லா உயிர்களிடத்தும் அன்பு,  கருணை, நற்பண்பு, உண்மை, வாய்மை, நேர்மை, ஒற்றுமை என்பவை நாளுக்கு நாள் ஒரு தனி மனிதரின் குணத்தின் வளர்ச்சியில் பெருகிக் கொண்டே வரவேண்டும். இதற்கு எதிர்மாறான குணங்களான, பொய்மை, வெறுப்பு, ஏமாற்றுத்தனம், குறுக்குவழி, போலித்தனம், ஊழல், பிரிவினை, என்பவை முற்றிலுமாக மனதிலிருந்தும் சுற்றுச் சூழலிலிருந்து ஒழிந்த நிலை ஏற்பட வேண்டும். ஆயினும் தற்கால நிலமை நமக்கு காட்டுவது என்ன?

மனிதர்கள் சாதிப்பிரிவினையை உயரத்தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் குலப்பெருமையைக் காக்கின்றோம் என்பதற்காக வன்கொடுமைகளில் ஈடுபடுவதை செய்திகளில் காண்கின்றோம். சமூகத்தில் பிளவுகள் என்று மட்டுமில்லாமல் சுற்றத்தாருடன், உறவினர்களுடன் பிளவு என்று பிரிவினையை தன் சுய நலத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் வளர்ப்பதைக் காண்கின்றோம். ஊழல் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அம்சமாகவும், வரதட்சணை என்பது குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அங்கமாகவும் ஆகிவிட்ட சூழலை மறுக்கமுடியாதது.

கல்வி என்பதே ஒரு தொழிலைத் தேடி அதன் மூலம் அவசரம் அவசரமாக பொருளீட்டி செல்வந்தராவதற்குத்தான் என்ற நிலையை ஏறக்குறைய எல்லோருமே ஏற்றுக் கொண்டு விட்ட நிலை கண்கூடு. இதில் ஆங்காங்கே சில விதி விலக்குகள் கண்களில் தென்பட்டாலும் அவர்கள் சமூகத்தால் ஏளனப்படுத்தப்படுவதும், உலக நிலமை தெரியாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு கேலிக்குள்ளாக்கப்படுவதுமே நிகழ்கின்றது.

மக்களை நல் நெறிப்படுத்தும் தரமான கல்வியை வழங்குவதில் அரசும், பள்ளிகளும் ஆசிரியர்களும் பெரும்பங்காற்றுகின்றனர். ஒரு தனி மனிதரை நல்ல சிந்தனை கொண்ட, சமுதாய பிரக்ஞை கொண்ட, ஏனைய பிர சமூகத்தோடும் இனத்தாரோடும் இணைந்து வாழக்கூடிய உலகத்தன்மையைப் புரிந்து கொண்ட ஒரு தனி மனிதராக உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பு இது.

பெரியாரின் குடி அரசு வாசித்துக் கொண்டிருந்த போது அதில் தனி மனிதரை உருவாக்கும் அம்சத்தில் ஆசிரியரின் தன்மையைப் பற்றி ஒரு சொற்பொழிவில் குறிப்பிடுகின்றார். அதனை காண்போம்.


..கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல.  அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால் மக்கள் சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவகைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத் தகுந்ததாகவும் இருக்க வேண்டும். இவைகளையறிந்தே வள்ளுவரும் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லாதார் அறிவில்லாதார்' என்றும், 'தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' என்றும் 'ஓத்தறிவான்  உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்' என்றும் சொல்லி இருக்கின்றார்.

இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு, கண்ணில்லாதன் குருடன், திருடாதே, அடிக்காதே, என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டு விடக்கூடும்? இவைகள் எல்லாம் குழந்தைகள் தானாகவே  படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திருப்பி அடித்து விடுவான். ஒருவனை வைதால் அவன் திருப்பி வைது விடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும்,  நாயும் பூனையும் கண்ணில் பார்க்கும் போதே கால் எவ்வளவென்பதுவும் வாலுண்டென்பதுவும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச் செலவும்மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதுவே நமது அபிப்ராயம்.

நீங்கள்  முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  மானம் ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகின்றதா என்பதை உங்கள் மனதையே கைவைத்து கேட்டுப் பாருங்கள்.

...
படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம் உயர்ந்திருக்கின்றார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில் நம்பிக்கையில் படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருகீன்றார்கள்?

...
தற்காலம் எத்தனை மேஜிஸ்ட்ரேட் கச்சேரி, எத்தனை முனிசீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கின்றது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா? படிப்பு என்னும் தற்காக் கல்வி முறையல்லவா நாட்டையும் சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.
-குடி அரசு - சொற்பொழிவு 01.05.1927

தொடரும்..
சுபா