Thursday, December 28, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 147

தமிழக சூழலில் உ.வே.சா வாழ்ந்த காலத்தில்  சாதி நிலைப்பாடு தொடர்பான அவரது சிந்தனையைப் பற்றி, அதாவது  நாடார் சமூகத்தவர் கோயில் நுழைவு தொடர்பான வழக்கில் பாஸ்கர சேதுபதிக்கு ஆதரவாக நின்று, நாடார் சமூகத்தவர் கமுதியில் கோயில் நுழைவில் ஈடுபட்டது தமிழர் மரபு ரீதியாக தவறு என மன்னருக்குச் சார்ந்து பேசியமையைச் சுட்டிக் காட்டியிருந்தேன். உயர்ந்த கல்வி கற்றிருந்தாலும் கூட., வாழ்க்கையையே தமிழ்ப்பணிக்கு என அர்ப்பணித்திருந்தாலும் கூட, இறைவனுக்கு சாதி பேதமில்லை என்ற எளிய உண்மையை உணராத அவரது பேதமையை நாம் கண்டிக்காது ஒதுக்கிச் சென்று விட முடியாது.

தமிழகச் சூழலில் கல்விக்கூடங்களில் எல்லா குழந்தைகளும் படிக்கும் சூழல் ஒரு வழியாக இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது.  இருப்பினும் கூட, சாதி அமைப்பின் பெயருடன் கூடிய  உயர் கல்வி நிலையங்களை உருவாக்கும் முயற்சி்கள் இருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டும் உள்ளன. இதற்குச் சான்றாக பல கல்விச்சாலைகள் சாதி அடையாளப் பெயர்களைத் தாங்கியே இன்று செயல்படுகின்றன.    கல்வி நிலையங்களுக்குள் சாதி கூடாது எனும் கருததை முன்னெடுத்தால் இட ஒதுக்கீடு என்பதே சாதியின் அடிப்படையில் தானே அமைகின்றது என, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை அறியாதோர் விவாதத்துக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. எதனால் தமிழகச் சூழலில் சமூகங்களிடையே இட ஒதுக்கீடு தேவை என்ற புரிதல் இன்று வரை தெளிவாக பொதுமக்களிடத்தில் இல்லாமையே இதற்குக் காரணம் என்பதை வலியுறுத்தவேண்டியுள்ளது.

இதே சாதி அமைப்பு தொடர்பில் உ.வே.சா வாழ்க்கையில் நிகழ்ந்த மேலும் ஒரு நிகழ்வை அவரது மாணாக்கராகிய கி.வா.ஜ தனது ’என் ஆசிரியப்பிரான்’ எனும் நூலின் 38வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

அதில் உள்ளபடி,  ஒரு முறை திருவாவடுதுறைக்குச் சென்று விட்டு தனது ஊர் உத்தமதானபுரத்திற்கு உ.வே.சா சென்றிருக்கின்றார். அந்தச் சமயத்தில் ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்று அந்த ஊர் அக்கிரகாரத்தில் நடைபெற்று வந்தது.  அந்தப் பள்ளிக்கூடத்தில் ”ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சிறுவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்” என்ற குரல் எழும்பியிருக்கின்றது. யார் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்ற விபரத்தை கி.வா.ஜ அவர்கள் தன் நூலில் குறிப்பிடவில்லை.  ஆயினும், அத்தகைய குரல் எழுந்தது, என்ற செய்தியைப் பதிகின்றார். அனேகமாக இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும்.

’அக்கிரகாரத்தில் வசிக்கும்  பிள்ளைகள், அதாவது பிராமணர் சமூகத்துக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள்  வந்து படிப்பது சரியல்ல’  என்று அங்கிருந்தவர்கள் என்ணினார்கள் என்றும், எனவே ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படிப்பதற்கு அக்கிரகாரத்திற்குத் தூரத்தில் வேறு  ஒரு இடம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் கி.வா.ஜ. தன் நூலில் குறிப்பிடுகின்றார்.  அப்போது உத்தமதானபுரம் சென்றிருந்த உ.வே.சா விடம் இந்தச் செய்தியை கிராம முன்சீப் அண்ணாசாமி ஐயர் தெரிவித்திருக்கின்றார்.

அக்கிரகாரத்திற்கு வெளியே ஒரு புன்செய் நிலம் ஒன்று உ.வே.சாவின்   பெயரில் இருந்ததாகவும், அது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் அந்த இடத்தில் பள்ளிக்கூடத்தைக் கட்டினால், ஒடுக்கப்பட்ட  சமூகத்துக் குழந்தைகள் வந்து படிக்க அது வசதியாக அமையும் என்றும் கூறி, அந்த தனது நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட உ.வே.சா அவர்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் இனாமாகக் கொடுத்ததாக கி.வா.ஜ அவர்கள் குறிப்பிடுகின்றார். உ.வே.சா அவர்களின் சிற்றப்பா சின்னசாமி பெயரில் 'சின்னசாமி நிலையம்'  என்ற  பெயரிடப்பட்டு அந்த நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது.   உத்தமதானபுரம் குளக்கரையில் அந்த சின்னசாமி நிலையம் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வந்துள்ளது என்பதையும் இச்செய்திகளின் வழி அறியக்கூடியதாக இருக்கின்றது.

உ.வே.சாவின் என் சரித்திரம் நூலை நாம் வாசிக்கும் போதும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தை வாசிக்கும் போதும்,  தமிழ்ச்சாதிகளுக்கிடையே கல்விச்சமன்மை இல்லாத நிலை இருந்ததை உணர முடிகின்றது. தமிழ்ச் சமூகத்தில் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள், ரெட்டியார்கள்,  செட்டியார்கள், முதலியார்கள்  உள்ளிட்ட பிற இடைநிலைச்சாடியினரின் பெயர்களும்   சில ஜமீந்தார்களின் பெயர்களுமே இந்த நூல்களில் கானப்படுகின்றன. ஓரிரு ஐரோப்பிய தமிழறிஞர்களும் இந்த நூல்களில் சுட்டிக்காட்டப்படுகின்றார்கள். 

உ.வே.சா போன்ற அறிஞர்கள் பேசிப்பழகி, தமிழ்கற்று உலாவந்த சூழல் என்பது  ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர்த்த, தனித்த வகையிலான ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். அல்லது. 17, 18, 19ம் நூற்றாண்டு காலத்தில், மேற்குறிப்பிட்ட ஒரு சில சாதிக்குழுவினரைத் தவிர, ஏனையோருக்குக் கல்விக்கு  இடமளிக்காத சூழல் என்ற ஒன்று மிகத்தீவிரமாக இருந்திருக்க வேண்டும்.  எப்படியாகினும், தமிழகத்தின் மிகப் பெரும்பாலான, பெருவாரியான சதவிகித தமிழ் மக்கள் அக்காலத்தில் கல்விக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில் இருந்தார்கள் என்பது இந்த நூல்களின் வழி மட்டுமன்றி நமக்குக் கிடைக்கின்ற, தமிழகம் வந்து வாழ்ந்த ஐரோப்பியர்களின் ஆவணக் குறிப்புக்களின் வழியாகவும்  நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

கல்வியும் வாசிப்பும், இலக்கியச் செழுமையும், ஏட்டுச் சுவடிகளும் முற்றும் முழுதுமாகக் குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினர்  கைகளில் மட்டும் தான் இருந்தனவா என்றால், இதற்கு மாறான கருத்தினைத் தரும்  தகவல்களையும்  நமக்குக் கிடைக்கின்ற  சில ஆவணங்களின் வழி  அறியமுடிகின்றது . உதாரணமாக, பறையர் சமூகத்தவராக அறியப்படுகின்ற அயோத்திதாசப் பண்டிதரின் தாத்தாவின் சேகரிப்பில் இருந்த சுவடிகளை, எல்லிஸ் அவர்கள் காணும் வாய்ப்பு அமைந்ததும், அதில் குறிப்பாக திருக்குறளை வாசிக்க நேர்ந்து அதன் அறிவுச் செறிவில் ஆழ்ந்து வியந்து எல்லிஸ் அவர்கள் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தார் என்பதையும் நாம் அறிகின்றோம்.  இப்படி  சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தினரிடையேயும் தமிழ் நூல்கள கற்கும் வழக்கம் இருந்தமையையும் கேள்விப்படுகின்றோம். ஆனால் அது பொது வெளியில் அறியப்படாது  பேசப்படாமலேயே போய் விட்டமையையும்  காணமுடிகின்றது.

18,19, 20ம் நூற்றாண்டுகளில், பொதுவாகக் கல்வி கற்றோர் என அறியப்படுவோர் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளம் தரப்பட்ட மக்களிடமிருந்து மதத்தின் அடிப்படையில் ஒதுங்கி  இருந்தார்கள் என்பதும், இந்த ஒதுங்கி இருந்தலை சைவ மற்றும் வைணவ  சமய மடங்களும்  சாத்திரம் சார்ந்த ஒழுக்கமாக எண்ணி கடைபிடித்தன என்பதையும், அது பெருமளவு இன்றும் தொடர்ந்து உறுதியாகக் கடைபிடிக்கப்படுவதையும் காண்கின்றோம். பல நூற்றாண்டு காலமாக ஒரு சில சமூகங்களுக்குக் கல்விக் கேள்வி மறுக்கப்பட்ட இந்த நிகழ்வை ஒரு சமூக அநீதியாகக்  குறிப்பிட வேண்டியது அவசியம்.   இன்று நாம் அறியக்கூடிய 18ம் 19ம் நூற்றாண்டு தமிழறிஞர்களில் மிகப்பெரும்பாலானோர் இந்த பார்வையை சிறிதும் அற்றவர்களாகத்தான்  இருந்திருக்கின்றனர். இது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அவலம். அநீதி.

கல்வி வாய்ப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சில சாதியினருக்கே என  குறுக்கிய சமூக அநீதியால் தமிழகம் இழந்தது அதிகம் என்பது என் கணிப்பு. கல்வியும் அறிவும் தனிப்பட்ட  சில குலங்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய வாய்ப்பல்ல. மாறாக அது மனித குலம் அனைத்திற்கும் உள்ள தார்மீக உரிமை. இதனை மறுத்து கல்வி வாய்ப்பை சிறிய வட்டத்திற்குள் மட்டுமே வைத்துக் கொண்டமையே தமிழகம் இன்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணாத பல கிராமங்களைக் கொண்டிருக்கும் சூழ்நிலை அமைந்திருப்பதற்குக்  காரணமாகின்றது எனக் கருதுகிறேன்.

இன்று  தமிழகத்தில் எல்லோருக்குமான கல்வி வாய்ப்பு என்பது பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை நோக்கிய முன்னெடுப்புக்களைச் சாத்தியப்படுத்த நிகழ்ந்த சமூகச்  சீர்திருத்த போராட்டங்கள் ஏராளம் ஏராளம். படிப்படியாக தமிழகத்தில் தமிழ்ச்சான்றோர் பலர் முன்னெடுத்த முயற்சிகளும், ஐரோப்பிய பாதிரிமார்களும், ஆங்கிலேய காலணித்துவ அரசும் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளே சமூகத்தில் அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி கல்விக்கான கதவை அனைவருக்கும் திறந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. சாதி வேறுபாடுகளின்றி, ஆண் பெண் பேதமின்றி, இன்று கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டியிருக்கின்றது. முயற்சியும், ஆர்வமும், தீவிர நாட்டமும் இருந்தால் ஒருவர் எத்தகைய உயரிய நிலைக்கும் செல்லலாம் என்பதை நம் கண் முன்னெ இன்று காண்கின்றோம். ஆயினும் இன்று நம் மாணவச் செல்வங்களிடத்திலும்,  ஆய்வு மாணவர்கள் மத்தியிலும் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்வதற்கானச் சிந்தனை ஏற்பட்டுள்ளதா என்பது கேள்வியே.

பொதுவாகவே, தமிழ் மக்களிடையே நூல் வாசிப்பு என்பது மிகக் குறைந்து கொண்டே வருகின்றது. பள்ளியில் தேர்வுக்காகவும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெருவதற்காகவும் என்று வாசிக்கும் போக்கை தான் பெருவாரியாகக் காண முடிகின்றது. இன்னும் சிலரோ பிறருக்குப் பணமும், சலுகைகளும், பரிசுகளும் கொடுத்து ஆராய்ச்சி பட்டங்களைப் பெறுவதற்கான தரம் தாழ்ந்த முயற்சிகளையும் கூட மேற்கொள்ளும் அவல நிலையும் இருக்கின்றது. இது சமூகத்தில் தோன்றியிருக்கும் ஒரு வகையான நோய். இந்த நோய் பரவவிடாமல் தவிர்க்கப்படவேண்டுமென்றால்  தமிழறிஞர்கள் வாழ்க்கை சரித்திரங்களையும் சமூகப் போராளிகளின் வாழ்க்கைச் சரிதங்களையும்,  அவர்கள் கடந்து வந்த பாதை, தமிழ்க்கல்வியைப் பெற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களது ஆக்கப்பணிகள், அந்த ஆக்கப்பணிகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய  செய்திகளையும்  அறிவுறுத்த் வேண்டியது   அவசியமாகின்றது.

தொடர்க...
சுபா

No comments:

Post a Comment