Monday, December 18, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 140

இதுவரை பதிப்பித்த ஏனைய நூல்களின் பணியை விடவும் மணிமேகலை அச்சுப் பதிப்புப் பணி உ.வே.சாவிற்கு மிகக் கடினமானதாகவே இருந்தது. ஆயினும் அறிஞர்கள் பலரது ஊக்கச் சொற்கள் அவரை இந்தப் பெரும் பணியைத் தான் செய்தே முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னர் குறிப்பிட்டது போல மணிமேகலையை 1891ம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை என்பவர் ஏட்டுச் சுவடியிலிருந்து பெயர்த்து அச்சு நூலாக்கி வெளியிட்டிருந்தார். அது எந்த விளக்கமும் குறிப்புக்களும் இன்றி அப்படியே சுவடியிலிருந்தமை அச்சு வடிவத்தில் என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அச்சுப்பதிப்பு வெளிவந்து 7 ஆண்டுகள் முடிந்திருந்தன. உ.வே.சாவின் நட்புச் சூழலில் அந்த நூல், வாசிப்போருக்குப் பயனளிக்காது என்ற கருத்து நிலவி வந்தது. அரும்பத உரைகளும், நூல் உரையும் சேர்த்து விரிவாக நூல் அமைந்தால் தான் வாசிப்போருக்கு மணிமேகலையை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உ.வே.சா தன் ஆய்வினுள் மூழ்கிக் கிடந்தார்.

மணிமேகலையில் சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை என்று ஒரு பகுதி உள்ளது. இது பிற சமய தத்துவங்களை விளக்கும் ஒரு பகுதி. அதே போல தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை என்ற ஒரு பகுதியும் உள்ளது. இந்தப் பகுதியில் பௌத்த மதத்தின் அளவை இலக்கணம் விளக்கப்படுகின்றது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் குறிப்புரை எழுதுவது என்பது மிகச் சிரமமான பணியாகிப் போனது உ.வே.சாவிற்கு.

பௌத்த ஞானத்தைப் பின்புலமாக கொண்டவர்களின் உதவியோடு வடமொழி தர்க்க சாத்திரங்களை அறிந்தோரிடமும் கலந்து பேசி இவற்றிற்கான விளக்கங்களைப் பெற்று புரிந்து கொள்ளும் முயற்சியில் உ.வே.சா ஈடுபட்டார். இப்படி வாசித்தும் தத்துவங்களின் பின்னணியைத் தேடிப் புரிந்து கொண்டும், கலந்துரையாடியும் மணிமேகலை காப்பியத்தினை ஆராய்ந்து தனது குறிப்புக்களை எழுதி வந்தார்.

1896ம் ஆண்டின் மத்தியில் மணிமேகலை அச்சுப் பதிப்புக்குத் தயாராகியிருந்தது. ஏறக்குறைய எல்லா எழுத்துப் பணிகளும் முடிந்திருந்தன. சென்னையிலிருந்த வெ.நா.ஜூபிலி அச்சுக் கூடத்தில் இந்த நூலை அச்சிட்டு வெளியிட முடிவாகியது. நூலை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா.

மணிமேகலையின் அடிக்குறிப்பு பத உரைகளோடு நூல் அச்சாக்கம் பெற்றது. மணிமேகலையைத் தான் பதிப்பித்து முடிப்போமா என ஏங்கிக் கொண்டிருந்த உ.வே.சாவிற்கு இது மாபெரும் சாதனையைத் தாம் நிகழ்த்தியிருப்பதை உணர்த்தியது. சாதாரண மனிதர்களாகிய நாம் அசாதாரணமான காரியங்களைச் செயல்படுத்தி முடிக்கும் போது நமது பலம் நமக்கே புரியத் தொடங்கும். அந்த நிலையில் தான் உ.வே.சாவின் மனமும் அந்தச் சூழலில் இருந்திருக்கும்.

அச்சுப் பதிப்பின் முதல் படிவத்தைப் பார்த்த போது அவர் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது. மணிமேகலை அச்சுப்பதிப்பாக்கம் தமிழ் உலகிற்கு உ.வே.சா அவர்கள் ஆற்றிய பணியில் ஒரு மகுடம். சமய பேதங்களைக் கடந்து தமிழின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றினை பதிப்பித்த பெருமை அது. இதற்காகத் தமிழ் உலகம் உ.வே.சாவிற்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளது என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment