Saturday, September 8, 2018

தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ்/ Journal of Tamil Peraivu Vol 7, July 2018




http://tamilperaivu.um.edu.my/



பண்டைய தமிழர்களின் கடல்வழிப்பயணங்கள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு
(Preservation of Ancient Tamil Maritime Records )

முனைவர் க.சுபாஷிணி
Dr.K.Subashini




 Abstract

The Tamil maritime history begins long time back. Inadequate information and missing records about ancient Tamil seafarers, lead to the opinion that maritime trade activities were only pioneered
by European seafarers. Ancient Tamil seafarers explored the wide ocean, discovered new lands, initiated trade activities with other ancient civilizations in the past. However, only fewer records describing Tamils seafaring experience details were identified so far.  This paper study 
ancient maritime activities of Tamil people, referencing information in Sangam Tamil literature, maritime records from travelers visited Tamil country and records on ship making industry practiced by the Tamil folks. A Palm leaf manuscript from the 17th Cent A.D is also used in this study, particularly for the purpose of understanding the ship making industry  practiced by ship making community lived in Tranquebar, a harbor city on the Coromandel Coast . 



முன்னுரை

வணிகமும் சமய நம்பிக்கைகளை அண்டைய நாடுகளுக்கு விரிவாக்கும் நடவடிக்கைகளும் உலகில் பல சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வணிகத் திறனும், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய தத்துவ பலமும், நீண்ட கடல் பயணம் மேற்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் ஆழ்ந்த வேட்கையும்  இயல்பாகவே கொண்டிருக்கும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழர்கள் கால் பதிக்காத நிலங்களே இல்லை எனும் அளவிற்கு விரிவான கடல்பயணங்களைப் பண்டைய தமிழர் கையாண்டிருக்கின்றனர். பண்டைய தமிழரின் கடல்வழிப்பயணம் தொடர்பான சில செய்திகள், அவர்கள் பயன்படுத்திய கலங்கள்  ஆகியன தகவல்களைப் பதிவதும் அச்செய்திகள் தொடர்பான ஆவணங்கள் மின்னாக்கங்களின் வழி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இக்கட்டுரை விளக்குகின்றது.

ஆய்வுப் பின்புலம்
தமிழர்கள் கடல்வழிப்பயணம் செய்து உலகின் பல இடங்களுக்குப் பயணித்து வணிகம் செய்த தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கிடைக்கின்றன. கடல்பயணத்தில் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்திருக்கும் புகழ் இன்று அனைவரும் அறிந்ததே. கடல் பயனங்கள் என்றாலே அவற்றை முறைப்படுத்தி வழி அமைத்தோர் ஐரோப்பிய மாலுமிகளே என்ர சிந்தனை போக்கு இன்று ஆழப் பதிந்திருக்கின்றது. 

பண்டைய தமிழரின் வாழ்வில் நிலம் எத்தகைய முக்கியத்துவம் வகிக்கின்றதோ அதே அளவு முக்கியத்தை கடல்வெளியும் பெறுகிறது. கடல் மார்க்கமாகப் பயணித்து புதிய இடங்களில் வணிகம் செய்திருக்கின்றனர் தமிழர் பலர். சிலர் புதிய நாடுகளிலேயே தங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர். சிலரோ எல்லையில்லா தேடுதலையும் உயர்ந்த லட்சியங்களையும் ஏந்திக் கொண்டு தத்துவங்களையும் மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் தனக்கு அன்னியப்பட்ட  புதிய நிலப்பகுதியில் பதிந்து வைக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இன்று கிழக்காசிய நாடுகள் முழுமைக்கும் பௌத்த மதம் பெருமளவு பரவியிருப்பதற்கும், பின்னர் சைவ, வைணவ மதங்கள் கிழக்காசிய நாடுகளில் காலூன்றிய வரலாற்று நிகழ்வுகளுக்கும் பண்டைய தமிழரின் கடல்வழிப்பயணங்கள் காரணமாக அமைந்த வரலாற்றுச் செய்திகளை மீண்டும் உரத்துப் பேச வேண்டியது அவசியமாகின்றது.  

தமிழர்களின் கடல் பயணங்கள், வணிகங்கள் அவை தொடர்பான ஆவணங்கல் ஆகியவை கிடைப்பது அரிதாக இருப்பது நம் முன்னே இருக்கின்ற பெரும் குறைபாடு. ஆயினும், இக்குறைபாட்டினை ஒதுக்கி, வரலார்று ஆவணங்களைத் தேடி அவற்றைப் பாதுகாக்க வேண்டும், அவை மீளாய்வு செய்யப்பட வேண்டும், மீள்பதிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

ஆய்வுமுறை

மேற்குறிப்பிட்ட நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகளான "நாவாய் - கடல்சார் வரலார்றாய்வுகள்" என்ற நூலும், "நிகமம் - வணிக வரலார்றாய்வுகள்" என்ற நூலும்,  "Marco Polo - The Travels" என்ற நூலும், "பழங்காலத் தமிழர் வாணிகம்" என்ற நூலும், "கப்பல் சாஸ்திரம்" என்ற பெயர்கொண்ட கி.பி17ம் நூற்றாண்டு ஓலைச்சுவடியின் அச்சுப்பதிப்பு நூலும்,  மேலும் இதன் தொடர்புடைய  சில ஆவணங்களும் இந்த ஆய்விற்குத் துணை நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.


கடல் வழிப்பயணமும் கருவிகளும் 
 "நாவாய்" எனும் சொல் தமிழர்களின்  பண்டைய கடல்வழிச்செலவைக் குறிக்கிறது. இந்தத் தொண்மையான சொல்லை ஆராயும் போது அச்சொல் வழங்கிய விதம் நம் தமிழர்களின் வரலாற்றை விளக்குவதாக அமைகின்றது.   "நாவின்" அசைவால் நம் சொற்கள் பிறக்கின்றன. அதே போல,  கடற்பரப்பில் கலம் அசையும் போது, காற்று, மனிதர்களின் நா அசைந்து சொல்லை உருவாக்குவது போல மேலும் கீழும் அசைந்து தண்ணீரில் அலைகளை உண்டாக்குவதால் நாவாய் எனும் "தொழில் ஆகுபெயராக" இச்சொல் அமைந்தது எனக் கருதலாம். இது தமிழ் மொழியின் ஆய்வுப் பார்வையையும் தொன்மையையும் சுட்டிக்காட்டுகின்றது.  

கடல் வழிப்பயணம் என்பது எளிமையானதன்று. இயற்கையைப் பற்றிய துல்லிய ஆராய்ச்சிப்பார்வை கொண்டவர்களால் மட்டுமே கடல்வழிப்பயணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.  காற்றின் போக்கு, அது வரும் திசை, காற்றின் அழுத்தம் ஆகியன பற்றிய  அனுபவம் கடல்வழிப்பயணத்திற்கு மிக அவசியமானது. அத்தகைய திறனை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர்.  பாய்மரக்கப்பல்கள் கட்டுவதில் பேரறிவுபெற்ற தமிழர்களின் கப்பல்கட்டும் திறம், கடல்வழி குறித்த அறிவு, காற்றின் போக்கு அறியும் உயர் அறிவு, கப்பலைச் செலுத்தும் திறன், கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் போர்த்தொழில் உள்ளிட்ட திறன்களை  அவர்கள் பெற்றிருந்தனர்.  இதுவே பண்டைய தமிழர் தமிழக நிலப்பரப்பையும் கடந்து பல தீவுகளில் கால்பதிக்கக் காரணமாகியது எனலாம். 

தமிழர்கள் பயன்படுத்திய கலங்களின் வகைகளாக தமிழ்  இலக்கியத்தில் பதினெட்டு வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை கட்டு மர வகை, தோணி வகை, வள்ளம் வகை   என மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பிரித்திருக்கின்றார்கள்(வே.சாமுவேல் அருள்ராஜ், நாவாய்- மரபுவழிக் கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்) . கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.  தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பரிபாடல்களில் உள்ளன {குறுந்தொகை 123:5,6) (பரிபாடல் 10:70,71) (புறநானூறு 126:14-16) (அகநானூறு 350: 10-15)]. நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக ”வள்ளம்” என்ற வகையான பெரிய கப்பல்களைப் பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது (சிலப்பதிகாரம் 13:176,179).

கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணக்கிடைக்கின்றன [ (சிலப்பதிகாரம் 6:141) (பட்டினப்பாலை 111 : 112) (பெறும்பாணாற்றுப்படை 348-351) (அகநானூறு 255>5-6)]

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் என அழைக்கப்படும் பரதவர்கள் மிக விரிவாக கடல் வணிகத்தில் தங்கள் ஆளுமையைச் செலுத்தினர். பெரும் வளம் சேர்க்கும் மீன் பிடித் தொழிலும் முத்துக்குளித்தலும் தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் அரேபியர்களும், ஐரோப்பியர்களும்  தமிழகம் வந்து வணிகம் செய்து செல்லக் காரணமாகின.  இந்தப் பரதவ மக்கள் ”திமில்” என்ற பெயர் கொண்ட படகுகளை உருவாக்கிப் பயன்படுத்தினர் (அகநானூறு 340 : 18).   

சங்ககாலத்தில் யவனர்கள் (கிரேக்கர்களும், ரோமானியர்களும்) இப்பகுதிகளுக்கு வணிக நோக்கமாக வந்து சென்றமை இலக்கியச் சான்றுகளுடன் காண்கின்றோம் (நாவாய் - க.வெள்ளைவாரணம், பக் 6).  அக்காலம் தொட்டு மீன்கள் மட்டுமன்றி உப்பு உற்பத்தியும் மிக முக்கிய வணிகப்பொருளாக இருந்தமையையும் அறிகின்றோம்.  ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து தமிழகம் வந்து வணிகம் செய்து சென்றோரின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்பதற்கு நமக்கு இன்று சான்றுகள்  கிடைக்கின்றன.(pls provide reference). அதேபோல தமிழர்களும் தூர நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தமைக்குச் சான்றாதாரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கிடைக்கின்றன.  

கி.மு.5ம் நூற்றாண்டு என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் ‘சாத்து’, ‘நிகமம்’ என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன (நாவாய் - கா.ராஜன், இலங்கை தென்னிந்தியாவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள், பக் 11).  ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது. பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றன. ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது (நாவாய் - கா.ராஜன், பக் 23) . ஆக, கடல் வழிகளை அறிந்து  கப்பலை ஆளுபவன் பெரும் தலைவனாக மதிக்கப்படும் சூழல் பண்டைய தமிழ் மரபில் இருந்தமையை  இது வெளிப்படுத்துகின்றது எனலாம். 

1990களில் ஷாஜன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாகப் ”பட்டணம்’ எனும் நகர்  கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2003ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வுகள் இந்த நகரின் முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்தின. பின்னர் 2007 முதல் 2009 வரை கேரள வரலாற்றுக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகள், பட்டணம் மற்றும் கீழைக்கடற்கரையில் அமைந்திருந்த அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற நகரங்கள்  முக்கியமான வணிக மையங்களாகத் திகழ்ந்தன என்பதை ஆய்வுலகிற்கு வெளிச்சப்படுத்தியது. பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  தோணி, படகுத் துறை ஆகியன, படகு பிணைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்குமரத் தூண்களும் மிகச் சிறப்பானக் கண்டுபிடிப்புக்கள் எனலாம். கி.மு 1 மற்றும் கி.பி.1ம் நூற்றாண்டைச் சார்ந்தவை இவை (வீ.செல்வகுமார், நாவாய் -  இலக்கியத்தில் முசிறி தொல்லியல் பட்டணம் பக் 33). 

மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய சங்க கால வணிக நகரங்களாக  இருந்தன (நாவாய் - ர.பூங்குன்றன், பக் 47) .  சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி  ஆகிய நகரங்களின் வளத்தைச் சிறப்புடன் கூறுகின்றது.  முசிறி மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை  பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது.  கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே  சீனத்துப் பட்டு தமிழகம்  கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது (நாவாய் - ர.பூங்குன்றன், பக் 50) . மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.

கடல்வழிப்பயணம் பற்றி இன்று நமக்குக் கிடைக்கின்ற ஏறக்குறைய எல்லா தரவுகளுமே ஐரோப்பியர்களும் சீன யாத்திரிகர்களும் உருவாக்கியனவாக இருப்பதைத்தான் நாம் இன்று காண்கின்றோம். ’தமிழில் அவ்வகை நூல்கள் உருவாக்கப்படவில்லையா’ என்ற கேள்விக்கு பதிலாக நமக்கு இன்று கிடைத்திருக்கின்ற நூல்கள் சில. அதில் ஓலச்சுவடி நூல் ஒன்றினை உதாரணமாகக் காட்டலாம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் சிறந்த ஆவணங்களில் இந்த நூலும் ஒன்று. ‘கப்பல் சாஸ்திரம்’ என்ற பெயருடன் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் இது என்பது நூலை வாசிக்கும் போது அறியமுடிகின்றது (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - Book  20). 

தரங்கம்பாடியில் டேனீஷ்  ஈஸ்ட்  இந்தியா கம்பெனி வணிகம் செய்ய ஏற்பாடுகள் செய்து, அச்சுத நாயப்ப மன்னரிடம் ஆண்டு வாடகைக்குக் கடற்கரை துறைமுக நகரமாகத் திகழ்ந்த  தரங்கம்பாடியையும் பின்னர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கையகப்படுத்தினர். அவ்விஷயங்களை உட்புகுத்தி, அந்தக் காலகட்டத்தில் கடற்கரையோர மீனவ மக்களிடையே இருந்த கப்பல் கட்டும் பணி தொடர்பில் நடக்கும் சடங்குகளை விவரிக்கும் ஒரு செய்யுள் நடையிலான நூலாக இந்த நூல் அமைந்திருக்கின்றது. கப்பல் தயாரிக்கப் பயன்படுத்தும் மரத்துண்டுகளை எடுத்து தயார் செய்யும் நாளின் நட்சத்திரப் பலாபலன்கள், செய்யப்படும் சடங்குகள் என பல செய்திகளை இந்தச் சிறிய நூல் சொல்கின்ரது. ஓலைச்சுவடி நூலான இதனை தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதி மகால் நூலகத்தினர் அச்சுப்பதிப்பாக்கி அது 1950ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.  இதன் மின்படிவ தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் அனைவரும் வாசிக்கக்கூடிய வகையில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு
இந்த நூல் ஒரு உதாரணம் மட்டுமே. தமிழகம் வந்து சமயப் பணிகளிலும், தமிழ்ப்பணிகளிலும், சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட ஐரோப்பிய பாதிரிமார்கள், தமிழகத்திலிருந்து தாமே கைப்பட எழுதியும், உள்ளூர்  மக்களிடமிருந்து விலை கொடுத்தும் வாங்கிச் சென்ற நூல்கள் ஏராளம்.  இந்த நூல்களில் பல இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்திலும், ஜெர்மனியின் ஃப்ராங்கன் கல்விக்கூடத்திலும், கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலும், பிரான்சின் அரச நூலகம் மட்டும் ஆவணப்பாதுகாப்பகங்களிலும், வாட்டிக்கனின் ஆவணப்பாதுகாப்பகத்திலும், ஆம்ஸ்டர்டாம் அரச நூலகத்திலும், லெய்டன் நூலகத்திலும் என பல நாடுகளில் இன்று பாதுகாக்கப்படுகின்றன. பாதுகாக்கப்படுவது மட்டும் போதுமானதன்று. அவை வாசித்தறியப்பட வேண்டும். இவற்றை மிகச் சிறப்பாக இன்று பாதுகாக்கும் ஐரோப்பியர்களை விட தமிழர்கள் நமக்கு இவற்றை அறிந்து கொள்வதும், இவை சொல்லுகின்ற விசயங்களை ஆராய்ந்து அறிவதும், தமிழறின் அறிவுத்தளத்தைப் புரிந்து கொள்ள மிக அவசியத் தேவையாகின்றது. 

முடிவுரை
மேற்கூறியவற்றைக்  கருத்தில் கொண்டு, உலகளாவிய அளவில் இன்று தமிழ் ஓலைச்சுவடிகளும் அரிய காகித ஆவணங்களும் சேகரித்துப் பாதுக்காக்கப்படும் ஆவணப்பாதுகாப்பகங்களைத் தொடர்பு கொண்டு  அவற்றில் உள்ள பண்டைய தமிழர் வணிகம், தழர் கப்பல் கட்டுமானம் தொடர்பான eல்ல வகை ஆவணங்களின்  பட்டியல் உருவாக்கப்பட வேண்டும்; இவை உலகளாவிய அரிய ஆவணங்களின் தொகுப்பாக வெளியிடப்பட வேண்டும் என்பதோடு இவை  மின்னாக்கம் செய்யப்பட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.   

துணை நூல்கள்
  • தமிழ்ப்பல்கலைக்கழகம், ”நாவாய் – கடல்சார் வரலாற்றாய்வுகள்”, 2010
  • தமிழ்ப்பல்கலைக்கழகம், ”நிககம் - வணிக வரலாற்றாய்வுகள்”, 2010 
  • மயிலை சீனி வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வாணிகம், 1974.,காஞ்சிபுரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  • Caldwell R.Bishop (1989), A History of Tinnevely. New Delhi: Asian Educational Services.
  • Mackintosh -Tim & Smith ( Edited), The Travels of Ibn Battutah, (1988), Macmillan Collector's Library. 
  • T.P.Palaniyappa Pillay, Kappal Sattiram, 1950, Kappal Sattiram, Madras: Governemnt Oriental Manuscripts Library.
  • Ronald Latham. Penguin Classics, Marco Polo Travels, 1958 
  • புறநானூறு, 208:7
  • ​அகநானூறு
  • பரிபாடல்
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிலப்பதிகாரம்


The author is a Lead IT Architect,Germany & President of Tamil Heritage Foundation (International Organization for Preserving Tamil Heritage).



Wednesday, August 22, 2018

மெட்ராஸ் தினம் - 1639 ஆகஸ்ட் 22ம் நாள்

இன்று மெட்ராஸ் தினம். 1639 ஆகஸ்ட் 22ம் நாள் மதராசப்பட்டினத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கிய நாள். சென்னை என அழைப்பதை விட இதனை மதராஸ் அல்லது மதராசபட்டினம் என்று அழைப்பதே பொருத்தம் எனக் கருதுகிறேன். வரலாற்றுச் சிறப்புக்களுக்குக் குறைவில்லாத ஊர் மெட்ராஸ்.

சென்னைவாசிகள் பெரும்பாலோருக்கு மெட்ராஸ் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் தெரியாது என்பது நிதர்சனம். அதனைக்கருத்தில் கொண்டு பல சமூக நல வரலாற்று ஆர்வலர் குழுக்கள் மெட்ராஸ் பற்றிய நிகழ்வுகளை இந்த வாரத்தில் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றன. லூதரன் பாதிரிமார்களின் கி.பி18ம் நூற்றாண்டு, 19ம் நூற்றாண்டு நூல்களை வாசிக்கும் போது மெட்ராஸ் நம் மனக்கண்ணில் அழகிய ஐரோப்பிய நகரம் போன்று காட்சியளிக்கின்றது. ஆனால் இன்று அந்த மெட்ராஸை நாம் காண வாய்ப்பே இல்லை!

வந்தோரை வாழவைத்த மெட்ராஸை இன்று குப்பைக் கூளம் நிறைந்த ஒரு நகராக ஆக்கிவிட்டதன் பலனாக அதன் பொலிவு இழந்து இருக்கின்றது மெட்ராஸ்.

ஒரு ஆய்விற்காகத் தகவல் தேடிக் கொண்டிருந்த போது ஆங்கில நூல், W.T.Munro 1868ல் எழுதி மெட்ராஸ் வெப்பேரி அச்சகத்தில் வெளியிடப்பட்ட நூல் ஒன்று கிடைத்தது. அதன் மெயர் மெட்ராசியானா. இது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன் இருந்த மெட்ராஸை விவரிக்கும் ஒரு நூல்.

இதில் மெட்ராஸில் உள்ள ஏறக்குறைய 30 தேவாலயங்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இத்தனை தேவாலயங்களா என்று வியந்து போனேன்.

அது தவிர சல்லிவன் கார்டன், ஆண்டெர்சன் கார்டன், கோர்ன்வாலிஸ் சிலை, மிண்ட் ஹால், சுப்ரீம் கோர்ட், ஓல்ட் எக்ஸேஞ், மவ்ரே கார்டன் என பல தோட்டங்களைப் பற்றிய குறிப்புக்களும் கிடைக்கின்றன.

பழைய பத்திரிக்கைக் குறிப்புக்கள், போர் குறிப்புக்கள், இங்கிலாந்து மகாராணி, இந்திய அரசியல் பொருளாதாரமும் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரமும் ஒப்பீடு ... இப்படி பல தலைப்புக்களிலும் ஆசிரியர் சிறு கட்டுரைகளை இணைத்திருக்கின்றார்.

நான்கு பகுதிகளில் 300 பக்கங்களிலான ஒரு நூல் இது. மெட்ராசைப் பற்றி ஆய்வில் ஈடுபடுவோருக்கும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கும் உதவும் நூல் என்பதில் ஐயமில்லை.

மெட்ராஸ் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரை பாதுகாக்கும் பொறுப்பு இங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. தன் வீட்டுக் குப்பையைக் கூட்டி சாலையில் இடும் அதே வேளை அந்தக் குப்பையின் மேல் தானே நாம் நடந்து போகவேண்டும், என நினைத்தால் நம் மனம் மாறும்.

குப்பைக்கூளங்களை மலைபோல குவித்து வைப்பதை வார இறுதி நாட்களில் பெரியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தங்கள் குடியிறுப்புப் பகுதிகளைத் தூய்மை செய்வோம் எனத் தொடங்கினால் சுத்தம் படிப்படியாக நடைமுறைக்கு வரும்.
கையில் கிடைக்கும் குப்பைகளையெல்லாம் கண்ட இடத்தில் உடனுக்குடன் போடும் பழக்கத்தை இன்றே நிறுத்தினால் மெட்ராஸ் தூய்மையாகும். மெட்ராஸைத் தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொருவரும் தமது பங்கை ஆற்றினால் எழில் மிகு மெட்ராஸை மீண்டும் பெறலாம். அழகான நகரத்தைக் காண விமானம் பிடித்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை. நம் இருப்பிடமே அழகான நகரமாக நமக்கு மகிழ்ச்சி கூட்டும்! 




-சுபா

Saturday, June 16, 2018

The Travels of Ibn Battutah



மார்க்கோ போலோவின் பெயரில் சுற்றுலா நிறுவனங்கள், புத்தகப் பதிப்பகங்கள், உயர் ரக ஆடை ப்ரெண்ட், வணிக நிறுவனங்கங்கள் என... உலகம் முழுவதும் மார்க்கோ போலோவின் பெயர் அறியப்பட்ட பெயர்களுள் ஒன்றாகவே இருக்கின்றது. மார்க்கோ போலோ புகழ்பெற்ற அளவிற்கு அவரை விட அதிக தூரம் தரைமார்க்கமாகவே உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்த இபின் பதூத்தாவைப் பற்றி ஏன் அதிகமாகப் பேசப்படுவதில்லை?
கி.பி.14ம் நூற்றாண்டிலேயே தனது தாயகமான மொரோக்கோவிலிருந்து புறப்பட்டு மெக்கா மதினா என தனது பயணத்தைத் தொடங்கிய இபின் பதுதா தனது தரைமார்க்க பயணத்திலேயே 75,000 மைல்களுக்கு மேல் பயணம் மேற்கொண்டிருக்கின்றார். இவரது பயணத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா தொடங்கி ஆப்பிரிக்க நாடுகள், சீனா, இந்தியா, இலங்கை, மலாயா, ஸ்பெயின் என பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
இபின் பதுத்தாவின் பயணக் குறிப்புக்களும் நில வரைப்படங்களும் கடந்த நூற்றாண்டுகளில் பயணங்களை மேற்கொண்டோருக்குப் பயன்பட்ட முக்கிய ஆவணமாக இருந்த போதிலும், அதனை பதிப்பிக்கும் முயற்சிகளும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் முயற்சிகளும் கடந்த நூற்றாண்டு வரை நடைபெறவில்லை. இபின் பதுத்தாவின் பயணக்குறிப்புக்களே இது வரை வெளிவந்துள்ள பயணக்குறிப்பு நூல்களில் மிகப் பெரிய பயணக்குறிப்புத் தொகுப்பு நூல் என்பதும் ஒரு முக்கியச் செய்தி.
நான் நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்த ஒரு நூல். இன்று வாசித்துக் கொண்டிருக்கின்றேன். பயணங்களை விரும்பும், பயணங்களே வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக அமைந்திருக்கும் எனக்கு, பிரமிப்பு தரும் ஒரு நூல் இது. நூலில் வருகின்ற குறிப்புகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. நேரம் கிடைக்கும் போது ஒரு விமர்சனம் எழுதுகிறேன்.
-சுபா

Thursday, May 3, 2018

தமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்



தமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்
முனைவர்.க.சுபாஷிணி / Dr.K.Subashini[1]



Abstract

The political changes  in the ancient Tamil country has witnessed significant variations in culture, religion and arts. Pallava dynasty extended power in the northern and Chola region. The reign of Pallava king Mahendravarman-I (AD 600-630) witnessed change in art and temple architecture. The Mandagapattu rock-cut cave temple built by Mahendravarman-I in Villupuram district is considered the oldest of this kind in Tamil country. According to the Grandha inscription found in the Mandagapattu temple, Mahendravarman built a new type of temple architecture by avoiding materials such as bricks, timbers, metal and mortar which have been used vastly in the temple architecture. Rock-cut temples are also found in the Pandya region built at the same period. This Paper provides insight into several rock-cut temples of 6th to 8th century A.D. in Tamil Nadu, India. This article highlights the deteriorating present conditions of these temples with the aim to raise awareness for protection.



முன்னுரை 

கட்டிட கட்டுமானக் கலை என்பது அழகியல் கலையின் ஒரு வடிவம். மனிதர்கள் வசிப்பதற்காக கட்டப்படும் கட்டிடங்களிலிருந்து அலுவல்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடு வதற்காகக் கட்டப்படும் கட்டிடங் களிலிருந்து வழிபாட்டு மையங்களின் கட்டிட அமைப்புக்கள் மாறுபடும். சமயங்களின் குறியீடுகளை மையப் படுத்தியே வழிபாட்டு கட்டிட கட்டுமானங்கள் அமைகின்றன. தமிழர் பாரம்பரியத்தில் காணப்படுகின்ற வழிபாட்டு மையங்களான ஆலயங் களின் கட்டிட கட்டுமானங்கள் தமிழக நிலப்பரப்பில் தோன்றிய மரபின் நீட்சியாகவே அமைகின்றன. உலகெங் கிலும் உள்ள தமிழர் வழிபாட்டு மையங்களாகத் திகழும் ஆலயங்கள் தமிழர் மரபின் அடிப்படையை ஒற்றிய வகையில் அமைக்கப்பட்டவை.

இந்திய ஆலய கட்டிட அமைப்பு மூன்று பெறும் பிரிவிற்குள் அடங்கும். சிற்பக்கலைஞர்கள் இந்த மூன்று பெறும் பிரிவுகளை நாகரம், வேசரம், திராவிடம் என வகைப்படுத்துவர். நாகரம் எனப் படுவது இந்தியாவின் வட நாட்டில் அமைக்கப்படும் கோயில் கட்டிட வகை. நருமதை ஆற்றுக்கு வடக்கே வட இந்திய நிலப்பகுதியில் அமைக்கப்படும் கோயில்கள் இவ்வகையானவை. அடுத்து வேசரம் எனப்படுவது பண்டைய இந்தியாவில் பவுத்த மதத்தோரால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு வகை கட்டிடக்கலை வடிவமாகும். பவுத்த விகாரைகளின் அமைப்பு  கட்டிடத்தில் தரையும் உடல்பகுதியும் நீண்ட அல்லது அரை வட்ட வடிவில் என அமைந்திருக்கும். இந்த வடிவத்தை தமிழ் நாட்டில் இன்றுள்ள சில கோயில் கட்டுமானக் கலைகளில் காணலாம்.  மூன்றாவது பிரிவானது திராவிடம் எனும் பிரிவு. இந்தியாவின் கிருஷ்ணா நதி முதல் தென்குமரி வரை காணப்படும் கோயில் கட்டிட கட்டுமான அமைப்பு இது. இதில் உட்பிரிவுகளாகத் தமிழர், சாளுக்கியர், ஹொய்சளர் முதலிய கோயில் கட்டுமானக் கலைகள் உள்ளன. இவற்றினுள், தமிழர் கோயில் கட்டு மானம் என்று மட்டுமே எடுத்துக் கொண்டால் அதில் இன்று நாம் காணும் வகைகளாக இருப்பவை பல்லவர் கால கட்டுமானம், பிற்கால சோழர் காலத்துக் கட்டுமானம், பாண்டியர் காலத்துக் கட்டுமானக் கலை, விஜயநகர அரசர்கள் காலத்து கட்டுமானக் கலை எனவகைப் படுத்தலாம் (மயிலை சீனிவேங்கட சாமி, 2003, p.36)


            திராவிடக் கோயில் கட்டுமானக் கலையில் தமிழர் மரபில் பல்லவர் காலத்தில் உருவானைJதான் குடைவரைக் கோயில் கட்டுமான அமைப்பு. இக்கட்டுரை, தமிழகத்தில் இன்று காணக்கிடைக்கும் சில குறிப்பிடத்தக்க குடவரைக் கோயில் களை விளக்குவதாகவும், கோயில் களின் தற்போதைய நிலையை அலசுவதாகவும் அமைகின்றது.


ஆய்வுப் பின்புலம்

இன்று நாம் காணக்கூடிய ஆலயங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்ற பொது வான கருத்து உலவுகின்றது. வரலாற்று நோக்கில் இந்த கருத்துக்கள் ஆராயப் படும் போது ஒரு கட்டுமானத்தின் வயது, அது கட்டப்பட்ட காலகட்டம் என்பன தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல் ஆய்வுகளின் வழி அறியக்கூடிய சாத்தியம் அமைகின் றது. ஒரு வழிபாட்டு மையம் இருந்த இடத்தில் அதன் தொடக்க நிலையில் கட்டப்பட்ட கட்டுமானம் சிதலம் அடைந்து போகும் போது அதன் சீரமைப்பு என்பது இயல்பானதே. ஆனால் கட்டுமானத் தொழில்நுட் பத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் கட்டுமான அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் ஒரு சமயத்தின் அடை யாளமான ஒரு கோயில் இருந்து பின்னர் அச்சமயம் வலு இழக்கும் போது புதிதாக வளர்ச்சியுறும் சமயத்தின் கோயிலாக அக்கோயில் கட்டிடமும் அதன் வளாகமும் மாற்றம் பெறும் நிகழ்வுகளும் நிகழ்ந் திருக் கின்றன. காலத்துக்குக் காலம் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அறி முகப்படுத்தப்படுகின்ற வழிமுறை கள் கோயில் அமைப்பின் மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளன என்பதை இக்கட்டுரை வலியுறுத் துகிறது.



            குடைவரைக் கோயில்கள் என்பன கோயில் கட்டுமான தொழில்நுட்பத்தில் மாபெரும் மாற்றத் தை உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம். இதற்குக் காரணம், இவ்வகை கோயில் அமைப்புக்கள் உருவாவதற்கு முன்னர் அமைக்க ப்பட்ட கோயில்கள், மரத்தினாலும், சுண்ணாம்பினாலும், மண்ணினாலும், செங்கல்லினாலும் அமைக்கப்பட்டவை. இப்படி மண்ணி னாலும், மரத்தினாலும் சுதையினாலும் அமைக்கப்பட்ட கோயில்கள் நெடுங் காலம் சேதப் படாமல் இருக்கும் சாத்தியம் இல்லை. இயற்கை சீற்றங்களினாலும் வேறு பல சமூக நிகழ்வுகளினாலும் இத்தகைய கோயில் கள் எளிமையாகத் தக்ர்க் கப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்த மையால் இவ்வகைக் கட்டு மானங்கள் நீண்ட கால நிலைத் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காத ஒரு நிலை இருந்தது. கட்டுமான அமைப்பில் ஒரு புரட்சியாக, நீண்ட காலம் சிதைவுறா வண்ணம் செதுக்கப்பட்ட ஆலயங் களாகத் திகழ் கின்றன குடைவரைக் கோயில் கள். இவ்வகைக் கோயில்கள் கோயிலின் நிலைத்தன் மையை உறுதி செய்தாலும், எல்லா இடங்களிலும் அமைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லாமையினால் இதற்கு அடுத்த கட்ட தொழில்நுட்ப அமைப்பாக கற்பாறைகளால் அமைக்கப்பட்ட கோயில்கள், அதாவது கற்றளிகள் என்பவை உருவாகக் காரணமாகின. இவ்வகை கோயில் கட்டுமான தொழில்நுட்ப அமைப்பே இன்று வரை தொடரும் ஒரு கட்டுமான முறைக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது (நடன காசிநாதன், 2006, p.17) ஆக, குடைவரைக் கோயில்கள் வகையிலான அமைப்பு என்பது இன்றைய கற்றளி கோயில் அமைப்பு உருவாகுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டவை என்பதும், இவை நெடுங்காலம் சிதலமுறாமல் இருப்பதை உறுதி செய்ய அமைக்கப்பட்டவை என்பதனையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குடைவரைக் கோயில்கள் தமிழகக் கோயில் கட்டுமானக் கலையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு கலை என்ற போதிலும், குறிப்பிட்ட ஒரு சில குடைவரைக் கோயில்களைத் தவிர ஏனையவை பலர் அறியப்படாத நிலையிலும், அவற்றுள் சில சிதல மடைந்தும் கவனிப்பு தேவைப் படும் நிலையிலும் தக்கப் பாதுகாப்பு வழங்கப்படாமலும் இருக்கின்றது என்னும் கருத்தையும் இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.



ஆய்வுமுறை / Methodology

மேற்குறிப்பிட்ட நோக்கங்களை விளக்கும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்கள் இக்கட்டு ரையில் ஆராயப்பட்டுள்ளன.  தமிழ் மூதறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களது நூல்களான, பௌத்தமும் தமிழும், மகேந்திரவர்மப்பல்லவன், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் போன்ற நூல்களோடு தமிழகச் சிற்பிகள் வரலாறு, கோபுரக்கலை மரபு, கல்வெட்டுக்கலை ஆராய்ச்சி போன்ற நூல்களும் இவ்வாய்வில் வாசிப்புக் குட்படுத்தப்பட்டன.



            இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட களப்பணி ஆராய்ச்சியின் வழி அறியப்பட்ட நேரடி தகவல்களே இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன. களப்பணிகளின் போது தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டாய்வு அறிஞர்கள் வழங்கிய தகவல்களும் இக்கட்டு ரைக்குப் பக்கபலமாக இணைக்கப் பட்டுள்ளன.



            தமிழகத்தின் காரைக்குடி, செஞ்சி மாவட்டம், மதுரை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம்  ஆகியபகு திகளில் கட்டுரை ஆசிரியரால் நேரடி களப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இக்களப்பணிகளின் போது கண்டறிய ப்பட்ட செய்திகளும், தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர்களின் ஆய்வுச் செய்திகளும் http://www. Tamilheritage.org என்ற   இணையத் தளத்தில் வெளியிடப்பட்டு ள்ளன.



குடைவரைக் கோயில் 1-மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் சிவன் கோயில்

(பின்னினைப்பு 1-புகைப்படம் குடைவரைக் கோயில் அமைந்துள்ள பாறைப் பகுதியைக் காட்டுகின்றது)



தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. தெற்கில் பாண்டியர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்க தொண்டை நாடு முழுமைக்கும் பல்லவர் ஆட்சி பரவி இருந்ததோடு சோழர்களின் நிலப்பகுதியையும் வெற்றி கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதியை ஆண்டவன் மன்னன் மகேந்திரவர்ம பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்ப டுகிறான். (மராசுகுமார் & சரவணன், 2001, பp.8)


            மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை  என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம். (பின்னினைப்பு 2.-புகைப்படம்குடைவரைக் கோயிலின் முகப்புப் பகுதியைக் காட்டுகின்றது)



            ஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவiwப்பகுதி என அமைப்பது, அதே பாறை யிலேயே துவாரபாலகர் சிற்பத் தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உரு வாக்கியமையைக் காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவா க்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகா பலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத் திலும் காணலாம். (http://tamilheritage foundation.blogspot.my/2016/09/2016_17.html, 2016)


குடைவரைக் கோயில் 2-பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்

(பின்னினைப்பு 3.-புகைப்படம் பாறை அமைந்துள்ள முகப்புப் பகுதியைக் காட்டுகின்றது)



செஞ்சிக்கு அருகே உள்ள மண்ட கப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.



            செஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது "பனைமலை". இந்த குன்றுப்பகுதியைச் சார்ந்தார் போன்ற ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப் பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.



            காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம  பல்லவனால் (கி.பி.695-722) கட்டப் பட்டது  இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்த வர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச் சித்திரங்களாக இணைக்கும் முயற்சி களையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.



            கோயில்களைக் கட்டி இறை வழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழ கத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அகன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனை மலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.



            காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப் பக்கம் உள்ள சன்னிதியில் தீட்டப் பட்ட உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று (http://tamilheritage foundation.blogspot.my/2016/11/2016_26.html, 2016).



குடைவரைக் கோயில் 3-ஆனைமலை ஸ்ரீயோகநரசிம்மர் கோயில் 

ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிரான மிகப் பெரிய புரட்சி தோன்றியது. இது பக்தி காலம் என்று சைவர்களால் சிறப்பித்து அழைக்கப் படும் ஒரு காலகட்டத்தின் தொடக்க காலமாகும். சமணர் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலை களில் குடவரைகளைச் சைவ சமயத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவையே. இங்கே சிறப்பாக வைண சமயத்தை போற்றும் வகையில் நரசிம்ம பெரு மாளுக்கு ஒரு குடவரைக் கோயில் கட்டியிருக்கின்றனர்.



            நரசிம்ம பெருமாளின் மிகப் பெரிய உருவத்திலான புடைப்புச் சிற்பம் mரிய வடிவத்தில் அமைக் கப்பட்டிருக்கின்றது. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் இது கட்டப்பட்டது. சுவர்களில் இரண்டு புறமும் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொரு சுவற்றில் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன்  மாறங்காரி என்பவன். அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான்.  இது நிகழ்ந்தது ஏறக்குறைய கி.பி.770ம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான் என்பதை இக்கோயில் கல்வெட்டு குறிப்பிடு கின்றது.



            அகன்ற தாமரைக்குளத்தோடு ஒட்டியபடி இந்தக் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை, முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதியகும்.



            அடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே செல்ல சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோகநரசிம்மர். பின்னிருகரங் களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் அமைக் கப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் இது.

                                                                                                                                         கருவறைக்கு இருபுறமும் அகன்ற மிக உறுதியான வடிவிலான பாறைகள் உள்ளன. இக்கல்வெட்டின் செய்திகள் ஒரு புறம் வட்டெழுத்து தமிழிலும், மறுபுறம் கிரந்தத்தில் சமஸ்கிருதத்திலும் வழங்கப்பட்டுள்ள (http://tamilheritagefoundation.blogspot.my/2015/01/2015.html, 2015).



குடைவரைக் கோயில் 4-லாடன் கோயில் குடைவரைக்கோயில்

மதுரையில் ஆனைமலைக்கு அருகே தொடர்ச்சியாக வரும் பாறை அமைப்பின் ஒரு பகுதியில் அமைந் திருக்கின்றது லாடன் கோயில். திருப்பரங்குன்றம் கோயிலைப் போல முருகனுக்காக எடுக்கப்பட்ட குடை வரைக் கோயில் என்ற சிறப்பினை இந்த  லாடன் கோயில்  குடைவரைக் கோயில் பெறுகின்றது. 7, 8ம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் களால் கட்டப்பட்டது இக்குடைவரைக் கோயில். வேறு தெய்வங்கள் இல்லாமல் முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுகின்றது இக்குடை வரைக் கோயில். முருகனோடு வள்ளிக்குச் சிற்பம் இல்லாமல், தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக முருகனின் வடிவம் அமைக்கப்பட்டி ருக்கின்றது. கருவரை க்கு வெளியே இரண்டு துவார பாலகர்களும், மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பங்களும் இங்குள்ளன.



            அர்த்த மண்டபத்தில் இரண்டு முழுத்தூண்களையும் இரண்டு அரைத் தூண்களையும் செதுக்கியிருக் கின்றனர். உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் மூல சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது   (http://tamilheritagefoundation.blogspot.my/2015/05/2015_23.html, 2015).



குடைவரைக் கோயில் 5-மலையடிப்பட்டி குடைவரை கோயில்

மதுரையைப் போலவே புதுக்கோட்டை யிலும் சில குடைவரைக் கோயில்கள் உள்ளன.   திருச்சியிலிருந்து ஏறக்கு றைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக் கோட்டையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடைவரைக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஒன்று சிவ பெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப சுவாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த  தந்திவர்மன் எனும்  பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது.



            இக்கோயிலின் உள் அமைப்பு புதுக்கோட்டையில் இருக்கும் திருமயம் ஆலயத்தை வடிவத்தில் ஒத்திருக்கின்றது. தெளிவாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந் திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை   செதுக்கப்பட்டி ருக்கின்றது. மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கின்றது.



            இக்கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டு கிபி.960ம் ஆண்டைச் சேர்ந்தது. இது சோழ மன்னன் ராஜகேசரி சுந்தரச் சோழனின் கால கல்வெட்டு.



            இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப் பட்டிருக்கின்றன. கிபி. 7க்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் மிக விரிவாக பரவி செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக் கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுகின்றது. எண் 134, 135 http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp.



இக்கோயிலைப் பற்றிய மிக விரிவான கட்டுரை ஒன்று வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ளது (http:// tamilheritagefoundation.blogspot.my/2014/03/2014_27.html, 2014).

குடைவரைக் கோயில் 6-மசிலீச்சுரம் சிவன் கோயில்

குன்றக்குடி நகரில், குன்றக்குடி மடம் அமைந்திருக்கும் பகுதியின் பின் பகுதியில் சற்றே  தொலைவில் குன்றக்குடி முருகன் கோயில் சித்திரக்கூடம் அமைந்திருக்கும் பகுதியில் இக்குடைவரைக் கோயில் உள்ளது.

            இக்குடைவரைக் கோயிலின் முன் பகுதியில் கற்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த முன்பகுதியைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபமும் அதன் உள்ளே  பிரகார சன்னிதியும் உள்ளன. இந்த ஒரு குடைவரைக் கோயிலின் உள்ளே  தனித்தனியாக மூன்று  கோயில்கள் இருக்கின்றன. இந்த மூன்று தனித்தனி கோயில் களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்திருக்குன்றன. அவற்றின் கருவரைப்பகுதியில் சிவலிங்க வடிவங்கள் கற்குகைக்குள் குடையப்பட்ட வடிவில் அமைந் திருக்கின்றன.

            கோயிலின் உட்பகுதி கற்பாறையின் ஒரு பகுதி சுவர் போன்று வெட்டப்பட்டுள்ளது. இதனைக் குடைந்து இதில் நின்ற வடிவத்தில் இருக்கும் முருகனின் புடைப்புச் சிற்பத்தைச் செதுக்கியுள்ளனர். இந்த முருகனின் சிற்ப அமைப்பு கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்தது.  இச்சிற் பத்தை முருகன் சிற்பம்தான்  எனக் கண்டறிய உதவும் வகையில் இதற்கு நேரெதிரே விநாயகரின் சிலை ஒன்று புடைப்புச் சிற்பமாக அமைக் கப்பட்டுள்ளதைக் கொள்ளலாம்.  முருகன் சிற்பத்திற்கு நேர் எதிராக விநாயகர் புடைப்புச் சிற்பம் உள்ளது. இது வலம்புரி விநாயகர் சிற்பம். பிரம்மா, பெருமாள், சிவன் சிற்பத் தொகுதி ஒரு தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. முதலில் பெருமாள் நின்ற வடிவத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பம் உள்ளது.  கருங்கல் சிற்பத்தின் மேல் வர்ணச் சாயம் பூசப்பட்டு அது தற்சமயம் சிதிலம் அடைந்த நிலையில் இப் புடைப்புச் சிற்பம் காட்சியளிக்கின்றது.  இதற்குப் பக்கத்தில் விஷ்ணுதுர்க்கையின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. வலது கைகளில் ஒன்றில் சக்கரத்தையும் இடது கைகளின் ஒன்றில் சங்கினை ஏந்திய வகையிலும் இச்சிற்பம் உள்ளது.

            விஷ்ணு துர்க்கையின் இடதுபுறத்தில் நின்ற கோலத்தில் சங்கரநாராயணன் வடிவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கபப்ட்டுள்ளது. சைவம் வைணவம் ஆகிய இரு பெரு சமயங்களையும் இணைக்கும் நோக்கத்துடன் எழுந்ததுதான் சங்கரநாராயணன் வடிவம். இந்த இரு வேறு சமயங்களுக்கும் போட்டி சமயமாக சமணம் இருக்க, அதனை வீழ்த்த சைவமும் வைணவமும் இணைந்து கைகோர்த்து செயல்படுவது உதவும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடாகவும் இதனைக் காணலாம்.

            சங்கரநாராயணன் சிற்பத்திற்கு அடுத்தாற்போல நடராசர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.  இச்சிற்பம் பொதுவாக நாம் காணும் நடராசர் சிற்பம் போலல்லாது இரண்டு கால்களையும் சதுரமாக நிலத்தில் குத்தி நிற்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது சதுரநடனம் எனக்கூறப்படுவது. நடராசர் எட்டு கைகளுடன் இருக்க, கீழே குள்ள பூதகணங்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் வகையில் நடராசர் சிற்பத்தொகுதி செதுக்கப்பட்டுள்ளது.

             வெளிப்புறப்பகுதியைக் கடந்து பிரகாரப் பகுதியில் தனித்தனியாக சன்னிதிகள் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண் டபத்தைத் தாண்டி உள்ளே பாறையைக் குடைந்து அதனுள்ளேயே சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்பகுதியில் மேலும் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. சிறு பாறையைக் குடைந்து சற்றே சிறிய வடிவிலான சிவலிங்கம் ஒன்று அங்கு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தின் முன்னர் இரு துவாரபாலகர்கள் வடிவமும் செதுக் கப்பட்டுள்ளது. முதல் குடைவரைக் கோயிலின் துவாரபாலகர்கள் சிற்பத்தை விட இவை உருவத்தில் சிறியனவாகவே உள்ளன.  குடைவரைக்கோயிலின் பிரகாரத்தின் படியானது, அர்த்தசந்திர வடிவில் அறை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது குடைவரைக் கோயில்களில் உள்ள கட்டுமான அமைப்பின் பொதுக்கூறுகளில் ஒன்று எனலாம்.  அதனையே இங்கும் காண்கின்றோம்.

            இக்கோயில் கட்டுமானக் கலையை நோக்கும் போது, இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் வகையில் அதன் அமைப்பு உள்ளது.  பட்டையான அமைப்பில், பருத்த நீள்சதுர வாக்கில் குடைவரைக் கோயிலின் உட்பகுதி கற்பாறைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பிற்காலச் சோழர்கள் தங்கள் கல்வெட்டுக்களைப் பொறிக்கச் செய்துள்ளனர். ராஜராஜ சோழனின் கல்வெட்டினைக் குறிக்கும் "ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந்..." எனத் தொடங்கும் கல்வெட்டு இக்கோயில் தூண்களில் காணப்படுகின்றது. முத லாம் ராஜராஜனின் காலத்தில் பாண்டிய நாடும் சோழ மன்னனின் கீழ் இருந்தது. ஆக, இக்கோயிலுக்குக் கொடை வழங்கிய போது அதனைப் பதிந்து வைக்கும் வகையில் கல்வெட்டுக்கள் அச்செய்திகளைத் தாங்கி பொறிக்கப்பட்டுள்ளன.

            ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களை அடுத்து, இதே கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அமைந்துள்ள பிற்கால சோழமன்னர்களின் கல்வெட்டுக் களாவன  நல்ல வளர்ச்சி பெற்ற தமிழ் எழுத்துக்களால் ஆனவை. இக்கல்வெட்டுகள் மட்டுமன்றி பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இக்கோயில் கட்டப்பட்டபோது பொறிக்கப்பட்ட வட்டெழுத்து கல்வெ ட்டுக்கள் சிலவற்றையும் இக்கோயிலில் காண முடிகின்றது. அதில் ஒரு கல்வெட்டு மசிலீச்சுவரம் என்ற பெயரைத்தாங்கியிருக்கின்றது.  மசிலீச் சுவரம் என்பது மயில் + மலை + ஈச்சுவரம் என்ற பொருளைக் குறிப்பது.  இக்கல்வெட்டு இக்கு டைவரைக் கோயிலின் காலத்தைச் சரியாகக் கணக்கிட உதவுவதாக அமைந்திருக்கின்றது. இந்த வட்டெ ழுத்து வடிவத்தை  நோக்குங்கால் இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என முடிவுக்கு வரலாம்
(http://tamilheritagefoundation.blogspot.my/2015/01/2015.html, 2015)



குடைவரைக் கோயில் 7-அரிட்டாபட்டி சிவன்கோயில் - லகுலீசர் சிற்பம்

(பின்னினைப்பு 4.-புகைப்படம் குடை வரைக் கோயில் முன்புறத்தில் உள்ள லகுலீசர்சிற்பத்தைக்காட்டு கின்றது)

            அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந் திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்.  வாகனத்தைச் சாலையில் தூரத்தே நிறுத்தி விட்டு வயல் வரப்பில் நடந்து வரும்போது தூரத்தே செங்குத்தான பாறைகளைப் பார்த்துக் கொண்டே வந்தால் அதன் பின்னால் பாறைகளைக் குடைந்த வகையில் இக்குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

            இக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்ட வில்லையெனினும், இக்குடைவரைக் கோயிலின் அமைப்பைக் கொண்டு இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  தெளிவான கல் வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில் முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. கல்வெட்டாகச் செதுக் குவதற்காக எழுதப்பட்டு பின்னர் முழுமைப்படுத்தப்படாமல் போன நிலையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. (இரா சேந்திரன் & சாந்தலிங்கம், 2010, p.74)

            இந்தக் கோயிலின் சிறப்பு இங்கு முற்பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும் லகுலீசர் சிற்பமாகும். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில் பட்டையான யக்ஞோபவீ தத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.

            அடர்ந்த பாறைப்பகுதியில் குடைந்தெடுக்கப்பட்ட உட்பகுதி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ள்ளன. கருவறைக்குள் சிவலிங்கம் பாறையைச் செதுக்கி உருவாக்கப் பட்டுள்ளது. கருவறைக்கு முன்னே வலப்பக்கம் லகுலீசரின் சிற்பமும் இடப்பக்கம் விநாயகரின் சிற்பமும் மட்டுமே இங்கே செதுக்கப்பட்டுள்ளன.

            லகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் தமிழகத்தில் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.  லகுலீசர் உருவாக்கிய சைவ சமயத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது.  சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படை யாகக் கொண்டு  லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது.  நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை.  இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹ ணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது (பத்மாவதி, 2003, பக் 67).

            தமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங் கப்பட்ட காலமாகிய கி.பி.8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங் கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன (பத்மாவதி, 2003, p.73) தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயிலாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது
(http://tamilheritagefoundation.blogspot.my/2017/06/2017.html, 2017)


குடைவரைக் கோயில் 8-குன்னத்தூர் உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்
(பின்னினைப்பு 5.-புகைப்படம்குடை வரைக் கோயிலின் முகப்புப் பகுதியைக் காட்டுகின்றது)


மதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர். முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூw;whz;L வாக்கில் இவ்வூர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுக்குட்பட்ட பிரமதேய  கிராம மாகத் திகழ்ந்துள்ளது. இன்று குன்னத்தூர்   மலை என்று அழைக் கப்படும் குன்றில் இந்தக் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

            குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கும் கிழக்குத் திக்கை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ள மையால் உதயகிரீசுவரர் என்ற பெயர் இந்த சிவாலயத்திற்கு வழக்கில் உள்ளது (இராசேந்திரன் & சாந்தலிங்கம், 2010, பp.76) வித்தியாசமான வடிவில்  தெற்கு நோக்கிய பாறையில் நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது.பிற்கால நந்தி சிற்பம் ஒன்றும் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் பாறையைச் செதுக்கி சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது

 (http://tamilheritagefoundation.blogspot.my/2017/04/2017_29.html, 2017).


மதிப்பீடு


தமிழக கோயில் கட்டுமானக் கலைகளில் கி.பி 6ம் நூற்றாண்டு தொடங்கி குடைவரை கோயில்கள் பரவலாக தொண்டை நாடு, சோழர் நாடு, பாண்டிய நாடு ஆகிய பகுதிகளில் மன்னர்களின் பேராத ரவுடன் கட்டப்பட்டமையைக் காண் கின்றோம். பாண்டிய மன்னர்களும் பல்லவ பேரரசும் சைவத்தையும் வைணவத்தையும் ஆதரிக்கத் தொடங்கிய கால கட்டமே குடைவரைக் கோயில்களின் தொடக் கத்திற்குக் காரணமாக அமைகின்றன. கி.பி.7ம் நூற்றாண் டுக்குப் பின்னர் குடைவரைக் கோயில்கள் கற்றளி கோயில்களாக, அதாவது பாறை களைக் குடைந்து சிற்பங்களை உருவாக்குவதற்கு பதிலாக, கற்களை தனித்தனேயே செதுக்கி தரைப்ப குதிகளில் வைத்து அடித்தளம், விமானம், கோபுரங்கள் என புதிய கட்டுமானக் கலை உருவாக்கம் தொடங்குகின்றது. கி.பி.6ம் நூற்றாண்டு காலகட்டத்தில் செதுக்கப்பட்ட குடைவரைக்கோயில்கள் பல இன்று தமிழக தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் என்ற பட்டியலில் அடங்குகின்றன. இருப்பினும் இங்கு இக்கட்டிடங்கள் சீரமைப்பு பணி தேவைப்படும் நிலையில் இருப்பதையே நேரடி களப்பணி அனுபவம் காட்டுகின்றது. தமிழர் கோயில் கட்டுமானக் கலையில் மிகச் சிறப்பித்துக் கூறப்பட வேண்டிய ஒரு வகையாக குடைவரைக் கோயில் கட்டுமானக் கலை திகழ்கின்றது.


முடிவுரை

தமிழகக் கோயில் கட்டுமானக் கலை அமைப்பில் தனித்துவம் பெறும் குடைவரைக் கோயில் அமைப்பினை முழுமையாக பட்டியலிட்டு, புகைப்படங்களைச் சேகரித்து, விழியப்  (Video)  பதிவுகளாக்கி ஆராய்ந்து வெளியிடும் முயற்சிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. இவ் வெளியீடுகள் http://www.tamilheritage.org என்ற வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகக் குடைவரைக் கோயில்களின் முழுமையான தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை என்ற குறைய நிவர்த்தி செய்யும் வகையில் முழுமையாக தமிழகத்தின் அனைத்து குடைவரைக் கோயில்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு அவை தொகுப்பாக்கப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட வேண்டிய தேவை அவசியமாகின்றது!.


References

  1. Irasenthiran, P. & Santhalingam, S. (2010), Mamathurai. Madurai: Pandiya Naddu Varalaru        Aivu Maiyam.
  2. Nadana Kasinathan. (2006 ). Tamilaga Sirpigal Varalaru. Chennai: Thachina Kalai Nuul             Pathipagam.
  3. Pathmavathi, R. (2003). Saivathin Thotram.  Chennai: Kumaran Book House.
  4. Rasukumar, M.,T., & Saravanan, P. (2001). Mayilai Seeni Vengkadasamy Aivuk Kadduraigal. (Vol.2). Chennai: Makkal Veliyidu.
  5. Seeni Vengkadasamy, Mayilai. (2003). Nun Kalaigal. Chennai: Pumbukar Pathipakam.
  6. Seeni Vengkadasamy, Mayilai. (2003). Tamilar Valartha Azhakuk Kalaigal. Pavai Publications.




  1. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658
  2. http://tamilheritagefoundation.blogspot.my/2014/03/2014_27.html
  3. http://tamilheritagefoundation.blogspot.my/2015/05/2015_23.html
  4. http://tamilheritagefoundation.blogspot.my/2015/01/2015.html
  5. http://tamilheritagefoundation.blogspot.my/2016/11/2016_26.html
  6. http://tamilheritagefoundation.blogspot.my/2016/09/2016_17.html
  7. http://tamilheritagefoundation.blogspot.my/2017/06/2017.html
  8. http://tamilheritagefoundation.blogspot.my/2017/04/2017_29.html




Tuesday, April 24, 2018

ரைன் நதிக்கரையில்

மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்..!
நெடுநாட்கள் காணாத ஏக்கத்தில்
என்னை வரவேற்க
பூக்களை அருகில் வைத்து
காத்திருக்கின்றாள்
ரைன் நதி.. என் தோழி!
குளிர் மறைந்து விட்டது
வசந்தம் வந்து விட்டது
இருள் அகன்று
ஒளி படர்கின்றது
சிலர் நடக்கின்றார்கள்
கப்பல்கள் பயணிக்கின்றன
நாய்களுடனும் பியர் பாட்டிலுடனும் ஓரிரு வீடுகளற்றோர்
குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடைபயிலும் இளம் தாய்மார்கள்
இவர்களுடன்
நானும் சேர்ந்து நடக்கின்றேன்
ரைன் நதியின் இயல்பான சலனத்தை ரசித்தபடி..!
-சுபா


Monday, April 23, 2018

சென்னை

சென்னை என்ற ஒரு நகரின் நலன் பற்றி கவலைப்படும் சென்னைவாசிகள் மிகக் குறைவு என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஒரு பெரு நகரம் வளர்ந்து வரும் நாகரிகத்தை உள்ளடக்கியதாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் வகையில் சென்னை இல்லை என்பதே உண்மை. தமிழகத்தின் தலைநகரம் என்ற பெருமையுடன் இருக்க வேண்டிய குணாதிசியங்கள் ஏதும் சென்னைக்கு இல்லை. குறிப்பாக:
1. தூய்மை எங்குமே இல்லை. குப்பைகள் குடியிறுப்புப் பகுதி, அலுவலக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் என எல்லா பகுதிகளிலும் நிறைந்து கிடக்கின்றன.
2.தரமான சாலைகள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன. குடியிறுப்புகள் உள்ள பகுதிகளில் குண்டும் குழியுமாய் சாலைகள் உள்ளன.
3 குறிப்பிட்ட நேரத்தில் வருகின்ற பேருந்துகளோ, ரயில்களோ இல்லை. பேருந்துகளுக்காக ஒரு தனி சாலையை அமைக்கலாம்.
4. சென்னையில் பசுமையைப் பாதுகாக்கவும் பறவைகளின் நலனைப் பேணவும் அதிகமாக சாலைகளில் மரங்கள் நடவேண்டும். இருக்கின்ற மரங்களைக் கூட சரியாகப் பேணவில்லை.
5. மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து கிடக்கின்றன.
6. சாலையோரத்தில் வாழும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வாழ அரசு உதவ வேண்டும். இவர்களை ஒரு பொருட்டாக யாரும் கவனிக்கின்றார்களா என்றே தெரியவில்லை.
7. சென்னையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சின்னங்களும் கட்டிடங்களும் சிதைந்து கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் உடனடி நடவடிக்கை தேவை.
8. சென்னையில் மிகக் குறைந்த அளவில் தான் அருங்காட்சியகங்கள் உள்ளன. சென்னையில் மேலும் பல அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
9. சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் எங்கெங்கு உள்ளன என்ற குறியீட்டுப் பலகைகள் ஒன்றை கூட நான் சாலைகளில் காணவில்லை. தலைநகர் என்றால் இத்தகைய தகவல்கள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும்.
எனது அவதானிப்பில் சென்னையில் மிக அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் குடியேறிவிட்டனர். விரைவில் சென்னை தமிழ் மொழியை இழந்து இந்தி மொழி பேசும் நகரமாக மாறி விடுமோ என்ற ஐயம் எனக்குள்ளது. கடைகளுக்கும் உணவகங்களுக்கும் செல்வோர் அவர்களிடம் தமிழ் பேச வேண்டும். ஆனால் பலர் அவர்களுக்குப் புரிய வேண்டுமென்று இந்தி பேசுவதைக் காண்கின்றேன். இங்கு ஜெர்மனிக்கு உழைக்க வருவோர் ஜெர்மன் மொழி தான் பேசவேண்டும். உள்ளூரில் உள்ளவர்கள் நமக்காக நம் மொழியைக் கற்றுக் கொண்டு பேசுவதில்லை. அதனால் தான் இன்று வரை ஐரோப்பிய நாடுகள் தங்கள் தாய்மொழியை பலமாக வைத்திருக்க முடிகின்றது. நாமும் இதனை யோசிக்க வேண்டும் அல்லவா..?
-சுபா

Tuesday, March 20, 2018

மலேசியாவில் சாதி

தகவலுக்காகச் சாதி தொடர்பிலான சில செய்திகளை நான் பதிய வேண்டியது அத்தியாவசியமாகின்றது.

இளம் வயதில் மலேசியச் சூழலில் நான் வளர்ந்த போது சாதி பற்றிய அறிமுகம் எனக்கு சிறிதும் ஏற்படவில்லை. மலாயாவின் தோட்டப்புறங்களுக்கு கடந்த 250 ஆண்டுகளில் கூலித் தொழிளாளியாக வந்தோர், சாதி வேறுபாட்டை அனுசரிக்க முடியாத சூழலில் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு சாதி பேதமின்றி தான் வாழ்ந்தனர்.

மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த 300 ஆண்டு கால கட்டத்தில் தமிழகத்திலிருந்து வந்தோரில் குறிப்பிடத்தக்க பெரும்பாண்மையில் வந்த சாதிக் குழுக்களாக கவுண்டர்-வன்னியர், பறையர், தேவர்-கள்ளர் என்ற இந்த மூன்று சாதிச் சமூகக் குழுவினரையே குறிப்பிடலாம். சற்று குறைந்த எண்ணிக்கையில் முதலியார், வர்த்தகத்தை விரிவாக்கிய செட்டியார் ஆகியோரை அடுத்த பெரும் குழுவாகச் சொல்லலாம். இலங்கை யாழ்ப்பாணத்து சைவ வேளாளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள். பிராமணர்கள், முத்தரையர்கள் போன்ற சாதியினர் குறைந்த எண்ணிக்கையில் தான் மலேசியாவில் வாழ்கின்றனர்.
இவர்களைத் தவிர்த்து தெலுங்கர்கள் பெருவாரியாக வந்தாலும் அவர்களும் தமிழர்களோடு கலந்து விட்டனர் என்பதைக் காணலாம். இந்தியர்கள் என பொது அடையாளப்படுத்தலில் அடங்கினாலும் பெருவாரியான, அதாவது 95%, தமிழ் மக்கள் தான் எனத் தயங்காது சொல்லலாம். ஏனைய மலையாள, குஜராத்தி, தெலுங்கு மக்களும் தமிழையும் கற்று தமிழ் பேசுகின்றனர். இருப்பினும் குஜராத்தி, தெலுங்கு, கேரள அமைப்புக்களும் செயல்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது.
கடந்த 20 ஆண்டு கால சூழலில் இந்த ”தமிழர்” என்ற ஒற்றை அடையாளச் சமூகச் சூழலில் மாற்றத்தைப் பார்க்கிறேன்.
வன்னியர் சங்கம் வந்து விட்டது, செயல்படுகின்றது.
முக்குலத்தோர் சங்கம் செயல்படுகிறது.
பறையர் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
புதிதாக முதலியார் அமைப்பும் தொடங்கியுள்ளதாம்.
இன்றைய மலேசியாவைப் பொறுத்த வரை பொருளாதார ரீதியில் அனைத்து சாதியினருமே நல்லதொரு நிலையில் தான் வாழ்கின்றனர். அரசின் இலவசக் கல்வி அனைவருக்கும் பொதுவான வாய்ப்பினை வழங்கியதால் ஏற்பட்ட சமூக நலன் இது என்று சொல்வேன்.
நான் கல்வி கற்று வளர்ந்த காலத்தில் இல்லாத சாதி தொடர்பான நடவடிக்கைகளை இன்று கேள்விப்படுகின்றேன். வேதனை அடைகின்றேன்.
மலேசியாவில் சாதியை மீள் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு தமிழகச் சினிமாத்துறையையே சேரும். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி வளர்த்த கதையாக சாதிப்பிரிவினையை வளர்க்கும் தமிழக அரசியல் கட்சி ஒன்று செய்த முன்னெடுப்பால் சாதி ஆர்வம் மேலோங்கி சங்கம் வளர்ந்து இன்று பிரிக்கமுடியாத அமைப்பாக வளர்ந்து நிற்கின்றது.
மலேசிய தமிழர்கள் சற்று சிந்திக்க வேண்டும். மலேசியத் தமிழ்ச்சூழல் தமிழகச் சூழலை விட வேறுபட்டது. மலேசியாவின் ஏனைய இரண்டு பெரும் இனங்களான சீனர்கள், மலாய் இனத்தாரோடு போட்டி போட்டு நாம் வளர வேண்டுமென்றால் ”தமிழர்” என்ற ஒற்றைக் குடையின் கீழ் நாம் இருப்பது மட்டுமே அதற்கு வழிவகுக்கும்.
இந்தச் சூழலில் “தமிழர்” என்ற சிந்தனையை முன்னெடுக்கும் தமிழக அரசியல் கட்சி ஒன்று இங்கு தன் கிளை அமைப்பினைத் தொடங்கி “உன் சாதி என்ன..”. எனக் கேள்வி கேட்டு பிரித்தாளும் முயற்சியைத் தொடங்கியிருப்பதும் வேதனைக்குறிய, கண்டிக்கத்தக்க செயலாகக் காண்கின்றேன்.
மலேசியத் தமிழர்களே...வாருங்கள்..
சாதி அமைப்புக்களை விட்டு விலகி தமிழர் என்ற சிந்தனையோடு நமது செயல்பாடுகளை முன்னெடுப்போம்!
-சுபா

Tuesday, February 6, 2018

பார்த்து ரசித்த தமிழ் சினிமா - முப்பரிணாமம்

அண்மையில் நான் பார்த்த தமிழ்ப்படம் பாக்யராஜ்-பூர்ணிமா காதல்ஜோடியின் மகன் சாந்தனு நடித்த முப்பரிணாமம்.

முதல் பகுதியில் இயல்பான செய்திகள் என வளர்ந்து பின்னர் பொதுவான தமிழ்ப்படங்களில் எதிர்பாராத ஒரு திருப்பமாகக் கதை தொடர்வது நல்ல முயற்சி.

தான் காதலிப்பவனை விட புதிதாக சந்திப்பவன் புகழோடும் வசதியோடும் இருக்கின்றான் என காதலில் மனம் மாறும் கதாநாயகி.. பொதுவான தமிழ்ப்பட ட்ரெண்ட்டிலிருந்து மாறுபட்ட கோணத்தில் இருந்தது. இப்படியும் பெண்கள் மனம் மாறுகின்றார்கள் எனக் காட்டுவதில் மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் இயக்குநர். கதாநாயகியாக நடித்த பெண் அபாரம். அழகு, திறமை என அனைத்தும் சேர்ந்த கலவை.

இறுதிக் காட்சி மனதை உலுக்கும் வகையில் மிக அருமையான நடிப்பில் சாந்தனு மிளிர்கின்றார். நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தால் மேலும் பல நல்ல படங்களை இவர் நிச்சயம் தருவார் என நம்பிக்கையூட்டும் நடிப்பு.

முன்னரெல்லாம் காதலியை விட்டு பண வசதி படைத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நாயகர்களைப் பற்றி அறிந்திருப்போம். இன்று பெண்களிலும் இத்தகையோர் இருப்பது கற்பனையல்ல.

அழகு, சமுதாய மதிப்பு, சாதி, பொருளாதாரப் பின்னனி எனத் தேடிப்பிடித்து காதலிக்கும் இளம் பெண்கள் இருக்கின்றார்கள் என நாம் அவ்வப்போது கேள்விப்படுவதை மனதை தொடும் வகையில் படமாக்கிய இயக்குனருக்கும் இப்படத்தில் மிகச் சிறப்பாக நடிப்பை வழங்கிய நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!

-சுபா

Monday, January 29, 2018

அம்பிகாபதிக்கு என்னதான் நடந்தது?



அம்பிகாபதி திரைப்படத்தில் அம்பிகாபதி அமராவதி கதையைப் பார்த்து கண்ணீர் விட்டு அழாதவர்கள் இருப்போமா? மிக இளம் வயதில் நான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றேன்.

இன்று அந்தத் திரைப்படத்தை எண்ணிப் பார்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன.

99 தெய்வீகப் பாடல்களைப் பாடி சோழ மன்னர் மகள், தன் காதலி அமராவதி முகம் காட்ட, அவள் முகத்தைப் பார்த்து காதல் பாடல் பாடி ...ஐயகோ எல்லாம் முடிந்ததே.. எனப் படம் பார்த்தவர்கள் எல்லாம் அமராவதியைச் சபித்த காட்சிகளும் ..
அவசரக் குடுக்கை இந்த அமராவதி.. எனத் திட்டியதும் இன்றும் நினைத்தால் நினைவு வருகின்றது.

உலகத்து மகா வில்லனாக ஒட்டக் கூத்தர் இந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பார். இத்தனைக்கும் பாவம் அந்த மனிதர்.. பிற்காலத்தில் சோழர் வரலாறு நூல்களை நான் வாசித்த பின்னர் தான் தெரிந்தது எவ்வளவு முக்கியமான ஒரு இலக்கியவாதி இவர் என்பதும், 3 சோழ மன்னர்களின் அரசவையில் ஒரு இலக்கியவாதியாகத் திகழ்ந்தமையும், மன்னனின் குழந்தைகளைப் பாதுகாத்த பெரும்பொருப்பையும் ஏற்றவர் என்பதும்.


அம்பிகாபதி ஏன் 100 பாடல் பாடி முடிக்கும் வரை அரசவையில் கவனம் வைத்திருக்கவில்லை என யாரும் கேட்பதில்லை. அம்பிகாபதி செத்தால் அதற்கும் பழி அமராவதிதான் என்ற சிந்தனை அன்று உருவாகியது.

கம்பர் பாதிக்கப்பட்டவராக மிகப்பரிதாபமாகக் காட்டப்பட்ட படம் இது. ஆனால் 'என் சரித்திரம்' நூலை வாசித்த  போது உ.வே.சா கொடுத்திருக்கும் செய்தியின் அடிப்படையில், கம்பர் செல்வாக்குடன் வாழ்ந்தமையும், இன்று மக்கள் மீத்தேனுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்களே.. அந்தக் கதிராமங்கலத்தில் வசித்த ஒரு தாசியாகிய தன் அன்புக் காதலிக்காக சடையப்ப வள்ளலிடம் நெற்கதிர்களை கேட்க, அவரோ பொன்னாலேயே கதிர்களை அக்கவிப்பெருமானுக்கு வழங்கியதாகவும் சில  செய்திகளையும் அறிய முடிகின்றது.

சரி.. உண்மையில் அம்பிகாபதிக்கு என்னதான் நடந்தது? 100 பாடல் பாடியும் கூட ஒட்டக்கூத்தரின் சதியால் சோழமன்னனின் தண்டனைப் பெற்று கொல்லப்பட்டாரா.. என்ற கேள்வி எழுகின்றது.

இன்று காலை வீரசோழியம் நூலைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் வீரசோழியம் நூலுக்கான பதிப்புரையை வாசித்துக் கொண்டிருந்தேன்.

சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள், பொதுவாக பலர் குறிப்பிடுவதுபோல  தண்டியலங்காரம் இலக்கண நூலை வடமொழியிலிருந்து பெயர்த்து தமிழில்  "தண்டி" என்ற  ஆசிரியரால் இயர்றப்பட்ட நூல் அல்ல எனச் சொல்லி அதனை மறுக்கின்றார்.
வீரசோழியத்துக்கான பதிப்புரையில் அவர் கீழ்க்காணும் செய்தியைக் குறிப்பிடுகின்றார். "தண்டியலங்காரம் இயற்றினார் அம்பிகாபதியின் புத்திரர். அம்பிகாபதி கம்பர் மகன். கம்பர் குலோத்துங்க சோழன் காலத்தில் வெண்ணெய் நல்லூர் சடையப்ப முதலியார் முன்னர் எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்மேற் ரமுது இராமாயணம் அரங்கேற்றியவர்... "

ஆக, இங்கே சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் பதிப்புரை வாசகங்கள் அம்பிகாபதிக்குm ஒரு மகன் இருந்ததாகவும் சொல்கின்றது. அப்படியென்றால் ஒட்டக்கூத்தர் சதி எனத் திரைப்படத்தில் காட்டப்படுவதும், சோழ மன்னன் தண்டனை கொடுத்து அம்பிகாபதியைக் கொன்றார் என்பதும் உண்மையா? அப்படிk கொன்றிருந்தால் அவருக்கு மகன் இருந்ததாகவும் தண்டியலங்காரம் இயற்றியதாகவும்  சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் குறிப்பிடுகின்றாரே.. 

எது உண்மை ? திரைப்படத்தை எடுத்தவர் எவ்வகையான ஆய்வுப் பின்புலத்தோடு இப்படத்தை எடுத்தார், கதை வசனம் எழுதினார் என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டுமல்லவா?

சுபா