Wednesday, September 23, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 8

வாசிப்பின் பகுதி 8


ஒரு சிறந்த ராஜ்ஜியத்தில் மன்னர் எப்படியிருக்க வேண்டும்? கலைஞர் எப்படி இருக்க வேண்டும்? மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? விவசாயி எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையில் சாக்ரடீஸ் நடத்தும் உரையாடல் தொடர்கின்றது.

ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் ஏனோ தானோவென்று அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்று விடக் கூடாது. நாடு என்னும் இயந்திரம் சீராக இயங்க ஒவ்வொருவரும் தமது கடமையைச் சீராகச் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் தமது திறனுக்கேற்ற பொறுப்பை எடுத்துக் கொண்டு, அதில் தகுந்த பயிற்சியைப் பெற்று, அந்தப் பொறுப்பை சிரத்தையுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் மனதை சீராக வைத்திருக்க வேண்டும். மனதை சீராக வைத்திருப்பது போலவே உடல் பயிற்சிகளைச் செய்து செய்து உடலையும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும்.

சீரில்லாது தீய உணவு பழக்கத்தால் உடல் நலனைக்  கெடுத்துக் கொண்டு நோயில் வீழ்ந்து அந்த நோயைப் பற்றியே தினமும் நொடிப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பது நாட்டிற்குக் கேடு. ஆதலால் உடலையும் மனத்தையும் மிகச் சீராக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை..

இப்படி தொடர்கின்றது சாக்ரடீஸின் கருத்துக்கள்.

ஒரு ராஜ்ஜியத்தைக் காவல் செய்கின்ற மன்னரும் அவரது அதிகாரிகளும் தனித்திறமையுடன் பிறப்பவர்கள். இத்தகையோர் அவரவர் திறமைக்கேற்ப கண்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசியலில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இப்படி அளிக்கப்படும் பயிற்சியானது அவர்களுக்கு பலவகைப்பட்ட சோதனைகளை அளிப்பதாகவும், அவர்களைக் கடமையில் கண்ணும் கருத்துமாக கவனமாக இருக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் என்பது தனிமனித சுயனலத்தையோ அல்லது தான் சார்ந்திருக்கும் குமுகத்தையோ முற்றிலும் ஒரு நோக்கமாகக் கருதாத ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட வகையில் அமைந்ததாக இருக்க வேண்டும் என்ற  கருத்தை முன் வைக்கின்றது மூன்றாம் நூல்.

நாட்டு மக்களிடம் சென்று  நேராக சில கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொண்டு உடனே  ஒப்புக் கொள்ள மாடார்கள். ஆகையால் மக்களை அணுக சில கதைகளைச் சொல்ல வேண்டும். எளிமையான அக்கதைகளைக் கேட்பதன் வழி  அவர்கள்  ஒரு நாட்டினை செம்மையாக ஆட்சி செய்ய வேண்டிய அரசு இயலின் தத்துவங்களைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க உதவும் என்ற கருத்தை மனதில் கொண்டு  இப்பகுதியில் உரையாடல் வளர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

ஸாக்ரடீஸ்: "இந்த ராஜ்யத்திலே வசிக்கிற நீங்களெல்லோரும் சகோதரர்கள். ஆனால் கடவுள் உங்களைச் சிருஷ்டிக்கிற போது, யாரிடத்தில் ஆளும் யோக்கியதை இருக்கிறதோ அவர்களிடத்தில் தங்கத்தை நிரப்பி வைத்திருக்கின்றார். அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் மரியாதை செலுத்த வேண்டும். அப்படியே போர் வீரர்களிடத்தில் வெள்ளியையும், விவசாயிகள் - தொழிலாளர்கள் முதலியோர்களிடத்தில் இரும்பையும் செம்பையும் முறையே நிரப்பி வைக்கின்றார். உங்களைப் போல் உங்களுடைய குழந்தைகளும் இருப்பது சகஜமே. அரசர்கள் போர் வீரர்கள், விவசாயிகள் - தொழிலாளிகள் முதலியோர், ஒரே மண்ணிலிருந்து உற்பத்தியானவர்களாதலினால், அதாவது சகோதரர்களாதலினால், தங்கத்திடமிருந்து வெள்ளியும் அல்லது வெள்ளியிடமிருந்து தங்கமும் முறையே  பல வகையாக மாறி மாறித் தோன்றுவது இயற்கைதான். இதனால் கடவுள் அவர்களுக்கு விதித்திருக்கிற கண்டிப்பான கட்டளையென்னவென்றால், ராஜ்யத்திலே பிறக்கிற எல்லாக் குழந்தைகளின் விஷயத்திலும் நீங்கள் அதிகமான கவனஞ்செலுத்த வேண்டும்.

யாருடைய ஆத்மாவில் என்னென்ன உலோகம் கலந்திருக்கிறதென்பதை நீங்கள் நிதானித்துப் பார்க்க வேண்டும். உங்களுடைய சொந்த குழந்தைகளிடத்திலேயே இரும்பும் செம்பும் கலந்திருக்குமானால், அதாவது, விவசாயியாக இருக்கவோ அல்லது  தொழிலாளியாக இருக்கவோ கூடிய யோக்கியதைகளுடன் அவர்கள் பிறப்பார்களானால், கொஞ்சம் கூடத் தயை தாட்சண்யமின்றி அவர்களை விவசாயிகளின் கூட்டத்தில் சேர்த்து விட வேண்டும். அப்படியே விவசாயிகள் - தொழிலாளிகள் குடும்பங்களில் அரச தன்மைகளுடனோ குழந்தைகள் பிறப்பார்களானால் அவர்களை, அந்தப் பிரிவுகளில் முறையே சேர்த்துவிட வேண்டும். அதாவது அவர்களை அரசர்களாகவும், போர் வீரர்களாகவும் முறையே நியமிக்க வேண்டும்.

ஒரு ராஜ்யத்தை இரும்போ செம்போ காவல் செய்யுமானால், அதாவது விவசாயிகளோ அல்லது தொழிலாளர்களோ ஆட்சி புரிவார்களானால், அந்த ராஜ்யம் விரைவிலேயே அழிந்து போகும்"  என மக்களுக்கு உபதேசித்து மக்களை நம்பச் செய்ய வேண்டும்.

தொடரும்.
சுபா

Monday, September 21, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 85

உ.வே.சாவிற்குத் திருவாவடுதுறை மடத்திலிருந்து புறப்பட்ட நாள் மனதில் மறக்க முடியாத கவலையை உண்டாக்கியதை மறுத்து விட முடியாது, என் சரிதத்தில் அவர் இந்த நிகழ்வை குறிப்பிடும் காட்சியை வாசிக்கும் போது வாசகர்களாகிய நமக்கே அவர் திருமடத்தை விட்டுப் போகாமல் இருந்து விடக் கூடிய வகையில் ஏதும் நிகழாதா என்று எண்ணும் அளவிற்கு மனம் செல்கின்றது. மடத்தின் ஒவ்வொரு இடமும்  மனதில் ஒரு புள்ளியைத் தொட்டு அவை ஒவ்வொன்றும் அவருக்கு அளித்த அனுபவங்களை நினைக்க வைத்து, அவரை சோகக் கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வே அங்கு நடந்து கொண்டிருந்தது. 

சக மாணவர்களுடன் படித்த இடங்கள், புத்தகக் கட்டுக்கள், மடத்தின் சில மூலைகள் என ஒவ்வொன்றும் அவருக்கு இனிய நினைவுகளை மட்டும் நிழல் படம் போல மணக் கண்ணில் கொண்டு வந்து காட்டி சித்திரவதை செய்யத் தொடங்கி விட்டன. அவரது மனம் வாடியதை இப்பகுதியை வாசிக்கும் போதே வாசகர் ஒவ்வொருவரும் உணர்வோம். ஓரிரு வரியில் அவர் தன்னிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

" “அவை ஜடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. "

பிரிய மனமில்லாமல் திருவாவடுதுறை மடத்தைப் பிரிந்து அவ்வூரில் இருக்கும் புகை வண்டி நிலையம் வந்து  அங்கிருந்து தனது உறவினர் கணபதி ஐயரென்பவருடன் புறப்பட்டு கும்பகோணம் போய்ச் சேர்ந்தார்.

கும்பகோணத்தில் தியாகராச செட்டியார் இல்லத்தை வந்தடைந்தார். இவ்வளவு சீக்கிரம் தேசிகர் அனுப்பி வைத்து விட்டாரே என்று தியாகராச செட்டியாருக்குப் பெரும் அதிசயம். அவரை வரவேற்று உபசரித்து தன் வீட்டிலேயே தங்க வைத்தார். மறு நாள் காலை தனது வீ​ட்டிலிருந்த ​ 100 புத்தகங்களை எடுத்துக் கொண்டு உ.வே.சாவையும் அழைத்துக் கொண்டு அவரது கல்லூரி பேராசியர்களுகு அறிமுகம் செய்து வைக்க அழைத்துச் சென்றார். கல்லூரி முதல்வருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்ரீநிவாசய்யர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்குத் தனது தேர்வு எத்தகையது என்று சொல்லி சரியான அறிமுகத்தை உ.வே.சாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற தீராத ஆவல் தியாகராச செட்டியாருக்கின் இருந்தது.

100 நூல்களுடன் சென்ற இவர்கள் இருவரையும் பார்த்த ஏனைய ஆசிரியர்களுக்கு முதலில் ஆச்சரியம்.  இந்த நிகழ்வை உ.வே.சா இப்படி விவரிக்கின்றார். 

" புறத்தே சென்றிருந்த சேஷையரும் வந்து விட்டார். வந்தவுடன் தமது மேஜையின்மேல் உள்ள மூட்டைகளைக் கவனித்து, “இவை என்ன?” என்று கேட்டார்.
“எல்லாம் தமிழ்ப் புஸ்தகங்கள்” என்றார் செட்டியார். பிறகு என்னையும் அறிமுகம் செய்வித்தார்.
வந்த ஆசிரியர்களுள் ஒருவர் “தமிழ்ப் புஸ்தகங்கள் இவ்வளவு உள்ளனவா?” என்று கேட்டார்.
செட்டியார், “இன்னும் எவ்வளவோ உண்டு. அச்சில் வாராத ஏட்டுப் புஸ்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன” என்று கூறி அவருடைய
வியப்பைப் பின்னும் அதிகமாக்கினார்.

வேறொருவர், “இவை என்ன என்ன புஸ்தகங்கள்? எதற்காக இவ்வளவு?” என்று கேட்டார். "

இந்த உரையாடல் அக்காலத்தில் படித்த ஆசிரியப் பெருமக்கள் மத்தியிலும் கூட விரிவான புத்தக வாசிப்பு, அறிமுகம் ஆகியன இல்லாத குறை இருந்தமையைக் காட்டும் உதாரணமாக அமைகின்றது. இக்காலத்தில் தான் பல ஆசிரியர்கள் பொது நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று புலம்புகின்றோம் என்னும் நிலை என்றில்லாமல் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட ஏறக்குறைய இதே நிலைதான் இருந்திருக்கின்றது என்பது கண்கூடு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா, தியாகராச செட்டியார், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோரெல்லாம் நூல் வாசிப்பிலும், வாசித்ததைச் சிந்திப்பதிலும், புதிய இலக்கியம் படைத்தலையும், மாணாக்கர்களுக்குத் தமிழ்க்கல்வியை மிகுந்த  அக்கறையோடு   அறிமுகப்படுத்தியவர்கள் என்ற பெருமையைப் பெறுபவர்கள். அதனால்தான் இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் கூட நாம் இவர்களை மதிக்கின்றோம். இவர்கள் காலடிச் சுவற்றில் ஏனைய ஆசிரியர்களும் வரவேண்டும் என விரும்புகின்றோம்.

மறுநாள் கல்லூரி முதல்வர் கோபால்ராவ் அவர்களுக்கு உ.வே.சாவை அறிமுகம் செய்து வைத்தார் தியாகராச செட்டியார். சிறிய உரையாடலுக்குப் பிறகு தியாகராச செட்டியார் வகித்து வந்தப் பதவியை உ.வே.சாவிற்கு வழங்க சம்மதித்து அடுத்த திங்கட்கிழமை முதலே பணி தொடங்கலாம் என்ற உத்தரவையும் வழங்கினார் கல்லூரி முதல்வர். 

சிலர் சில வேளைகளில் நம்மை நோக்கிச் சொல்லும் வாசகங்கள் நம் மனதிலிருந்து மறையாது. அச்சொற்கள் நம் உணர்வுகளை ஏதாகினும் வகையில் பாதிக்கும் வகையில் அமைந்திருந்தால் இவ்வகை நிலை  ஏற்படுவது வழக்கம். ஆழ்ந்த மகிழ்ச்சி, ஆழ்ந்த கவலை, திகில், போன்ற உணர்வுகளோடு கலந்து வரும் சில சொற்கள் நம் மனதில் நீண்ட நாள் மறையாமல் இருக்கும் சக்தி கொண்டவை. உ.வே.சாவின் மனதில் தனது முதிய வயதிலும் சில சொற்கள் ஒலித்துக் கொண்டிருந்தனவாம். அதனை இப்படி விவரிக்கின்றார் உ.வே.சா.

"வருகிற திங்கட்கிழமை முதல் இவர் காலேஜில் வேலை பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது."

கும்பகோணம் காலேஜில் பணியில் இணைய ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் தேசிகர் சம்மதம் தெரிவித்த வேளையிலிருந்து தனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் அமைகின்றது என்ற எண்ணம் உ.வே.சா அவர்கள் மனதில் எழுந்திருக்க வேண்டும். கல்லூரியின் ஏனைய ஆசிரியர்களின் தொடர்ந்த பாராட்டு, தியாகராச செட்டியாரின் ஆர்வம் ஆகியவை அவர் மன நிலையை அச்சம் கலந்த  நிலையிலிருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையில்  கல்லூரி முதல்வர் கோபால் ராவ் அவர்களில் பணி உத்தரவு அம்மகிழ்ச்சியை நிலையான மகிழ்ச்சியாக உறுதி செய்தது. தனிப்பட்ட வகையில் தனது திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் அது என உ.வே.சா மனதில் தோன்றிய அக்கணங்கள் நினைத்துப் பார்த்தாலே உயிர் பெற்று நிலவும் வகையில் அவரது இறுதி காலம் வரை மனதை விட்டு அகலவில்லை.

தொடரும்..

சுபா

Thursday, September 17, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 12


20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால தமிழகத்தின் நிலமை என்பது பல திருப்புமுனைகளைக் கொண்டது. மக்கள் வாழ்க்கையில் பன்முக மாற்றங்களை எதிர்கொண்ட காலகட்டம் அது. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற வேட்கை ஒரு புறம். சமதர்மம் பேனப்பட வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம். எல்லோருக்கும் சாதி வேறு பாடு இன்றி கல்வி தேவை என்ற சிந்தனை ஒரு புறம். பெண்களுக்குக் கல்வி என்ற முழக்கம் ஒரு புறம்,.... என  பலவகை சமுதாய மாற்றங்களை தமிழகம் இந்த 20ம் நூற்றாண்டில் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தமிழகத்தின் சமூக, சமய, அரசியல்  நிலைத்தன்மைகள் அமைந்திருக்கின்றன.

ஒரு சில விடயங்களை உற்று நோக்கும் போது படிப்படியான வளர்ச்சியைக் காணமுடிகின்றது. உதாரணமாக பெருமளவில் பெண்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்வதும் பலதரப்பட்ட தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதையும் நல்லதொரு வளர்ச்சியாகக் காண்கின்றோம். சாதி வேறுபாடு எனும் விடயத்தை எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டோர் என்றும் தாழ்த்தப்பட்டோராகவே இருக்க வேண்டும் என்ற எழுதா சட்டத்தை வலியுறுத்தும் எண்ணம் பரவலாக மாறவில்லை என்பதைக் காண்கின்றோம்.

நாட்டின் சுதந்திரத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய பெரியோரை வாழ்த்திப் பாடிய இளைஞர்கள் குறைந்து சினிமா பிரபலங்களுக்காக விழா எடுத்து பார்ட்டி கொடுத்து அவர்கள் பெருமையை தன் பெருமையாக நினைத்து வாழும் இளைஞர்கள் பெருகி இருப்பதைக் காண்கின்றோம். மது ஏழை பணக்காரன், ஆண் பெண்,வயதானோர், இளையோர், குழந்தைகள் என ஒரு அளவில்லாத வகையில் எல்லா தரப்பினரையும் பாதிக்கின்ற ஒரு விடயமாகிப் போய்விட்ட  அவலத்தையும் காண்கின்றோம்

பொதுவாகக் கல்வி வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு என எடுத்துக் கொண்டால் பல அடுக்கு ஊழல்களால் மக்கள் நலன் என்பது ஓரம் தள்ளப்பட்டு தரம் குறைந்த வகையிலேயே கல்விக்கூடங்கள் இயங்குவதையும், கிராம நல மேம்பாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் இருப்பதையும்  காண்கின்றோம்.

பேச்சுரிமை என்பது எந்த அளவிற்கு நடப்பில் உள்ளது என்பதும் கேள்விக்குறி. நியாயமற்ற செயல்பாடுகளை கேள்வி கேட்டு நியாயத்திற்காகப் போராடும் உயர் அதிகாரிகளும் சரி பொது மக்களும் சரி எண்ணிக்கையில் குறைந்து தான் இருக்கின்றனர். திரு.சகாயம் IAS  போன்றோர் என்ணிக்கையில் குறைந்து தான் உள்ளனர். சூழலுக்கு ஏற்றவாறு ஊழலையும் ஏற்றுக் கொண்டு, அநீதிகளையும் ஏற்றுக் கொண்டு, பொய்மையையும் ஏற்றுக் கொண்டு அந்தச் சிக்கலுக்கு இடையே தன் நலன், தன் குடும்ப நலன் என்ற ஒன்றினை மட்டுமே முன்னிலைப் படுத்தி இயங்கும் நபர்களே திறமையானவர்கள் என அடையாளம் காணப்படும் நிலைமை இருக்கும் கால கட்டம் இது. பலருக்கு மனதில் நியாயம் என்று தோன்றியதைச் சொல்வதில் அச்சம். பிறர் தன்னைப் பற்றி என்ன நினைத்து விடுவார்களோ என்ற கலக்கம். 

திரு.ஈ.வே.ரா அவர்கள் தன் மனதில் பட்ட விசயத்தை வெளிப்படையாகக் கூறுவதில் தயங்கியவரில்லை என்பதை அவரது எழுத்துக்களை வாசிப்பவர்கள் அறிவார்கள். உதாரணமாக 1932ம் ஆண்டு வெளி வந்த குடியரசு இதழில் அவரது இலங்கையில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவத்தைக் குறிப்பிடலாம்.

​கொழும்பில் ஈ.வெ.இராமசாமி

...விஷயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். பார்த்து அதற்கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.

நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய அறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.

நாம் எண்ண வேண்டியது, ஆராய வேண்டியதெல்லாம் முன்னேயே எமது ஆன்றோரால் ஆய்விட்டது என்று நீங்கள்  கொள்ள வேண்டாம். நான் சொல்லுவது முற்றும் சரியென்றும் நீங்கள் கொள்ள வேண்டாம். எதையும் ஆராய்ந்து உண்மை தேறிக்கொள்லுங்கள்.

எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்ம கர்த்தாவாகவிருந்து, அக்கோயிலின் கிரமங்களை யெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்கு தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்ல வேண்டாம். ஒரு தடவைக்கு மூன்று நான்கு தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்கு சென்றேன். ஆனால் இந்த அபிமானமெல்லாம் நம் ஏழைச் சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது. ஆதலால் தான் அபிமானமொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே வேண்டுமென்று ஜனங்களுக்கு நான் எனக்கு தோன்றிய வரை போதிக்கத் தலைப்பட்டேன். சோம்பேறி ஞானமும், மதாபிமானமும் பசி கொண்ட மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுங்கள். மனுஷாபிமானத்தையும், சுயமாரியாதையையும் காப்பாற்றுங்கள் ஏழைகளின் கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள்.

-குடி அரசு சொற்பொழிவு - 30.10.1932

அன்புடன்
சுபா