Wednesday, June 22, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 97

சிந்தாமணியை வாசித்து சிந்தாமணி பதிப்பித்தல் பணியிலேயே மூழ்கியிருந்த உ.வே.சாவிடம் பேச்சுக் கொடுத்து அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களையும் பாட பேத வித்தியாசக் குறிப்புக்கள், விளக்கங்கள் என எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு சென்று விட்டார் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள். பிரமை பிடித்தது போல தன் நிலை மறந்து போய் அமர்ந்திருந்தார் உ.வே.சா. அவர் மனம் தாமோதரம் பிள்ளையவர்களுடன் நடந்த உரையாடல்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தது. நீண்ட நேரம் பேசிய தாமோதரம் பிள்ளை பாட பேத குறிப்புக்கள் கிடைத்த உடனேயே கிளம்பி விட்டாரே, என நினைத்த போது உ.வே.சாவிற்கு மனதில் வேதனையும் அதிர்ச்சியும் சூழ்ந்து கொண்டது. எங்கே, தனது நெடுநாளைய உழைப்பு வீணாகிப் போய்விடுமோ என கலங்கிப் போய் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். 

வெளியே சென்றிருந்த அவரது தந்தையார் இல்லம் திரும்பியபோது உ.வே.சாவின் முகக்குறிப்பிலிருந்து ஏதோ நடந்திருக்கின்றது என ஊகித்துக் கொண்டார். வினவிய போது எல்லா விசயங்களையும் உ.வே.சா விபரமாக தன் தந்தையிடம் கூறினார். அதற்கு உடனே தந்தையார், "அவசரப்பட்டு உடனே கொடுத்திருக்க வேண்டாமே. இரவும் பகலுமாக உழைத்திருக்கின்றாய். நீயே பதிப்பிப்பதாக ஊரில் பலரிடம் சொல்லியிருக்கின்றாய். ஆகவே நாளைக் காலை உடனே சென்று அந்தக் குறிப்புக்களை வாங்கி வந்து பதிப்பிக்கும் வேலையை நீயே செய்" என ஆலோசனைக் கூறினார். 

தந்தையாருடன் பேசியதும் அவரது ஆலோசனையும் உ.வே.சாவிற்கு சற்றே மனத்தெம்பை அளித்தது. ஆனாலும் கூட அன்றைய இரவு தூக்கம் வராது கவலை மனதைச் சூழ்ந்து கொண்டது. அதிலிருந்து விலக முடியாது காலை வேளை எப்போது வரும் என்று காத்துக் கொண்டேயிருந்தார் உ.வே.சா. 

காலையில் விரைவாகத் தயாராகி தன் சகோதரனையும் அழைத்துக் கொண்டு தாமோதரம் பிள்ளையவர்கள் இருக்கும் இல்லத்திற்குச் சென்று தாம் வந்திருப்பதைத் தெரிவித்தார். வெளியே வந்த தாமோதரம் பிள்ளையவர்கள் அதுவரை சில குறிப்புக்களை வாசித்திருப்பதாகவும், சில வரிகள் புரியவில்லை எனவும், தமக்கு விளக்குமாறும் கேட்டுக் கொள்ள, உ.வே.சா தயங்காது அவற்றிற்குப் பொருள் விளக்கம் கூறினார். அப்போது அங்கே தாமோதரம் பிள்ளையவர்களைச் சந்திக்க வந்திருந்த அம்பிகைபாகன் என்ற ஆசிரியர் ஒருவரும் உடன் இருந்தார். 

தொடர்ந்து தாமோதரம் பிள்ளையவர்கள் கேள்விகள் கேட்க, அதற்கு உ.வே.சா விளக்கம் சொல்ல, சற்று நேரத்தில் உ,வே.சா, இவையெல்லாம் எளிமையானவை. இவற்றிற்கே உங்களுக்குப் பொருள் புரியாத போது ஏனைய கடினமான பகுதிகளை நீங்கள் புரிந்து கொண்டு பதிப்பித்தல் என்பது முடியாத காரியம். நானே என் பணியைத் தொடர்ந்து இப்பதிப்பு வேலையைச் செய்யப்போகின்றேன் எனச் சொல்லி தான் கொடுத்த குறிப்பு நூற்களை வாங்கி அங்கிருந்த தன் சகோதரனிடம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் செல் எனச் சொல்லி விட்டு அங்குச் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். தாமோதரம் பிள்ளையவர்களும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. பொருளாதார பலம் இல்லாமல் பதிப்பிப்பது இயலாது என்றும் தம்மால் மட்டுமே இது சாத்தியம் என்றும் வாதாடிப்பார்த்தார். அருகில் இருந்த அம்பிகைப்பாகன் ஆசிரியர் இடைமறித்து, உ.வே.சா செய்வது தான் பொருந்தும் என்றும், ஏனெனில் இந்த நூலைப் புரிந்து கொண்டவர் அவர் என்பது அதனைப்பதிப்பித்தலுக்கு அடிப்படை முக்கியம் என்றும், தாமோதரம் பிள்ளையவர்கள் நூலை ஒரு முறை கூட முழுமையாக வாசிக்கவில்லை என்பது புரிகின்றது என்றும் குறிப்பிட்டு, உ.வே.சாவே பதிப்பிப்பது தான் முறை என்று சொல்ல, வேறு வழியின்றி தாமோதரம் பிள்ளையவர்கள் அமைதியானார். 

ஒரு வகையாகத் தனது குறிப்புக்கள் கொண்ட நூலை வாங்கி வந்து விட்டோமே, என உ.வே.சாவின் மனதிற்குள் ஆழ்ந்த நிம்மதி வந்து குடியேறியது. அந்தச் சம்பவத்தையும் அன்று தனக்காகப் பேசிய அம்பிகைப்பாகன் என்ற ஆசிரியரையும் தனது முதுமையான காலத்திலும் நினைத்துப் பார்க்கின்றார் உ.வே.சா. 

இந்தப் பகுதியை வாசித்த போது உ.வே.சாவின் மனம் பட்ட வருத்தத்தை என்னால் உணர முடிந்தது. இப்படி நமது வாழ்க்கையிலும் ஏதாகினும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. 

நாம் பல மணி நேரங்கள் உழைத்து ஏதாகினும் ஒரு காரியத்தைச் செய்திருப்போம். ஆனால் பொருளாதாரமும் அதிகாரமும் இருக்கின்ற காரணத்தால் மட்டுமே ஒரு சிலர், நமது உழைப்பை மறைத்து, நமது செயல்பாட்டினால் உருவான பலனை தமதாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சிலர் பரவலாக நமது சூழலில் இருக்கத்தானே செய்கின்றனர். இத்தகைய அபாயகரமான நபர்களை அடையாளம் கண்டு கொண்ட பிறகு அத்தகையோரிடமிருந்து விலகி தூரமாக இருப்பதே சீரிய பணியை ஆற்றுபவர்களுக்கு உதவும். ஆயினும் பல வேளைகளில் மோசமான அனுபவங்களுக்குப் பிறகுதான் ஏமாற்றுவோரையும் நமது உழைப்பின் பலனை திருடுவோர்களையும் நாம் அடையாளம் காணமுடிகின்றது. இது மிகுந்த வேதனையளிக்கும் ஒரு விசயம் தான். 

அதிகார பலமும் பொருளாதார பலமும் மட்டும் உள்ளவர்கள் சான்றோர் அல்ல. நேர்மையும் உண்மையும் உள்ள மனிதர்கள் தாம் சான்றோர்கள்! காலம் கடந்தாலும் அவர்களே உலக மக்களால் போற்றப்படுவர்! 


தொடரும்.. 

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 96

உழைப்பை திருடுபவர்கள் அதிகரித்து விட்ட காலம் இது எனச் சொல்லி சொல்லி வருந்துகின்றோம். பிறரது உழைப்பை தம்முடையதாக ஆக்கிக் கொண்டு பொருளும் பெயரும் தேடிக்கொள்ள விழையும் மனம் கொண்டோர் எல்லா காலங்களிலுல் இருந்திருக்கின்றனர். காலமும் சூழ் நிலைகளும் தான் மாறுபடுகின்றனவேயன்றி மனித மனம் என்பது அப்படியேதான் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகின்றன.  பிறரது உழைப்பை தன்னுடையதாக பறை சாற்றிக் கொள்ளும் முயற்சி என்பதில் வேறுபாடுகள் உண்டு. அதிகார பலத்தால் பிறரது உழைப்பை அபகரிப்பது ஒரு செயல். நயந்து பேசி, பாராட்டி, பிறரது உழைப்பை தன்னுடையதாகப் பெற்றுச் செல்லுதல் என்பது ஒரு வகை. பிறரது உழைப்பை தெரியாமலேயே திருடிக்கொண்டு போய் தன்னுடையதாக சொல்லி அறிவித்து அந்த உழைப்பின் பலனை அனுபவிப்பவர்கள் என்போர் ஒரு வகை. எதுவாகினும், பிறர் உழைப்பில் தோன்றும் பலனை தமதாகச் சொல்லிக் கொள்வோர் செயல் கீழானது என்பதில் ஐயமில்லை.

இத்தகைய ஒரு நிகழ்வு உ.வே.சா விற்கு தன் ஆய்வுப் பணியின் ஆரம்பகாலத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை அத்தியாயம் 94ல் இடையே வந்த கலக்கம் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருக்கின்றார்.

சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிகமானதால் தன் கவனத்தை முழுமையாக சிந்தாமணியை வாசித்து அறிந்து கொள்வதிலும் பாட பேதங்களைப் புரிந்து சரிசெய்வதிலும் அவரது தினசரி பணி சென்று கொண்டிருந்தது. தன் அன்றாட நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார். பாருங்கள்.

அடிக்கடி ஆராய்ந்து வந்தமையால், என் நினைவு முழுவதும் சிந்தாமணி மயமாக இருந்தது. அதில் என் மனம் ஆழ்ந்துவிட்டது. காலையில் நான் எழுந்தவுடன் சிந்தாமணி முகத்தில்தான் விழிப்பேன். பல் தேய்த்து அனுஷ்டானம் செய்தவுடன் ஆகாரம் பண்ணுவேனோ இல்லையோ சிந்தாமணியை ஆராய்வேன். ..
எங்கள் வீட்டுத் திண்ணையில் சிறிய கை மேஜையின்மேல் பிரதியை வைத்துக் கொண்டு எத்தனையோ இரவுகள்
சிந்தாமணி ஆராய்ச்சியில் மனமொன்றியிருப்பேன். எனக்குச் சிந்தாமணியும், சிந்தாமணிக்கு நானும் துணையாகப் பொழுது போவதே தெரியாமல் ஆராய்ச்சி நடைபெறும்.

இப்படி கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு நாளும் கடும் உழைப்பைச் செலுத்தி சிந்தாமணி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் மனதிற்குச் சங்கடம் தரும் ஒரு நிகழ்வு நடைபெற்றது.  முன்னர் தாம் சந்தித்து அறிமுகமாக்கிக் கொண்ட யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் கும்பகோணத்திற்கு மாற்றலாகி வந்து வக்கீலாக அங்கே தொழில் செய்து கொண்டும் தமிழ்ப்பணியில் ஈடுபட்டும் வந்தார். நல்ல தனவந்தருமான அவர் ஏற்கனவே சில தமிழ் நூற்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டிருந்தார். தம்மை திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கு அறிமுகப்படுத்தச் சொல்லியும், மேலும் கும்பகோணம் பகுதியில் இருக்கும் ஏனைய தமிழறிஞர்களுக்கு அறிமுகம் செய்விக்கும் படியும் கேட்டுக் கொண்டதால் பல தமிழறிஞர்களை உ.வே.சா அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். திருவாவடுதுறை மடத்தின் நூலகம் வந்தவருக்கு உ.வே.சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடபேதம் திருத்தி வைத்திருந்த கம்பராமாயணத்தைக் காட்ட, அதனை பெற்றுக் கொண்டு போய் தனது பாடபேதத்தை ஒப்பிட்டு திருத்தி அனைத்தையும் மாற்றிக் கொண்டார் என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார்.  தன் அச்சுப் பதிப்பில் வெளியீட்டில் இதனைக் குறிப்பிட்டாரா என்பது கேள்விக்குறிதான்.

இது போதாதென்று ஒரு புதிய  பிரச்சனை கிளம்பியது.

சிந்தாமணி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார், பதிப்பிக்கும் எண்ணத்தில் உ.வே.சா உழைத்து வருகின்றார் என்பதை அறிந்தும்  உ.வே.சா இதுவரை செய்து வைத்த பாட பேதக்குறிப்புக்களைத் தமக்குத் தரச்சொல்லி தாமே அதனை பதிப்பிக்க விரும்புவதாக கூறிய ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார் சி.வை. தாமோதரம் பிள்ளை.  உ.வே.சாவிற்கு சொல்லொணா மனக்கலக்கம் வந்து விட்டது. இந்த உரையாடலை முழுமையாக இந்த அத்தியாயத்தில் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

கொழும்பிலிருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் ராமநாதனவர்கள் அதன் பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன்” என்றார்.

“மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால்
கொடுக்க மனம் வரவில்லை” என்று சொல்லி நான் மறுத்தேன்.

தாமோ:- இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும்.
சென்னபட்டணத்தில் அச்சிடவேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. 
..
நான்:- காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த நேரத்தில்தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன்? அவசியமானால் லீவு வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும் நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக அன்றோ போய் விடும்?

தாமோ:- ஏன் வீணாகும்? அவ்வளவு நன்றாக உபயோகப்படுமே! நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக்
கொள்ளுகிறேன். உங்கள் பெயரையும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக் கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக எழுதுவேன்.

நான்:- எனக்குப் புகழ் வேண்டு மென்றும் பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமென்றும் நான் எதிர் பார்க்கவில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து கொண்ட சங்கற்பமும், அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி விடுமேயென்று யோசிக்கிறேன்.

தாமோ:- இதுவரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப் பதிப்பிப்பதிலேதான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம்
உங்களுக்கு ஏற்பட வேண்டாமேயென்றுதான் சொல்லுகிறேன். நான் அந்தத் துறையில் உழைக்க வேண்டுமென்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆகையால் என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என் பதிப்பாக வெளிவந்தால் அதற்கு ஏற்படும் கௌரவமே வேறு. அதனோடு உங்கள் பெயரும் வெளிப்படும்.

நான்:- நீங்களும் ஆரம்பத்தில் என்னைப் போலத்தானே இருந்திருப்பீர்கள்? நான் பதிப்பித்து வெளியிட்ட பிறகுதானே உலகம் அதை
மதிப்பதும் மதியாததும் தெரிய வரும்?

இப்படி மனதிற்குச் சங்கடம் தரும் வகையிலான கலந்துரையாடலாக அது ஆகிப் போனது. 

சி.வை. தாமோதரம் பிள்ளை எப்படியாகினும் உ.வே.சா ஆய்வு செய்து வைத்திருக்கும் சிந்தாமணியை தாம் பதிப்பித்து விட வேண்டும் என் முயற்சித்தார், விட்டுக்கொடுக்காமல் நயமாகப் பேசினார். இறுதியில் உ.வே.சா மறுப்பு சொல்ல முடியாத வகையில் பாடபேதகுறிப்புக்களை வாங்கிக் கொண்டும் சென்று விட்டார்.

அன்றைய இரவு மனக்கலக்கத்தில் உ.வே.சாவிற்கு உறக்கம் வரவில்லை. மனம் உடைந்து போய் தன் உழைப்பு வீணாகிபோய்விடுமோ என அவர் மனம் பதறிக்கொண்டேயிருந்தது!


தொடரும்...
சுபா